நா வானமாமலை



தயாபரன் தெருவின் முடிவில் பாளையங்கோட்டை, திருச்செந்தூர் ரோடு. ரோட்டுக்கு இந்தப்பக்கம் தீபம் டீக்கடை. அந்தப்பக்கம் வானமாமலை டுட்டோரியல் பஸ்டாப்.

மஞ்சள் காவி அடித்த பழைய காரைக்கட்டிடம்  அது. வானமாமலை முடுக்கு, வானமாமலை பஸ் ஸ்டாப் என்றுதான் அந்தப்பகுதிக்கு முன்பெயர் இருக்கும். அப்போது வானமாமலைன்னா யாரென்றெல்லாம் தெரியாது. அதே சந்தில் கால்கள் தேய பள்ளிக்கூடத்திற்கு நடந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் வானமாமலை கட்டிடத்திற்கு அடையாளம் தெரியாத ஆட்டோக்காரரால் மோதிவீசப்பட்டு தாடையில் நாலு தையல், வலதுகாதுக்குப் பின்பக்கம் ஐந்து தையல் போட்டிருக்கிறேன். அதாவது ரத்தம் சிந்தி பந்தமேற்பட்ட  இடம்.

வலியெல்லாம் பெரிதாக நினைவில்லை.  தையலுக்கு போடும் முன், ஊசியைக்காட்டி மிரட்டின விக்டர் துரை ராஜ் டாக்டரைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து தலைமை ஆசிரியர் சகிதமாக மொத்தப்பள்ளிக்கூடமே வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போன அன்றைக்கு கொடுத்துவிட்டுப்போன பிஸ்கெட் பாக்கெட்டை என்னால் தின்ன முடியாதபடிக்கு தாடையில் கட்டுக் கட்டியிருந்ததைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

விஷயம் எங்கெங்கோ திரும்பிவிட்டது. நேர்வழிக்கு வருவோம். நா.வானமாமலை... நாட்டுப்புறத்து மனிதர்களின் வாய்ச்சொல்லையும் பாட்டையும் வரிவிடாமல் தேடித்திருந்து நம்கையில் சேர்த்த தாத்தன். இன்றைக்கு அன்னார் இல்லையென்றால்  நாட்டுப்புறபாடல்கள், நாட்டுப்புற கதைகள் மற்றும் நாட்டுப்புற கலைகள் பத்தின ஏகக்கணக்கான தகவல்கள் நம்மிடமில்லை.

ஊராகச் ஊரூராகப் போய் உ.வே.சா ஓலைச்சுவடிகளை எப்படி திரட்டி தமிழ்த்தாத்தாவென நீங்கா இடம்பிடித்தாரோ, அப்படி நாட்டுக்கலைகளுக்காகக் கொண்டாடப்படுபவர் நா. வானமாமலை. தமிழ்நாட்டு பாமரர் பாடல்கள், ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்டபொம்மன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, வீணாதிவீணன் கதை எல்லாம் லேசுபட்டதா என்ன.

நெல்லைக்கு எப்படி வண்ணாரப்பேட்டை வட்டத்தொட்டியோ அப்படி 1967ல் நெல்லை ஆய்வு மையம் தொடங்கி ஏகக்கணக்கில் ஆய்வாளர்களை உருவாக்கிவிட்டவர். பேராசிரியர் அ.சிவசுப்பிரமணியம், விளாத்திகுளம் தங்கம்மாபுரத்துக்காரரான எஸ்.எஸ். போத்தைய்யா போன்றவர்களெல்லாம் நெல்லை ஆய்வு மையத்தின் மூலம் பல நாட்டுப்புற தரவுகளைத் திரட்ட உதவியாக இருந்தவர்கள்.

நான்குநேரியில் 1917 டிசம்பர் 7ம் தேதி பிறந்த நா.வானமாமலை அப்பகுதி விவசாயிகள் பிரச்சனைகளுக்காகவும், தொழிலாளர்கள் இயக்க போராட்டங்களுக்காகவும் சிறைக்குச் சென்றவர். இன்றைக்கு காலையில் அரெஸ்ட் ஆகி கல்யாண மண்டபத்தில் உட்காரவைத்து மாலையில் விடுவிப்பது போன்ற கைதுகளல்ல இவை. இதனால்தான் எனக்கு பொதுவுடைமைத் தோழர்களின் உழைப்பு பிடித்துப்போகிறது.

 1950ல் தூத்துக்குடி மீளவிட்டானில் சரக்கு இரயில் கவிழ்க்கப்பட்ட  “நெல்லை சதிவழக்கில்” கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவரான பாலதண்டாயுதம், நல்லகண்ணு, ஆசிரியர்.ஜேக்கப் போன்றவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது,  நா.வானமாமலையும் விசாரணைக் கைதியாக கைது செய்யப்பட்டதாகச் சொல்லியிருந்தார் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.  நா வானமாமலை பற்றிய பல தகவல்களும் செய்திகளும் அவர் வாய்மொழியாக அறிந்ததே. மனுஷர் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்காத காலத்திலே தகவல்களஞ்சியமாக நடமாடினவர். ஆண்டு தேதி நேரம் பிசகாமல் சம்பவங்களைச் சொல்லக்கூடியவர்.

ஈழ, மலேசிய, தமிழர்கள் மத்தியிலும்  நா.வானமாமலை மதிப்பிற்குரியவராக இருந்தவர். யாழ்பாணப் பல்கலைக்கழகம் கூப்பிட்டுவைத்து  “இலக்கிய கலாநிதி” என்ற பட்டமளித்திருக்கிறது.  இவையெல்லாம் ஒரு பக்கமிருந்தாலும், 1960களில் ஒன்றுபட்ட நெல்லை, குமரி மாவட்டங்களில்  எஸ் .எஸ்.எல்.சி மற்றும் கல்லூர்யில் பி.யூ.சி (புகுமுக வகுப்பு) தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட  “வானமாமலை டுட்டோரியல்தான் அன்றைக்கு எங்கள் அப்பனுக்கும் சிற்றப்பனுக்கும் சரணாலயமாக இருந்திருக்கிறது.

நெல்லையில் உள்ள அந்த இடம் தான் எனக்கான ரத்தபந்தமுள்ள இடம்பற்றிச் சொன்னது. ஆனால் எனக்கு என் 25வயது வரைக்கு வானமாமலை என்றால் யாரென்று தெரியாமல் போயிருக்கிறது. தொ.ப வையும் இப்படித்தான்.
பேர் தெரியும் ஆளோ, ஆளுமையோ தெரியாமல் வளர்ந்து தொலைத்திருக்கிறேன். இதில் கொஞ்சம் வருத்தம் தான்.

எனக்கு கழனியூரன் தான் நாட்டுப்புறத்து வாத்தியார். அவர் எழுத்தைப் பிடித்துக்கொண்டு தான் மண்ணை நுகர்ந்துபார்க்கப் பழகினதே. அவருடைய நாட்டுப்புற வழக்காற்றியல்களை வாசித்த தொடர்பில் தான் வானமாமலை அறிமுகம் கிடைத்தது. ஜெகவீர பாண்டியனாரோட பாஞ்சாலங்குறிச்சி வீரச்சரித்தரம் வாசிச்ச பிறகுதான் கட்டபொம்மன் கூத்து பத்தியும் ஐவராசாக்கள் பத்தியும் தெரிய வந்தது.

அப்பப்போ மலைகளுக்குப் பக்கத்திலே தான் வளர்ந்திருக்கோம்ன்னு நினைச்சுக்குவேன்.

[ஆண்டு |தேதி |சம்பவம் |தகவல்கள் : கே.எஸ்,இராதாகிருஷ்ணன் அவர்கள் தளத்திலிருந்து நன்றியோடு எடுத்தாளப்பட்டது]

-கார்த்திக்.புகழேந்தி
21-10-2015. (ஆயுத பூஜை)

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil