நினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்

எனக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. பார்த்து அறிமுகமாகி, பழகினவர்களாக (நட்புவட்டம் அல்லாமல்) இருந்தாலும் பெயர்களும் முகமும் மனதில் நிற்கவே நிற்காது. கீதா பெரியசாமி என்றால் கீதா ராமசாமியா கீதா கந்தசாமியா  என்று ஒரு குழப்பம் வந்து தொலைப்பதால் அதிகபட்சம் யார் முகம்கொடுத்துப் பேசினாலும் சிரித்தமுகத்துடன் வணக்கம் சொல்லி, நலம் கேட்டுத் தப்பித்துவிடுவது.

நண்பன் கிரி இந்த விசயத்தில் ஸ்கேனருக்கே டஃப் கொடுப்பான். ஒருதடவைப் பார்த்துவிட்டால் தி.நகர் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தாலும் சரியாக அடையாளம் சொல்வான். ஆச்சர்யமாக இருக்கும். ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது என்கதை அம்பேல்.

நேற்றைக்குக் கூட நாறும்பூநாதன் அவர்களின் நூல்வெளியீட்டு அரங்கில் நுழைந்ததும் அண்ணன் ஒருவர் அன்பொழுக வரவேற்று கை குலுக்கினார். பதிலுக்கு நானும் துளியும் தாமதிக்காமல் தெரிந்ததுபோல பேசிவிட்டு நகர்ந்தேன். தெய்வமே மன்னிச்சிடுங்க இங்க எங்கயாவது நீங்க என்னை அல்லது இந்தப்பதிவை பார்த்துட்டு இருக்கலாம். எனக்கு சத்தியமாக உங்களை நினைவில்லை. மன்னிக்கனும். (இந்தப்பதிவை முகநூலில் எழுதிய அன்றைக்கு அவரே வாசித்துத் தன்னை அடையாளம் சொல்லிவிட்டுச் சென்றார் )
 
சம்பவங்கள், பேச்சுகள் நினைப்பிலிருக்கும் அளவுக்கு ஆட்களும் பெயர்களும் நிற்பதில்லை ஏனோ. இத்தனைக்கும் பக்கம் பக்கமாக எழுதும் எந்த நிகழ்ச்சி பற்றிய பதிவுக்கும் ஒரு குறிப்புகூட எடுத்துக் கொள்ளும் பழக்கமில்லை.
விழா முடிந்து கலைந்து செல்கையில் ஒருவர் அருகேவந்து முகம்மலர்ந்து சிரித்துப் பேசினார். நெல்லைக்காரர் என்பதில் துளி சந்தேகமில்லை. நம்பரும் மாற்றிக்கொண்டோம். கூடவே நின்றிருந்த அவரது நிதி அமைச்சர் விளக்கமாய்ச் சொன்னால் அண்ணனது மனைவியார்.

"இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா நினைவுக்கு வரவில்லை" என்றார். ஹப்பாடா! மனதுக்குள் அவ்வளவு ஒரு குதூகலம்.பின்னே நம்மைப்போல் ஒருவரில்லையா. என்னை அறிமுகப்படுத்திவிட்டு, இவங்க என் மனைவி. பெயர் "பல்லவி" என்று பரஸ்பர அறிமுக்ம் செய்துவைத்தார் அண்ணன்.

 “பல்லவி” இப்படி ஈஸியாய், அனேக பொதுப்பெயர் அல்லாமல் யுனிக்காக அதுவும் தமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டால் எவ்வளவு எளிதாய் மனதில் பதிகிறது. அந்த அக்காளின் பெயர் இனி உறக்கத்தில் கேட்டாலும் மறக்காது.
முன்பெல்லாம் ராஜா என்பது தேசியப்பெயராக இருந்தது. இப்போது அந்தச் சோதனை கார்த்திக்குக்கும் வந்துவிட்டதாக அறிகிறேன். பெயர்களில் என்ன இருக்கிறது என்று அப்படியெல்லாம் விட்டுவிட முடிகிறதில்லையோ?!


Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil