நெற்கட்டான் செவல் கதை

 போன வருஷ மேமாசத்தில் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்னையிலிருந்து கிழக்குகடற்கரைச் சாலை வழியாக தூத்துக்குடி வரைக்கும், பிறகு அங்கிருந்து திருநெல்;வேலி, வட்டாரங்கள், மதுரை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், அப்படியென்று ஒருபாடு ஊர் சுற்றுவந்தேன். இந்த வருசத்தில் ஆந்திரா, ஒரிசா வழியாக சட்டீஸ்கர் வரைக்கும் அப்படி ஒரு சுற்றல் போட நினைத்துவைத்திருந்தேன். நினைப்பு நினைப்பாகவே தேம்பிவிட்டதால் எலெக்‌ஷனை மனதில் வைத்து ஊர்ப்பக்கங்களில் கொஞ்சம் விட்டேத்தியாகச் சுத்த நினைத்தேன். அப்போதுதான் நண்பர் துரைமோகன்ராஜ் அவர்களை எதேச்சையாக வேறோரு காரியத்துக்காக அழைத்து, கடேசியில் அவரோடே சங்கரன்கோயில் பகுதிகளைச் சுற்றுக்கொண்டு வந்தேன். நான் கொஞ்சம் சுமாராக எழுதி இருந்தேன். அவர் ரெக்கார்டர் ஆன் செய்து வைத்து பேச்சுக்களை பதிந்தது போல அப்படியே கச்சிதமாக மொத்த நாளில் நடந்ததையும் எழுதிவிட்டார். 



எழுதியது.... 
துரை.மோகன்ராஜ்                                                                                 சங்கரன்கோயில்
25-05-2016 . 



            ஒரு மழை நாளின் சாயாங்கால வேளையில் என் மகனுடன் 24 படம் பார்த்துக் கொண்டிருக்கையில் பேஸ்புக் மெசஞ்சரில் ஒரு அழைப்பு வந்தது.எடுக்க எத்தனிக்கையில், "குவாண்டம் பிசிக்ஸ் தெரிஞ்சா நானும் டைம் ட்ராவல் பண்ணலாமா?" என்ற என் மகனின் கேள்வி, என் கவனத்தை மெசஞ்சர் அழைப்பிலிருந்து திருப்பி விட்டது. சரி,இன்டர்வலில் பார்த்துக் கொள்ளலாம் என்று குவாண்டம் பிசிக்ஸ் பற்றிய விளக்கத்தில் மூழ்கிவிட்டேன். இன்டர்வெல் வர-யாரது-அழைத்தது,அதுவும் மெசஞ்ரில் என்று எடுத்துப் பார்த்தால், கார்த்திக் புகழேந்தி அழைத்திருந்தார்.
            அந்த மெசஞ்சர் அழைப்பு மிஸ்ஸானதைத் தொடர்ந்து,என் மொபைல் நம்பரையும் கேட்டிருந்தார்.இவரைப் பற்றி, இவரது பதிவுகளை பேஸ்புக்கில் பார்த்திருக்கிறேன். இவரது புத்தகங்களைப் பற்றியும்-எழுத்தார்வம்-இலக்கியத்திறன் பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் நேரில் அறிமுகமில்லை. இவர் ஏன் நம்மை அழைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டே என் நம்பரை அவருக்கு அனுப்பி வைத்தேன்.சிறிது நேரத்தில் அவரே அழைத்தார்.

"சார்-மே 11 திருச்சி மாநாட்டுல அய்யா பேசுனதோட வீடீயோ வேணுமே!" என்றார்.அய்யா என்றால் தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அய்யா. சரிங்க, வாங்கித் தர்றேன். நீங்க எங்க இருக்கீங்க?"என்று கேட்டேன்.

"இங்க திருநவேலில தான். எலக்சனுக்காக வந்தேன்.அப்படியே ஊர் சுத்திட்டிருக்கேன்" என்றார். அட,அப்ப இவரை சங்கரன்கோவில் வரச் சொல்லி-நெற்கட்டான் செவல் பூலித்தேவர் அரண்மனைக்கு கூட்டி போகலாமே, அதைப் பற்றி எழுதச் சொல்லாமே என்று நினைத்து, நினைத்ததை அப்படியே அவரிடம் சொன்னேன்.

"இங்க சங்கரன்கோவில் பக்கத்துல பூலித்தேவர் அரண்மனை இருக்கு. இங்க தான் மருதநாயகத்துக்கும் பூலித்தேவருக்கும் சண்டை நடந்து, அதுல மருதநாயகம் தோற்று ஓடினாரு. மருதநாயகம் தோற்ற ஒரே ஒரு போர்களம் அது தான். இதைப் பத்தில்லாம் நீங்களும் எழுதனுமே" என்ற வேண்டுகோளை வைத்ததும், "சார், நாளிக்கு நா பாவநாசம் போலாம்ன்னிருந்தேன். போவல. உங்கூர்க்கு வாரேன்" என்றார்.

சொன்னபடியே வந்தார். என்ன காலையில் வந்துடுறேன் என்றவர்,மதியம் இரண்டு மணிக்கு அவரது யமஹா ஆர்எக்ஸ் 100 ல் வந்தார். அதுவும் வரும் போதே மழையையும் கூட்டிக் கொண்டு வந்தார். உடைமாற்றல்- உபசரிப்பு எல்லாம் முடிந்து இருவருமாய் என் காரில் நெற்கட்டான் செவல் நோக்கிப் பயணமானோம்.

நெற்கட்டான் செவலுக்கு போகும் வழியில் நான்கைந்து கிரஷர்கள் உண்டு. மலையை உடைத்து சல்லிக் கற்களை எடுக்கும் அந்த "க்ரஷர்களை" ஆச்சர்யமாகப் பார்த்தவர்-தன் கேமராவிலும் அதை அடைத்துக் கொண்டார். "இதோ இது டைரக்டர் ஷங்கருக்கு ரெம்ப பிடிச்ச லொக்கேஷன்ங்க. இங்க தாங்க அந்நியன் ஷூட்டிங் நடந்தது.இந்த ரோட்ல தான் ரண்டக்க ரண்டக்க பாட்டுக்காக பெயின்ட்ல கோலம் போட்டாங்க.

முதல்வன் படத்துல அர்ஜூனை பாம்பு கடிக்குமே, அதுக்கு கூட மனீஷா வைத்தியம் பாக்குமே,அது அதோ அந்த மண்டபத்துல தான்..." என்று போகும் வழியெங்கும் எனக்குத் தெரிந்தவற்றை சொல்லிக் கொண்டே போனேன்.இது தான் மனீஷா கொய்ராலா இருந்த மண்டபம் என்று சொன்ன அடுத்த நொடி,"அந்த மண்டபமா?போட்டோ எடுக்கனுமே" என்று ஓடினார்.

"அட மனீஷா கொய்ராலா இருந்த மண்டபம் ன்னு சொன்னதுக்கா" என்ற என் நக்கலைக் கூட காதில் வாங்கவில்லை. புதராக இருந்த மல்லிகைச் செடிகளுக்குள் புகுந்து ஓடினார்.

"அலோ கார்த்திக்...பாத்துங்க... இது செவலக்காடு...பாம்பு கீம்பு இருக்க போவுது" என்றேன். அதையும் சேர்த்து படம் எடுப்போம் என்றவாரே மண்டபத்தை பல கோணங்களில் படமெடுத்தார். பத்து நிமிடங்கள் கழித்து வந்தவர்-இது நாயக்கர் கால மண்டபம். இந்த தூண் பாண்டியர் ஸ்டைல்.மேல உத்திரம் சோழர்கள் பாணி என்று மண்டபத்தின் வரலாற்றை எனக்கு சொன்னார்.
"இந்த மாதிரி பழங்கால மண்டபங்கள பாத்தா, நா விடுறதில்ல. உடனே போட்டோ எடுத்திடுவேன். ஏன்னா எப்பன்னாலும் இந்த மண்டபங்கள் காணாம போகும். நம்ம மக்களுக்கு இதோட அருமைல்லாம் புரியாது. அதோட அதுல எதாச்சும் கல்வெட்டு இருக்கும். அதுல நமக்கான தீனி இருக்கும். நாலு கதை கிடைக்கும்" என்றார். "கல்வெட்டா? உங்களுக்கு கல்வெட்டுக்களைப் படிக்கத் தெரியுமா?" "ஆமாங்க" என்ற கார்த்திக்கின் இந்த பதில் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

போகும் வழியெங்கும் எதையும் விட்டு வைக்கவில்லை. ஏரிக்கரையோர நடுகல்-ஆலமரம்-முசல்மான் கல்லறை-பச்சேரி கிராமத்தின் நந்தி-பள்ளிக்கூட மாணவர்கள்-நூறு நாள் வேலைக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்த கிராம மக்கள் என எதையும் விடவில்லை.கேமராவில் சுட்டுத் தள்ளினார்.

புன்னைவனப்பேரி என்ற ஊரைக் கடக்கும் போது, "சார்,அந்த காலத்துல கோயில்கள்ல இந்த புன்னை மரத்தோட காய்கள் தான் தீவாரதணை காட்டுறதுக்கு பயன்பட்டுச்சு. அப்பல்லாம் சூடம் கிடையாது. இந்த காய்களை காய வச்சு, அப்படியே கொளுத்துவாங்க. நின்னு எரியும். பாண்டிச்சேரில ஒரு புரபசர் இந்த மரத்தோட காய்களை வச்சு பயோ டீசலே செஞ்சாரு" என்று அட்டகாசமான புதிய தகவலைச் சொன்னார்.

பேசிக் கொண்டே நெற்கட்டான் செவல் கிராம எல்லையை அடைந்தோம். அங்கிருந்த தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட "நெல்கட்டும் செவல்" என்ற பெயர்ப் பலகையைக் காட்டினேன்.

"பாத்தீகளா இதை.பாளையத்தில் விளைந்த நெல்லை ஆற்காடு நவாபிடம் வரியாகக் கேட்டது பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பனி. நவாப் தனக்கு கீழ் இருந்த எல்லா பாளையக்காரர்களிடமும் கேட்டார். நவாபின் ஆணையை இரண்டே இரண்டு பாளையங்கள் தான் மறுத்தது. ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம், இன்னொன்று இந்த நெற்க்கட்டான் செவல் பாளையம். இதில் முதலில் மறுத்தது நெற்கட்டான் செவல் பாளையம். அந்த வகையில் அக்கால இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக, முதன் முதலில் வாள் உயர்த்தியது பூலித்தேவர் தான். அது பிடிக்காமல் தான் அவரை அடக்குமாறு ஆற்காடு நவாபைக் கேட்டுக் கொண்டது கிழக்கிந்தியக் கம்பனி.

நவாபும் கம்மந்தான் கான்சாகிப் என்ற மருதநாயகத்தை அனுப்பி வைத்தார். கான்சாகிப் பெரும் வீரன். தோல்வியையே அறிந்திராவதன். அப்பேற்பட்டவன் மாவீரன் பூலித்தேவரிடம் தோற்று ஓடினான். கடைசியில் கம்பனிபடை பீரங்கிகளைக் கொண்டு வந்து அடக்கியது. அடக்கிய கையோடு- நெற்கட்டான் செவல் பாளையம் என்ற ஊரின் பெயரையும் நெற்கட்டும் செவல் என்று மாற்றி வைத்தது. சுதந்திரம் பெற்று எழுபது வருடங்களாகியும் நாமும் நெற்கட்டும் செவல் என்ற பெயரையையே தொடர்கிறோம். அதன் பின்னால் இருந்த காரணம் புரியாமல்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன்.

"இத மாதிரி நிறைய ஊர்ங்க இருக்குங்க. பச்சேரி ங்கற ஊர் பேர் எப்படி வந்துச்சி தெரியுமா?" என்று ஒரு வரலாற்றைச் சொன்னார். உள்ளபடியே அதிர்ந்து போனேன். இக்காலத்திலுமா இப்படி என்று நினைத்துக் கொண்டேன். அது என்ன பச்சேரி வரலாறு? அதை கார்த்திக்கிடமே கேளுங்க.

இதெல்லாம் இருந்தும் கார்த்திக்கிடம் ஒரே ஒரு விசயத்தில் தான் நமக்கு மைல்ட் கடுப்பு.பாம்பு-பல்லி-மரம்-செடி,கொடி-பாழடைந்த மண்டபம்-ரோடு என எதை எதையோ வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தாரே தவிர, ஒரு புகைப்படம் கூட என்னை எடுக்கவில்லை. அடுத்த பயணம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள். கார்த்திக்கின் கேமராவில் விழ கல்வெட்டாகவோ அல்லது பாழடைந்த மண்டபமாகவோ தான் நாம் இருக்க வேண்டும் போல. இதோ இந்தப் புகைப்படம் கூட என் மொபைலில் எடுத்தது. எடுத்தவர் பின்னால் இருக்கும் ரெஸ்ட்டாரன்ட் பணிபுரியும் அண்ணன் ஒருவர். கார்த்திக்கின் கேமராவிற்கு ஆந்த்ரோபோபியா போல.

ஆனாலும் கார்த்திக் உடனான அந்த இரண்டு மணி நேர பயணத்தில் நான் கார்த்திக்கிடம் கற்றதும்-பெற்றதும் நிறைய...நிறைய... அதையெல்லாம் அவரிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கின்றேன். 
அந்த "குறி சொல்லி" கதையை சீக்கிரம் கொண்டு வாங்க..



சங்கரன்கோயில் மீன்துள்ளி  உணவகத்தில் துரைமோகன்ராஜ் மற்றும் கார்த்திக் புகழேந்தி 

Comments

  1. ரசிக்கக்கூடிய மனிதரும்
    ரகசியமாய் போனவரலாறும்
    அருமை

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil