இலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா
"இலை உதிர்வதைப் போல" நூல்வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட நிகழ்வையே நிறைய எழுதியிருக்க வேண்டும். தவறிப்போனது.
இரா.நாறும்பூநாதன் அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பினை நூல்வனம் -மணிகண்டன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். நேற்றைக்கு மாலை நேரில் சந்தித்தபோது (இ.உ.போ) புத்தகத்தின் பிரதியினை அவரிடம் பெற்றுக்கொண்டேன்.
கையில் வாங்கின இரவிலே படிக்கத்தொடங்கி இப்போதுதான் முடித்தேன். "தன் 55ஆண்டுகால சேக்காளி உதயசங்கருக்கு.." என்றெழுதிப் போகும் நாறும்பூநாதன் அவகளுடைய கதைகளில் கரிசல் மண்வாசம் மட்டுமில்லை மனிதர்களின் சுவாசமும், பவளமல்லி வாசமும், கிழவிகளின் (ஆச்சி) நேசமும் செறிந்துகிடக்கின்றன.
இந்த இருபத்தைந்து கதைகளில் பொதிந்து கிடக்கும் "சொற்களை" மட்டும் திரும்பத்திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கழுதைபிரட்டி, சீவம், கூழ்வத்தல், கொழுப்பெடுத்த மூதி இந்தமாதிரியான தெக்கத்தி மண்ணுக்கேயுரியச் சொற்களைத்தான் சொல்கிறேன். "சில சொற்களை எல்லாம் பல காலங்களுக்குப் பிறகு வாசிக்கிறேன்" என்று வெளியீட்டு விழாவில் சுகா அண்ணன் சொன்னமாதிரி... எப்போதோ கேட்ட சொற்கள் வயிறு நிறைந்ததுபோல..
ஆடுமாடுகளிடம் அளவளாவுகிற ஆச்சிகளையும், பரிட்சை முடிந்த விடுமுறைகளில் "ஸ்ரீநாத் மாதிரி பந்து போடச்சொல்லுகிற " பேரன்களையும் வாசிக்கும்போது மார்கழி பகலில் புல்தரையில் நடந்ததுபோல காலெல்லாம் ஈரம்.
உணர்வுகள் பேசுகிற இப்புத்தகத்தின் மொழி எல்லா மனிதர்களுக்குமானதாகி நிற்கிறது. கோவில்பட்டிக்காரர்கள் எழுத்துக்கு கோவில்கட்டிக் கும்பிடு போடலாம். மொத்தக்குத்தகைபோல அத்தனைச் செங்கலும் இந்தமண்ணில் தானே சுட்டெடுக்கப்பட்டிருக்கிறது.
தாமிரபரணி பள்ளிக்கூடத்தில் முப்பது, நாற்பதாண்டுகாலத்துக்கு முந்தைய "பேட்ச்" ஆட்களை இப்போதுள்ள நாங்கள் வாசிக்கும் சொகம் இருக்கே .... அதெல்லாம் சொல்லிமாளாது.
வெளியீட்டு விழாவில் சில படங்கள்
-கார்த்திக்.புகழேந்தி
14-10-15
"இலை உதிவதைப் போல"
நூல்வனம் :வெளியீடு
ஆசிரியர் :இரா.நாறும்பூநாதன்.
தொடர்புக்கு :+91 91765 49991.
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது