விருது வாங்கிய பொழுது...

            கடந்த ஞாயிற்றுக்கிழமை நேமத்திற்குச் சென்றிருந்ததாக எழுதி இருந்தேனில்லையா. விசயம் வேறொன்றுமில்லை. வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நிறைய தரப்புகளில் இருந்து உதவிகள் பெற்றுக் கொண்டிருந்தோம். அப்படியாக லதா அருணாச்சலம் அக்கா கைகாட்டியதின் பேரில் அவரது தோழியார் ஒருவரது வீட்டில் போர்வைகளும் கொஞ்சம் துணிமணிகளும் வாங்க நானும் கவிமணியும் நேரில் சென்றிருந்தோம்.

            கூடவே, சாப்பாடு பொட்டலம் வாங்க அவகாசமில்லை யாருக்காவது சமைத்துக் கொடுக்க முடியுமென்றால் உதவட்டும் என்று பக்கத்து மளிகையில் ஒரு மூட்டை அரிசியும் வாங்கிக் கொடுத்தார். அவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அறிமுகமான நண்பர் மனோகர் என்பவரது உதவியுடன் 250பேருக்கு மதிய உணவாகச் சமைத்து வழங்கப்பட்டது. இதெல்லாம் பழங்கதைதான்.

            அன்றைக்கு அரிசி உள்பட உதவிகளை வழங்கினவரின் சிநேகிதர் நேமத்தில் மெம்பராக இயங்குபவர் போல. கல்கி மாணவ சேவா சமிதி சார்பில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 100பேருக்கு விருது வழங்கும் திட்டத்திற்கு என் பெயரையும் பரிந்துரைத்திருக்கிறார். லதா அக்கா எடுத்ததுமே அவன் இதுக்கெல்லாம் வரமாட்டான் இருந்தாலும் கேட்டுப் பார்க்கிறேன் என்றிருக்கிறார்.

            இதைச் சொல்லியே போனில் உன் நம்பர் கேட்கிறாங்க குடுக்கட்டுமா என்றதற்கு ககக போங்கள் என்றேன். ஆனாலும் நேமம் ஆசிரம நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று காயத்ரியிடம் சொன்னதுமே, “மக்கா நல்லா இருப்ப இப்படித்தான் நீயா நானாவுக்குப் போன வில்லங்கத்தை வீதியில் இழுத்துவிட்ட, இங்க போ ஆனா எதையும் எழுதமாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்று சூடத்தை பற்றவைத்தாள். டோட்டல் டேமேஜ்.

            சரி சத்தமில்லாமல் போய்த்தான் பார்ப்பொம் என்று காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பிப்போனேன். அரங்கம் நிறைந்த திருவிழாவில் பிரசங்கங்கள் முடிந்ததும் விருதுகளை வழங்கினார்கள். டிராபிக்.ராமசாமி தொடங்கி, முன்னாள் நீதிபதி, கமிசனர், கவுன்சிலர், வார்டு மெம்பர், சீரியல் நடிகை, திரைப்பட இயக்குனர், தன்னார்வலர்கள் என்று கலவையான மக்கள் நிறைந்திருந்தார்கள். ஆனால் ஒரு விசயம் பிடித்திருந்தது. எல்லோரையும் ஒரே மாதிரி அணுகினார்கள். யாரையும் தலையில் தூக்கி வைத்து ஆடாமல் ஒரே மாதிரியான விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

            சனி ஞாயிற்றுக்கிழமை இங்கே மனக் கஷ்டங்களிலிருந்து விடுபட ஒரு க்ளாஸ் நடைபெறுகிறது. நீங்களும் கலந்துகொள்ளுங்கள் பீஸ் 1050/- என்று ஒருத்தர் மட்டும் வகுப்பெடுத்தார். மனக்கஷ்டம் உள்ள யாரையாவது பார்த்தால் நிச்சயம் அனுப்பி வைக்கிறேன் என்றுமட்டும் சொல்லிவிட்டு விடைபெற்றேன். சூரிய வெளிச்சம் போல் படமிருந்த அட்டை ஒன்றை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தார். அதற்கு காசு ஏதும் கேட்கவில்லை என்பதால் வாங்கிக்கொண்டேன். அந்த “கோல்டன் பால்” தான் கடவுள்களின் கடவுளாம். கடவுள்களுக்கெல்லாம் சக்தி கொடுப்பதன் முன்னால் நீங்கள் அமர்ந்திருக்க புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்றார். என்ன ஒன்று கடைசி வரைக்கும் பகவானை வீடியோவில் சைடு வ்யூவில் மட்டும் தான் காட்டினார்கள் என்ற துயரம் தான் என்னால் தாளவே முடியவில்லை.

-கார்த்திக்.புகழேந்தி
16-02-2015.




Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil