அது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை



Suresh Raja Gtm 
வீட்டில் மூத்தவனுக்கு நேத்தைக்குப் பிறந்தநாள். அப்பா இருந்தவரைக்கும் பிறந்தநாள் என்பதில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் போனாலும், காலையிலே எழுந்து ஆற்றங்கரையில் குளித்துவிட்டு, பேராச்சியம்மன் கோயிலுக்குப் போய் விழுந்துகும்பிட்டு, அக்காள் கையில் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு அப்பா முன்னால் போய் நிற்பான்.

கடையில் சீனி வாங்க வந்த செண்பகம் மையினிக்கு பழைய நோட்டுத்தாளை கூம்பாய் உருட்டி பொட்டலம் மடித்துக் கொண்டிருப்பார். அண்ணனைப் பார்த்தவுடன் ஒரு இணுக்கு புன்னகைத்துவிட்டு,  “வேலை உண்டா இன்னைக்கு... மதியம் வீட்டுக்கு சாப்ட வந்துரு. அந்த டப்பால காசிருக்கும் எடுத்துக்கோ” என்பார். அத்தோடு சரி.

அப்பாவுக்கும் அண்ணனுக்குமான உரையாடல்கள் சின்னஞ்சிறியவை. அதை தூரத்தில் இருந்து கேட்பதே ஒரு வேடிக்கையாக இருக்கும். என்ன சொல்லவேண்டும் என்பதை இரண்டுபேரும் மனசுக்குள்ளே உணர்த்திக் கொள்வார்கள். “மதியம் பாயாசம் வை கோதை” என்று அவர் சொல்லும் முன்னே அம்மா முந்திரி டப்பாவை கடையில் உருட்டிக்கொண்டிருப்பார். அந்தச் சின்ன மளிகைக்கடைக்குள் தான் அப்பாவைச் சந்திக்கும் பொழுதுகள் அடிக்கடி வாய்க்கும். மற்றபடி தீபாவளி, பொங்கல், மத்தமாதிரியான விஷேசங்களுக்குச் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதோடு சரி.

அக்காதான் அண்ணனை அதிகம் புரிந்துகொண்டவள். எந்த நேரத்தில் அண்ணன் என்னமாதிரி நடந்துகொள்வான் என்பதை வைத்தே அவன் மனஓட்டத்தைப் புரிந்துகொள்வாள். விட்டேத்தியாகவே திரிந்துகிடந்ததால் நமக்கு இந்த வீட்டு அன்பின் நெருக்கம் பெரிதாக ஒட்டிக்கொள்ளவில்லை. அதுதான் இன்றைக்கு பழகின மனிதர்களிடம் வேண்டி வேண்டி ஒட்டிக்கிடக்க வைத்துவிடுகிறது.

இந்த விசயத்தில் சின்ன அண்ணன் நாலுபடி ஏறி நிற்பவன். இன்னும் சிலுக்குச் சட்டை மைனராக வாழ்ந்து கொண்டிருக்கும் அக்மார்க் திருநெல்வேலிக்காரன். கையைக் காலைக் கட்டித்தூக்கிக் கொண்டு அவனை சென்னையில் கொண்டுவந்துபோட்டால் அடுத்த காருக்கு ஊரைப்பார்த்து ஓடிவிடுவான். அநியாயத்திற்கு மனிதர்களைத் தெரிந்து வைத்திருப்பான்.

நிம்மதியாக ஆற்றுக்கு குளிக்கக்கூட அவனோடு போக முடியாது. எதிர்படுகிற ஒவ்வொருத்தருக்கும் அவனிடம் பேச ஆயிரம் சொச்சம் வார்த்தைகள் இருக்கும். “எல சத்தங்காட்டாம போறியா, அறை வெளுக்கட்டுமா” என்று பஜாரில் குடிச்சுட்டு அலம்பல் பண்ணுபவனை தோரணையாலே மிரட்டிவிடுபவன்.

அண்ணன் அவனுக்கு நேர்மாறாக அமைதிக்கு தத்துப் பிள்ளை.
என்ன இருந்து என்ன ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்வதில்லை. ஆச்சு மூணுவருசம். அண்ணனுக்குக் கல்யாணம் முடிந்தபோது அப்பா தவறி இருந்தார். வீட்டில் மூத்தது ஆம்பள பிள்ளைதான் நம்ம குடும்பத்துல என்று பெரியாச்சி சொன்ன வாக்கு பலிப்பதுபோலவே அண்ணனுக்கு மகன் வந்து பிறந்தான். சொல்லவும் வேண்டுமா அப்பாவின் பெயரைத்தான் சூட்டியிருக்கிறான்.

மனசு துண்டுபட்டு இங்குட்டும் அங்குட்டுமாக பிரிந்து கிடந்தாலும் அடியாழத்தில் அந்நியோன்யமான அண்ணன் தம்பி அன்பு புல்லுச்செடிபோல ஒத்த மழைக்குத் துளிர்த்துத்தான் விடுகிறது இல்லையா!

-கார்த்திக்.புகழேந்தி.
12-09-2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil