கண்ணாத்தி




ன்னைக்கு கருக்கலில் சொன்ன வார்த்தையில
இன்னவரைக்கும் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்ல பார்த்துக்க...
பழுது கிழுதுன்னு எதுவும் இல்லாத உங்கன்னத்துக்கு மேல
ரெண்டு கண்ணு இருக்குதுபார் அதத்தான் சொல்லுறேன்.
என்ன கண்ணுட்டீ அது. கூழாங்கல்ல முழுங்கிட்டு, 
தொண்டைக்குள்ள தண்ணீய புடிச்சு வச்சுக்கிட்டமாதிரி
ஈர கண்ணு. கன்னுக்குட்டிக்கு இருக்கும் பாத்தியா அப்புடி.
ஓம் பார்வையில விழாதவரைக்கும் நா பத்திரமாத்தான்டீ இருந்தேன்.
எப்ப முள்ளுக்காட்டுல சுள்ளி பெறக்க நின்னவள்ட்ட,
கொதவள வறண்டுபோச்சி, ஏ புள்ள கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிண்ணி கெடைக்குமான்னு கேட்டனோ அப்ப இருந்து
மழ பொத்துக்கிட்டு ஊத்துன கததாம்போ...
அடைமழ அன்னைக்கி சாயம் மக்கிப்போன சன்னல் கம்பில
வரிசைகட்டி நிக்கும் பாத்தியா நீர்க்குண்டு.
அந்தமாதிரி ஒரு பார்வை பார்த்தியே. செத்தேம்....போ

ஒரு நெத்திய ஏத்தி, இந்தக் கன்னத்த எக்கி வக்கனமா
நீ வீசிவிட்டுப் போற கொளுக்கட்ட
பார்வைய ஏஞ்சேக்காளிக்குப் புரிய வைக்கணும்ன்னா
ஊருக்கு நடுவாப்புல இருக்கும்  வட்டக்குளத்தில
போட்டு வெளாண்ட பரூம் சீனிக் கல்லைத்தான் நான் முங்கித் தேடணும்.
அதே குளத்துல அரப்பும் மஞ்சளும் தேய்ச்சி குளிச்சிட்டு ஈரவாடை வீசியடிக்க மண்ணுப்பாதையில விளார் விளார்ன்னு நீ நடந்து போனப்ப... உங்கால்ல இருந்து உதுந்த ஈரமண்ண காயுறதுக்கு முன்னால அள்ளிக்கிட்டுப் போய் மோந்து பார்த்திருக்கேன் தெரியுமா...
எல்லாம் ஒரு கிறுக்குத்தனம்.
தோட்டுன துண்ட தலைல சுத்திக்கிட்டு, ரசம்போன பொட்டுக் கண்ணாடியில மொகம்பார்த்துக்கிட்டே,
இரண்டு கண்ணுக்கும் நடூசா நீ
கோவிப் பொட்டு வைக்கிற அழகு இருக்கே
அத என்னத்தன்னு நா எழுதட்டும்.
ஆராம்புளில இருந்து அம்மிக்குளவி கொத்த வந்தவன்
இரண்டு கொத்துக்கு ஒருதரம் ஊர்ப்பேச்சு பேச்சு பேசுனாலும்
கைவுடாம அம்மியக் கொத்துறது மாதிரி நம்மூரு சந்தையில
எந்த கூட்டத்துக்கிடையில  நீ இருந்தாலும் யாவாரத்தப் பார்த்துகிட்டே
ஒரு இணுக்கு விலகாம விட்டு விட்டு  ஒன்னையே வேடிக்க பாப்பேன்.. பாத்தது உன்னையா ஒங்கண்ணையான்னு சந்தேகங் கிந்தேகங் கெளப்பிறாத அப்புறம் நா ஆம்புட்டுக்குவேன்.

ஒருவாட்டி பீடியெல ஆபீசுக்குப் போறப்ப டவுனு பஸ்சுலவச்சி
உங்க அத்தைக்காரி முனியடிக்கிற கதசொல்லிட்டு வரும்போது
எதுவும் நம்புறமாதிரியே யில்லன்னு அவாளுக்குத் தெரியாம
வாபொத்தி சிரிச்ச தான.. அந்தமாரிதான் ஒனக்கே தெரியாம உன் கதையெல்லாம் கேட்டுக்கிட்டே உன் கண்ணையும் கன்னத்தையும் வெறிச்சு வெறிச்சு பாத்துட்டுப் போய் ஆத்தங்கரை மண்டபத்துல கல்லு கல்லாச் செதுக்கிட்டு திரியுறேன்.
ஆனாலுங் கோவம் வந்தா என்னா மொற மொறைக்கட்டீ நீ.
கண்ணக் கண்ண உருட்டிக்கிட்டு நீ பாக்கும்போது,
சலங்க குதிக்க பந்தங்கொளுத்திட்டு வர்ர
கருப்பனுக்குக் கூட நா அத்தன பதறல.

மஞ்ச தாவணிக்கு பச்ச உடுப்பு போட்டு,
வெள்ளிக்கொலுசுல குளிச்ச ஈரம் வடிய,
ஈரத்தலைய தொவட்டி நுனி கொண்ட போட்டு,
டிங்கு டிங்குன்னு நீ திரியும் போதெல்லாம்
இந்த கண்ணாத்திய கொத்திக்கிட்டுப் போக
சந்தச்சேரில இருந்து ஒருத்தன் வருவான்னு ஒரு தெனமும் நெனைக்கல.

கல்யாணம்லாம் முடிச்சு உம்புருசம் பின்னால குனிஞ்சமேனிக்கு  கடத்தெருவத்  தாண்டித்தாண்டி உங்கம்ம வீட்டுக்கு நீ வாரப்பல்லாம் புளியமரத்துக்கு பேய் புடிச்சாப்லதான் ஆயிடுது மனசு.
மொதல்ல எளவு இந்த கண்ண கண்ண உருட்டுறத நிப்பாட்டு... 
போட்டு சாவடிக்காத...மனுசன...

-கார்த்திக்.புகழேந்தி

26-01-2016

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil