வாழ்வியல்

“இரு இரு ஞாயிற்றுக்கிழமை வரட்டும் வேப்பங்கொழுந்து அரைச்சு வாயிலேயே புகட்டுறேன்” என்ற மிரட்டல்கள் எங்கே போனதென்றே தெரியவில்லை.

சுக்கு அரைத்து கூடவே கொஞ்சம் இனிப்புக்கு கருப்பட்டி சேர்க்க, வேணாம் வேணாமென அடம்பிடிக்கும் குழந்தைகளைக் காணவே காணோம்.
நொச்சி இலையை கொதிக்கவிட்ட தண்ணீரில், வெங்கிச்சான் கல்லைப்போட்டு கனத்தப்போர்வைக்குள் வியர்க்க வியர்க்க ஆவி பிடிக்கும் பழக்கத்தை தொலைத்தே விட்டோம்.

புளியும் வெல்லமும் சேர்த்துப் பிசைந்து,கரைத்துக் கொடுக்கும் பானாகாரத்தைக் கேள்வியே படாத தலைமுறை ஒவ்வொரு வீட்டிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

வெட்டிவேர் மிதக்கும் மண்பானைக் குடிநீரை ஆங்காங்கே நகரத் தண்ணீர் பந்தல்களில் பார்க்க முடிவது சற்று ஆறுதல் அளிக்கும் விசயம்.
ஆரோக்கியம் என்று நாம் குடிக்கும் பாலும், மோரும், இளநீரும்,
தன் தனித்துவத்தை இழந்து பலகாலங்கள் ஆகிவிட்டது. ஒரு கணக்குப் போட்டுப் பாருங்களேன். பல்லாயிரம் லிட்டர் பால் நம்முடைய ஒருநாள் தேவையாக இருக்கிறது, அத்தனை லிட்டர் பால்கறக்கும் பசுக்கள் நம்மிடம் எங்கே இருக்கிறது? கெமிக்கல் தான் விடை.

மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றங்களை அடையும் முன்னே பாலுக்காக வளர்த்தெடுக்கப்பட்டு, பால் வற்றியதும் செத்துப்போகும் கறவைகளை காட்டின் நுழைவிடத்தில் வீசிச்செல்லும் வழக்கங்களை வடமாநிலங்களில் ஏகமாகப் பார்க்கமுடியும்.

அந்த மாடுகளின் இறந்த உடலைத் தின்ற பிணந்தின்னிக் கழுகுகள் பசுவின் உடலில் கலந்துள்ள மருந்துவீரியத்தில், தலை தொங்கிச் செத்துப் போய், அழியும் நிலையில் உள்ள விளிம்பு நிலைப் பறவைகளில் ஒன்றாகிவிட்டது.
கழுகுகள் தின்னாத மாடுகளைத் தின்ன சிறுத்தைகள் ஊருக்குள் வருகின்றன. இதனால் சிறுத்தைகளின் உணவுச் சங்கிலியிலே இல்லாத நாய்களும்/ குழந்தைகளும் அதற்கு உணவாகின்றது.

இப்படி ஏகப்பட்ட சிதைவுகள். ஆனால் கவலையே வேண்டாம் நம்முடைய பால்பொருட்கள் ஆரோக்கியமானவை என்று காலத்துக்கும் நம்பிக்கொண்டிருப்போம்.

ஒரு தென்னையின் வயது நூற்றி இருபது ஆண்டுகாலம். ஆனால் இன்றைக்கு இளநீருக்காகப் பயிரிடப்படும் தென்னை ரகங்கள் இருபத்தைந்து ஆண்டுகளிலே தங்கள் ஆயுளை முடித்துக் கொள்கின்றன. இளநீர் வணிகப் பொருளாகிவிட்டதின் சோகங்களில் இதுவும் ஒன்று.

நாட்டுக்கோழிகளுக்கு அதிகவிலை கிடைக்கிறதென்றால் ஆறு மாதத்தில் அடைய வேண்டிய வளர்சியை தொன்னூறு நாட்களில் அடைய வைக்க முடியும். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதிக விலை கொடுக்கத்தான் நீங்கள் இருக்கின்றீர்களே.

பாக்கெட்டில் அடைத்த எல்லாமே தேர்ந்தெடுக்கப்பட்ட கோதுமைகளால் பார்த்துப் பார்த்துச் சலித்து அரைத்தது போன்ற பசப்பு வார்த்தைகளின் பின்னே என்னென்ன குப்பைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற கேள்விகள் சிந்திக்கப்படுவதில்லை.

பெட்ரோலியம் பிரிக்கும் போது வெளிப்படும் கழிவுகளில் தான் நம் அழகுச் சாதனப் பொருட்கள் தயாராகின்றதென்று தெரிந்தா ஏமாறுகின்றோம்.
ஒரு நிறுவனத்தின் நூடூல்ஸ் தடைசெய்யப்பட்டதும், எழும்பும் கேலிக் கிண்டல்களில், மதுபானம் என்ன உயிர்காக்கும் மருந்தா என்ற பகடியைப் பார்க்க முடிந்தது. மது உயிர்கொல்லி என்று தெரிந்து குடிப்பதற்கும், மேகி சுவையானது, ஆரோக்கியமானது என்று பிஞ்சுகளின் உள்ளத்தில் புகட்டுவதற்கும் இடையே உள்ள வித்யாசம் வேடிக்கைப் பேச்சுக்கானதல்ல.

நோய் எதிர்ப்பு சக்திகளைத் தரும் எல்லாவற்றையும் உதறிவிட்டு, இலவசங்கள் கொடுத்து நா ருசிக்கு நம்மை அடிமையாக்கி, கலப்படங்கள் செய்து பிழைக்கும் களவாணிகளிடமிருந்து நம்மை நாமன்றி வேறுயாரும் காப்பாற்ற வரப்போவதே இல்லை.

-கார்த்திக்.புகழேந்தி.

Comments

  1. உண்மைதான் புகழ். அருமையான கட்டுரை...//புளியும் வெல்லமும் சேர்த்துப் பிசைந்து,கரைத்துக் கொடுக்கும் பானாகாரத்தைக் கேள்வியே படாத தலைமுறை ஒவ்வொரு வீட்டிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.// இதுவாவது பரவாயில்லை புகழ் இன்னும் இருக்கின்றது அதாவது பல கோயில்களில் ப்ரதோஷத்தின் போது ப்ரசாதமாக வழங்கப்படுவதாலும், இன்னும் ஒரு சில வீடுகளில் செய்யப்படுவதாலும் ஒரு சில பண்டிகைகளின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும்..

    வெட்டிவேர் இட்ட நீரும், நீர் மோரும் கூட ஏதோ உயிர் தாங்கி இருக்கின்றது. ஆனால் மற்றவை எல்லாமே மறக்கப்பட்டு.

    ஆனால் பாருங்கள் புகழ், இப்போது சமீபகாலமாக சித்த மருத்துவரும் இன்னும் ஒரு சிலரும் நமது மறக்கப்பட்ட சிறுதானியங்களைக் குறித்துப் பேசிவருவது சந்தையில் அதன் விலையை எப்படி உயர்த்தி உள்ளது தெரியுமா? இப்போது இப்படி ஊடகங்களின் வழியாகத்தான் அறியும் நிலை என்பதாகி,இதைப் பற்றியக் கருத்துகளுடன் ஒரு பதிவு பாதியில் நிற்கின்றது எங்கள் வேர்ட்ஃபைலில். இப்போது உங்கள் பதிவையும் சுட்டிக் காட்டிவிடுகின்றோம்...நல்ல பதிவு...

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil