கம்பிவடம்
அப்பாவோடு வயலுக்குப் போகிறோம்
என்றாலே தனீ உற்சாகம் வந்துவிடும். நாள் முழுக்க சோறுதண்ணியே வேண்டாம். சிவப்பு
கைப்பிடி போட்ட பார் சைக்கிளில் முன்னும் பின்னுமாக, தம்பியையும் என்னையும் உட்கார
வைத்துக்கொண்டு, சங்கரங்கோயிலில் இருந்து சைக்கிளை மிதித்தால் பூலித்தேவன் அரண்மனை
இருக்கும் நெற்கட்டான் செவல் வரைக்கும்கூட சலிக்காமல் அழுத்துவார். அவரோடு சைக்கிளில் போவதே என்னம்மோ ராசா குதிரையில் சவாரி போகிற மாதிரி இருக்கும்.
அப்பாவுக்குச் சொந்தமாக தாத்தா காலத்தைய
புஞ்சைகள் தலைவன் கோட்டைக்கு கீழ்த்திசையில் கொஞ்சம்போல மிச்சமிருந்தது. காற்றடி
மழையடிக்கும் தப்பின ஆவுடையாறு கோடைக்கு வற்றிப்போனபிறகு, ‘இந்த நிலத்தில கிடந்து நான் பாடுபார்த்தது போச்தும் நீ படிக்கப்போ’ என்றுசொல்லி அப்பாவைப் படிக்க
அனுப்பிவிட்டார் தாத்தா. அவரது மறைவுக்குப் பிறகு வயல் என்பது வேலிபோட்ட தோட்டமானது. தரிசு விட்டதுபோக மிச்சத்தை ஆட்கள் வைத்து பராமரித்தார் அப்பா. சின்னவயசில்
எப்பவாவது பூஞ்சைத் தோட்டத்துக்கு போகும்போது, எங்களையும் இப்படி கூடேக்
கூட்டிக்கொண்டு போவார். இன்றைக்கும்
ஊருக்குள் “நாயனா பூஞ்சை இங்க எங்கன இருக்கு? என்று யாரைக்கேட்டாலும் சரியான திக்கில்
கைகாட்டுவார்கள்.
ஆவுடையாற்றுக்கு கீழ்ப்புரத்திலுள்ள நிலமெல்லாம் கந்தகமும் கரிச்சாம்பலுமாய்
வெடித்துக் கிடக்கும். அதேநேர ஆற்றுக்கு மேல்கரையில் உள்ள நிலத்தில் உப்பு பூத்த வெள்ளை
வண்டலில் சோளமும் கம்பும் நெல்லும் கெலித்து கிடக்கும். “பக்கத்துப் பக்கத்து
மண்ணுக்கு எவ்வளவு மாறுபாடு பாத்தியா? இந்த நெலத்திலே வெளைஞ்ச நெல்லுக்குத்தான்
வெள்ளைக்காரன் வரிகேட்டான்னு சண்டைக்கு நின்னிருக்காங்க. அவன் கான்சாகிபு தோத்து
ஓடுனது இங்க ஒரு எடத்திலதானே. தோக்கடிச்சது பூலித்தேவன், அங்க நிக்கது அவனோட கோட்ட”
என்று அப்பா பூலி கதை சொல்லும்போது, நான் அந்த நிறம் மாறிக்கிடக்கும் மண்ணில்
விளைந்த நெல்மணிகளையே வெறித்துக்கொண்டிருப்பேன்.
பூலித்தேவன் பாளையத்திலிருந்து மேற்கே போகும் பாதையில்
அப்பாவுக்குப் பழக்கப்பட்ட சாமியார் ஒருத்தர் குறி சொல்லிக் கொண்டிருப்பார். 'ரொம்ப
சக்திவாய்ந்த சாமி' என்று சுற்றுவட்டாரங்கள் எல்லாம் அவரை பணிந்து தொழுது கொண்டிருந்தது.
அவரைப் பற்றிக் விவரம் அறியாதவர்கள் வந்து அப்பாகிட்டே புகழ்ந்து பேசும்போது அப்பா
ஒரு குறுநகையோடு அவர்களைப் பார்த்துச் சிரிப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அறுங்கோண வடிவத்திலிருக்கும் அந்தக் குறிசொல்லி சாமியாரின்
கோயிலுக்கு மெட்ராஸிலிருந்து பெரிய கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் பரோபகாரர்கள் என்று நிறையபேர் இன்றைக்கும் வந்து பூஜை
செய்வித்து, தேர்தலில் ஜெயிப்போமா, தோற்போமா எதிரிகளின் பிடி எப்படி இருக்கும் என்றெல்லாம் ஆரூடம் கேட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். செவ்வாயும் வெள்ளி ஆனால் போதும்‘குறி
சொல்லுத சாமியாருக்க கோயில் எங்க இருக்கு?’ என்று நெற்கட்டானுக்கு குடும்பம் குடும்பம் வந்து இறங்கும் வெளியூர்
சனங்கள்.
ஒருதடவை பெரியாம்பளைகளோடு நானும் பூஜைக்குச் சென்றிருந்தேன். குறிகேட்க
வருகிறவர்கள் எல்லாரும் கட்டாயம் ஆளுக்கொரு முட்டை கொண்டுவந்திருக்க வேண்டுமாம் அத்தனை முட்டைகளை அவர் என்னதான் செய்வார் என்றுதான் தெரியவில்லை. சந்தனமும் ஜவ்வாதும் மணக்க ருத்ராட்ச மாலைகளோடு சன்னதியிலிருந்து நடைவாசலில் வந்து நிற்கும் சாமியார், திடீரென்று கூட்டத்தில் கைகூப்பி
நின்று கொண்டிருக்கும் சனங்களிலிருந்து ஒரு வெள்ளை சீலை ஆச்சியைப் பார்த்து, ‘உம்
பொண்ணுக்கு வாழ்க்கயில பெரிய பிரச்சனை, அதுக்காகத்தான வந்திருக்க. இந்த வாசல் மண்ணை எடுத்துட்டு
மூணு சுத்து சுத்திட்டு கிளம்பு. எல்லாத் தும்பமும் தீர்ந்து அவ நல்லா இருப்பா. மத்தத நாம் பாத்துக்குறேன்”
என்று கேள்வியே கேட்காமல் குறி சொல்ல ஆரம்பித்துவிட்டார். மனசில் உள்ளதெல்லாம்
சொல்லுறாரே என்று உழுந்து புரண்டுவிட்டாள் ஆச்சி.
ஒருதடவை பூட்சுக் காலோடு கோயிலுக்குள் வந்துவிட்ட போலீஸ்காரரை
பார்த்து, “அரசாங்க உத்யோக்தாரின்னு மமதையிலயா பூட்சு காலோட இங்க வந்த, அடுத்த
வாரமே நீ வெறுஞ்ச் செருப்போட தெருவில் நிப்ப பாரு” என்று சாபம் விட்டுவிட்டார்
குறிசொல்லும் சாமி. யார் பார்த்த பார்வையோ போலீஸ்காரருக்கு நிஜமாகவே வேலை போய்விட்டதாம்.
அப்போதிருந்து இன்னும் அதிகம் பிரபலம் அடைந்துவிட்டார் குறிச்சாமி. அவருடைய
ஆறுங்கோணக் கோயிலுக்குப் பின்னால் உள்ள ஓடைக்குப் பக்கம்தான் ஈ.பி ட்ரான்ஸ்பார்மர்
ஜங்ஷன் இருந்ததால் அப்பா நெற்கட்டான் வரும்போதெல்லாம் கோயிலில் அவருக்கு தடபுடலான
கவனிப்பு இருக்கும். இத்தனைக்கும் அப்பா சாமி கும்பிடாதவர்.
நான் விபரம் தெரிந்து கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான்
குறிச்சாமியின் உண்மைக் கதையை அப்பா முதல்முதலாக எனக்குச் சொல்லியிருந்தார். “அவன் நம்ம கோயில்பட்டிக் காரந்தாம்.
மலையாளத்துக்குப் போய் அங்கன நாலு வார்த்த கத்துக்கிட்டு தென்மலை கணவாய் வழியா சங்கரன்கோயிலுக்கு
வந்திருக்கிறான். தாத்தா உயிரோடு இருந்தப்போ ஒருநாள் வண்டிமையை மை வச்சுக்கிட்டு
வாசலை வழிமறிச்சு நின்னு, இந்தவீட்டுத் தலைப்பிள்ளைக்கு நேரம் நல்லால்லன்னு நின்னானாம்.
தாத்தாவுக்கு ச்சீன்னு வந்தாலும் இவனை ஆளைப்பார்த்து இவன் மலையாளத்தானும் இல்லை மந்திரவாதியும்
இல்லை. என்னமோ திருவளத்தான் சோளி பாக்க வந்திருக்கானோன்னு
கணித்திருக்கிறார்.
“கொஞ்சம் உள்ள வந்துட்டுப்போ” என்று அழைத்து, கட்டிவச்சு
உரிக்கவும், உண்மையெல்லாம் துப்பிப்போட்டு, “என்ன விட்ருங்க சாமி!” என்று காலில்
விழுந்துவிட்டானாம். அப்படி ஓடிப்போனவனுக்கு இன்றைக்கு நெற்கட்டானில் நீரென்ன
நிலமென்ன வளமென்ன வாழ்வென்ன. பக்த கூட்டமென்ன. இந்த வட்டாரத்தில் குறிசொல்லும்
சாமியாராகி ஊருக்கே அருள் பாலிக்கிறான். இந்த மடையங்களும் போய் கால்ல விழுறாங்களே”
என்று தாடையைச் சொரிந்துகொள்வார்.
படித்து முடித்த கொஞ்ச நாளிலே
அப்பாவுக்கு சங்கரன்கோவில் எலக்ட்ரிசிட்டி போர்டில் போர்மேன் வேலை கிடைத்திருந்தது. குருக்கள்பட்டி
சப்-டிவிஷனில் போர்மேனாக பணியில் அமர்ந்தவர், கலிங்கப்பட்டி, சங்கரன்கோவில்,
கழுகுமலை, காவல்கிணறு என்று நிறைய ஊர்களுக்குச் சுற்றியலைந்தார். அந்தப்பகுதி
என்றில்லாமல் பொதுவாகவே நிலவியல் அறிவு அப்பாவுக்கு அத்துபடி. “இந்த நேருக்குப்
போகுதே வயர் லைன் இதைப் புடிச்சுட்டே போனா, நேரா பம்பைல கொண்டுபோய் விட்டுரும். ஆற்றுப்பாதை,
வண்டிப்பாதை மாதிரி இது ஒரு மின்சாரப் பாதை. அது
வானத்தையும், நிலத்தையும், திசையையும் மலை முகட்டையும் கணியம் பார்த்து புள்ளி
புள்ளியாய் கோர்க்கத் தெரிஞ்சவனால் கட்டி
எழுப்பப்பட்ட பெரிய தொடர்புச் சங்கிலி” என்பார்.
சங்கரன்கோவில் தொடங்கி ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்,
சிவகாசி, சாத்தூர் வரைக்குமான பகுதிகளில் முதல்முதலாக மின்சார வயர்கள் போடப்பட்ட
காலத்துக் கதைகளை அவர் சொல்லச் சொல்லக் கேட்பது அத்தனை ருசியாக இருக்கும். வெள்ளைக்காரன்
காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் நீரேற்று மின்உற்பத்தி
நிலையங்கள் அமைக்கப்பட்ட பிறகுதான் எங்கள் பகுதிகளில் மின்சாரம் வந்து குண்டு
விளக்குகளை ஒளிரச் செய்ததைச் சொல்வார். புளியங்குடி அடிவாரத்தில் ஆரம்பிப்புது தெக்கே
பணகுடி, காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் வரைக்கும் காற்றாலை மின்
உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டபோது அப்பா உதவி பொறியாளராக பதவி உயர்வு
வாங்கியிருந்தார்.
பள்ளத்தில் காற்றடி கம்மியாதான் இருக்கும். நம்ம பகுதி
நிலங்கள் மேடு பார்த்துக்க. கரிசல் எப்பவும் பொட்டலா நிக்கும். இங்கல்லாம் வேகமா
அடிக்குற காத்தை தடுத்து, காற்றாடிய சுத்தவிட்டா கரண்டு கிடைக்கும்ன்னு
கண்டுபுடிச்சான் வெள்ளைக்காரன். அது வந்தப்போ யானைப் பசிக்குச் சோளப் பொறிதான்னாலும்
அன்னைக்கு காலத்தையில் அதுதான் நம்ம ஊர்களுக்கு பெரிய வரமா இருந்துச்சு. மின்சார
வெளிச்சமே பாக்காத எத்தனையோ ஊர் ஜனங்க விளக்கு எரியுறதையே சுத்திச் சுத்திவந்து
வேடிக்கை பார்த்த காலம் அது” என்பார்.
காற்றாலைகள் எப்படி கரண்டைத் தயாரிக்குது என்று கேள்வியை
அப்பாகிட்டே கேட்டபோது எனக்கு எட்டு இல்லை பத்து வயதுக்குள் தான் இருக்கும். தம்பி
அப்போ பொடிசாக இருப்பான். ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு,
பின் டயரில் இடித்துக்கொண்டு இருந்த டைனமோவைக் காட்டி, துரை இங்க பாரு, அப்பா வீல
சுத்தும்போது இந்த டைனமோவும் சுத்துதா? அது சுத்தும்போது உள்ளுக்குள்ள கரண்டு
உருவாகும். அதுக்குள்ள இருக்குற விஞ்ஞானம் அந்த வேலையச் செய்யும். இந்தா, டைனமோல
இருந்து வயர் இழுத்து லைட்டுக்குக் கொண்டு போயிருக்கு பாரு. அதுவழியாத்தான்
கரண்டுபோய் லைட்ட எரிய வைக்குது. இப்படித்தான் காத்தாடிக்குள்ளயும் ஒரு டைனமோ
இருக்கும் அது கரண்டை புடிச்சு வச்சிக்கும். அப்பா மாதிரி ஆளுங்க அதை சேமிச்சு
எந்தெந்த ஊர்க்கெல்லாம் வேணுமோ அங்கெல்லாம் வயர் வழியா கொண்டுபோய் கொடுப்போம்”
என்று பாடமெடுத்தார்.
அப்பாவை ஊருக்குள் எல்லாரும் நைனா என்று தான் கூப்பிடுவார்கள்.
தொழிற்சங்கங்களில் ஆரம்பித்து கழகங்கள் வரைக்குமாக அப்பாவுக்கு நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன.
ரூரல் டிவிஷன்களையும் சேர்த்துக் கவனிக்கும் பொறுப்புகளை ஏற்றிருந்தபோது மலைக்
கிராமங்களில் போய் மாதக் கணக்கில் தங்கியிருப்பார். அங்குள்ள எஸ்டேட்
தொழிலாளர்களோடும் அவருக்கு நல்ல மரியாதையும் பழக்கமும் இருந்தது. மின்சாரக்
கட்டணம் உயர்த்தப்பட்ட போதெல்லாம் அரசின் ஊழியராக இருந்தாலும் விவசாயிக்கு ஆதரவாக
போராட்டங்களில் அஞ்சாமல் கலந்துகொண்டார். வேலை போகுமே என்று எத்தனையோ பேர்
சொன்னபோதும் அதையெல்லாம் அவர் காதில் ஏற்றிக்கொள்ளவேயில்லை.
எழுபதுகளில் தொடங்கி கிட்டத்தட்ட
கரிசல் விவசாயிகள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக் கேட்டு போராடியபோது, அரசு
ஊழியராக, ஜே.இ., பொறுப்பிலிருந்த அப்பா அன்றைக்கு நடந்த துப்பாக்குச் சூடு
சம்பவங்களின் நேரடி சாட்சியாக இருந்தவர். கரிசலில்
விவசாயத்துக்கு கிணற்றுப் பாசானம் தான் என்றாகிவிட்ட சூழலில் மின்சாரக் கட்டணம்
ஏழையின் வாழ்வில் சுருக்குக் கயிறுமாதிரி அப்பப்போது மெல்ல இறுக்கும். காமராசர்
மாதிரி ஆட்களெல்லாம் கூட மின்சாரக் கட்டணம் கூட்டினதை எதிர்த்துப் போராட்டத்தில்
இறங்கியிருக்கிறார்கள். எண்பதுகளிலும் அப்படித்தான் சாலைகள் முழுக்க ட்ராக்டரை நிப்பாட்டி
வைத்து சம்சாரிகள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
தட்டிபோர்டு கலைஞர்கள் வீதியெங்கும் எழுதித் தள்ளினார்கள். ஆனால் என்ன பெரிய சோகம் என்றால் அன்றைக்கு
போராட்டத்தில் இறங்கினவர்களில் எட்டு பேர் வீடு திரும்பவே இல்லை. அவர்கள் அனைவரின்
நெஞ்சிலும் அரசத் துப்பாக்கிகளின் தோட்டாக்கள் இறங்கியிருந்தன.
அப்போதுதான் அப்பாவுக்குக் கல்யாணம் முடிந்து சில மாதங்கள்
ஓடியிருந்தது. ஊரே பற்றி எரிய அம்மை பதறிக் கொண்டிருந்திருக்கிறாள். அதன் பின்னான
நாட்களில் சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி, குருவிகுளம் கழுகுமலை வரையுள்ள
கிராமங்களில் எல்லாம் எக்கச்சக்கம் கெடுபிடிகள் நீடித்ததாம். குறிஞ்சாக்குளத்தில்
துப்பாக்கிச் சூடுபட்டு இறந்தவர் சடலங்களுக்கு எரியூட்டி, புதைத்தபிறகு அவர்களை
யாரும் சுடவில்லை. நோய் வந்து இறந்தார்கள் என்று சாட்சி சொன்ன அரசியலை எல்லாம் அவர்
சொல்லும்போது அம்மைக்கு நெஞ்சே பதறும்.
இந்த ஊரே இப்படியா அடியும் தடியும் வெட்டும் குத்தும்
துப்பாகிச் சண்டையும்ன்னு. என்ன வாழ்க்கையோ என்று ஒரு நாள் அம்மை சடைத்துப் பேச,
அவரைத் தடுத்துவிட்ட அப்பா சொன்னார். “இந்த மண்ணை மனுஷன்
ஆள நினைக்கத் துடிக்கும்போது தான் அவனுக்குள்ள இப்படி மிருகங்கள் கிளம்புது. நீ இந்த இனம், நான் இந்த சனம்ன்னு வாழ்றதுல
இருந்து சாகுறது வரைக்கும் சாக்கேடா இந்தச் சாதி இருந்து இந்த மனுஷங்களை மீள
விடலை. அதை கட்சி பதவின்னு வந்தவனுங்களும் தங்களுக்குச் சாதகமா பயன்
படுத்திக்கிட்டானுங்க. தன்னைக் காப்பாத்த இனி கெதியே இல்லைன்னு கலங்கும்போதுதான்
இந்தச் சனங்க தெய்வத்துகிட்டப் போய் முறையிடுதுங்க. அங்கயும் அயோக்கியப் பய தான்
நிக்கான். நீ நாயக்கன் நான் கள்ளன் அவன் பறையன்னு பேதம் பிரிச்சு பேதம் பிரிச்சு
அழிஞ்சுத்தாம் போனம். துப்பாக்கி எடுத்துச் சுட்டாலும் வெட்டிப் போட்டாலும் சிந்துற
ரத்தம் என்னம்மோ ஒண்ணுத்தாம். இதைப் புரிஞ்சுக்கிடவும், புரிய வைக்கவும் தான் இந்த
ஜனங்களுக்கு ஒரு நல்ல தலைவன் இல்ல. அப்படி ஒருத்தன் வந்தாலும் அவனையும்
அழிச்சிடுவாங்க. அதுக்குத்தான் சொல்லுதேன் புள்ளைங்களை நாலு வெபரம் தெரியவிட்டு
வளக்கணும். படிக்க வைக்கணும். அவங்க மணி மணியா வாழ்வானுங்க”
அப்பா மறைந்து பத்து வருடங்கள் காத்துக்குக் கற்பூரமாகக் கரைந்துவிட்டது. வாழ்க்கையை மின்சாரக் கம்பிவடம் மாதிரி வேறொரு தளத்தில் இருந்து பார்த்த மனிதன். என் பிள்ளைகளைக் காரில் ஏற்றி தாத்தாவின் பூஞ்சைத் தோட்டத்துக்கு அழைத்துப் போய் அவர் வாழ்ந்த கதையை அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் நாளைக்கு என் கதையை அவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்களாயிருக்கும். எது எப்படியோ அப்பா எங்களை மின் வடங்கள் வழியாகத் தொடர்ந்து வந்தபடி ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார்.
அப்பா மறைந்து பத்து வருடங்கள் காத்துக்குக் கற்பூரமாகக் கரைந்துவிட்டது. வாழ்க்கையை மின்சாரக் கம்பிவடம் மாதிரி வேறொரு தளத்தில் இருந்து பார்த்த மனிதன். என் பிள்ளைகளைக் காரில் ஏற்றி தாத்தாவின் பூஞ்சைத் தோட்டத்துக்கு அழைத்துப் போய் அவர் வாழ்ந்த கதையை அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் நாளைக்கு என் கதையை அவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்களாயிருக்கும். எது எப்படியோ அப்பா எங்களை மின் வடங்கள் வழியாகத் தொடர்ந்து வந்தபடி ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார்.
-
கார்த்திக்
புகழேந்தி
23-02-0017
அன்பு நண்பர் துரை மோகன் ராஜுவுக்குச் சமர்ப்பணம்
இந்த கதையில் "மணிமணியா வாழ்வானுங்க" ன்னு...வாழ்க்கையே (கதையாக) சொல்லித்தர தகப்பன் கிடைக்க பெற்ற மகன்களே "வரம்" வாங்கியவர்கள்.
ReplyDeleteவழக்கம் போல் அருமை கார்த்திக்.
அருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteஎங்க ஊர சத்தி நடந்த வரலாற்று உண்மையை முழுவதும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
நானும் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தை சார்ந்தவனே