வாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்



அரவிந்தன் எழுதிய பொன்னகரம் நாவலினை வாசிக்க நேர்ந்தது.
சென்னை என்ற நிலத்தின் பழைய அடையாளங்களைப் பேசும் படைப்புகளில் இழையோடும் மக்களின் பிரிவினையே இந்நாவலிலும் மையமாகிறது.
சென்னையின் மொழியை எழுத்தில் விவரிக்கும்போது அதன் இயல்பான வேகத்தில் பயணிக்கும் வேலையை பொன்னகரம் சிறப்பாகச் செய்திருக்கிறது. சில இடங்களில் தடுமாற்றங்களும் உண்டு.


குடியாத்தத்திலிருந்து தனது அத்தையின் மகன் முத்துவை மணம்முடித்து சென்னைக்கு வரும் பார்வதியின் பார்வையில் தொடங்கி, ஜகதாலன் என்கிற ஜகா, குரு என்கிற மாஞ்சா குரு, வரதன், ராசுக்குட்டி, பெருமாள், பாபு, செண்பகம் லட்சுமியம்மா என்று ஒவ்வொருவரின் பேச்சுகள், செயல்கள் அதன் எதிர்வினைகளினூடாக நாவல் பயணிக்கிறது.

சென்னையினைக் கொலைக்களமாகக் காட்டும் சினிமாத்தனம்தான் நாவலில் அப்பட்டமாகத் தெரிகிறது. கபடி விளையாட்டில் பின்னும் ஜகா பற்றிய விவரிப்புகளில் இருக்கும் ஆழம் இடைப்பட்ட அத்தியாயங்களில் சோடை போகிறது. சுருங்கச் சொன்னால் தயாரிப்பாளருக்கு ஒன் லைன் ஸ்டோரி சொல்வதுபோல தட்டையான விவரணை.

உறை சாராயம், பொட்டலம் என்று தொழில்போட்டிகளால் அடித்துக் கொள்ளும் பார்டர் தோட்டம், பகவதி புரம் என்ற இரண்டு ஊர்களின் / ரவுடியிசக் கதை தான் பொன்னகரம். பொருத்தமாக ஹீரோயிச நண்பன், வில்லன் போலீஸ், தாதா தலைவர்கள், சாதி அரசியல், என்கவுண்டர் எல்லாம் இருக்கிறது பொன்னகரத்தில்....

நாவலில் ஒட்டவே ஒட்டாத ஒன்று காலகட்டம். பணக்காரன், சூரசம்ஹாரம் படங்கள் ரிலீஸான (1990களில்) போது கட்டுக்கீரை ஐந்து ரூபாய்க்கு விற்கிறது (உறைசாராயம் 3:50பைசா) என்றெழுதுவதெல்லாம் குழப்பம்.
ஆங்காங்கு பிழைகள், கதாப்பாத்திர பெயர்குழப்பம் (பக்.77). எந்த கனத்தையும் தராத முடிவு இப்படி இன்னும் சில...

ஆனால் பொன்னகரத்தில் ஒரு சென்னை சினிமாவிற்கான திரைக்கதை இருக்கிறது. கதாப்பாத்திர வடிவமைப்புகளும் அதை உறுதி செய்கிறது.
மற்றபடி இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பான சென்னையை எழுத்தில் தரிசிக்க நினைக்கும் என்போன்றோர்க்கு பொன்னகரம் பெரிய உதவி செய்யவில்லை.

புத்தகத்தை வாசிக்கக் கொடுத்த நண்பனுக்கு நன்றி.

-கார்த்திக்.புகழேந்தி
09-10-2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil