திவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச நிலையாளர்கள்.

கணையாழி வாசகர் வட்டத்தில் வாசிக்க "வனம்" என்றெழுதிய காட்டின் கவிதையை நகலெடுத்து வைத்திருந்தேன். அதே நாளில் அதே நேரத்தில் அரும்புகள் அறக்கட்டளையின் நிகழ்வுக்கு வருவதாகச் சொல்லியிருந்திருக்கிறேன்.

ஆட்டிச நிலையாளர்கள் பற்றியெல்லாம் பாடம் படித்து கற்றுக் கொண்டதில்லை. திவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும். என்னைவிட இரண்டுமடங்கு பருமன் இருப்பான். தடிமனாக லென்ஸ் வைத்த கண்ணாடியின் மூலமாகத்தான் அவனுக்கு பார்வை தெளிவாகப் புலப்படும். அவன் அறிமுகமான காலத்தில் பேச்சுகள் என்று எதுவும் அவனோடு எனக்கில்லை. நிறைய ஒலி எழுப்புவான்.  அது அவனுக்கும் எனக்கும் மற்றெல்லோருக்குமான் சங்கேத பாஷை.

நண்பன் வீட்டில் புறா வளர்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்துவீட்டு ஜன்னலுக்கு அப்பாலிருந்து திவாகரனின் குரல் எழும்.புறா வேணுமா கண்ணா! மீன் வேணுமா கண்ணா! அது வேணுமா கண்ணா, இது வேணுமா கண்ணா என்று திவாகரன் அம்மாவின் குரல் கூட ஒலியாகத்தான் பரிச்சயம். தப்பித்தவறிக்கூட வெளியப் போகணுமா கண்ணா என்று அவர் கேட்டதுமில்லை. அவரும் வெளியே வந்ததும் இல்லை.

நாங்கள் மீன்கள், புறாக்கள் என்று அடுத்தகட்டமாக முயல் வளர்க்கத் துவங்கியிருந்தோம். திவா வீட்டு ஜன்னலுக்கருகில் சென்று, காதைப் பிடித்துத் தூக்கிய முயலைக் காட்டிய போது "ஆனும் ஆனும்" என்பான் திவா.

வெகு பிரயர்த்தனங்களுக்குப் பிறகு அவனை வெளியே அழைத்துக் கூட்டிவந்து ஒன்றாக விளையாடினோம். அவன் முதிர்ந்த தோற்றத்தின் மழலைத்தனம் மிக்க மகிழ்ச்சியை நாங்கள் நண்பர்களாய் ரசித்தோம். சொன்னேனெ திவா எப்போதும் திவா தான். ஆட்டிசம் என்றெல்லாம் யார்ர் கண்டது.

அரும்புகள் அறக்கட்டளை பற்றிய பதிவுகளைப் பார்த்து மற்றும் ஸ்ரீதேவி அக்காளின் அழைப்புக்கத்தான் சென்றிருந்தேன். ஒரு சங்கிலித்தொடர்போல நண்பர்களும் சேர கைகோர்த்துக்கொண்டோம்.  உள்ளே நிகழ்ச்சியில் என்ன பேசினார்கள் என்ன செய்தார்களென்றெல்லாம் தெரியாது. ஒரு மூன்று நான்கு மணிநேரம் திவாகரன்களின் உலகத்தில் ஓடிப்பிடித்துக் கொண்டிருந்தோம்.

பொதுவாகவே இந்தியர்களுக்கு சக மனிதர்களோடு ஒட்டுதல் குறைவு என்று படித்திருப்பீர்கள் . அத்தனை பெரிய ஹோட்டலில் ஒற்றையாகப் போய் தனி சீட்டில் அமர்வோம். பேரூந்துகளில் ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒருத்தர்.
இதை உளவியலாளர்கள் தன்னம்பிக்கைக் குறைவோடு ஒப்பிடுகிறார்கள்.
ஆகவே சக மனிதர்களை நாம் கவனிப்பதற்காகப் படைக்கப்பட்ட இந்த ஆட்டிச நிலையாளர்களின் பிரபஞ்சத்திற்குள் எங்கள் நேரங்கள் கவிதைகளாகக் கரைந்தன.

 எல்லோரும் விளையாடும் போது தனியாக உட்கார்ந்து ஒரு சிறுவன் மட்டும் அழுதுகொண்டிருந்தான். அவனுக்கு இப்போது அழப்பிடித்திருக்கிறது அழுகிறான் என்று நான் உணர்ந்து கொள்ளவும், அட இவர்கள் உலகம் இத்தனைச் சுதந்திரமானதா என்று செல்லப் பொறாமையும் கூட வருகிறது.

வாலண்டியர்களாக வந்திருந்த நண்பர்கள் நிறைய நன்றிகள் சொன்னார்கள் அது மீண்டும் தொடர்ச்சங்கிலி போல ஒருத்தரிடத்திலிருந்து ஒருத்தருக்காக மாறி மாறி யாருக்கும் சேராமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
இந்த அரும்புகளின் சிறு அசைவுகளுக்குக் காரணமாய் இருப்பவர்களுக்குத்தான் அத்தனையும் அன்பும் நன்றியும்
போய்ச் சேர வேண்டும்.

-கார்த்திக் புகழேந்தி.
1810-2015.


ஆமாம் அதென்ன இடைவேளைக்கு ஜிலேபியும் சிப்ஸும்... wink உணர்ச்சிலை

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil