நெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங்கம்.


நேரங்காலம் தெரியாமல் 12மணிக்குப் பசியெடுத்தது. கேண்டீனுக்குப் போனால் பிரெட் ஆம்லெட் சாப்பிடலாம். வறட்சியான சப்பாத்திக்கு அதுமேல்.
நண்பனை கூட்டிக்கொண்டு அலுவலகமாடியில் உள்ள கேண்டீனுக்குச் சென்றேன். கேண்டீன்காரர் கடவுளின் தேசத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் இளையராஜா ரசிகராக இருப்பார் போல... மெல்லிசைகளால் இழைத்துக் கொண்டிருந்தார்.

குடகுமலை காற்றில் வரும் பாட்டுக்கேட்குதா ... ஒலித்துக்கொண்டிருக்கும் போது மூன்று யுவதிகளும் கேண்டீனுக்கு வந்திருந்தார்கள். என்னே ரம்மியம். மூவரில் வெண்ணிற ஆடை அணிந்திருந்த பெண்மீது கண்கள் திரும்பியது.
கொஞ்சமாக ரசித்துவிட்டு,அவர்கள் நகர்ந்து சென்றதும் நண்பனிடம் சொன்னேன். அந்த வெள்ளைநிற ஆடையிலிருந்த பெண் நல்ல அழகில்லையா என்று. அட! நானும் அவரைத்தான் கவனித்தேன் என்றார். கவனிக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம்.

மோசமான கம்மெண்ட்களோ, தேவையில்லாத வெளிப்படுத்தலோ இல்லாமல் ஒரு குழந்தையைக் கடந்துபோவது போலான கவனித்தல் இது.
அதென்னமோ இந்த மண்ணின் அடையாளத்தோடு எளிமையான அணிகலன்களோடு எதிர்படும் ஒரு பெண் சட்டென்று ஈர்த்துவிடுகிறாள்.
அணிகலன் என்றதும் நேற்றைக்கு பார்த்த நெடுநல்வாடை நினைவுக்கு வந்தது. அந்த காலத்தில் பெண்கள் என்னென்ன அணிகலன்கள் அணிந்திருப்பாள் என்று தேடத் தவித்தேன்.




பிரெட் ஆம்லெட்டுக்கும், பைனாப்பிள் ஜூஸுக்கும் காசுகொடுத்துவிட்டு இருக்கைக்கு வந்ததும் முதல்வேலையாக நச்சினார்க்கினியார் உரையினைத் தேடத் தொடங்கினேன்.

சிக்கியது மேட்டர். அன்றைய பெண்கள் காதிலே குழை அணிந்திருக்கிறார்கள். அதிலே பூங்குழை, வார்குழை என்று இரண்டு விதம். கைகளில் தொடி புனைந்திருக்கிறார்கள். விரல்களில் நெளி மோதிரம்... இப்படி இன்னும் நிறைய..

கி.ராவிடம் தான் நான் அணிகலன்களைக் கற்றுக்கொண்டது.
பூடி, அலுக்கு, தாழம்பூ, ஒன்னப்பு, முருகு, குருத்தட்டு, பச்சைக்கல், வெத்திலைச் சுருட்டு, மூண்டுக்கு மணி, குவலை, பீங்காந்தட்டு, பவளம், புடை தாங்கி, நெத்திச்சுட்டி, பெருவிரல் முடிச்சு, பீலி, பில்லணை என்று அவர் ஒரு லிஸ்டே போடுவார்.

புதிதாக ஏதும் சிக்குகிறதா என்று துலாவியபோது ஆடைகள் பக்கம் கவனம் திரும்பியது. பெண்கள் மார்பிலே கச்சினை அணிந்திருக்கிறார்கள், பூ வேலைபாடுகொண்ட பூந்துகில்,‘அவிர் நூல் கலிங்கம் ’ என்ற நூலால் ஆன
ஆடைகள் (மஸ்லின்?) என்று வாசிக்கும் போதே தீபாவளி நெருங்குவது நினைவிற்கு வந்தது.

சரி ஆண்கள் ஆடை ஏதும் இருக்கிறதா என்று பார்த்தால் ... அடப்பாவமே இரண்டுபக்கமுமாக தோளில் தொங்கும் துப்பட்டாவை அணிந்திருக்கிறார்கள் ஹஹா... பகடிகள் ஒருபக்கம் இருக்கட்டும். அந்த "குழை" என்ற சொல்லைக் கவனித்தீர்களா... அதில்தான் எத்தனை குழைவு.







 (படங்கள் : நன்றி : அமுதா தமிழ்)






மஸ்லின்?
_________________



அவிர் நூல் கலிங்கம் மஸ்லினா என்றுத்தெரியவில்லை. கலிங்கம் ஒரிசாவைக் குறிப்பது. மஸ்லின் ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டுக்குமான இடைவெளி சொற்பம் தான். ஆனால் மஸ்லின் பருத்தியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அன்றைக்குக்காலத்தில் மஸ்லின் துணிகள் அணிந்துகொள்வது பெருமையாகவே கருதப்பட்டது. இங்கிலாந்து பெண்கள் இந்திய மஸ்லினுக்கு தவம் கிடந்தார்கள்.  மஸ்லின் இங்கிலாந்து பருத்தியின் வணிகத்தை பாதிக்கவே செய்தது.

ஆகவே, இங்கிலாந்து பருத்திக்காக இந்தியாவில் ரகங்களில் அழித்து ஒழித்த பருத்தியில் மஸ்லினும் ஒன்று. மஸ்லின் நூலை நெய்வதற்கு முன், அதனை மிருதுவாக்கவும், மெலிதாக்க ஒரு வித்தை பண்ணுவார்களாம். அதாவது, கட்டைவிரல் நகத்தை நீளமாக வளர்த்து அதிலே ஒரு பொடி துளைபோட்டு அதன் வழியே மஸ்லின் நூலை நுழைத்து.. நூல் சுற்றும்போது கையை மேலும் கீழும் அசைத்து அசைத்து மிருதுவாக்குவார்களாம்..
எப்போது மஸிலின் ஆங்கிலேய வணிகத்தைப் பாதித்ததோ அப்போதே மஸ்லின் நெசவாளர்களை பிடித்துவைத்து அவர்களின் விரல் நகத்தை/விரலை வெட்டிவிட்டதாகக் காற்றுவழிச் செய்திகள் உண்டு.

கார்த்திக்.புகழேந்தி|
13-10-2015

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil