குற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்
குற்றம் கடிதல் ஒரு நன்கு சமைக்கத்தெரிந்த வேலையாளின் வெங்காயம் நறுக்கும் கத்தி போன்ற ஷார்ப்பான படம். படம் ஆரம்பித்தது முதல்பாதி வரையான ஒவ்வொரு பிரேமையும் இண்டர்லிங்குகளால் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் பிடித்திருந்தது. நியாயதர்மங்கள், சமூகத்துக்கு கருத்து என்றெல்லாம் தான் எதுவும் பேசாமல் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார். ஒரு பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர். அடிவாங்கி மயக்கம்போட்டு விழுந்துவிடும் மாணவன் இந்த ஒற்றைத் திரியில் ஜோதி எரிகிறது.
எனக்கு ஆரண்யகாண்டத்திற்குப் பிறகு ஒரு இடத்தில் கூட தொய்வுகொடுக்காமல் நகரும் படமாகக் குற்றம் கடிதல் இருந்தது.
படத்தின் கரு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமானதாக உருத்தலைக் கொடுப்பது நிச்சயம். எம்புள்ளைய அடிச்சு உதைச்சாச்சும் நல்லா படிக்க வச்சிருங்கம்மா என்று ஆசிரியையிடம் கேட்டுநிற்கும் பெற்றோர்கள் காணாமல்போய்விட்டார்கள். இன்றைக்குப் பிள்ளைகள் ஒரு குடும்பச் சொத்து அந்தஸ்தில் வளர்பவர்கள்.
என்னை வாத்தியார் அடிச்சுட்டார்ன்னு எங்கப்பா ஸ்கூலுக்கே வந்து சண்டை போட்டார் என்ற பெருமைபேசிகளைப் பார்க்கும்போது, பொறாமையாக இருக்கும். "இன்னும் ரெண்டு போடுங்க சார்" என்ற கேட்டகரியிலிருந்து என் கல்விக்காலம் முழுக்க எங்கம்மா வெளிவரவேயில்லை. குழந்தைகளின் வளர்ச்சியை, அவர்களது கேள்வியை, இயல்பை கட்டிப்போடுகிற கல்வியை, கல்விச்சூழலை, ஆசிரியத்தனத்தை மெல்லிய கண்டிப்புடன் காட்சிப்படுத்துகிறது படம்.
தியேட்டரில் இல்லாதுபோயினும் டோரண்டிலோ, நண்பர்களிடமிருந்து பென் ட்ரைவிலோ கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம். ஆனால் இதை குழந்தைகள் சினிமா என்று முத்திரை குத்திவிடாதீர்கள். (பசங்க;மெரினா; காக்காமுட்டைகளுக்கு நேர்ந்தது போல) இது குழந்தைகளுக்கான படம்.
சொல்ல மறந்துவிட்டேன். பாரதியின் சின்னஞ்சிறுகிளியே பாடல் அப்பப்பா நெஞ்சைக் கரைக்கிறது. அதிலும் பாடலுக்கு இணையான காட்சிகள் அத்தனை நெருக்கம்... (கண்ணம்ம்ம்ம்மா) கடைசியில் தாய் நாவலைக் காண்பித்து அந்தத் தோழர் கதாப்பாத்திரத்தை நிறைவு செய்திருப்பது செம...
இயக்குனர் பெயர் பிரம்மனாம். படைப்பில் அத்தனை கச்சிதம்.
04-10-2015
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது