ஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க


              லாய் தீவுக்கூட்டங்களின் தென்பாகத்தில் அமைந்துள்ளது தைமூர். (அல்லது திமோர்) 12ஆயிரம் சதுர மைல்களுக்கும் குறைவான சின்னஞ்சிறிய தேசத்தில், அதன் இயற்கை /கடல் வளங்களைக் கணக்கிட்டு முதலீட்டாளர்களாக நுழைகிற, அந்த நிலத்தின் வளங்களைச் சுரண்டி வணிகத்தின் மூலம் சம்பாதிக்கத் துடிக்கிறவர்களின் கதைதான் ஐந்து முதலைகளின் கதை. கதை என்பதைவிட இது ஒரு சுவாரசியமான டைரிக்குறிப்பு என்று தொடங்கலாம்.

ஆனால் டைரிக்குறிப்புக்கான அத்யாவசியமென்று பார்த்தால் இதில் ஆண்டுகள் இல்லை. நாட்கள் குறிப்பிடப்படவில்லை. நேரம் காலம் எதுவுமில்லை. 

வெகுவாக நாம் அறியாத அந்நிய நிலம். அரைகுறை ஆங்கிலம் இந்தோனேஷிய, போர்த்துக்கீஷிய, டேட்டம் மொழிகள் பேசுகிற மனிதர்கள். இந்தியா என்றால் ஷாரூக்கான் என்கிற அடையாளம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்வையும் பசியையும் பயன்படுத்தி, அவர்களின் தோள்மீது கைபோட்டுக்கொண்டே அவர்களின் உழைப்பைச் சுரண்டும் பன்னாட்டு முதலீட்டாளர்கள். இந்த முதலீட்டு முதலைகளின் வேட்டை சாம்ராஜ்ஜியத்தில் ஒரு கலையுணர்வும் கண்களில் ஒளியும் கொண்ட வஞ்சிக்கப்படும் ஒற்றை முதலையின் டைரி இது.

வேட்டையின் போது ஓரினத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒன்றுக்கொன்று காழ்ப்புணர்ச்சியோடு இயங்கினால் வேட்டையின் இறுதி நிமிடங்கள் எப்படி நிகழும்?. இரையின் மீது பரிதாபமோ,பச்சோதாபமோ”, நெருக்கமோ கொள்கிற வேட்டைவிலங்கு தன் சக விலங்கினத்தால் எப்படியெல்லாம் பலிவாங்கப்படும். பலி வாங்குதல்களிலிருந்து  தற்காத்துக்கொண்டு எப்படி மீண்டும் தன்னை வலியவன்தான் என்று நிலைநிறுத்தத் துடிக்கும். பூஜ்ஜியத்துக்கு மிக நெருக்கமாய் துரத்தப்படும்போதும் பசியைப் புறந்தள்ளி மீண்டும் தன்னம்பிக்கைகளால் எப்படி நின்றெழும் என்று தேர்ந்த நடையுடன் செல்கிறது நாவல்.

இந்த சின்ன லே-அவுட் தான் நாவலின் பரப்பளவு. ஆனால் அதன் கதை மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டுகிற எல்லா முதலாளித்துவ நாடுகளுக்கும்  பரந்துபட்ட கருப்பொருளாகப் பொருந்திப் போகிறது. நிறைய வியப்புகள், அறியப்பெறாத பல தகவல்கள், நாம் காணாத மனிதர்கள், நம்மைக் காணாத மனிதர்களிடம் நாம் பெற்றிருக்கும் அடையாளங்கள், அன்பு, கயமை, சுயநலம், நம்பிக்கை துரோகம், நட்பு, காமத்திலூறிய காதல், பிணைப்பு, பிரிவு, எதார்த்தம், கர்வம், வீழ்கையில் கிடைக்குமே தன்னம்பிக்கை என அது இதுவென்று எதையும் விட்டுவைக்கவில்லை ஐ.மு.க. (கட்சியல்ல நாவல் பெயர்ச்சுருக்கம்தான்) 

எல்லாமே நறுக்கென்று நிற்கிறது வரிகளுக்குள். சரவணன் சந்திரன் காலம்காலமான நாவல்களுக்கான அத்தியாயக் கொள்கைகளை கொலை செய்பவாரக இருக்கிறார். ஆனால் பாருங்கள் நமக்கு ‘சித்தார்த் அபிமன்யு’வைத்தானே பிடிக்கிறது. ;)

இத்தாலியரான அலெசான்ட்ரோ பாரிக்கோவின் பட்டு”, ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”. இந்த இரண்டு நாவல்களுமே (!)  தமிழ்ச்சூழலில் கவனிக்கத்தக்கவை. இவையிரண்டுமே மொழிப்பெயர்ப்பு நூல்கள். 

கதையாடலில் மிகச்சுருக்கமாக மாயம் நிகழ்த்துகிறதில் பாரிக்கரும், வாக்குமூல நடையில் நாம் அறிந்திராத கோணத்தை கட்டுடைப்பதில் பெர்கின்ஸும் தாண்டவமாடும் நூல்கள் இவை. தமிழில் இப்படியான நாவல்கள் வெளிவந்து மிரட்டியிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதில். சரவணன் சந்திரன் அப்படி ஒரு சிக்ஸரைத் தன்முதல் நாவலில் அடித்திருக்கிறார்.

சட்சட்டென (எம்.டிவி) காட்சி மாறுவதுபோல சம்பவங்கள் நம் சிந்தனையைக் கவ்விக்கொண்டு படுத்தாமல் தெறித்து ஓடுகிறது. வாசகனுக்கு அடுத்து என்ன என்று பக்கத்தைப் புரட்டுகிற சுவாரஸ்யத்தில் திமோர்/வணிகம்/ பித்தலாட்டங்கள்/ சுரண்டல்கள் எல்லாமே சவால்களை எதிர்கொள்கிற வீரனைப்போல் உணர வைக்கிறது.

பல அத்தியாயங்களுக்கிடையில் சொல்லாமல் விட்டுவிடுகிற இடைவெளி அல்லது கதைத்தனம் ஒரு புதிய வெளியை அடையாளம் காண்பிக்கிறது. ஊரில் வசித்த வீட்டை விற்று, நண்பனைவிட்டு, பழகியவர்களை விட்டுப் புறப்படும்போது, வழியனுப்புகிற நண்பனின் சகோதரி பேசும் வார்த்தைகளைக் கவனித்து, தன்னோடு சகஜமாய் இத்தனை ஆண்டுகள் பழகியவளுக்கு இத்தனை தத்துவார்த்தமாகப் பேசத்தெரியுமா என்று சிந்திக்கிற கோணம் யாருக்குத்தான் பிடிக்காது!

இது ஒரு நவீன பாய்ச்சல், உலகக்கோப்பையில் முல்லர், நெய்மர் அடித்த கோல்கள் என்றெல்லாம் வரிகளைச் சேர்த்துக்கொள்ள நினைக்கிறேன். பாராட்டுவதற்காக மட்டுமே இப்படி எழுதுகிறேனா என்ற சுயபரிசோதனைக்குப் பிறகே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.

சரவணன் சந்திரன் தெளிவாக இருக்கிறார். ஆயிரம் வாசகனைச் சேர்கிறது ஒரு புத்தகம், வாசிக்கிறவனை போட்டு படுத்துவதில் எனக்கு உடந்தை இல்லை. எனக்கு இலக்கியத்தனமும் தெரியும் நான் எழுத நினைத்தது அதையல்லமுடிந்தது கதை.

தமிழில் உள்ள ஆகப்பெரிய பிரச்சனை ஒருத்தரைப் பிடித்து உட்கார்த்தி வாசிக்கவைப்பது. ஒரு மலையாள நாளிதழில் எழுதினால் லட்சம் பிரதிகள் வெகு எளிதாக வாசகர்களைச் சென்றடைந்துவிடுகிறது. இங்கு ஒரு தமிழ்நாவல் ஐயாயிரம் பிரதிகளுக்குள் மூச்சுத் தள்ளிவிடும். அதற்கும் திருப்பிக் கொடுக்க தேவைப்படாத சாகித்யஅகாதமி ஒன்று வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இந்த ஐந்து முதலைகளின் கதையினை வாசிக்கச் சொல்வதற்காக அதுபற்றி நீண்ட முழக்கமெல்லாம் நான் பேசிக்கொண்டிருந்தால் அது நாவலை என்ன காரணத்திற்காக நான் அபரிமிதமானதென்று ஏற்றுக்கொள்கிறேனோ அந்த காரணத்திற்கே எதிரானதாகிவிடும்.

நிச்சயம் நீங்கள் ஐந்து முதலைகளின் கதைவாங்கிப் படிக்கவேண்டும். இப்படித்தான் நான் என் வாசக நண்பர்களுக்குப் பரிந்துரைப்பேன். கடந்தவருடம் இதேபோல மிளிர்கல்லை பரிந்துரைத்தேன். ஒருத்தரும் படித்துவிட்டு என்மேல் கல்லெறியவில்லை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படிச் சொல்ல முடிகிறது என்னால்….

மேற்படி விமர்சனம் வைக்கிறவர்கள் தீர ஆராய்ந்து வைக்கும் விமர்சனங்களையும் வரவேற்கத்தான் வேண்டும். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஒரு புத்தகத்தின் அடியும் தலையும் தெரிந்துகொள்கிறவனாலே தான் ஆத்தாமார்த்தமாய் அதனை எதிர்க்கவும் கொண்டாடவும் முடியும்.  

புதிதாக எழுதவருகிறவர்களின் கூடவே வாசிக்க வருகிறவர்களின் ரசனைகள் மாறி இருக்கிறதென்று சப்தமாகச் செல்ல முடிகிறது.  விமர்சகர்களும் கொஞ்சம் தங்கள் வெர்ஷன்களை (விஷன்களை) அப்டேட் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

-கார்த்திக். புகழேந்தி
19-10-2015. 


Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil