Posts

Showing posts from April, 2017

ஆடு வளர்ப்பு

Image
       வெ ள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக் கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையது . எட்டு பத்து வயசில் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலே என் பூரணப் பொழுதும் கழிந்துக் கிடந்தது. கிடை போட்டிருக்கிற வயல்களிலும், ஆற்றங்கரை திறந்த வெளிகளிலும் ஆடுகளை பத்திக்கொண்டு போகிற சேக்காளிகளோடு சுற்றித்திரிந்து, மரமேறிக் குரங்கு விளையாட்டு ஆடி, ஆட்டுக்கு கிளை ஒடித்துப் போட்டு, தூக்குப் போணியில் மோர்க்கஞ்சி குடித்து, ஆடுபுலி ஆட்டம் ஆடி, ஆலமர நிழலடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து வீடுவந்து சேருவது தனிவேலை. வெள்ளாட்டுப் பெட்டைகளும், கிடாய்களும் செம்மறிகளும் தான் உள்ளூரில் அதிகம் வளர்க்கப்படும். முதல் தடவை நான் ஆத்தூரில் பிரசவம் பார்த்த பெட்டை ஆட்டு மூன்று குட்டிகள். மூன்றில் ரெண்டு கிடாய்.தலையீத்துக் குட்டியே வெள்ளையில்லாத கருங்கிடாய்கள் என்பதால் அந்த ஆத்தூர் ஆச்சிக்கு மனசு பொங்குமுகமாகிவிட்டது. ‘கருங்கிடாய் பிறந்

கள்ளும் நறவும் தேறலும்..

Image
          ந ன்னன் என்கிற மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி, ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும், கூத்தர்களும் அடங்கிய கூட்டம் ஒன்று மேற்குமலைகள் வழியாகப் பிரயாணம் போகிறது. அவர்களை வழியில் சந்திக்கிற பரணர் என்கிற புலவர் நன்னன் இறந்த கதையைச் சொல்லி, “நீங்கள் பறம்புமலை அரசன் பாரிகிட்டே செல்லுங்கள். தன் படைகளால் மூவேந்தரையும் வெல்லக்கூடியவன் உங்கள் கலைக்கு முன்னே சரணடைவான். பெரும்வள்ளல் அவன். கூடவே, கபிலர் என்கிற அறிஞனையும் வைத்திருக்கிறார்” என்று வழிகாட்டுகிறார். ஆக, பாணரும் கூத்தரும் அடங்கிய கூட்டம் பாரியிடம் செல்கிறது. இது பெரும்பாணாற்றுப் படையில் மேல்ச்சுருக்கக் கதை. கலை மக்களால் எடுத்து இயம்பப்பட்ட இந்தக் கதைப்பாடலுக்கு உள்ளே நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப நுணுக்கமாக நம்மை அந்தக் காலத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரியைப் பார்க்கப் போகும் பாணர்கூட்டம் வழியிலே சில வேளாளர்களைச் சந்திக்கிறது. ஏழுநாள் நடக்கும் தங்களுடைய கோயில் நிகழ்ச்சிய

வேட்டையன்கள்

Image
      சிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன். சமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம். ஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள்

‘கதா மாலிகா’

Image
              ந ரசய்யா குறித்து நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம் விசாகப்பட்டினத்தில் கப்பல் துறையில் வேலையிலிருக்கும் நண்பனோடு. அவரது புத்தகங்கள் மீது தீராத மோகம் இருந்தது எனக்குள்ளாக. அதேப்போல இன்னும் சில பழைய புத்தகங்களையும் ஏற்கனவே    வாசிக்கத் திரட்டிக் கொண்டிருந்தேன். ரா.பி சேதுபிள்ளை எழுதிய தமிழகம்; ஊரும் பேரும், தமிழர் வீரம், கி.வா.ஜ தொகுத்த 25ஆயிரம் சொலவடைகள்,   கே.கே பிள்ளையின் தென் இந்திய வரலாறு, பேராசிரியர் ராம வேலாயுதம் எழுதிய தென் கிழக்கு ஆசியா,    முனைவர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய முகலாயர் வரலாறு இப்படியாக சிலவை. நேற்றைக்கு எழும்பூர் தமிழ்ச்சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்குப் போயிருந்தோம். ‘கல்வெட்டு’ காலாண்டிதழின் நூறாவது சிறப்புப் பிரதியை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பணியாற்றும் நண்பர் அன்பளித்தார். கூடவே, சென்னை, நெல்லை, குமரி, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் குறித்த கல்வெட்டு பதிப்பு நூல்களையும் வாங்க உதவி செய்தார். வந்ததும் முதல்வேலையாக சென்னைக் கல்வெட்டுகள் பதிப்பு நூலைப் புரட்டினேன். கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்