வேர்மண்டிய கதைகளைத் துரத்துகிறேன்....
நாட்டார் வழக்காற்றியல் மீதும், தொன்மங்களின் மீதும் ஒரு பெரிய
ஈடுபாடும், அதன் கதைகளைக் கேட்டு சிலிர்ப்பதில் நிறையவே பேராசைகளும் இயல்பிலே
எனக்குள் இருந்திருக்கிறது.
ரெண்டு வாரம் முன்னே புத்தக வெளியீடு நிகழ்ச்சிகளை
முடித்துக்கொண்டு நானும் அம்மையும் நண்பனும் அவனது மனைவியும் சூழ்ந்து உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்தபோது, கையிலிருந்த மண் கலயத்தை இடது தொடையில் பிடித்துக்கொண்டு
எட்டு வயசில்கேட்டுப் பழகின பெரும்புலையன் கதைப்பாடலை வில்லுப்பாட்டு மெட்டாகவே
பாடி, தாளம் போடுக் கொண்டிருந்தேன். அம்மை அப்படியே அதிசயித்துப் போனாள்.
"இதெல்லாம் எப்படிமா நியாபவம் வச்சிருக்க" என்றாள்.
எனக்கே தெரியவில்லை. அறுவடைக்குப் பிறகு, காய்ந்த அடி வைக்கல்
பிட்டத்தில் குத்த, சாக்குப்பை விரித்து, ராத்திரி கொடையில் கொட்டக் கொட்ட
விழித்திருந்து வில்லுப்பாட்டு கேட்டபோதே அது அடியாழ மனசில் ஊறித் ததும்பியிதுக்க
வேண்டும்.
கேமிராவைத் தூக்கிக் கொண்டு காடுமேடாகச் சுற்றி அலையும் போது
எங்காவது ஒரு நாட்டார் தெய்வத்தின் சிலையைக் கண்டுவிட்டால் போதும் சுற்றிச்சுற்றி
வந்து அதன் பேரென்ன ஊரென்ன கதையென்ன என்றெல்லாம் விசாரிக்காமல் உறக்கம்
பிடிக்காமலிருந்தேன். சிறுதெய்வ
மரபுகளோடு ஒரு சங்கிலித்தொடர்பு வளர்த்துக் கொண்டே போனேன். போகிறேன்.
[அப்பேர்பட்ட மனம் தான் வெட்டும்பெருமாளாக வெளிப்பட்டிருந்தது.
அந்தக் கதையைத் தான் ஆரஞ்சுமுட்டாயில் முதலாவதாக வைத்துக் கொண்டேன்]
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாஞ்சில்
நாடு என்றெல்லாம் அலைந்து திரியும்போது சின்ன கல் ஒன்று செதுக்கிக் கிடந்தாலும்
'என்னமாயும்' இருக்குமோ என்று பித்துக் கொண்டிருந்தேன். கூடே வருபவரை வதைக்கிறோமே என்றெல்லாம்
எண்ணமே கிடையாது.
"வெட்டும் பெருமாள்" எழுதுகிறபோது, அங்கங்கு நிறைய
இடங்களில், இன்னார் இவரென்று சாதிப்பேர்போட்டு எழுதுகிறேன் என்று நண்பன் ஒருத்தன்
வருத்தத்தோடு சொன்னான். விதையில்லாத பருத்தியை விளைச்சலெடுக்க எனக்கு இன்னும்
பழக்கம் போதவில்லை. எது எப்படி கேட்டுப் பழகினேனோ அதை அப்படியே எழுதுகிறேன்
மற்றபடி ஒன்றுமில்லை.
இப்போது வேலைவெட்டிக்கு ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கிறேனென்று
பெரியம்மைக்கு ஒரே களிப்பாக இருக்கிறதாம். "கால்காசானாலும் கவர்மெண்டு
காசு" என்ற மனநிலை அவருக்கு உண்டு.
"சின்னதா ஒரு கடை கண்ணியைப் போட்டு கண்ணுக்கு முன்னேயே வந்து
உக்காந்துக்கோயேன். இந்த வீட்டை உம்பேருக்கு எழுதி வச்சுட்டு என் சீவனை மூட்டைக்
கட்டிக்கிறேன்" என்று கூட இறங்கி வந்துபார்த்தார். நான் கொஞ்சம் சொல்பேச்சுக்
கேக்காதவனாகவே உருப்பட்டுவிட்டேன். இப்பவும், ஊர்சுற்ற கொஞ்சம் காசு சேர்க்கணுமே
என்றும், கொஞ்சம் எழுதக் கிடைக்குமே என்றும்தான் ஆசையாசையாய் வேலைக்குப் போகிறேன்.
எழுத நினைத்ததே வேறு. இங்கே சுயப்புராணம் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி
ஊரூராகச் சுத்தினபோது மனசுக்கு ரொம்ப பிடித்துப் போன ஊரென்றால் அது நாஞ்சில்
நாடுதான்.
பார்மாசூட்டிகலில் ஒரு அஃகன்னா கூடத் தெரியாதவன் நாகர்கோயிலில்
முழம்போட்டுக் கொண்டிருந்தேன். உயிருக்கு உபாத்தியம் பண்ணுகிற வேலை.
சாகக்கிடக்கிறவனுக்கு கோல்ட் செய்ன் (cold chain) மருந்துகளை அதன் குளிர் வாடும்
முன் கொண்டுபோய் டெலிவரி கொடுக்கிற வேலை. வடசேரியில் வண்டியை உதைத்தால் இருபது
நிமிசத்துக்கெல்லாம் தக்கலை ஆசுபத்திரிக்குள் நுழைந்திருக்க வேண்டும். இப்படி
பத்மனாபுரம், திங்கள் சந்தை, மார்த்தாண்டம், குலசேகரம்,கருங்கல் திருவட்டார்,
நித்திரவிளை வரைக்குமாக வள்ளியூர் தொடங்கி திருவனந்தபுரம் ரோடுகளை சுற்றித்
திரிகிறவேலை. திருநெல்வேலிக்காரனுக்கு இருட்டுக்கடையில் அல்வா கிண்டுகிற வேலை
கிடைத்த மாதிரி.
நாகர்கோயிலின் சந்து பொந்து எல்லாம் பழக்கமாகி இருந்ததும் போன
வேகத்தில் திரும்ப ஆபீசுக்கு வருகிற பழக்கம் மட்டும் பழகவே இல்லை. சுசீந்திரம்
தாணுமாலயன் இடது பிரகாரத்தில் வலது வரிசை பதினாறாவது கல்த்தூணில் இப்படி ஒரு
நிர்வாண புடைசிற்பம் இருக்கிறது என்று துல்லியமாய்ச் சொல்லுகிற அளவுக்கு அங்குள்ள
கோயில் குளங்களைச் சுற்றுவேன். அப்படி நான் அசந்த ஊர் குமாரகோயில். தக்கலைக்குப்
போகும் வழியில் மேலே பாலத்தில் ஆறு ஓட கீழே சாலை போகுமே அதே ஊர்தான்.
குமார கோயிலுக்கு வேளிமலை முருகன் கோயில் என்று பேருண்டு. வேளிமலை
என்பது வேளிர் மலை. [ஆய்குல வேளிர் அண்டிரன் கல்வெட்டு கிடைத்த ஊர்] சங்க
காலத்தில் ஆய் குலத்தின் ஆட்சிக்கும், பிறகு சேரர் கைக்கும், பாண்டியர்களின்
கப்பத்திற்குட்பட்டும், திரும்ப திருவிதாங்கூர் மன்னர் கைக்கும் வந்த ஊர்.
நாஞ்சில் நாட்டில் இன்றைக்கு அழைக்கப்படும் ஒவ்வொரு
ஊர்ப்பெயருக்கும் பின்னாலே ஒரு பெரிய சரித்திரத்தின் கிளைக்கதைகள்
வேர்பிடித்திருக்கும். அந்த பழமையைக் காக்கும் நாஞ்சிலின் புராதனத் தனம் தான்
மனத்தில் ஒட்டிக் கொண்டது.
நன்றாக நினைவில் இருக்கிறது. எட்டுவீட்டுப் பிள்ளைமாரிடமிருந்து
தன் உயிரைக்காக்க தானே மன்னர் வேசம் கட்டிப்போய் உயிர்நீத்த கோயில் பூசாரியின்
மகளான பார்வதிக்கு மன்னன் மார்த்தாண்ட வர்மன் கொடையளித்த ஊர்தான் இன்றைய "பார்வதிபுரம்"
என்பதுதான் நான் முதன்முதலில் கேட்ட நாஞ்சில்நாட்டுக் கதை.
அதன் பிறகே மார்த்தாண்டனையும், எட்டுவீட்டுப் பிள்ளமாரையும், தாய்
வழி அரச மரபுகொண்ட வழக்கத்தையும், உதயகிரி கோட்டையையும், டச்சுத் தளபதியையும்,
முப்பந்தல் இசக்கியையும், பி.எச் டேனியல் பிறந்த அகஸ்தீஸ்வரத்தையும், தோப்பிலின்
தேங்காய்ப் பட்டணத்தையும், மண்டைக்காடு கலவரத்தையும், தோல்சீலைக் கழகப்
போராட்டத்தையும், அய்யாவழி வைகுண்டரையும், மூக்காண்டியாகப் பிறந்து ஜீவானந்தமாகிய
தோழர் ஜீவாவையும் படித்தேன். பழசுகளின் பின்னால் பின்னப்பட்ட கதைகளையும்
தேடியலைந்தேன்.
குமாரகோயிலுக்குப் பக்கத்தில் மேலாங்கோட்டு அம்மன் கோயிலின் மேலே
ஒரு யட்சி இருக்கிறாள் என்று சக ஊழியர் ஆறுமுகம் சொல்லக் கேட்டதும் அங்கே ஒரு
பௌர்ணமி நாளில் போயிருந்தோம். வாயில் ரத்தம் ஒழுக, வெண் கண்களுடன் நின்ற அவள்
கதையை சங்கரலிங்கக் கோனார் சொல்லிமுடித்தபோது, அது அவ்வளவு இறுக்கத்தைத் தந்தது
எனக்குள்.
தென் சேரநாடாக அழைக்கப்பட்ட இப்பகுதியில் இன்றைய இரணியலைத்
தலைநகராகக் கொண்டவன் பாஸ்கர ரவிவர்மன். அவனைத்தான் ராஜராஜ சோழன் வெற்றிகொள்கிறான்.
பிறகு சோழர்குல வீழ்ச்சியினால் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் வருகிறது
இம்மண்டலம். ராம வர்மன் என்ற மன்னன் இரணியலில் இருந்த தலைநகரை முதன்முதலாக
பத்மநாபுரத்துக்கு மாற்றுகிறான்.
அவன் காலத்தில் சுசீந்திரன் கோயில் திருவிழாவில் கண்ட நடன மங்கையை
மணந்து பட்டத்து அரசியாக்குகிறான். சேர மரபில் அரசனுக்கு உடன்பிறந்த தமையாளின்
மகனே அடுத்து ஆட்சிக்கு வர வேண்டியவன். மற்றபடி ராணி என்றாள் அது மன்னனின் தாய்
மட்டும் தான். (பத்மனாபுரம் அரண்மனையில் மன்னர் அறை அருகிலே அம்மா மகராணி அறை
இருக்கும்).
நாட்டியக்காரியாக வந்த அபிராமியின் வாழ்நிலம் திருநெல்வேலியாக
இருந்தபோதும் பூர்வீகம் குமாரகோயில். பழைய ஆய்குல வேளிர் வழி வந்தவள் அவள். ராம
வர்மனுக்கும் அவளுக்கும் மூன்று பிள்ளைகள் பிறக்கிறார்கள். இரண்டு மகன் ஒரு மகள்.
ராம வர்மனின் மகள் அழகுக்கும், நெல்லை மண்ணின் பூர்வீகத்தில் ஒரு
இளவரசி பிறந்திருக்கிறாள் என்ற களிப்பிலும் பொன்னும் சீரும் கொடுத்து
பெருமைபட்டுக் கொள்கிறார்கள் ஆய்குல வழி வந்த திருநெல்வேலிக் காரர்கள். அதாவது எனக்கு
ஏதோ ஒருவழியில் தொடர்புடைய முப்பாட்டன்கள்.
ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டிய தன் மகன் மார்த்தாண்ட வர்மனை
புறந்தள்ளிய கோபத்தில் பொறுமுகிறாள் ராம வர்மனின் சகோதரி கார்த்திகை அம்மையார்.
அவள் கோபம் பூவாரியாகி (அம்மை) ராம வர்மனை நோயில் தள்ளிச் சாகடிக்கிறது. மன்னர் மறைவுக்குப் பின்,
பட்டத்தரசியையும் அவள் பிள்ளைகளையும் தூரத்தள்ளிவிட்டு மார்த்தாண்ட வர்மன்
ஆட்சியேற்கிறான்.
மதுரை ராணி மீனாட்சி தயவில் ஆய்குல வாரிசுகளான மகன்கள் இருவரும்
மார்த்தாண்ட வர்மனிடமிருந்து ஆட்சியைப் பறிக்கிறார்கள். இதற்கு பூர்வீக குடிகளும்
நாடார் இன மக்களும் உறுதுணை புரிகிறார்கள்.
ராம வர்மனின் இளைய மகளோடு ரகசிய உறவு வளர்த்துக் கொண்ட மார்த்தாண்டன் அவளது அண்ணன்களோடு உடன்படிக்கை செய்து கொண்டு பாதி தேசம் மட்டும்
தந்தால் போதும், அதற்கு நமக்குப் பிறக்கும் பிள்ளையே உதவும் என்று மனசைக்
கரைக்கிறான்.
அதே நேரம் மதுரை ராணி மீனாட்சி சந்தாசாகிப்பின் கயமையில் சிக்கி
மீனாட்சி விஷம் குடித்து மாய்கிறாள். இந்த குழப்பத்தையும், சந்தா சாகிப் ஆதரவையும்
பயன்படுத்தி கூட்டாளிகளோடு இணைந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றுகிறார்
மார்த்தாண்டன். அதே வேகத்தில்
ராமவர்மனின் புதல்வர்கள் இருவரையும் சமரசம்பேச அவைக்கு அழைத்துவந்து கொல்கிறான்.
விசயமறிந்த தங்கையானவள் மார்த்தாண்டனை நேரே கண்டு, தன்னை நேசித்து
ஏமாற்றியதோடு, அனாதையாக்கிய கோபத்தோடும் அவன் கண்முன்னே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு
வாய் வழிந்த ரத்தத்தை அவன் முகத்தில் உமிழ்ந்துகொண்டே சாகிறாள். இவள்தான்
குமாரகோயில் மேலங்கோட்டில் நாங்கள் கண்ட யட்சி.
சங்க ஆய் வேளிர் குலத்தில் பிறந்து தாய் தகப்பன் உடன்பிறந்தவர்
எல்லோரையும் இழந்த அவள் எரியூட்டும் பொட்டல்காட்டில் உறைந்து, மார்த்தாண்டனுக்குப்
பிறந்த பிள்ளைகளை பலிகொள்கிறாள். நேசித்த பாவத்துக்கு மார்த்தாண்டனை மட்டும்
ஒன்றும் செய்யாமல் உக்கிரம் தீராது யட்சியாக பரிணாமங் கொள்கிறாள்.
இன்றைக்கும் அண்ணன் தம்பியர் இருவரையும் நாடார்குல மக்கள்
வழிபடுகிறார்கள். இடையர்குலத்தினர் கார்பிடித்து வந்து யட்சியைக் கும்பிட்டுப்
போகிறார்கள். பெருமூச்சோடு கதையை முடித்த கோனார் அண்ணாச்சிக்கு நாக்கு
வறண்டிருந்தது. செம்புக் கலயத்தில் மோரைக் குடிக்கக் கொடுத்தார். மூன்று வருசம்
உதிர்ந்து போய்விட்டது.
நான் வழக்கப்படி கதை மாந்தர்களின் பெயர்களைத் தாங்கிய ஊர்களுக்கு
வலசை போய்க்கொண்டே இருக்கிறேன். இந்த
வீதிக்கு என்ன காரணப் பெயர் இருந்திருக்கும் என்று அறிகிறதில் என்னத்தான் அப்படி
ஒரு பேராசையோ எனக்கு....
-கார்த்திக். புகழேந்தி
06-02-2016
உங்களுடைய எழுத்தில் மனதை பறிகொடுத்துவிட்டேன்.என்ன லாகவம்,பேச்சு வழக்கை பயன்படுத்தும் உத்தி,சற்றும் சுவை குன்றாமல் எழுதும் திறமை உங்களிடம் உள்ளது. பதிவு முடிந்து விடுகிறதே என்கிற ஒரு ஆதங்கம் வேறு ஒன்று சேர உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteஇதற்கு மூல காரணம் எனது நண்பி சித்திரா சாலமன் அவர்கள்தான்.
KP
ரொம்பவும் மகிழ்ச்சி..
Delete