அண்ணாச்சி | ஃப்ளாஷ்பேக்


           ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் இந்தப்பக்கமாக அண்ணாசாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையில் இருக்கிறது எங்கள் அண்ணாச்சி டீக்கடை. கோவில்பட்டி பக்கமுள்ள ஊர்க்காரர். நரை விட்ட திருகு மீசையில் ஆஜானுபாகுவாய் இருப்பார். நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் தினமலரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த டீக்கடையில் தான் நானும் கவிமணியும் கதையடித்துக் கொண்டிருப்போம்.

      டிசம்பர் மழைக்காலத்தில் நண்பர்கள் இரவில் ஒன்றுகூடுகிற இடமும், அடுத்தநாள் நிவாரண உதவிகளை எந்தப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லலாம் என்று முடிவெடுக்கிற இடமுமாக அண்ணாச்சிக் கடையே இருந்ததால் அவரும் தன்பங்குக்கு எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துகொண்டிருந்தார். 


       ஆரஞ்சுமுட்டாய் புத்தக வெளியீடு பற்றிய பேச்சு எழுந்தபோது, வெளியீட்டுவிழாவில் ஊர்ப்பக்கமுள்ள தின்பண்டங்களையும் முட்டாய்களையும் திரட்டிக்கொண்டிருந்தோம். அப்போது, என்னுடைய கருப்பட்டிகாபி ஆசையை அவரிடம் பேச்சுவாக்கில் சொல்லி இருந்தேன். நம்ம ஊர் ருசியில இங்க காபி எங்க அண்ணாச்சி குடிக்க முடியும் என்றதுதான். வீட்டிலிருந்த கருப்பட்டியைக் கொண்டுவந்து தன்கடையிலே வைத்து, 200பேருக்கு உடன்குடி கருப்பட்டி காபிக்கு ஏற்பாடு செய்து தந்தார்.

       காபியும் நெய் போளியும் ஏற்பாடு பண்ணி விழா அரங்குக்கே வந்துசேர்ந்தது. அதுமட்டுமில்லை. வெள்ளம் வந்ததில் அரங்கத்தின் ஸ்பீக்கர் மைக்செட்டெல்லாம் வேலைசெய்யாமல் போக, அவரே சவுண்ட் சர்வீஸ் ஆட்களிடம் சொல்லி மாற்று ஏற்பாடும் செய்துகொடுத்திருந்தார். இத்தனைக்கு ஒரு பைசாகூட அவர் என் கையில் இருந்து வாங்கி இருக்கவில்லை. பழக்கத்துக்காக நேசிக்கிற மனிதர்கள் என்பேனில்லையா அப்படி ஒருத்தர் நம்ம அண்ணாச்சி. 

       இப்போது அலுவலக ஜாகை தியாகராய நகருக்கு மாறியபிறகும் சாயங்காலம் வண்டியை எடுத்துக்கொண்டு அண்ணாச்சிக் கடைக்கு ஒரு “ப்ளாக் டீ”க்காகப் போய்விடுவது வழக்கம். அந்தச் சிரித்த முகம், பழக்கம், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் “என்ன புகழேந்தி சார் ஆளேகாணும்” என்று அழைக்கும் தன்மை எல்லாமுமே அவரிடம் பிடித்துப்போன விசயங்கள்.

          ஒரு ரெண்டு மாதம் முன்பிருக்கும் என்று நினைக்கிறேன்.. நானும் கவியும் அவரது சிற்றுண்டி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் எங்களுக்கு முன்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவன் (அரசு போதை) சாப்பிட்டு விட்டு காசுகொடுக்காமல் ஓட்டம் பிடித்திருக்கிறான். அண்ணாச்சி கடைப் பையனை அனுப்பி அவனைக் கூட்டிவிட்டு வரச் சொன்னார். பார்ட்டி பையனை அடிக்கப் பார்த்திருக்கிறான்.

              தயங்கிக்கொண்டே கடைப்பையன் வந்து விஷயத்தைச் சொன்னதும் ,பக்கத்து வல்கனைசிங் கடையில் இருக்கும் கார்த்திக் என்பவரை அனுப்பிவைத்தார் அண்ணாச்சி. அவர் போன வேகத்தில் ஆளை குண்டுக்கட்டாகத் தூக்கிவிட்டு வந்துவிட்டார், வந்த வேகத்தில் சாப்பாட்டுக் கடை கல்லா பக்கம் நுழைந்து எடு காசை எல்லாம் நான் கொடுத்த நோட்டு லேசா கிழிந்திருக்கும் என்று சவடால் விடத் தொடங்கிவிட்டார். சமாளிக்கிறாராமாம்.

 பொளேர் என்று ஒரு அறை முதுகில் வந்து விழுந்தது. அண்ணாச்சி கடையில் எப்படியும் பத்துபேர் வேலைக்கு இருப்பார்கள். பாய்லரில் நின்று கொண்டிருந்த பையனிடம் அந்த  “ராடை எடு” என்று ஒரு சத்தம் கொடுத்தார். அவன் பயத்தில் நல்ல உருட்டையாக பழைய ஸ்டெம்ப் ஒன்றைக் கையில் கொடுத்தான்.

    முதுகுச் சட்டையை கொத்தாகப் பிடித்து ஸ்டைம்பை ஒரு ஓங்கு ஓங்கினதுதான் அந்த இடத்திலே கப்சிப்பாகி உட்கார்ந்துவிட்டான் காசுகொடுக்காமல் ஓடினவன். “பசிக்கு சோறு கொடுன்னு கேட்டா குடுத்திருப்பேன், தண்ணியடிக்க காசு இருக்கு திங்குற சோத்துல ஏமாத்துத்தனமாலே” என்று அதட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த காவலர்களிடம் ஒப்படைக்கச் செய்தார். 

 நடந்ததெல்லாம் பார்த்துவிட்டு, “அண்ணாச்சி ஸ்டெம்பெல்லாம் ஸ்டாக் வச்சிருக்காப்ல கவிமணி. பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ. காசு குடுக்கலைன்னாலும் கடன் சொல்லிட்டாவது போயிடு மறந்துறாத” என்று என்பங்குக்கு எடுத்துவிட சிரித்துக் கொண்டார்கள்.

       சில வருஷங்களுக்கு முன்பு டாஸ்மாக்குகள் வரும்முன் ஒயின்ஸ் ஷாப்கள் ஏலத்தில் நடத்திக்கொண்டிருந்தாராம் அண்ணாச்சி. அப்போது சப்-கலெக்டர் ஒருத்தர் பாட்டில்களெல்லாம் வாங்கிவிட்டு காசுகொடுக்காமல் “நான் சப்-கலெக்டர்” என்று சவடால் விட்டிருக்கிறார். “ஏன் சப்-கலெக்டர்ன்னா அருவா வெட்டாதா?” என்று ஒரே கேள்விதான் அண்ணாச்சி கேட்டிருக்கிறார். கலெக்டர் காசை எண்ணிவைத்துவிட்டு எஸ்கேப்.  

          அதிலிருந்து “சப்கலெக்டர்னா அருவா வெட்டாதா?” என்ற பஞ்ச் ஏரியாவில் பேமஸாகிவிட்டது. நானும் கவியிடம் பார்த்தல்ல மஞ்சப்பையைத் தூக்கிட்டு சும்மா ஒண்ணும் வந்துடலை தெக்க இருந்து என்று கெத்து காட்டினேன். இந்த மாதிரி சமயத்தில் காட்டினாதான் உண்டு. (ஹஹ) அண்ணாச்சி இப்போது அடிதடியெல்லாம் இல்லாமல் சாந்தமான கம்பீரத்தோடு இருக்கிறார் என்பது கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனாலும் அவரது ஃப்ளாஸ்பேக்குகளைக் கேட்பது எனக்கு அத்தனை ரசனையான வேலை. 

             முதல்தேதி வந்துவிட்டது சம்பளம் கிரெடிட் ஆகி இருக்குமே, எங்கைய்யா ட்ரீட் என்றான் நண்பன்… கூடவே, “உன் பேரைச் சொல்லி அண்ணாச்சி கடையில ஒரு டீ குடிச்சுக்கவா” என்றிருக்கிறான்.

 “அண்ணாச்சி அந்த ஸ்டெம்பை அப்படி எடுத்து வைங்க. உங்களைத்தேடி நம்மை பையன் ஒருத்தன் வந்துகிட்டே இருக்கான்” என்று அண்ணாச்சிக்கு வாட்ஸப்பில் ஒரு மெஸேஜ்  தட்டிவிட்டிருக்கிறேன். ஹாஹா


 -கார்த்திக்.புகழேந்தி
03-03-2016.



Comments

  1. ஹா ஹா அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. நன்றி ஹஹ. ரசிச்சு சிரிக்கிறீங்க பாருங்க அதான் வேணும் :)

      Delete
  2. இப்படி ஊர்பக்கம் இருந்து வந்து சென்னையில் பிழைப்பு நடத்தும் அண்ணாச்சிகள் முரட்டுதனமாக இருந்தாலும் மனதிற்குள் இரக்கம் மிக அதிகமாகவே இருக்கும்

    ReplyDelete
  3. அந்த சப் கலெக்டர் சென்னைக்காராகத்தான் இருப்பார் என்பது நிச்சயம் சென்னைகாரர்களுக்கு வாய் நீளம் ஆனால் பயம் அதிகம்

    ReplyDelete
    Replies
    1. நாடாய் இருந்தால் என்ன காடாய் இருந்தால் என்ன; எங்கே உன்மீது நடக்கிற மனிதர்கள் நல்லவர்களாய் இருக்கிறார்களோ அங்கே நீ நல்லபடியாய் வாழ்வாய் என் மண்ணே- அவ்வை.

      Delete
  4. Replies
    1. நன்றி. எழுத்துப்பழக்கம் 2015லிருந்து நகரமாட்டேங்குது. மூணுமாசம் போச்சு இன்னும் அவுட் ஆஃப் டேட்லயே சுத்திக்கிட்டு இருக்கேன்.

      Delete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil