‘கதா மாலிகா’



            ரசய்யா குறித்து நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம் விசாகப்பட்டினத்தில் கப்பல் துறையில் வேலையிலிருக்கும் நண்பனோடு. அவரது புத்தகங்கள் மீது தீராத மோகம் இருந்தது எனக்குள்ளாக. அதேப்போல இன்னும் சில பழைய புத்தகங்களையும் ஏற்கனவே  வாசிக்கத் திரட்டிக் கொண்டிருந்தேன்.

ரா.பி சேதுபிள்ளை எழுதிய தமிழகம்; ஊரும் பேரும், தமிழர் வீரம், கி.வா.ஜ தொகுத்த 25ஆயிரம் சொலவடைகள், கே.கே பிள்ளையின் தென் இந்திய வரலாறு, பேராசிரியர் ராம வேலாயுதம் எழுதிய தென் கிழக்கு ஆசியா,  முனைவர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய முகலாயர் வரலாறு இப்படியாக சிலவை.

நேற்றைக்கு எழும்பூர் தமிழ்ச்சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்குப் போயிருந்தோம். ‘கல்வெட்டு’ காலாண்டிதழின் நூறாவது சிறப்புப் பிரதியை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பணியாற்றும் நண்பர் அன்பளித்தார். கூடவே, சென்னை, நெல்லை, குமரி, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் குறித்த கல்வெட்டு பதிப்பு நூல்களையும் வாங்க உதவி செய்தார். வந்ததும் முதல்வேலையாக சென்னைக் கல்வெட்டுகள் பதிப்பு நூலைப் புரட்டினேன்.

கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து சென்னையில் பல இடங்களில் முதலியார்களும், ஆச்சாரிகளும் நிலங்கள் வாங்கி, கோயில்கள் கட்டி, வீடுகளையும், கடைகளையும் பசுக்களையும் தானமாக வழங்கின பல செய்திகளைக் கல்வெட்டுகளாக எழுதியிருந்த தரவுகளைக் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

சாந்தோம் மாதா கிழக்கு ஆலயத்தில் ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தி கல்வெட்டு இருப்பதாக இரண்டு ஆண்டுகள் முன்பே அங்கே சென்றபோது பேராசிரிய நண்பர் சொல்லியிருந்தார். நூலின்படி அங்கே ராஜராஜன் மட்டுமில்லை, ராஜேந்திரன், குலோத்துங்கன் பற்றி எழுதின 11ம்-13ம் நூற்றாண்டு காலத்தைய கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. பிறகு, திருவள்ளூர் மாவட்ட கல்வெட்டுகளைப்   படித்துக் கொண்டிருந்தேன்.

 சில மாதங்களுக்கு முன்பாக நண்பன் கவிமணியோடு அவரது சொந்த ஊரான பொன்னேரிக்குப் போயிருந்தபோது, அங்கிருந்து 12கல் தொலைவில் இருந்த திருப்பாலைவனம் கோயிலுக்கு அழைத்துப் போயிருந்தார். அப்போது அந்தக் கோயில் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு சோழன் தானைய்யா உங்கள் ஊரில் இந்தைக் கட்டியிருக்கிறான் என்றேன். இப்போது அதற்கு விடைதெரிந்தது. திருப்பாலைவனம் மூன்றாம் குலோத்துங்கனின் கைங்கர்யம். இப்படியாக பழசுகளைத் தேடுகிறது ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தாலும் நரசய்யா பற்றின பேச்சு இன்னொரு பக்கத்துக்கு மடைமாற்றிவிட்டது.


இன்றைக்கு மதியத்தில் ஒரே மூச்சாக இராயப்பேட்டை கோனார் மாளிகையில் இயங்கும் பழநியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்திற்கு நண்பனும் நானும் போயிருந்தோம். பெரிய குடோன் மாதிரி புத்தகங்களாய் அடுக்கி வைத்திருந்த குடோனைத் திறந்துவிட்டு, எது வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று கைகாட்டிவிட்டார்கள். உள்ளே புகுந்து ஒரு மணிநேரம் வியர்த்துக்கொட்டி, தேவையானது என்று ஓர் இருபது சொச்சம் நல்ல புத்தகங்களை அள்ளிக்கொண்டுதான் வெளியேறி னேன். 
(வந்ததும் வராததுமாக இதோ மதராசப்பட்டினத்தை விரித்து வைத்திருக்கிறேன்)

வாசித்த புத்தகங்களை ஒருவாராக எழுதிவைத்துக் கொள்வதில் ஒரு நல்லது என்னதென்றால் அது எங்கே வைத்தோம் என்று தேடுவதற்குச் சவுகரியமாய் இருக்கிறது. அரைகுறையாக விட்டதை திரும்ப முடிக்க உட்காரவும் ஒரு உத்வேகம் வருகிறது. கே.ஏ நீலகண்ட சாஸ்த்ரியின்  ‘சோழர்கள்’ முதல் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாதத்தில் தான் வாசித்து முடிக்கவே செய்தேன்.  

ஏ.கே.செட்டியாரின் ‘தமிழ்நாடு பயணக்கட்டுரைகள்’ நூலில் ஒரு வினோதமான செய்தியைக் கவனித்தேன். நெல்லை சங்கர நயினார் கோயிலுக்கு சிறுவயதில் போன அனுபவத்தை ‘கதா மாலிகா’ என்கிற சுதேசமித்ரன் வெளியீட்டுக்கு 10-11-1920ல் எழுதியிருக்கிறார் ஒரு பெண்மணி. வாசிக்க வாசிக்க நடை அப்படியே பாரதியாரின் சாயலில்  இருக்கிறது. என்னடா என்று கடைசிப் பக்கத்தைத் திருப்பினாள் செல்லம்மாள் பாரதி என்று பேர் எழுதியிருக்கிறது. பாரதியே பேர்மாற்றி எழுதினாரா இல்லை அவர் வீட்டம்மாவுக்கும் பாரதியின் எழுத்துவன்மை இருந்ததா என்று தெரியவில்லை.

இந்த மாதம் வாசிப்பில் கடல்காற்றுதான் அதிகப்படியாக வீசியிருக்கிறது. கடல் சார்ந்து நிறைய வாசிக்கிறேன். ‘நெய்தல்வெளி’ பதிப்பகத்திலிருந்து பரவர் இன வரலாறு நூலும், குரூஸ் பர்னாண்டஸ் வாழ்க்கையையும் ஜஸ்டின் திவாகர் அண்ணன் கொடுத்திருந்தார்.  ‘பரவர் வரலாறு’ நெய்தல் வெளியின் சிறப்பான புத்தகம். தூத்துக்குடிக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குருஸ் பர்னாண்டஸ்  வாழ்க்கை நூல் நிறைய தெரியாத விஷயங்களைப் பேசியது. மீனவர் இனத்திலிருந்து ஒரு நகராட்சித் தலைவராக அக்காலத்திலே உயர்ந்திருக்கிறார். இறந்தபிறகும் நல்லபேரச் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

 ‘போராட்டபூமி’ என்கிற பேரில் பழையப் புத்தகக் கடையில் வியட்நாமின் வரலாற்று நூல் ஒன்றை வாங்கினேன். நிலத்தை உழும்போது கலப்பையில் சிக்கின மண்புழுபோல ஒரு சிறு தீவு தேசம். அங்கே, “ஹோ சி மின்” என்கிற ஒரு மீனவன் மகத்தான மக்கள் தலைவனாக உருவெடுத்திருக்கிறான். அந்நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போரிட்டிருக்கிறான். தான் வாழ்நாளில் ஒருமுறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்று ஏங்கிய லெனின் மீது ஹோ-வுக்கிருந்த அன்பையும், வியட்நாமின் விடுதலைக்குப் பிறகு அங்கே அவர் நிகழ்த்திய சீர்திருத்தங்களையும் போராட்டபூமி விவரித்துச் சொல்கிறது.

“ஹோசிமின் ஒரு மீனவன். அதனால்தான் வானிலிருந்து குண்டுகளை  விழும்போது வலைகளைத் தூக்கிப் பிடியுங்கள். கீழே விழுந்தால் தானே குண்டுகள் வெடிக்கும் என்றான்” என்று எழுத்தாளர் ஜோ டி குருஸ் சொன்ன வார்த்தைகளை அந்தப் புத்தகத்தில் கண்டுகொண்டேன். இன்னொன்று, அமெரிக்கா தென் சீனக்கடலில் வீசின குண்டுகளை அகழ்ந்து எடுக்கத்தான் வியட்நாமியர்கள் ரட்டை மடி வலையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்று ஒரு குறிப்பும் காணக்கிடைத்தது.

நேற்றைக்கு மாலை வாசக சாலை ஏற்பாடு செய்திருந்த கொற்கை நாவலுக்கான கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ‘கடற்கரை மக்கள் கடலை தங்கள் தொழில் வெளியாகவும், நிலத்தை தங்கள் கொண்டாட்ட வெளியாகவும் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சமூகத்தில் எல்லோரும் சம அளவில் வலுவானவர்கள். அதனால் தானோ என்னவோ இவர்களிலிருந்து வலுவான தலைவர்களே இல்லாமலாகிறார்கள்’ என்பதை இன்னுமொருமுறை அழுத்திச் சொன்னார்.

-கார்த்திக் புகழேந்தி
05-04-2017
  

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil