வாசிப்பெனப் படுவது...



பத்துவருசம் முன்னாடி (அப்போ 16வயசுதான்) பெரிய வாசிப்பனுபவம்லாம் கிடையாது. ஒரு பத்து எழுத்தாளர் பேரு சொல்லுன்னு கேட்டுருந்தா பேந்த பேந்த முளிச்சிருப்பேன்.வாசிக்கிறது, எழுதுறது எல்லாமே இந்த நாலைஞ்சு வருசமாத்தான். பள்ளிக்கூடத்துக்கு வெளியதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சுஜாதாவும் மதனும் தான் முதல் வாத்தியார்கள்.

வரலாறுமேல இவ்ளோ ஈடுபாடா நமக்குன்னு தோணுற அளவுக்கு சரித்திரத்தில் மூக்கை நுழைச்சிருக்கேன். உண்மையச் சொல்லனும்ன்னா எல்லா பாடத்திலும் 80, 95 வாங்கிட்டு சோசியல் சைன்ஸ்ல 77மார்க் வாங்கினபய நான்.

நம்ம மண்ணோட வரலாறைப் படிக்கப் படிக்கத்தான் அறிவு ஊறும்ன்னு விடாப்பிடியா நம்பிக்கை வச்சிருக்கேன். வரலாறு எழுதின புத்தகத்தில மட்டும் இல்ல பாக்குற மனுசங்ககிட்டயும் இருக்குன்னு ஒருகட்டத்தில் அறிவுக்கு பட்டப்போதான் கூச்சத்தைவிட்டு மனுசங்களோடு பழக ஆரம்பிச்சது.

எஸ்.ரா ஒரு மாட்டுவியாபாரிக்கிட்ட கதை கேக்குறதுக்காக நாலுமைல் தூரம் அவர்கூடவே மாட்டப்பத்திட்டுப் போனதாச் சொல்லியிருப்பார் கதாவிலாசத்தில. எனக்குங்கூட அந்தக் கிறுக்குத்தனம் இருந்துச்சி. நீச்சல் கத்துக்கனும்ன்னா ஆத்துல இறங்கித்தான ஆவணும். எல்லா மனுசங்ககிட்டயும் ஏகப்பட்ட கதைங்க.

கோமாளிமாதிரி கண்ணுக்குத் தெரிஞ்சவன் கிட்ட கோடீஸ்வரனோட கதை இருந்துச்சு. சின்னம நாயக்கர் ஜமின்வாரிசுங்க கிட்ட கேக்கும்போது வாழ்ந்துகெட்ட கதை இருந்துச்சு. மனுசன் தன்னோட கதையை காதுகொடுத்து கேக்குறவனை எவ்ளோ நம்புறான்னு பழகித் தெரிஞ்சுகிட்டேன்.

இப்போ அப்படியே புத்தகம் பக்கம் திரும்பி வந்தா நிறைய பேரு சவசவன்னு வார்த்தைங்கள நீட்டி முழக்குறாங்கன்னு பட்டது.நேரடியா கதைக்குச் சொந்தக்காரனை பார்த்துப் பழகின காதுக்கு கிடைச்ச சுவாரஸ்யம் வாசிக்குற கண்ணுக்கு இல்ல. எங்கயோ தொடர்பு அறுந்து நிக்குதுன்னு உணர்றேன் அப்போதான். அன்னையில இருந்து பேச்சுமொழிமேல ஒரு தனி ஒடுதல்.
இதுதாம்ல நம்ம சரித்திரத்த காப்பாத்தி வச்சுக்க வழின்னு தோண ஆரம்பிச்சுருச்சி.

"எந்த ஒரு மொழி பேசப்பட உகந்ததா இல்லையோ அது அழிஞ்சுபோகும்ன்னு" யாரோ எழுதினது நினைப்புக்கு வருது. இந்த பேச்சுமொழிக்கு இடையில அர்த்தம் புரியாம மருவி, தொலைஞ்சுபோன வார்த்தைங்களை எட்டிப் பார்க்கும் போது மொதசொட்டு மழை கன்னமேட்டுல விழுமே அப்படி ஒரு உணர்ச்சி.

இந்த மொழி மேல எத்தனை அக்கறையும் நேசமும் இருந்தா ஒவ்வொர் வார்த்தையா தேடிப்புடிச்சு அகராதிவரைக்கும் போட முடியும். அப்படித் தேடிச் சேர்த்த அகராதிக்கார எழுத்தாளரல்லாம் வாசிக்கும் போது ஆஹா இவங்கதாம்டே நம்ம குருசாமின்னு மனசு அவங்க எழுத்தில் அப்பிக்கும்.

இப்போ என்கிட்ட வந்து அந்த பத்து எழுத்தாளருங்க யார் யாருன்னு கேட்டா பட்டுபட்டுன்னு சொல்லிடுவேன். ஆனா அவங்கள கொண்டாடவும், புரிஞ்சுக்கவும், வாசிக்கவும் நிக்குற ஆட்கள் ரொம்ப சொற்பம்.
நல்ல எழுத்தாளன மதிக்காத ஊரு என்னைக்கும் நல்லா இருந்ததில்லன்னு மட்டும் மண்டைக்குள்ள ஒரு வார்த்த உருண்டுக்கிட்டே கெடக்கு..

கார்த்திக்.புகழேந்தி
27-09-2015

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil