பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

             577776 இதுதான் எனக்கு வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்ரோல் எண். ச்சே! கொஞ்சம் பிந்தி இருந்தால் ஐந்து 7-வருகிறமாதிரி அடுத்த எண் கிடைத்திருக்குமே என்றெல்லாம் ஹால் டிக்கெட்டை கையில் வாங்கினதிலிருந்து ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருப்பேன்.
மொத்தம் இருபது பேர் தேர்வெழுதிய அந்த அறையில் நான் இரண்டாவது ஆள். இந்த கார்த்திக் என்ற பேரை கூட்டத்தில் கல் எறிந்த மாதிரி சும்மா சொல்லிப் பாருங்கள் பத்தில் ரெண்டு பேராவது திரும்பிப்பார்ப்போம். எம்., என்., எஸ்., என்று இனிஷியலை வைத்து வரிசையாக கார்த்திக்குகளாக உட்கார்ந்திருந்தோம்.
பேரதிசயமாக அப்போது நான் கொஞ்சம் நன்றாகப் படிக்கிற பையனாக இருந்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் எங்கள் தேர்வறையில் நானும் என்.எஸ்.மணி என்பவனும் தான் ஒன்றாவது, ரெண்டாவது ரேங்க்கைத் தொடுகிறவர்கள். (நம்புங்கள்)
தமிழ் முதல் தாளில் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த மற்ற பையன்கள், இரண்டாம் தாள் எழுதப் போகும் முன்பே யார் நமக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர் என்பதுவரைக்கும் விசாரிக்க ஆரம்பித்து, இந்த பொருத்துக, நிரப்புக மாதிரியான கேள்விகளுக்கு சொல்லித்தர முன்னே இருப்பவன் பின்னே இருப்பவனை செட் செய்துகொண்டிருந்தார்கள்.
என் பக்கத்து வரிசையில் உட்கார்ந்திருந்த பாரதிராஜா என்பவன் அக்மார்க் யோக்கியன். பத்தாவது மட்டும் மூன்றாவது வருடமாக முயற்சித்துக் கொண்டிருந்தவன். கண்காணிப்புக்கு வந்திருக்கும் வேறு பள்ளி வாத்தியார் அசருகிற நேரம் பார்த்து பேப்பரைக் காட்டச் சொல்லி உசுப்புவான். அவன் மட்டுமில்லை ஒட்டுமொத்த அறைக்கும் ஆபத்பாந்தவனாக இருந்தேன். என் பேப்பர் எவன் மேசையில் இருக்கிறது என்றே தெரியாமல் நான் மற்றக் கேள்விகளுக்கு பதில் எழுதிக்கொண்டும், எழுதிய பேப்பரைக் காண்பித்துக் கொண்டுமிருந்தேன். ஆர்.எஸ்.மணி இந்த விஷயத்தில் ‘செவிடன்’ மாதிரி இருந்துகொள்வான்.
முதல் மூன்று பரிட்சைகள் வரைக்கும் பிரச்சனை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. நான்காவது நாளில் ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு ரோஸ்மேரி கான்வெண்டில் இருந்து இளவயதில் பெண் ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார். வந்ததுமே, “யாரும் பார்த்து எழுதலாம் பிட் அடிக்கலாம்னு நினைச்சா நேரா பிரின்ஸ்பால்கிட்ட கொண்டு போய் விட்ருவேன். நியாபகத்தில் வச்சுக்கோங்க” என்றுவிட்டார். எனக்கு கொஞ்சம் திகிலாகிவிட்டது. அச்சமே இல்லாமல்,. இஸ்ஸ்ஸ்ஸ்.. இஸ்ஸ்ஸ் என்று பயல்கள் சத்தம் போட்டு பேப்பரைக் காண்பிக்கச் சொல்ல நான் இப்போது செவிடன் மோடுக்குப் போயிருந்தேன்.
ஒருகட்டத்தில் ஒன் வேர்ட் கேள்விக்காவது கண் காது மூக்கு நாக்கு அடையாள ஆப்ஷன்களைச் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்த வேறுவழியில்லாமல் அடையாளம் காட்டிக்கொண்டிருந்தேன். தேர்வறை கண்காணிப்புக்கு வந்த டீச்சர் வசமாய் கண்டுபிடித்துவிட நேராகவே வந்து, “உன்கிட்ட இருந்துதான் அத்தனைபேருக்கும் பிட் போய்ட்டு இருக்கு. ஒழுங்கா உன் வேலையை மட்டும் பார்த்துட்டு எழுதுறியா பிரின்ஸிபால்கிட்ட போறியா” என்று மிரட்டிவிட்டு என் பக்கத்திலே நின்றுகொண்டார். சுத்தம்.
அவரை அங்கிருந்து நகர்த்த வழிதெரியாமல் நடுக்கமாக பரிட்சை எழுதின எனக்கு எக்ஸ்ட்ரா பேப்பர்கள் கேட்டவனெல்லாம் கடவுளாகத் தெரிந்தான். ஆனாலும் அவர் விடாக்கொண்டனாக திரும்பவந்து என்பக்கத்திலே நின்றுகொண்டு என்னுடைய பேப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் ப்ரிஃபிக்ஸ் – சஃபிக்ஸ் கேள்விகளுக்கு தவறாக பதில் எழுதிக்கொண்டிருந்த என்னை என்ன எழுதி இருக்க அது இங்க வரும் இது அங்க வரும் என்று பதில் சொல்லிக் கொடுத்துவிட்டு லேசாகச் சிரித்துவிட்டு நகர்ந்தார். ஜிவ்வ்வென்று இருந்தேன்.
அதன்பிறகான மீதம் மூன்று தேர்வுகளையும் அநாயாசமாகக் கடந்தேன். கணக்குத் தேர்வை எல்லாம் 43 பக்கத்துக்கு எழுதின ஒரே ஆசாமி நானாகத்தான் இருப்பேன். எனக்கு எக்ஸ்ட்ரா பேப்பர் கொடுத்தே டயர்ட் ஆன கண்காணிப்பாளர்கள் உண்டு. பொதுத்தேர்வு கண்ணாமூச்சுகள் முடிந்து உள்ளூரில் உள்ள கார் ஒர்க் ஷாப்பில் எஞ்சின் ஸேஸ் அடியில் படுத்துக்கொண்டு ப்ளாக் பெய்ண்ட் அடித்துக் கொண்டிருந்த தினத்தில் ரிசல்ட் வந்தது.
480க்கு மேலே மார்க் எடுத்தால் உனக்கு புது சைக்கிள் வாங்கித்தருவேன் என்றிருந்தார் அந்த முதலாளி.

நோக்கியா 3300 வைத்திருந்த அண்ணன் ஒருத்தர் உன் நம்பர் சொல்லுடா ரிசல்ட் பார்ப்போம் என்றார். நான் 577776ஐச் சொன்னேன். செல்போன் எஸ்.எம்.எஸ்ஸில் பாடங்கள் வாரியாக மொத்த மதிப்பெண்ணையும் காட்டினார். பழைய சைக்கிள் தான் கிடைக்கும்போல. 450க்கு கொஞ்சம் கிட்டத்தில்நெருங்கியிருந்தேன்.

வீட்டுக்கு வந்து அப்பாகிட்டே இத்தனை மார்க் எடுத்திருப்பதாகச் சொன்னேன். “நீ படிச்ச படிப்புக்கு இதெல்லாம் ஒரு மார்க்கால.. மேலவீட்டு செல்வி பிள்ளை 484 எடுத்திருக்கா” என்றார். செல்வி வீட்டின் மோட்டு ஓடுமீது யாரோ பருங் கல் ஒன்றை அன்றைக்கு எரிந்துவிட்டுப் போயிருந்தார்கள்.
அந்த வருடத்தில் சரியாக 77.4 சதவிகிதத்தில் தமிழ்நாடு முழுக்க பத்தாம்வகுப்பு தேர்ச்சி இருந்தது. தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலிதான் அந்த ஆண்டில் டாப்பர். தஞ்சாவூர் செயிண்ட்.ஜோஸப் பெண்கள் பள்ளிக்கூட மாணவி 495/500 மார்க் வாங்கியிருந்தார். அவர் பேர்கூட காயத்ரி என்று நினைக்கிறேன். Facebook-ல் இருந்தால் ஒரு ஹாய் சொல்லி இருக்கலாம். by the by I'm Karthick Pugazhendhi From Tirunelveli Cathedral Higher secondary school. (Boys only  )
இன்னொன்று சொல்லாமல் விட்டுவிட்டேனே. என்கிட்டே கேட்டுக் கேட்டு, என் பேப்பரைப் பார்த்துப் பார்த்து எழுதிய பாரதிராஜா மூன்றாவது அட்டம்ட்டில் பாஸாகி இருந்தான். டிசி வாங்கப் போன தினத்தில் கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல் என்னைத் தாண்டிப் போனவன் குரங்கணி கோயில் விஷேசத்தில் தேடிவந்து “ஏல மாப்ளே” என்று கட்டிக்கொண்டான்.

அந்த 577777-காரன் பேரும் கார்த்திக் தான். பாவம். 197மார்க்கில் பெயிலாய்ப் போய் இருந்தான். ஆத்தீ….

-கார்த்திக்.புகழேந்தி

25-05-2016





படத்தில் எங்கள் பள்ளிக்கூடத்தின் புதிய நுழைவாயிலும், என்னுடைய ஒன்பதாம் வகுப்பறை சன்னலும். இங்கே உட்கார்ந்து கொண்டு ரோட்டுக்கு அந்தப்பக்கமுள்ள வசந்த்&கோ - டீவிகளில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது. 

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil