கொலைச் சொல்




கொலைச் சொல்

            ஆர்.வி.தோட்டத்தில் கணேசன் வீடு எது என்று விசாரித்தபோது,  பெட்டிக்கடைக்காரர் சாதாரணமாகத்தான் வழிசொன்னார். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்துக்கொண்டே,“அவர் வீட்டுக்கு யாராவது புதிய ஆள் வந்திருக்கிறாரா” என்று கேட்டேன். கொஞ்சம் மோசமான சூழ்நிலையாக இருந்தால் என்கேள்வியின் அர்த்தமே மாறிப்போய்விடும். இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. சங்கர் இங்கேதான் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் அந்தக் கேள்வியை சாதாரணமாக கடைக்காரரிடம் தொடுத்தேன். 

அவருக்கு கணேசனைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் அவன் வீட்டுக்கு வந்துபோகிறவர்கள்.. குறைந்தபட்சம் கண் முக்கியமாக அவன் சிறையிலிருக்கிற காலங்களைப் பற்றியாவது...

நான் எதிர்ப்பார்த்ததுபோலவே அவரிடமிருந்து சங்கரின் அங்க அடையாளங்களோடு பொருந்துகிற ஒரு ஆள் ஒருவன் கணேசன் வீட்டில் இரண்டுநாளாகத் தென்படுவதுபற்றி தகவல் கிடைத்தது. அத்தோடு விடாமல் அந்தப்பையனை எங்கயோ பார்த்தமாதிரி இருந்தது என்று அவரே பேச்சை வளர்க்கத் தொடங்கினார். ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை. பேச்சுவாக்கில் நான் யார் என்பதையும், சங்கர் யார் என்பதையும் அவர் அறிந்துகொண்டால் அவருடைய பேச்சின் தொனி வேறுமாதிரி வெளிப்படலாம். 

அதிலும் என்னைவிட சங்கர் பற்றிய தகவல்கள் அவரைக் கொதிப்படையச் செய்யலாம். சிகரெட்டுக்குக் காசுகொடுத்துவிட்டு அவர் சொன்ன தெருவைநோக்கி நகரத் தொடங்கினேன். என்முதுகில் அவர் பார்வை படிந்திருந்தது. அதில் நிறைய வினோதம் குடிகொண்டிருந்தது.

சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்து இரண்டு மாதங்கள்தான் முடிந்திருக்கிறது. ஆயுள்தண்டனைக் குற்றவாளியாகவேண்டியவன், அவனது நல்லநேரம் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையாகி இருந்தான். வெளியே வரும்போது முதலில் அவன் தொடர்புகொண்டது என்னைத்தான். அவனுக்கு வேறு யாரையும் தெரிந்திருக்கவில்லை. அல்லது அவனது பழக்கம் எல்லாம் சிறைக்குள் இருந்தவர்களோடுதான் என்பதால்  அவர்களை அவன் தவிர்த்திருந்தான்.

முப்பத்து எட்டு வயதுக்காரன். ஆனால் சிறை வாழ்க்கையில் ஐம்பதைக் கடந்தவன்போல ரொம்பவும் தளர்ந்திருந்தான். யாரோடும் அதிகம் பேசுவதில்லை. "எனக்கு ஒரு கண்ணாடி வாங்கிக் கொடுண்ணே" என்றது மட்டும்தான் அவன் கடைசியாகப் பேசின வார்த்தை.

உசேன்பாயின் லாரிசெட்டை கவனித்துக்கொண்டு அங்கேயே இரவில் தங்கிக்கொள்ள வசதிபண்ணிக் கொடுத்திருந்தேன். கொஞ்ச நாளைக்கு வெளியில் எங்கும் போகவேண்டாம் என்பதால் அங்கேயே தங்கியிருக்கச் சொல்லியிருந்தேன். இருந்தும் சொல்லாமல் கொள்ளாமல் போனவாரத்தில் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டான்.

சங்கர் எனக்கு அவன் கல்லூரி படிக்கும்போது அறிமுகம். ஒரே ஊர்க்காரன்தான். அப்போது நான் பேரவையில் துணைப் பொறுப்பில் இருந்துகொண்டிருந்தேன். பேரவை கட்சியாக வளர்ந்தபோது, தலைவரின் கல்லூரிப் பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் வேலையைக் கொடுத்திருந்தார். 

கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம் கல்லூரிகளில் இருந்து கட்சி ஈடுபாடுள்ள பசங்களைத் தேடித் திரட்டுகிற பணி எனக்கு கட்சி மேலிடத்திலிருந்து தரப்பட்டிருந்தது. அப்படி ஒரு பழக்கத்தில்தான் சங்கர் எனக்கு அறிமுகமானான். ரொம்பவும் துருதுருவென இருப்பான். தப்புத்தண்டா யார் செய்தாலும் துணிந்து விழுகிற முதல் அறை அவனுடையதாக இருந்தது.

அவனுக்கு கப்பம் கட்டுகிற ஜூனியர் பையன்களுக்காக சின்னச்சின்ன பஞ்சாயத்துகள் பண்ணினான். பெண்பிள்ளைகளிடம் சில்மிஷம் செய்த புரொபசரையே மூத்திரம் பெய்யும் இடத்தில்வைத்து தலையில் துண்டைப் போட்டு அமுக்கி வெளுத்துக்கட்டி அனுப்பினான். அப்படி ஒரு அடிதடி விவகாரத்தின் பேச்சுவார்த்தையில்தான் நான் சங்கரை கவனிக்கத் தொடங்கினேன். நகத்தால் கிள்ளிப்போட்டாலே வேர்பிடிக்கிற பயிர் இவன் என்பதைப் புரிந்துகொண்டதும் அவனைத் தலைவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.

நம்ம பையன்தான் என்றதும் தலைவருக்கும் அவனைப் பிடித்துப் போனது. குடும்பத்தை எல்லாம் விசாரித்தார். ரொம்ப அனுக்கமாக தலைவர் அவனது தோளில் கைப்போட்டு பேசினது சங்கருக்குப் பிடித்துப் போனது. அடிக்கடி கட்சி அலுவலகங்களுக்கு தலைவர் அவனை வந்துபோகும்படி சொன்னார். மெல்ல செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறவர்களோடு நெருக்கமாகத் தொடங்கினான் சங்கர்.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன சில்லறை வேலைகளுக்கு சங்கரை நிர்வாகிகள் பயன்படுத்தினார்கள். முதல்தடவை ருக்மணி லாட்ஜ் விஷயத்தில்தான் அவன் பேர் பெரிதாகப் பேசப்பட்டது கட்சிக்குள். அது ஒரு திருட்டு விவகாரம். தலைவருக்குச் சொந்தக்கார மச்சினனின் லாட்ஜ் அது. 

அங்கே வேலைபார்த்த மேனேஜர் ஒயின்ஷாப் கட்டிங்கிற்கு வைத்திருந்த தொகையை சுளையாக அடித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டான். போலீசிடம் போகிற விவகாரம் இல்லை. பணம் வெள்ளையுமில்லை. திருடினவன் திருப்பதிக்குப் பக்கத்தில் மறைந்திருப்பதாக லாரி டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் மாசெ.வின் தம்பி மூர்த்தியை தலைவர் அனுப்பச் சொல்லி இருந்தார். 

மூர்த்தியின் மீது ஏற்கனவே ஆந்திராபோலீஸில் இரண்டு வழக்குகள் இருந்ததால் ’சங்கரையும் கூடே போகமுடியுமா தம்பி’ என்று கேட்டிருக்கிறார். இவனும் தலைவரே கேட்கிறார் என்று உடன் கிளம்பிவிட்டான்.

ஆந்திராவில் அறை எடுத்துத் தங்கிய நேரத்தில், இப்போ போனா சிக்கமாட்டான் என்று காத்திருக்கச் சொல்லிவிட்டு, கிளப் ஒன்றிற்குள் நுழைந்து ஆட்டம்பார்க்கத் தொடங்கிவிட்டான் மூர்த்தி. போன இடத்தில் போதையைப் போட்டு ரகளையும் செய்தவனை ஆந்திரபோலீஸ் அள்ளிக்கொண்டு போய்விட்டது. தலைவர் பணம்போனால் போகிறது மானம் போகாமல் எப்படியாவது ஊர்வந்து சேருங்கள் என்று எரிச்சலாகிவிட்டார்.

ஆந்திரபோலீஸிடம் கெஞ்சுவதுபோலக் கெஞ்சி போதையிலிருந்து மூர்த்தியை மீட்டு,  லாட்ஜ் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, சங்கர் மட்டும் தனியாளாக அலைந்து திரிந்து மேனஜரைப் பிடித்துவிட்டான். கொடுத்த அடியில் மிச்சமிருந்த பணத்தையும், மனைவியின் நகைகளையும் பறித்துக்கொண்டு லாரி ஏறி ஊர்வந்து சேர்ந்தான் சங்கர். மறுநாள் இங்கிருந்து ஆள்போய் மூர்த்தியை கதவைத்திறந்து மீட்டுக்கொண்டு வந்தார்கள்.

தலைவர் சங்கரை எல்லார் முன்னிலையிலும் மெச்சத் தொடங்கினார். 'போனவன் வெறுங்கையோட வராம வசூல் பண்ணிட்டு வந்துட்டான் பாரு' என்று வெளிப்படையாகவே பாராட்டியதில் சங்கருக்கு வசூல்குட்டி என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. அதன்பிறகு எந்த வெளியூர் வசூல் காரியமானாலும் சங்கரைத் துணைக்கு அழைத்துச் செல்லச்சொல்லி தலைவர் கட்டளையே பிறப்பித்துவிட்டார்.

படித்த பையன் என்பதால் பெயருக்கு தலைவர் தன்னுடைய லாரி சர்வீஸ் ஆபீஸுக்கு அவனை மேனேஜராக வெளியில் சொல்லச் சொன்னார். சொல்லப்போனால் அது ஒரு விசிட்டிங்கார்டு வேலை. பெயருக்குத்தான் சங்கர் அதன் மேனேஜர். நகரத்தில் திருடிய  அக்கு அக்காகப் பிரித்து க்ராப் வேஸ்ட் என்ற பெயரில் தனித்தனியாக கோழிகோட்டுக்கு கடத்துகிற புதுப்பேட்டை பாயின் உப கம்பெனி அது. தலைவர் ஆரம்பகாலத்தில் பாயின் செட்டில்தான் தொழில் பழகினவர். பிறகு முதலாளிக்கே முதலாளி ஆகி, பேரவை, கட்சி அலுவலகம், முனிசீப் இடங்களை ஆக்கிரமித்து பள்ளிக்கூடம், கல்லூரி என்று வளர்ச்சிகளை எட்டினார். அவரைப்பொறுத்தவரை லாரிசர்வீஸ் ஆபீஸ் என்பது அவருக்கு ராசியான இடம்.

சங்கர் கையில் பணம் விளையாடியது கூடவே அதிகாரவர்க்கத்தின் நெருக்கமும் கிடைத்தது. அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் தலைவர் ஆளுங்கட்சியோடு கூட்டணிவைத்து 11சீட்டுகள் ஜெயித்திருந்தார். தலைவரின் செல்வாக்கு பறந்து விரிந்தது. பேரவைப் பாசத்தில் கிட்டே இருந்தவர்களிடமெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை 'நாமெல்லாம் இன்னார்டா தலை எடுக்கத்தான் போகணும். தலைவணங்கிப் போகக்கூடாது' என்று தலைவர் பேசுவதுண்டு. அவர் அதிகாரத்தில்வேறு அப்போது இருந்தார். எப்படியும் தன் தம்பிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் அதன்பிறகு தன்னுடைய செல்வாக்கு இன்னும் வலுவாகிவிடும் என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.

அந்த சமயத்தில்தான் நான் தலைவரிடமிருந்து வெளியேற வேண்டிய சந்தர்பம் ஏற்பட்டது. என்னுடைய காரணத்தை அவரிடம் நேர்மையாகச் சொல்லி இருக்கக்கூடாது. ஆனால் அவரை நான் சரியாகக் கணிக்கத் தவறி இருந்தேன். என்னுடைய விலகலைவிட நான் முடிவெடித்த காரியம் அவரை உஷ்ணப்படுத்தியது. அவருக்கு இருந்த சாதிவெறியின் உச்சக்கட்டத்தை அப்போது கண்டு அதிர்ந்தேன்.

'என் கண் முன்னாலே நிக்காதே போய்டு. எந்த தே.... கூட படுக்கப் போனாலும் கேட்ருக்கமாட்டேன். எந்த சாதியில பொறந்துட்டு எந்தசாதிக்காரிய கட்டப்போறேன்னு வந்து என்கிட்டே சொல்லுவ" என்று என்னை அடித்துத் துவைத்தார். நான் நிலைகுலைந்தேன். என்னால் அவரை எதிர்க்கமுடியாது. உயிர்ப்பிச்சை போட்டாரென்று நினைத்து தப்பித்து வந்தேன்.

ஆனால் பிச்சை முழுமையானதல்ல. அடுத்தநாளே நான் சிறைக்குச் செல்லத் தயாராகவேண்டி வந்தது. ஆம் கல்லூரி நிர்வாகத்தில் கையாடல் பண்ணியதாக என்னைக் கைது செய்தார்கள். அள்ளிமுடித்த பாவம் குடுமியில் இருக்கும்போது நிழலை பழிக்கவா முடியும். 16மாதம் சிறையிலிருந்து வெளிவந்தேன். அப்போதுதான் மார்க்ஸ் அண்ணன் என்னை திடப்படுத்தினார். என்மீதிருந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கச் செய்தார். தோழர் எனக்கு ஒரு சாக்கு மண்டியில் கணக்கெழுதுகிற வேலை வாங்கிக்கொடுத்தார். சிறைவாசத்திற்குப் பிறகு  நான் நேசித்த அருந்ததியையே திருமணம் செய்துகொண்டேன். கிட்டத்தட்ட எதிர்முகாமில் பாதுகாப்பாய் முக்காடிட்டு அமர்ந்துகொண்டிருந்தேன்.

சிலவருடங்கள் போயிருக்கும் அப்போதுதான் நான் செய்தித்தாளில் அந்த படத்தைப் பார்த்தேன். கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் என்று போட்டிருந்த இடத்தில் சங்கரின் படம் இருந்தது. எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சங்கர் இந்த நிலைக்கும் இறக்கப்படுவான் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. முதலில் வழக்கு பற்றி செய்திகள்மூலம் வாசிக்கத் தொடங்கினேன்.

தலித்து குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கட்சிக்கு நெருக்கமானவரின் மகளை காதலித்து, வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். கோயிலில் திருமணம் செய்துகொண்டவர்களை எட்டுமாதம் கழித்து பொது இடத்தில் வைத்து சரமாரியாக வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். சம்பவ இடத்திலே அந்தப்பையன் பலியாகிவிட்டான். இப்படி ஒரு கொலைபாதகத்தைச் செய்ய நிச்சயம் வேறு என்னென்ன காரணம் இருக்கமுடியும் என்று யோசித்தபிறகு ஒரு கனத்த முடிவுடன்தான் நான் சங்கரைச் சந்திக்க  சிறைவளாகத்துக்குச் சென்றேன்.

ஜெயில்வாசம் ஒருவனை எப்படியெல்லாம் கொல்லும் என்பதை அனுபவித்தவன் என்பதாலும் தோழர்களைக் காண அடிக்கடி மனுபோட்டுக் காத்திருக்கிறவன் என்ற பழக்கத்தினாலும் என்னுடைய அணுகுமுறை எளிதில் சாத்தியமானது.

முதல்தடவை அவனைச் சந்தித்தபோது, "ஜாமீனில் எடுக்க வந்திங்களாண்ணே" என்று தான் கேட்டான். அவனுக்கு நான் தலைவரிடமிருந்து விலகியது தெரிந்திருக்கவில்லை. அத்தனைக் கச்சிதமாக உண்மைகளை அவர் மறைத்திருக்கக்கூடும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

"ஏண்டா இப்படி பண்ணே. படிச்ச பையன் உனக்கு இதல்லாம் தேவையா. உன்னை இந்தக்கூட்டத்தில் இழுத்துவிட்டதுக்கு இந்தப்பாவமும் என் தலையில் விழுந்துவிட்டது" என்றேன்.

"என்னண்ணே சொல்ற, நம்ம வீட்டுப்பொண்ணை கண்ட நாயும் இழுத்துட்டு ஓடும். கண்டுக்காம விடச் சொல்றியா. தாயோளி அவன அறுத்து கூறுபோட வேணாமா" என்று சங்கர் குரலை உயர்த்தியபோது அவன் எவ்வளவு மாறிப்போயிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டேன். காலகாலமாகப் ஊட்டி வளர்க்கிற சாதிவெறியை கச்சிதமாக இவனுக்குள்ளும் செலுத்திவிட்டார்கள். அதுவும் தலைவர் மாதிரி தூண்டிவிடுகிற தூபம் ஒன்று பக்கத்திலே இருந்தால் நினைத்துப் பார்க்கவே தேவையில்லை.

"அடுத்த வாரத்தில பார்ணே  வெளியே வந்துடுவேன். வந்ததும் உன்னைப் பார்க்க வரேன். ஆமா எங்க இருக்க நீ. உன் அட்ரஸ் தந்துட்டுப்போண்ணே" என்றான். எனக்கு அவனிடம் பேச மேலதிக வார்த்தைகளே இல்லை.

ஆண்டுகள் தீர்ந்தபிறகு நான் தோழர்களோடு நெருங்கி இருந்தேன். எனக்கு இந்த புது அத்தியாயம் பிடித்திருந்தது. அதிகாரத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கிற கலைமுகத்தை கட்டி எழுப்பும் வீதிநாடகங்களை எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு மணல்கொள்ளைக்கு எதிரான வீதிநாடகத்திற்காக என்னையும் தோழர் லெனினையும் கூடவே திலீபனையும் கைது செய்து வேலூருக்கும் புழலுக்குமாக அலையவிட்டார்கள். அப்போதுதான் 12வருடங்கள் கழித்து நான் சங்கரைச் சந்தித்தேன். ஒருவார்த்தைகூட அவன் என்னிடம் பேசவில்லை. கலங்கினபடியே இருந்தான். ஒரு படித்த பிள்ளையின் வாழ்க்கையை கெடுத்துவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சியின் முள் மட்டும் என் தொண்டைக்குள் குத்திக் கொண்டிருந்தது.

சங்கரை வெளியே எடுக்கும் முயற்சிகளை கட்சியினரோ சங்கருக்கு நெருக்கமான நிர்வாகிகளோ செய்யவே இல்லை. அவன் துரதிஸ்டம் கொலை நடந்த நாட்களுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவித்திருந்தார்கள். கொலைக்குற்றச்சாட்டுக் கறைகள் கட்சியின் மீது விழுந்ததாலும், எதிர்முகாம்களில் பிரச்சாரத்தாலும் அந்தத்தேர்தலில் கட்சிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. படுகொலையின் எதிரொலியாக தலைவர் நேரடியாகவே வீழ்த்தப்பட்டார். அத்தோடு தம்பிக்கு மத்திய அமைச்சர் பதவி கனவும் பறிபோனது. சங்கரோடு சேர்த்து கைதான மற்ற இருவரும்கூட இன்னும் வேலூர் சிறையில் இருக்கிறதாகத் தகவலறிந்தேன்.

தோழர்களிடம் சொல்லி அவனுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை விளங்கவைக்கச் சொன்னேன். நான் பேசினால் அவன் நம்பாதிருக்கக்கூடும் என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அரசியல்வாதிகளின் போலித்தனமான சாதிவெறித் தூண்டலையும், அதைவைத்து நடத்தும்  ஓட்டுப் பொறுக்கித் தனத்தையும், அடிமட்ட மக்களின் ஜனநாயக வாழ்வுரிமையையும்  விளங்கவைக்கச் சொன்னேன். நாங்கள் சிறையிலிருந்து வழக்கமான கவனிப்புகளோடு வெளியில் வந்தோம். இந்தமுறை திலீபனுடைய காலை பதம்பார்த்திருந்தார்கள். லெனினை வெளியில்  விடுவதற்கு தாமதம் செய்தார்கள்.

அதன்பிறகான நாட்களில் அமைப்புசார் நண்பர்கள்மூலம் சங்கரின் ஆயுள்தண்டனையினை குறைக்கும் பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டேன். சிறைக்குள்ளே அவனுக்கு படிக்கவும் எழுதவும் என்னாலான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தேன். என் கைகளில் அப்பியிருந்த பாவத்தின் கறைகளைக் கழுவ எனக்கு வேறு வழியுமிருக்கவில்லை.

தோழர் லெனின் வெளியில் வந்தபோது சங்கரின் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். தண்டனைமுடிந்து வந்ததும் இயக்கத்தில் ஈடுபட விரும்புகிறேன் என்று சொன்னதாகவும் தெரிவித்தார். அதையெல்லாம்விட சங்கர் சொன்னதாகக் கேள்விப்பட்ட ஒரு வார்த்தைதான் என்னைத் தூங்கவிடவே இல்லை. இரவு முழுக்க அருந்ததியிடம் அதுபற்றியே பேசிக்கொண்டிருந்தேன்.

"வெளியில் வந்ததும் அந்த பையனின் தகப்பனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்று கூறியிருக்கிறான். மன்னித்தல் ஒன்றும் சாதாரணமானதில்லை. ஆனால் மன்னிப்புக் கேட்க நினைப்பது எத்தனைபெரிய மாற்றம் அன்பின் வழியது உயிர்நிலை என்று அடிக்கடி நினைவுறுத்துவாள் அருந்ததி.

கணேசன் வீட்டைக்கண்டுபிடித்து நான் உள்ளே நுழைந்தபோது, என்னை போலீஸ்காரனாக இருப்பானோ என்று சந்தேகமாகப் பார்த்தவர்களிடம், “சிறையில் இருக்கும்போது கணேசனைத் தெரியும்” என்றேன். “என்ன விஷயம்” என்று பதில்குரல் வந்தது. இங்கே  தம்பி ஒருத்தன் வந்து தங்கியிருப்பதாக விசாரித்துப் போகலாம் என்று வந்தேன் என்று முடிப்பதற்குள்... என் குரல் கேட்டு சங்கரே எட்டிப்பார்த்தான். 

மாடி அறைக்கு வரச்சொல்லி கைகாட்டினான். அறையில் நான் நுழைந்தபோது, அவன் கட்டிலில் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' நாவல் கிடந்தது. 

 “ஏன் பாய்கிட்டே சொல்லாம கொள்ளாம இங்கே வந்துட்டே” .

"அங்கே எனக்கு சேரலை. பழைய நியாபகமெல்லாம் வருது"

"சரி ரெண்டு வாரமா எங்கே போயிருந்தே"

"அந்தப் பையனோட அப்பா இறந்துட்டாராம்"  என்றவன் அதற்குப் பிறகு கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புறட்டத்தொடங்கிவிட்டான்.  நான் நெடுநேரம் அவனது முகத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன், அதில் விழுங்கமுடியாத சொல் ஒன்று மிச்சமாய் படிந்திருந்தது. 

-கார்த்திக்.புகழேந்தி
16-03-2016.

Comments


  1. "அந்தப் பையனோட அப்பா இறந்துட்டாராம்"...இங்க நிக்குதுண்ணா. செம... எவ்வளவு தான் மூளைச்சலவை செய்யப்பட்டாலும்.அடிப்படைல இருக்க அந்த கொஞ்சூண்டு ஈரம்.நல்லாருக்கு கதை கார்த்திண்ணாவ்.

    ReplyDelete
  2. அருமை கார்த்திக்....

    ஒரு செய்தியின் முன்னும் பின்னுமாய் நிகழ்வுகளைப் பின்னி, அதிலொரு ஈர விதை விதைத்திருக்கிறீர்கள்...

    பிதஒ விருட்சமாகட்டும்.... ஆகும்..!

    ReplyDelete
  3. அருமை கார்த்திக்....

    ஒரு செய்தியின் முன்னும் பின்னுமாய் நிகழ்வுகளைப் பின்னி, அதிலொரு ஈர விதை விதைத்திருக்கிறீர்கள்...

    பிதஒ விருட்சமாகட்டும்.... ஆகும்..!

    ReplyDelete
  4. GREAT TO READ! WRITE MORE! THANKS TO GREAT SERVICE TO TAMIL WORLD!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil