பெருசுகள்


கிழவருக்கு சொடலை என்று பேர். ஆள் பார்க்க வண்டிமையை மேலே தேய்ச்சதுமாதிரி அரைக் கருப்பாக இருப்பார். கைகாலெல்லாம் குச்சு குச்சாய் மூங்கில் குருத்துமாதிரி இருக்கும். மூளிக்குளத்தில் பேராச்சியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் வளவு மொத்தத்துக்கும் கிழவருக்குச் சொந்தமானதுதான். ஆனால் கொத்துச்சாவி எல்லாம் பெஞ்சாதி தங்கம்மாள் பெயரில்தான் இருந்தது.

ஒண்ணேகால் ரூவாய் செய்யதுபீடிப் பொட்டலத்தை கையில் வாங்கி கசக்கி, உருட்டி, கீழே கட்டை விரலால் ஒரு குத்து குத்தினாரென்றால் மேட்ல்வாடு பிஞ்சுகொண்டு பீடிகள் வெளியில் நீண்டுகொள்ளும். அதில் ஒத்தைப்பீடியை எடுத்து பத்தவைத்துக் கொண்டு ஒருபல் கடியில் வாயில் வைத்துக்கொண்டே, ஏணிமீது ஏறி வைக்கப்போர் ஏத்துவார்.

“ஒருநா இல்ல ஒருநா பாரு கங்கு வுளுந்து படப்பு பத்திக்கலன்னா இருக்கு” என்று ஏசிக்கொண்டே தங்கம்மா ஆச்சி கரிச்சட்டியை கழுவி தொழுவத்துப் பக்கம் ஊத்தும். சொடலை தாத்தனுக்கு ரெண்டு பெஞ்சாதி. ஆச்சியைக் கட்டி ரெண்டு பொண்ணு பெத்தபிறகு, சீவலப்பேரியில் இருந்து ஒருத்தியை இழுத்துக்கொண்டு பச்சேரியில் வீடேத்திக் கொண்டார். இந்த சங்கதியெல்லாம் எங்களுக்கு ஆலமரத்தடியில் முடிவெட்டிக்கொள்ள போகிற ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் தெரிந்தது.

பகல்முழுக்க வயல்வேலைகளெல்லாம் பார்த்து தீர்த்ததும் ராத்திரி சாயும்போது வாய்க்காலில் ஒரு குளிப்பு போட்டுவிட்டு அந்தக் கரை ஏறிவிடுவார். சின்னாள் வீட்டில் ராத்தங்கல் போட்டுவிட்டு விடிகாலையில் தொழுவத்துக்கு வந்துவிடுவார். ‘அவனுக்கு என்னங்கா! கல்லு கணக்கா கெடக்கான் கட்டில் தேடுது’ என்று பெருசுகள் போகிறபோக்கில் அவல் மெல்லுவார்கள்.

சப்பரம் வரும் தேதிகளில் பெரியாச்சி, பேரப்பிள்ளைகள் என்று குடும்பத்தையே கூட்டிக்கொண்டு ரோட்டுக்கு வந்து சாமிகும்பிடும்போதும் சரி, கோயில் ‘கட்டளை’ ஏத்து பரிவட்டம் வாங்குகிற நாளிலும் சரி வெள்ளையும் சுள்ளையுமாக சொடலைத் தாத்தனைப் பார்க்கணுமே அப்படியே பேஞ்ச மழைக்கு மினுமினுப்பு கூடின பளிங்குத் தரை மாதிரி இருப்பார். சக்களத்தி குடும்பம்பற்றி ஆச்சி ஒருநாளும் வாயைத் திறந்து ஊர் பார்த்ததில்லையாம். எல்லாம் தெரிந்தே நடந்திருக்கிறது.

ஆச்சிக்கும் தாத்தனுக்கும் எல்லாமே சாடை மாடை பேச்சுத்தான். இவள் ஏசுவதும், அவர் ‘அந்தால அந்த கழநித்தண்ணிய எடுத்து மாட்டுக்கு வை’ என்று அவர் காற்றுப் போக்கில் சொல்லுவதும்தான் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை எல்லாம்.

மூலமடை தெரட்டுப்பக்கம் போய்க்கொண்டிருக்கும் போது கட்டுவீரியன் ஒன்று இவரை கொத்திவிட்டுப் போயிருக்கிறது. பதற்றமே இல்லாமல் அருணாகயித்தை அத்து, காலில் கட்டிக்கொண்டு, முனீஸ் அண்ணன் சைக்கிளில் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு, நேரே பச்சேரி வைத்தியன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

“எனக்குச் சூத்தை இருக்கு பல்லிலே, இரும் என்று மரத்தடியில் உக்கார்ந்திருந்த வண்டிக்காரன் யாரையாச்சும் வரச்சொல்லுங்க” என்று ஆள் அனுப்பினார் வைத்தியர். ஆள் யாரும் விஷம் உறிஞ்ச வருகிறமாதிரி இல்லாமல் போக, விஷயம் கேட்டி ஓடிவந்த சின்னாளே வாய் வைத்து நஞ்சை ரத்தத்தோடு உறிஞ்சித் துப்பிவிட்டாளாம். அன்னைக்கிலிருந்து தங்கம்மா ஆச்சிக்கு சின்னாள் மேலே ஒரு கரிசனம் பூத்துவிட்டது.

பிள்ளைகள் எல்லாம் வளர்த்திகண்டு, ரொம்பக் காலம் கழித்து தங்கம்மாள் ஆச்சி படுக்கையில் விழுந்தபோது முதல்முதலாக சின்னாள் வந்து ஆச்சிக்கு சுத்துவேலைகளுக்கு கூடமாட இருந்து பார்த்துக்கொண்டது. ‘சக்காளத்தியோள் ராசியாய்ட்டாவோ போல’ என்று ரெண்டுபேரையும் கேலிக்கிண்டல் பண்ணிக்கொள்ளுவார்கள் பீடி சுத்துகிற மைனி சம்பந்திகள். ஆனால் ஆச்சி கடைசிவரைக்கும் தாத்தன்கிட்டே மூஞ்சுகொடுத்து பேசிக்கொள்ளாமலே வெள்ளக்கோயில் போய்ச் சேர்ந்ததாம்.

#

கரைவேட்டி முத்தையா என்று அவரைச் சொல்லுவார்கள் ஊருக்குள். ஆடு மேய்கிறமாதிரி புல் நீளத்துக்கு அவருக்கு மீசை. ராஜாகுடியிருப்பில் இருந்து பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு, ஜரிகைப் பட்டு வேட்டி கட்டிக்கொண்டு, திடு திடு சத்தத்தோடு புல்லட்டில் பறப்பார். செங்கச் சூளை யாவாரி என்றால் ஊருக்குள் தெரியும். பஜாரில் கரைவேட்டிக்காரர் தான்.

தலைக்கும் மீசைக்கும் மையெல்லாம் அடித்து ஆள் ஒரு நாப்பது அம்பது போல் பவுசு காட்டினாலும் நிசத்துக்கு அவருக்கு எழுபதுக்குமேலே வயசு. 
பெருசுக்கு போகிற ஊரெல்லாம் தொடுப்புகள் இருப்பதாக ஒரு ரகசியமில்லாத ரகசியம் உண்டு. கோட்டூர் ரோடு பிரிகிற இடத்தில் அவருக்கு ஒரு டீக்கடை இருந்தது. சமாதானபுரம் போகிற வளவில் மாட்டுவண்டிக்கு ஆரச்சக்கரம் அடித்துக் கொடுக்கும் தெருவில் அவருக்கு ஒரு வைப்பாட்டி இருப்பதாகப் பேச்சு உண்டு.

இன்றைக்கு சாந்திநகரில் இடிந்துகிடக்கும் கார்த்திக் தியேட்டரில் அப்போது படம் ஓட்டிக்கொண்டிருந்த காலம். ராத்திரி காட்சிகள் போய்விட்டு சைக்கிளில் திரும்புகிற ஆட்கள் கல்லறைத்தோட்டம் வந்தால் போதும் உடனே கரைவேட்டிக்காரர் வேட்டி அவுத்த கதையைப் பேசிச் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதென்ன வேட்டி கதை? சமாதானபுரத்து வளவில் கரைவேட்டிகாரர் மெய்ண்டைன் செய்துவந்த பொம்பளையின் புருசனுக்கு பஜாரில் பெரிய ஸ்வீட்டு கடை இருந்திருக்கிறது. லாலாக்கடைகளுக்கு பேர் வாங்கிய அண்ணாச்சி கடை யாவாரத்திலே ஊறிக் கிடக்க, கரைவேட்டி அவர் வீட்டில் ஓடு மாத்தி இருக்கிறார்.
ஒரு நாள் கையும் களவுமாய் ரெண்டுபேரும் ஆப்பட்டுக்கொள்ள, வேட்டியை உருவிவிட்டு விரட்டி விரட்டி அடித்துப் பத்திவிட்டிருக்கிறார் லாலாக்கடைக் காரர். ராத்திரி பத்துமணிக்கு நடந்த இந்த சம்பவத்தால் ஊருக்குள் அவமானமாகிவிடுமே என்று கல்லறைத் தோட்டத்தில் ஒதுங்கிக்கிடந்து, நடுநிசியில் வேட்டியில்லாமல் குளத்தாங்கரை வழியாகவே ஊருக்குள் பாய்ந்திருக்கிறார் கரைவேட்டி. வரும்வழியில் வாத்துக்காரனிடம் மாத்து வேட்டி வாங்கிக் கட்டிக்கொண்டு போனவரின் சங்கதில் பொழுது புலரும் முன்னே ஊர் முழுக்க பரவி விட்டது.

*
அந்த எழுத்தாளர்கிட்டே பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு சுவாரஸ்யம் அவர் தாத்தாவைப் பற்றி வந்தது. என்னென்ன அழிச்சட்டியம் பண்ணி இருக்கிறான்கள் இந்தக் கிழவன்கள் என்றார். நான் ஏதாச்சும் சொல்லுங்கள் என்றேன். “எனக்குச் சின்ன வயசிலே எங்க தாத்தா தவறிட்டதாலேயும், அவருக்குன்னு போட்டோ கீட்டோ ஏதும் இல்லைங்கிறதாலையும் ஆச்சிகிட்டப் போய் நம்ம தாத்தா ஆள் பார்க்க யார் மாதிரி இருப்பா என்று நச்சரித்தேன்.

ரொம்ப நோண்டி நோண்டி கேட்டபிறகு ஆச்சி சிரிக்காமல் கொள்ளாமல், ‘அந்தா கீழத் தெருவுல ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருப்பால்லா. அவ மன் ஒருத்தன் இருக்காம் பாரு அவனப் பார்த்தா உங்க தாத்தனைப் பார்க்க வேண்டாம்’ என்றாள். நான் முதலில் அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்துகொள்ளாதவனாக இருந்தேன். பிறகுதான் தெரிந்தது. அந்த குத்துக்கல்லாய் இருந்த பெண் தாத்தாவின் தொடுப்பு என்று. இன்னும் விடாமல் ஆச்சி சொல்லிக்கொள்வாள் ‘பிள்ளையில்லாத வூட்டுல கெழவன் துள்ளி வெளையாண்டானாம் என்று” அந்த எழுத்தாளர் இப்படிச் சொல்லி முடித்தபோது நான் மெல்லவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் புன்முறுவலித்தேன்.

*
நண்பன் அவனது தாத்தாவைப் பற்றி சொன்னான். “ஆள் வீட்ல இருந்தா ஒரே கோவணப் பாய்ச்சல் தான். மணியும் கிணியுமாத்தான் திரிவார். சேறு மிதிக்கிறப்போ தசையெல்லாம் இறுகி இருக்குறதைப் பார்த்தா சிக்ஸ் பேக்ஸோட பத்துபேர் வந்தாலும் சமாளிக்கிற மாதிரி இருப்பார். ஒருதடவை இந்த அணிலடிக்கிற குறவர் ஒருத்தர் அவர் பெஞ்சாதியை அடிச்சுட்டு இருந்திருக்கார் நடுரோட்ல. தாத்தா வீராவேசமாக் கிளம்பிப்போய் அவன்கிட்ட சண்டைபோட்டுட்டு நீவாம்மா நான் உனக்கு சோறுபோடுறேன். இவன்கிட்ட அடிப்பட்டு சாவாதன்னு சொல்லி பக்கத்துக் கடையில குழல்முட்டாய் வாங்கி கொடுத்துருக்கார்.

அந்தப் பொண்ணோட வூட்டுக்காரன் அவங்க ஆட்கள்கிட்டப் போய் தாத்தா சண்டை போட்டதைச் சொல்லி, எம்பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டுப் போய்ட்டானு அழுதிருக்கான். மொத்த கூட்டமும் ரவை துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்துடுச்சு. ஓடுன திசை தெரியாம ஓடி புளிய மரத்துமேல ஏறி ஒளிஞ்சுகிடந்து மருநாள் மேலெல்லாம் சிராய்ப்பா வந்து நின்னுருக்கார் தாத்தா. ஆச்சி என்ன ஏதுன்னு கேட்டதுக்கு, “புளியங்கா உழுக்கப் போனேன்’னு சொல்லி சமாளிச்சுட்டாராம்” என்றான்.

*
-கார்த்திக்.புகழேந்தி
28-05-2015.





Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil