தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
இந்திய அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம்,
சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு என மொத்தம் மூன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும்
மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும்.
மே -16ல் நடக்கவிருப்பது தமிழ்நாட்டின்
பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல்.
18வயது பூர்த்தியான, தமிழக வாக்காளர் பட்டியலில்
பெயர் இடம்பெற்றுள்ள குடிமகன்கள் யாவரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத்
தகுதியானவர்கள்.
தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் : 234
இவற்றுள் 44 தொகுதிகள் சாதி வேட்பாளர்களுக்காக
ஒதுக்கப்பட்டது. 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
(ஏற்காடு, சேந்தமங்கலம்)
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் பாதியான
117தொகுதியைவிட ஒரு தொகுதி (118) அதிகமாக பெரும் கட்சி அல்லது கூட்டணி
பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க முடியும்.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் மொத்த
வாக்காளர் எண்ணிக்கை : 4,59,50,620+
2016 சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர்
எண்ணிக்கை : 5,79,75,075+
வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு சதவிகிதம் 26%
வாக்குப் பதிவு மையங்கள் எண்ணிக்கை : 65,616
மே16ம் தேதி காலையில் 6மணிக்கு ஆரம்பிக்கும்
வாக்குப்பதிவு மாலை 7 மணியோடு முடிவுக்கு வரும். சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் மூலம் மே
19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டி அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். அறுதிப்
பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை
ஆட்சி புரியும்.
காலையில் வாக்குச் சாவடிக்கு வாக்காளர் அடையாள அட்டை / பூத் ஸ்லிப் ஆவணங்களுடன் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க முடியும். காவலர்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்துவார். முதல் தேர்தல் பணியாளர் உங்கள் ஆவணங்களைப் பரிசோதிப்பார். அவரது உதவியாளர் ஆவணங்களைச் சரியார்க்க உதவுவார், இரண்டாவது பணியாளர் இடதுகை ஆள்காட்டி விரலில் கருநீல மையினை வைத்து, “இவர் வாக்களித்துவிட்டார்’ என்று அடையாளம் வைப்பார். பிறகு பாதுகாப்பான இடத்தில் இருக்கும் வாக்கு இயந்திரத்தில் வரிசையாக இருக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வாக்காளரின் சின்னம்/ புகைப்படத்திற்கு பக்கத்தில் உள்ள பட்டனை அழுத்தி வாக்களிக்க வேண்டும். சிவப்பு வண்ண விளக்கும், பீப் ஒலியும் உங்கள் வாக்கு பதியப்பட்டதை ஊர்ஜிதப்படுத்தும்.
அவ்வளவுதான் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையைச்
செய்து முடித்துவிட்டீர்கள். இவ்வளவுதான் அடிப்படை விஷயங்கள். 1952 முதல் 2011 வரை .. நடைபெற்ற 14 சட்டமன்றத் தேர்தல்கள் பற்றிய
சிறு குறிப்புகளைத் தேடிச் சேகரித்து எழுதியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால் படித்துப்பாருங்கள்.
பகிர்ந்தும் கொள்ளுங்கள் நன்றி.
******
1952ல் தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது. (அதற்கு முன்பாக சென்னை மாகாணத்திற்கு ஆங்கிலேய ஆட்சியில், 1920முதல் 1946வரை 7தேர்தல்கள் நடைபெற்றுள்ளன)
*1957 தேர்தலில் 205 தொகுதிகளில் 151 இடங்கள்
பெற்று காங்கிரஸ் கட்சி வென்றது. காமராஜர் இரண்டாவது முறை முதல்வரானார்.
ஆந்திராவின் பிரிவால் கம்யூனிஸ்டுகள் பலமிழந்தனர். திமுக அங்கீகரிக்கப்பட்ட
கட்சியாக இல்லாததால் அறிஞர் அண்ணா தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சுயேட்சையாக
போட்டியிட்டு 13 இடங்கள் வென்றனர்.
*1962 தேர்தலில் 206 தொகுதிகளில் 139 இடங்கள்
பெற்று காங்கிரஸ் கட்சி வென்றது. 143 இடங்களில் போட்டியிட்ட திமுகழகம் 50இடங்கள்
வென்றது. சாத்தூரில் போட்டியிட்டு வென்ற காமராஜர்
மூன்றாம் முறை முதல்வரானார். காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா தோல்வி அடைந்தார்
*1967 தேர்தலில் 232 தொகுதிகளில் 174 இடங்களில்
போட்டியிட்ட திமுக 137 இடங்களில் வென்றது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51
இடங்கள் பெற்று படுதோல்வி அடைந்தது. கட்சிப் பணிக்காக பதவி விலகிவிட்டு
பக்தவச்சலத்தை முதல்வராக்கின காமராசர் விருதுநகரில் தோல்வி அடைந்தார்.
போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளால் அறிஞர் அண்ணா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டிலே அவர் மறைந்தார்.
*1971 தேர்தலில் 234 தொகுதிகளில் தேர்தல்
நடைபெற்றன. 203 இடங்களில் போட்டியிட்ட திமுக 184 இடங்களை வென்றது. 1969ல் அண்ணா
மறைந்ததால் மு.கருணாநிதி முதன்முதலாக தமிழக முதல்வரானார். 1972ல் எம்.ஜி.ஆர்
திமுகவை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி (அ.இ.அதி.மு.க) தொடங்கினார். 1976ல்
காமராஜர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சி வலுவிலந்தது.
*1977 தேர்தலில் 234 தொகுதிகளில்
எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக கூட்டணி 144 இடங்களில் வென்றது. 1975ல்
நெருக்கடி நிலையை அறிவிக்கப் பட்டதால் ஓராண்டுக்கு முன்பே திமுக ஆட்சி
கலைக்கப்பட்டது. 48 இடங்கள் மட்டுமே பெற்ற திமுக நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த
தேர்தல்களில் 12 ஆண்டுகள் வரை ஆட்சியைக் கைப்பற்ற
முடியவில்லை.
*1980 நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 162
இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 69 இடங்களைப் பெற்றது. 1977 வெற்றி பெற்ற அதிமுக
ஆட்சி மூன்றே ஆண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டதால் 1980ல் தேர்தல் நடைபெற்றது.
எனினும் அதிமுகவே வென்று எம்.ஜி.ஆர் இரண்டாம் முறை முதல்வரானார். 1980ல் மத்தியில் சரண்சிங் ஆட்சி கவிழவும் அதன்
தலைவர்களுள் ஒருவரான பிஜூ பட்நாயக் திமுக அதிமுக கட்சிகளை இந்திரா காந்திக்கு
எதிராக ஓரணியில் திரட்ட முயன்றார். ஆனால் அவர் திட்டம் கைகூடவில்லை.
*1984ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில்
இந்திராகாந்தி காங்கிரஸ் இணைந்தது. அதற்குமுன்பு வரை திமுக கூட்டணியில் இருந்தது.
232 இடங்களில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 195 இடங்களில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்
மூன்றாவது முறை முதல்வரானார். திமுக 34 இடங்களில் வென்றது. 1987ல் எம்.ஜி.ஆர்
மறைந்தார்.
*1989 தேர்தலில் 232 இடங்களில் நடைபெற்ற
தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கருணாநிதி மூன்றாம்
முறையாக முதல்வரானார். அதிமுக 27 இடங்களில் வென்றது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு
அதிமுக ஜெயா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. இரு அணியையும் அரசியல் கட்சியாக
அங்கிகரிக்க மறுத்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிடது. ஜெயலலிதா
சேவல் சின்னத்திலும், ஜானகி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டார்.
*1991 தேர்தலில் அதிமுக +காங்கிரஸ் கூட்டணி 224
இடங்களை வென்றது. திமுக வெறும் 7 இடங்கள் பெற்று பின் தங்கியது. முந்தைய தேர்தலில்
பிரிந்துகிடந்த அதிமுக ஜெயலலிதா தலைமையின் ஒன்றானது. ஜானகி அரசியலிலிருந்து ஓய்வு
பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி முதன்முறையாக யானை சின்னத்தில் போட்டியிட்டது.
தனிப் பெரும்பான்மை பெற்ற ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.
*1996 தேர்தலில் திமுக + த.மா.காங்கிரஸ் +
இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி 220 இடங்களை வென்று கருணாநிதி நான்காம் முறையாக
முதல்வரானார். முந்தைய தேர்தலின் வெற்றிக்குப் பிறகு அதிமுகவுடன் கொண்ட கூட்டணி
முறிவால் எதிர்கட்சியாக செயல்பட்டது காங்கிரஸ். தொடர் ஊழல் குற்றச் சாட்டுகளால்
ஆட்சியை இழந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 4 இடங்களில் மட்டுமே வென்றது. மூன்றாவது
கட்சியாக பாட்டாளி மக்க்ள் கட்சியும் 4 இடங்களைப் பெற்றிருந்தது. இக்காலகட்டத்தில்
வைகோ திமுகவிலிருந்து பிரிந்தார்.
*2001 தேர்தலில் பலம்பொருந்திய கூட்டணியோடு
போட்டியிட்ட அதிமுக 196இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழக
முதல்வரானார். மக்கள் செல்வாக்கோடு இருந்தாலும் இடைக்காலத்தில் மத்தியில் பாரதிய
ஜனதாவோடு தேசிய கூட்டணியில் இருந்த திமுக 31 தொகுதியில் மட்டுமே வென்றது.
தனித்துப் போட்டியிட்ட மதிமுக 205 இடங்களில் டெபாசிட் இழந்தது.
*2006 தேர்தலில் திமுக + காங்கிரஸ் + பாமக +
சிபிஐ+ சிபிஎம் கூட்டணி 163 இடங்களில் வென்று கருணாநிதி ஐந்தாவது முறை
முதல்வரானார். திமுக மட்டும் 96 இடங்களை வென்றது. அதிமுக + மதிமுக+ விடுதலைச்
சிறுத்தைகள் கூட்டணி 69 இடங்களை வென்று பின்தங்கியது. கூட்டணிக் கட்சிகள்
பெரும்பான்மை பெற்றும் தனிக்கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால்
30அமைச்சர்களோடு ஆட்சிப் பொறுப்பேற்றார் கருணாநிதி. கூட்டணிக் கட்சிகள் அவரை
வெளியிலிருந்து ஆதரித்தமையால் மைனாரிட்டி திமுக ஆட்சி என்று எதிர்க்கட்சியினரால்
அழைக்கப்பட்டது.
*2011 தேர்தலில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன 234
தொகுதிகளில் 188 பொதுத் தொகுதிகளும் 46 தனித் தொகுதிகளும் வகுக்கப்பட்டன. அதிமுக
கூட்டணியில் 11 கட்சிகளும். திமுக தலைமையில் 8 கட்சிகளும் போட்டியிட்டன.
160 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 146 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஜெயலலிதா தலைமையில் ஆட்சி
அமைத்தது. தமிழகத்தேர்தல் வரலாற்றில் அதிகபட்சமாக 77.8% வாக்குகள் பதிவானது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 29 இடங்களில் வென்று எதிர்கட்சி
அங்கிகாரம் பெற்றது. 119 இடங்களில் போட்டியிட்ட திமுக ஈழப்படுகொலை
எதிர்ப்பலைகளினாலும், 2ஜி அலைக்கற்றை விவகாரங்களினாலும் எழுந்த விமர்சனங்களால் 23
இடங்கள் மட்டுமே வென்று தோல்வியடைந்தது. வைகோ தலைமையிலான மதிமுக தேர்தலை
புறக்கணித்தது. சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளால் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா பதவியை இழந்ததால் தற்காலிகமாக அதிமுக எ.எல்.ஏக்கள் ஆதரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வடசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
*2016 தேர்தல் ஆறுமுனைப் போட்டியைச்
சந்திக்கிறது. நாம் தமிழர்கட்சி, பாமக, பாஜக கட்சிகள் தனித்துப் போட்டியிட,
மக்கள்நலக்கூட்டணி + தேமுதிக+ த.மா.க கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும்
பலகட்சிகளின் பங்களிப்போடு போட்டியிடுகின்றன. ஆட்சியிலிருக்கும் அதிமுக கூட்டணிக்
கட்சிகளை இணைத்தாலும் அவைகளை இரட்டை இலை சின்னத்திலே போட்டியிட
வலியுறுத்தியுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்க 26% மேல் உயர்ந்திருக்கும் இந்த
தேர்தல்முடிவுகள் அடுத்த ஐந்தாண்டுகள் தமிழக மக்களின் தலை எழுத்தை நிர்மாணிக்கும்.
-கார்த்திக்.புகழேந்தி
12-05-2016.
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது