உறுமீன் வரும் வரை...
வேளச்சேரியில்
மூன்றாவது மாடியில் தன்னந்தனியாக ஒருதனி வீடு வாடகைக்கு எடுத்து, ரொம்ப
சந்தோசமாகக் குடிபுகுந்து பத்து நாட்கள் ஆகிறது. சமையல் உபகரணங்கள் வாங்கவேண்டிய
அவசியத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்ததால் சாப்பாடெல்லாம் ஹோட்டல் வசம்தான்.
நேற்றைக்கு
திருமழிசை தாண்டி நேமத்தில் நடந்த ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது
போரூர் ஏரிக்கரையில் மீன் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. சரி இன்னைக்கு வீட்டுச்
சாப்பாட்டுக்கு வழிபண்ணுவோம் என்று ஸ்ரீ அக்காவுக்குப் போன் அடித்தேன். வருவதற்கு
சாயங்காலம் ஆகிவிடும் பிரச்சனை இல்லையா என்றார். ஒரு சந்தேகத்தோடு மீன் வாங்கும்
ஆசையைக் கைவிட்டுவிட்டு. நண்பனது அலுவலகத்துக்குப் போய் கொஞ்சம் அரட்டைகளைப்
போட்டுவிட்டு இரண்டு பேருமாக மாலையில் வேளச்சேரிக்குத் திரும்பினோம்.
காதலர்
தினக் கொண்டாட்டத்தில் கடற்கரைச் சாலை வாகனங்களால் நிரம்பி வழிந்தது. சரி
பட்டினப்பாக்கத்துக்குல் வண்டியைத் திருப்புவோம் என்று உள்ளே நுழைந்தால்,
மறுபடியும் மீன்கள். இது ஆகிறதில்லை. ஹோட்டல் சாப்பாட்டுக்குச் செத்த நாக்குக்கு
கொஞ்சம் உயிர்ப்பு கொடுப்போம் என்று களமிறங்கிவிட்டோம். அடிச்சு பேசின பேரத்தில் நல்ல
முழங்கை நீளத்துக்கு இரண்டு வரி சூரை மீனை வாங்கிக் கொண்டு மறுபடியும்
அக்காளுக்குப் போன் அடித்தால் நாங்கள் வர ராத்திரிக்கு மேலே ஆகிடும் என்று
விட்டார்.
பார்த்தோம்
விடு வண்டியை என்று சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தோம். ஒரு இண்டக்ஸன் ஸ்டவ்,
தட்டுமுட்டுச் சாமான்கள், எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தோம்.
உலகத்திலேயே மீனை வாங்கி வச்சுட்டு அடுப்பும், அரிசிபருப்பும் வாங்கப்போனவன்
நீதாண்டான்னு யாரோ முணங்குவதுபோலக் கேட்டது.
பக்கத்துக்கடையில்
அரிசி, மசாலாப்பொடிகள், வெங்காயம், தக்காளி எல்லாம் வாங்கியாச்சு, குடிக்கத்
தண்ணீர் ஒருசொட்டு இல்லை. பிறகு தண்ணீர் கேனுக்கு ஒரு ஓட்டம் ஓடி,
மூன்றுமாடிக்குத் தூக்கிவந்து சமையலைத் துவங்கினேன். இந்த அலைச்சல்களுக்குள்ளாகவே
மணி பத்தரை தாண்டிவிட்டது.
வீடு
முழுக்க மணக்க மணக்க மீன் குழம்பு வாசனை அடித்தபோது மணி பதினொன்று சொச்சம். நல்ல
பசியோடு உட்கார்ந்து சுடச்சுட சோறும் மீன்குழம்பும் வைத்துச் சாப்பிட்டோம் நானும்
நண்பனும். மீன் குழம்பு அட்டகாசம். என்ன ஒரு உருண்டைத் தேங்காய் அரைச்சு
ஊத்தியிருந்தால் இன்னும் அடி பின்னி இருக்கும்.
இனி
நா நிறைக்க கைச்சமையலில் சமைத்துத் தின்கலாம் ஏதாவது ஒரு இக்கட்டில்தான்
இந்தமாதிரியெல்லாம் அரக்க பரக்க முடிவெடுத்து காரியமும் கச்சிதமாக முடிகிறது.
அதிலேயும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது. சமாளிப்போம்.
-கார்த்திக்.புகழேந்தி
15-02-2016
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது