வாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்


வாசக சாலையின் 11நிகழ்வில் தான் முதல்முறையாகக் கலந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் ப.சிங்காரம் அவர்களின் படைப்பை முன்வைத்து ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார்கள் முன்பு. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்புப் பதிவை வாசிக்கும்போதே கலந்துகொள்ளத் தூண்டினது.

இன்றைய (18-10-2015) நிகழ்வில் சரவணன் சந்திரன் அவர்களுடைய “ஐந்து முதலைகளின் கதை” நாவலை முன்வைத்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாவல் குறித்து நிறைய எழுதவேண்டுமென்பதால் அதுபற்றி பிறகுபேசிக்கொள்வோம்.

வாசகசாலையின் ஒரு அம்சம் பிடித்திருக்கிறது. வழக்கமாக( அல்லது வழக்கமாக்கப்பட்ட) நிகழ்வுகளில் கலந்துரையாடல் என்று பெயர் வைத்துவிட்டு சிறப்பு அழைப்பாளர்களே பேசிப்பேசிக் கொல்கிற கதை நிகழும்.தங்களின் நாற்பதாண்டுகால அனுபவத்தை நம்மீது கத்தி சொருகுகிறதுபோல குத்திவைப்பார்கள். பம்பாகணபதியை கடந்துபோய் சரங்குத்தி குத்துவார்களே அதுபோல.

வாசக அனுபவமும், பேச்சை ரசிக்கிற மனப்பக்குவமும் ஒன்றுக்கொன்று முட்டிமோதாமல் ஒருங்கிணைந்து போகிற நிகழ்ச்சிகள் அரிதானது. கூட்டத்துக்கு ஒருத்தரேனும் ஆயுதம் தரித்தவராகி இருப்பார்.
ஆகவே, தனித்தாக்குதல்கள் நிகழும் இலக்கியச் சச்சரவுகளுக்கு வெகுதூரமென சிற்சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது முக்கியமானதாகப்படும். அப்படி ஒரு நிகழ்வாக இன்றைய அமர்வில் நிறைய கலந்துரையாடல், கருத்துப் பறிமாற்றத்தைக் காண முடிந்தது.
மொத்த நிகழ்வும் மௌனமாகவே இருந்துவிட்டு உர்ர்ர்ர்ரென வெளியேறுகிற வாசகன் எதற்காக கூட்டங்களுக்குப் போகவேண்டும்.

கூட்டமாகக் கூடுகின்றவனிடமே இலக்கியம் தளைத்திருக்கிறது. போர், பக்தி தொடங்கி மதம், புரட்சி வரைக்கும் இலக்கியம் கூட்டமாகக் கூடுகிறவர்களிடமே வளர்ந்திருக்கிறது உண்மையா இல்லையா?
ஆனால் கூட்டங்களுக்குப் போய் தலையைத் தொங்கவிட்டுவிட்டு நாற்காலிகளை நிரப்பிக் கொண்டிருக்காமல் வாய்விட்டு எங்கே பேசுகிறோமோ அங்கே இருக்கிறது பலன். இன்றைக்கு நான் பலன் எய்தினேன். அதற்காக வாசகசாலைக்கு என்நன்றி.

இன்னுமொன்று சொல்ல வேண்டுமெனப்பட்டது. தேம்பாவணியில் முதல் படலத்திலே ஒரு பாட்டு உண்டு. அதாவது, படித்த ஒரு புத்தகம் பற்றிப் பயன்பட பேசுவது மலைகளின்மீது பொழியும் மழை நீர் அருவியாகி ஆறாகி கடல் சேர்வதுபோல பலர்க்கும் பயன்படுவதாகப் பொருள்படத் தொடங்கும்.
இங்கே சிறப்பு என்னவென்றால் அருவியை புத்தகம் பற்றிப் பேசுவோர்க்கு உவமையாய்ச் சொல்லவில்லை. புத்தகம் பற்றி பயன்பட உரைப்போரைத்தான் மழைக்கும் அருவிக்கும் ஆற்றுக்கும் ஒப்பாக்கி இருக்கிறார்.

ஆகச்சிறப்பு பெறுகிற காரியம் நல்ல புத்தகத்தைப் பற்றி நான்கு பேரைப் பேசவைப்பது. ரெண்டு பேரை வாங்க வைப்பது. ஒருத்தரையேனும் படிக்க வைப்பது என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?


தேம்பாவணி- நாட்டுப்படலம்- பாடல்
“படித்த நூல் அவை பயன்பட விரித்து உரைப்பவர் போல், 
தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே குடித்த நீர் எலாம் கொப்புளித்து, அமுது என அருவி இடித்து, அறா ஒலி எழத்திரை எறிந்து உருண்டு இரிவ.”


-கார்த்திக்.புகழேந்தி
18-10-2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil