Posts

Showing posts from May, 2016

பெருசுகள்

Image
கிழவருக்கு சொடலை என்று பேர். ஆள் பார்க்க வண்டிமையை மேலே தேய்ச்சதுமாதிரி அரைக் கருப்பாக இருப்பார். கைகாலெல்லாம் குச்சு குச்சாய் மூங்கில் குருத்துமாதிரி இருக்கும். மூளிக்குளத்தில் பேராச்சியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் வளவு மொத்தத்துக்கும் கிழவருக்குச் சொந்தமானதுதான். ஆனால் கொத்துச்சாவி எல்லாம் பெஞ்சாதி தங்கம்மாள் பெயரில்தான் இருந்தது. ஒண்ணேகால் ரூவாய் செய்யதுபீடிப் பொட்டலத்தை கையில் வாங்கி கசக்கி, உருட்டி, கீழே கட்டை விரலால் ஒரு குத்து குத்தினாரென்றால் மேட்ல்வாடு பிஞ்சுகொண்டு பீடிகள் வெளியில் நீண்டுகொள்ளும். அதில் ஒத்தைப்பீடியை எடுத்து பத்தவைத்துக் கொண்டு ஒருபல் கடியில் வாயில் வைத்துக்கொண்டே, ஏணிமீது ஏறி வைக்கப்போர் ஏத்துவார். “ஒருநா இல்ல ஒருநா பாரு கங்கு வுளுந்து படப்பு பத்திக்கலன்னா இருக்கு” என்று ஏசிக்கொண்டே தங்கம்மா ஆச்சி கரிச்சட்டியை கழுவி தொழுவத்துப் பக்கம் ஊத்தும். சொடலை தாத்தனுக்கு ரெண்டு பெஞ்சாதி. ஆச்சியைக் கட்டி ரெண்டு பொண்ணு பெத்தபிறகு, சீவலப்பேரியில் இருந்து ஒருத்தியை இழுத்துக்கொண்டு பச்சேரியில் வீடேத்திக் கொண்டார். இந்த சங்கதியெல்லாம் எங்களுக்கு ஆ

நெற்கட்டான் செவல் கதை

Image
 போன வருஷ மேமாசத்தில் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்னையிலிருந்து கிழக்குகடற்கரைச் சாலை வழியாக தூத்துக்குடி வரைக்கும், பிறகு அங்கிருந்து திருநெல்;வேலி, வட்டாரங்கள், மதுரை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், அப்படியென்று ஒருபாடு ஊர் சுற்றுவந்தேன். இந்த வருசத்தில் ஆந்திரா, ஒரிசா வழியாக சட்டீஸ்கர் வரைக்கும் அப்படி ஒரு சுற்றல் போட நினைத்துவைத்திருந்தேன். நினைப்பு நினைப்பாகவே தேம்பிவிட்டதால் எலெக்‌ஷனை மனதில் வைத்து ஊர்ப்பக்கங்களில் கொஞ்சம் விட்டேத்தியாகச் சுத்த நினைத்தேன். அப்போதுதான் நண்பர் துரைமோகன்ராஜ் அவர்களை எதேச்சையாக வேறோரு காரியத்துக்காக அழைத்து, கடேசியில் அவரோடே சங்கரன்கோயில் பகுதிகளைச் சுற்றுக்கொண்டு வந்தேன். நான் கொஞ்சம் சுமாராக எழுதி இருந்தேன். அவர் ரெக்கார்டர் ஆன் செய்து வைத்து பேச்சுக்களை பதிந்தது போல அப்படியே கச்சிதமாக மொத்த நாளில் நடந்ததையும் எழுதிவிட்டார்.  எழுதியது....  துரை.மோகன்ராஜ்                                                                                 சங்கரன்கோயில் 25-05-2016 .              ஒ

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Image
             577776 இதுதான் எனக்கு வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்ரோல் எண். ச்சே! கொஞ்சம் பிந்தி இருந்தால் ஐந்து 7-வருகிறமாதிரி அடுத்த எண் கிடைத்திருக்குமே என்றெல்லாம் ஹால் டிக்கெட்டை கையில் வாங்கினதிலிருந்து ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருப்பேன். மொத்தம் இருபது பேர் தேர்வெழுதிய அந்த அறையில் நான் இரண்டாவது ஆள். இந்த கார்த்திக் என்ற பேரை கூட்டத்தில் கல் எறிந்த மாதிரி சும்மா சொல்லிப் பாருங்கள் பத்தில் ரெண்டு பேராவது திரும்பிப்பார்ப்போம். எம்., என்., எஸ்., என்று இனிஷியலை வைத்து வரிசையாக கார்த்திக்குகளாக உட்கார்ந்திருந்தோம். பேரதிசயமாக அப்போது நான் கொஞ்சம் நன்றாகப் படிக்கிற பையனாக இருந்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் எங்கள் தேர்வறையில் நானும் என்.எஸ்.மணி என்பவனும் தான் ஒன்றாவது, ரெண்டாவது ரேங்க்கைத் தொடுகிறவர்கள். (நம்புங்கள்) தமிழ் முதல் தாளில் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த மற்ற பையன்கள், இரண்டாம் தாள் எழுதப் போகும் முன்பே யார் நமக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர் என்பதுவரைக்கும் விசாரிக்க ஆரம்பித்து, இந்த பொருத்துக, நிரப்புக மாதிரியான கேள்விகளுக்கு சொல்லித்தர முன

இண்டமுள்ளு

Image
   அரசனை எனக்கு நண்பர் கோவை ஆவி மூலமாகத் தெரியும். இரண்டு பேரையும் விக்ரமாதித்யனும் வேதாளமும் போல ஒன்றாகவேதான் பலதடவைச் சந்தித்திருக்கிறேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஒரு சந்திப்பின்போதுதான் அரசனோடு நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தது. பேச்சு முழுக்கக் “சிறுகதைகளைச்” சுற்றி நிகழ்ந்தது. அரசன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். பொதுவாகவெ கதைகள் மீதுகொண்ட ஈர்ப்பும், அதிலும் வட்டார வழக்கு மொழியில் எழுதப்படும் கதைகள் மீதான பிடித்தமும் அரசனின் புத்தகமான “இண்ட முள்ளு” மீது பேரார்வத்தைக் கொடுத்தது. வட்டார வழக்கில் எழுதுகிறபோது மொழி புரியமாட்டேன் என்கிற கூற்றைப் பலரும் சொல்வதுண்டு. அதன் நியாயத்தை உணர்ந்தும் இருக்கிறேன். ஆனால் அதற்காக நிலத்தின் பேச்சை விட்டுவிட்டு எளிமை எனப்படுகிற சாலைகளில் நடப்பதற்கு நான் எப்போதும் விரும்புகிறவனில்லை. எனக்குக் கால் கட்டாந்தரையில் படவேண்டும்.  கரிசலோ, செம்மண் புழுதியோ விரலிடுக்கில் அந்த மண் ஒட்டவேண்டும். மக்கள் பேசுகிற சொற்கள் எழுத்தில் உயிர்பெற வேண்டும். ஈழத்துப்பேச்சு புரிபடமாட்டேன் என்று அ

பார்டர் பரோட்டா

Image
மே15 தொடங்கி 19வரைக்குமாக ஐந்துநாட்கள் ஊரில் இருந்தேன். முதல் மூன்று நாளுமே அவ்வளவு மழை என்பதால் உள்ளூரிலே சுற்றிக் கொண்டிருந்தேன். அண்ணனுடைய யமஹா RX135 மீது உட்கார்ந்து கொண்டாலே ஒரு தனி கெத்துதான். மூன்றாம்நாள் மதியம் திருநெல்வேலி - மானூர்- தேவர்குளம்- பனவடலிச்சத்திரம் வழியாக சங்கரன்கோவில் சென்றிருந்தேன். அங்கே நண்பர் துரை மோகன்ராஜ் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். கொஞ்ச நேரம் இளைப்பாறலுக்குப் பின்னே இரண்டுபேருமாக நெல்கட்டான்செவலில் உள்ள பூலித்தேவன் அரண்மனைக்குச் சென்றோம். வழியில் தென்பட்ட கல் மண்டபங்கள், நாட்டார் தெய்வங்கள் போன்றவற்றை நான் படமெடுத்துக்கொண்டேன். பூலித்தேவர் அரண்மனையை அடைந்தபிறகு அவ்வூரில் உள்ள குறிசொல்லும் பூசாரி பற்றி நண்பர் சொன்னதும் அவரைத்தேடி ஊருக்கு மேற்குகோடியில் உள்ள கோயிலுக்கே சென்றோம். அங்கு சென்று வந்ததில் ஒரு நல்ல கதை தேறியது. பிறகு வழியில் உள்ள ஊர்களில் பச்சேரி என்னும் இடத்தில் முற்கால நந்தி சிற்பம் ஒன்றைக் கண்டேன். எப்படியும் 500 வருஷங்கள் முந்தையதாக இருக்கலாம். ஆவுடை ஆற்றங்கரையில் கரைவீரன் முனி கோயில் அருகே நடப்பட்டிருந்த நடுகற்கள், ம

அம்மன் சன்னதி

Image
காலம் எவ்வளவோ மாறி இருக்கிறது என்பார்கள். திருநெல்வேலி மட்டும் அப்படியே இருக்கிறதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. என்ன கொஞ்சங்கொஞ்சம் அங்கங்கே சிமெண்ட் ரோடுகள் வந்துவிட்டது. பாளையங்கோட்டைக் காரனாக பிறந்து வளர்ந்தவனென்பதால் ஆற்றுக்கு அந்தப்பக்கமுள்ள நெல்லை டவுண் மீது ஏகபோகமாக ஒரு ஈர்ப்பு உண்டு எனக்குள். டவுணுக்குச் கூட்டுப் போகிறார்கள் என்றால் ஏதோ திருவிழாவுக்குச் செல்வது மாதிரி நினைப்பில் அலைவேன். அரசுப் பொருட்காட்சி, ஆனித் தேரோட்டம், தீபாவளி துணியெடுப்பு, பொங்கல் இந்தமாதிரியான நாட்களில் தான் டவுணுக்குக் கூட்டுப் போவார்கள். இதுபோக ராயல், ரத்னா தியேட்டர்களில் படம்பார்க்கப் போவதெல்லாம் பேரதிசயம் தான்.  இத்தனைக்கும் பாட்டன்மார்களுக்குப் பூர்வீகமே டவுண் குற்றாலரோடு தானாம். இன்னும் சுண்ணாம்புக்காரத் தெரு என்று கேட்டால் தெரியும் என்பார்கள். தாத்தன்கள் எல்லாம் சாலைத்தெருவிலும், சாலியார் தெருவிலும் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்ததாகச் செவிவழிச் செய்தி. நான் கண்ணால் பார்த்ததில்லை. ஏழு தாத்தன்களில் மிச்சமிருந்த ஒன்று ரெண்டு பேரும் நான் விரல் சூப்பிக் கொண்டிருந்தபோதே படுக்கையாக விழுந்திருந்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

Image
இந்திய அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு என மொத்தம் மூன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும். மே -16ல் நடக்கவிருப்பது தமிழ்நாட்டின் பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல். 18வயது பூர்த்தியான, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள குடிமகன்கள் யாவரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் : 234 இவற்றுள் 44 தொகுதிகள் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. (ஏற்காடு, சேந்தமங்கலம்) மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் பாதியான 117தொகுதியைவிட ஒரு தொகுதி (118) அதிகமாக பெரும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க முடியும். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 4,59,50,620+ 2016 சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 5,79