வெட்கம் களைதல்...



ஐந்தாவது வயது எப்படி பூர்த்தியானது என்று இப்போது கேட்டால் எப்படி நினைவிருக்கும். ஆனால் லதா மிஸ்ஸும், கிருபா மிஸ்ஸும் இன்றைக்கும் நினைவிருக்கிறார்கள். இந்த டீச்சர்களின் வளையல் வடிவ கம்மலை நீங்கள் யாரும் உங்கள் வயதில் கவனித்திருப்பீர்களா தெரியவில்லை.

க்யூ என்று ஆங்கிலத்தில் எழுதும் போது லதாமிஸ் ஒரு வெட்டு வெட்டி இழுத்து கரும்பலகையில் ஒரு டொக் வைப்பதை ரசித்திருக்கிறேனென்றெல்லாம் சொல்ல முடியவில்லை.
எனக்கு ஒரு பழக்கமிருந்தது உண்டு உறங்கும் போது பாயில் படுத்தாலும் சரி, மெத்தையில் படுத்தாலும் சரி... கால் தரையில் படவேண்டும்.
அதற்காகவே முதல் ஆளாக தரை ஒட்டிப் உறங்குவது. இடைஞ்சலாக இருக்கும் காலணிகள் வீடு திரும்பும் போது டிபன் கூடைக்குப் போயிருக்கும் என்பது தனிக்கதை. ஏகச் சுட்டித்தனம். பள்ளிக்கூடத்தில் தான்.

அந்த வயதில் புளியங்கொட்டையை மூக்கில் நுழைத்து அது சிக்கிக்கொள்ள அக்காளிடம் சண்டை என்றேனாம். இரண்டு நாள் உள்ளே கிடந்து பொதுமிப் போன புளியங்கொட்டையை வெளியில் எடுத்து, தோட்டச் செடி வெட்டும் கத்திரி போலொன்றைக் காட்டி இனி மூக்கில் எதையாவது திணிச்சே மூக்கை நறுக்கிருவேன் என்ற டாக்டர் கண்ணுக்குள்ளே நிற்கிறார்.

லதா மிஸ்ஸுக்கு அத்தனைச் செல்லம் நான். கிருபா மிஸ் கொஞ்சம் கருப்பாக இருந்ததால் அவரிடம் அதிகம் ஒட்டவில்லை போல நான். ஆனால் முகம் நினைவில் கச்சிதம். வஞ்சமில்லாமல் வால்த்தனம் பண்ணித் திரிந்த காலத்தில் ஒரு கிறிஸ்துமஸ் வந்தது. அதற்கு முதல்நாள் கலை நிகழ்ச்சிகளுக்காக நான் பள்ளிக்கூடத்தின் மேடையில் நின்று கொண்டிருந்தேன்.

வெள்ளை பஞ்சுவைத்த தலைமுடியும், கத்திரிப் பூ நிறத்தில் மேலங்கி ஒன்றும், இடுப்பில் அரக்கு துண்டும் கட்டியிருந்தேன். அந்த மேலங்கி அக்காளுடையது. அவளுக்கு பச்சை நிறம் தான் பிடிக்கும் என்பதால் அவ்வளவாய் பிடிக்காத இந்த உடையைத் தந்திருந்தாள். லதா மிஸ்ஸின் குரல் மேடைக்குப் பக்கவாட்டில் இருந்து அசரீரியாக ஒலிக்கும் போது யேசுவாக நினைத்து பவ்யமாக நடிக்கவேண்டும்.

"நோவா நீ ஒரு பேழை செய்யவேண்டும்..." இப்படி இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போவார் பெண்குரலில் யேசு. லதா மிஸ்ஸின் குரல் அத்தனை இனிமையானது. கொஞ்சம் அதிகமாகவே சிவந்த உதடு அவருக்கு... அவர் தான் என் பெயரை ஆங்கிலத்தில் ஒரு எழுத்து அதிகமாய் சேர்த்து ஒரு இக் [Karthi"c"k] வைத்தது.

நோவா வேடத்தில்  ஐந்தாம் வகுப்பு டீச்சரின் மேசையை தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு பேழை செய்து கொண்டிருப்பது போல நடித்துக் கொண்டிருந்தேன்... அது மிக எளிதாகவே இருந்தது. ஆடு மாடுகளாக நடித்தவர்களை எல்லாம் அந்த ஒன்று சேர்த்துக் கட்டிய ஐந்து மேசைகளுக்குள் உட்கார வைக்க, தேவ கிருபையால் நாற்பது நாட்கள் நிற்காமல் மழைபெய்து சனங்கள் காப்பாற்றப்படுவதாக அந்த ஓரங்க நாடகம் முடிந்தது.

அடுத்ததாக பாலர் நடனம் முடித்து மழலையர் நடனம். உடை மாற்றிக் கொண்டு முதல் வரிசையில் ஆட வரவேண்டும். பஞ்சுத் தலைமுடியையும் பிற ஒப்பனைகளையும். கலைத்துவிட்டு, மேலங்கியை பாதி கழட்டியும் மீதி கழட்டாமலும் ரொம்ப நேரமாக நின்று கொண்டிருந்தேன்.

"டைம் ஆச்சு டைம் ஆச்சு கமான் க்விக் க்விக் சீக்ரம் ரெடியாகு...கார்த்திக்"

"மிஸ் கொஞ்சம் கண்ணை மூடிக்கோங்க ப்ளீஸ்... " என்றேன்.

-கார்த்திக் புகழேந்தி.
03:09:15

Comments

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil