அகம் புறம் மரம் | குகை.மா.புகழேந்தி
குகை.மா.புகழேந்தியின் “அகம் புறம் மரம்” கவிதைத் தொகுப்பை அலுவலக நண்பரின்
மேசையிலிருந்து எதேச்சையாக எடுத்து வாசிக்கத் துவங்கினேன். கட்டிடங்களுக்குள்
உட்கார்ந்து ஒரு காட்டை வாசிக்கிற அனுபவத்தை தந்துபோனது அந்தக் கவிதைகள்.
புதுவீடு கட்டுவதென்று முடிவானபிறகு, புறவாச இரண்டு தென்னம்பிள்ளைகளை நடுவதென்று
முடிவானது. பருத்த கன்னுக்கு அண்ணன் பேரும், இளசுக்கு என் பேரும் வைத்து வளர்த்தோம்.
அத்திவாரம் கல்நிரப்பி, கட்டிடம் எழுந்தபோது அரை ஆள் உயரத்துக்கு மரங்கள் ரெண்டும்
கீற்றுவிட்டிருந்தது. கட்டிட வேலைக்காக கட்டின தொட்டியை அப்படியே பரமாரிக்க
ஆரம்பித்ததால் புழங்குகிற தண்ணீரெல்லாம் மடைவழியாக தென்னம்பிள்ளையின் பாத்திக்குப்
போய்விடும்.
இந்தப்பக்கம் ரெண்டு மூணு வாழைகள், ஒரு மாங்கன்னு, கீரைச்செடி, பூசணி, முருங்கை
என்று வீட்டுக்குத் தேவைப்படும் அத்தனைக் காயும் தோட்டத்திலே விளையத் தொடங்கியது.
எல்லாம் இருந்தும் நமக்கு அந்தத் தென்னையின் மேலுள்ள அக்கரை கிறுக்குத்தனமானது.
மோட்டரைப் போட்டுவிட்டால் அப்படியே வானம் பார்த்து எழும் தண்ணீர் கீழ்நோக்கி
வழிகிற இடத்தில் நின்று கொண்டு குளிக்கிற போது குழாயைத் தென்னங்கன்னுக்கும்
திருப்பி விட்டுக்கொள்வேன். ஆள் பாதி மரம் பாதியாகக் குளிப்போம். சோப்பு போட்டு
விடவில்லை அதுமட்டும்தான் குறை.
நிறைய வருசங்கள் போய்விட்ட பிறகு, சொந்தக்காரரொருத்தர் கல்யாணப் புகைப்படத்தில்
தான் நாங்கள் இருந்த வீட்டின் அந்த மரத்தைப் பார்த்தேன். வீடு உயரத்துக்கு
வளர்ந்து நெடு நெடுவென்று நிற்கிறது. நாட்டுக்காய் பூக்கள் தள்ளி பார்க்கவே அப்படி
ஒரு அம்சம். பக்கத்து மொட்டைமாடியை எட்டித்தழுவுகிறது கீத்துகள். மூக்குப்
பூவுக்கு எப்படியும் அணில் வந்திருக்கும். தோட்டமெல்லாம் மிச்சமிருக்குமா
தெரியவில்லை. என்னத்தையாவது காரணத்தைச் சொல்லி அந்த மரத்தைப்
போய்
கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கவேண்டுமென்ற நினைப்பு வந்துவிட்டுப் போகிறது.
இப்படி நினைப்புகளைக் கிளறிவிட்ட புத்தகத்தை கண்ணில்ப்படும்படி விட்டுப் போன
சகாவுக்கு அனுமதி இல்லாத நன்றி. எழுதின தோழருக்கு ரொம்பவும் ப்ரியங்கள்.
“மரம் சரிகிற ஓசையை
நாம் எழுப்பிய பிறகுதான்
யானைகள் ஊருக்குள்
வரத்துவங்கின”
நாம் எழுப்பிய பிறகுதான்
யானைகள் ஊருக்குள்
வரத்துவங்கின”
இந்த வரிகள் உங்களை ஒன்றும் செய்யாமல் போனாலும், வாசித்த என்னை
என்னென்னவோ செய்யத்தான் செய்கிறது. அப்புறம் அந்தப் பதிப்பகத்தின் பேர். “பட்டாம்பூச்சி
பதிப்பகம்” என்னமாய் இருக்கிறது
பாருங்கள்.
-கார்த்திக்.புகழேந்தி
18-02-2015.
18-02-2015.
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது