சொத்து (2014)




மழை ஊரைச் சதசதப்பாக்கி இருந்தது. கொண்டைச் சேவல் முழு வலிமையோடு ஊரை கொக்கரித்து எழுப்பவும் போர்வையைச் சுருட்டி எழுந்தமேனிக்கே பால்வாங்கிவரச் சொல்லி கட்டளை வரவும் மிகச்சரியாய் பொழுது புலரும். கடைக்குட்டியாய் பிறந்தவனின் சாபம் இப்படியாக விடிகிறது.

மாடாக்குழிக்குள் ஒழித்து வைத்திருந்த கோலிக்காயை எடுத்து டவுசர் பையை நிரப்பிக்கொண்டு வாய்க்கால் பாலம் தாண்டி கூட்டுறவுப் பண்ணையில் பால் வாங்க நடந்து செல்லவேண்டும். வழியெங்கும் இரண்டு கோலிகளை விசிறி அதனை ஒன்றுக்கு அடுத்த ஒன்றை குறிபார்த்து அடித்தபடியே நடந்தால் தூரம் தெரியாது.

கூட்டுறவுப் பண்ணையில் கூட்டம்  அதிகமாய் இருக்கும். தொடை பெருத்த கண்டியன் குளத்துக்கார மாடன் அண்ணாச்சி கத்திக்கொண்டே டம்ளர் /போணி/ யானம்/செம்பு/வாளிகளில் பால் அளந்து நிரப்பிக்கொண்டிருப்பார். நூறு பால் அரையணா என்றிருந்த காலம் அது.
கூட்டுறவுத் தொழுவம் பசுக்களால் நிரம்பி இருக்கும். காலை எட்டு மணிக்குள் அத்தனை பசுக்களும் பால் கறக்கப்பட்டு கன்றுகளோடு அவரவர் வீட்டுக்கு பற்றிவரப்படும். தங்கமக்காவின் பசுக்கள் தான் அதிகப்படியாக தென்படும். தங்கமக்கா மிராசுதாரர் குடும்பம். அவர் கணவர் பழைய ஊர் நாட்டாமை.

தங்கமக்கா காம்பவுண்டு என்பது சுமார் நாற்பது வீடுகள் அடங்கின பத்து ஏக்கருக்கும் மேல்  விஸ்திரமான பூமி. இரண்டு தெருக்களை பானா வடிவில் இணைத்து வளைத்துப் போட்டிருந்த தெருவிலே குடக்கூலி கொடுத்து நாங்கள் குடியிருந்தோம்.

தங்கமக்கா குடும்பம் காடு கழநிகளால் செழித்த பாளையக்கார்களிடம் வேலைபார்த்த காவல்கார்களின் வழித்தோன்றல்கள். மாறப்பபூபதி பாளையத்தாருக்கு கைகாட்டின பெண்ணை ராசக்கோட்டை அரண்மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். செல்வாக்கு அதிகம். அட்டகாசமும் அதிகம், பொழிச்சலூரில் கூடல் விருந்து வைத்த நாளில்  இது இது இது என பூபதி விரல்காட்டிய இடங்கள் எல்லாம் அவர்கள் முன்னோர்கள் பெயருக்கு பட்டயம் எழுதப்பட்டது. வழிவழி சொத்து. கந்தர்வனின் சாசனம் கதை எப்படியோ அப்படி..

சொந்த நிலத்து பாத்தியக் கோனார்கள் வாயைமூடிக் கொள்ளவேண்டியிருந்தது. நாகலிங்கக் கோனார் குடும்பம் ஊரைவிட்டே இடம்பெயரக் காரணமாய் இருந்தார்களாம்ஆடு,பசு,கன்றுகளால் செல்வத்தை நிரப்பிக் கொண்டார்கள். விவசாய பூமிகள் எல்லாம் ஒரே இரவில் இவர்கள் சொத்தாக மாறிப்போனது. மெல்ல மெல்ல காவல் குடும்பம் மிராசுகுடும்பமாக மாறி நாட்டாமை குடும்பமாக அடையாளப்பட்டது.

பாளையத்து ஆட்சி அதிகாரம் கைமாறியபோது வாய்க்கால் கரை முழுக்க வளைத்துப் போட்டுவிட்டார்கள். கேட்க ஆள் கிடையாது. சொத்து வெளியே போக வேண்டாமென மகள்கள் இரண்டு பேரையும் ஒரே மாப்பிள்ளைக்கு கட்டி வைத்தார்கள். அங்கஹீனமாய்ப் பிறந்த மூத்த பெண்ணுக்கு அரசுப்பணி மாப்பிள்ளை, வன இலாகா. இரண்டாம் மகள் வீட்டை கவனித்துக் கொள்ள வயல் விவசாயம் வாடகை வசூல் என்று பெண்கள் ராஜ்ஜியம் கொடிகட்டிப்பறந்தது.

பர்மா தேக்கு இழைத்து அடி பருத்து மேலே அலரிப்பூ கடைசல் வைத்த வாயில் தூண்கள். இரும்பு பூண்பிடி போட்ட மரக்கதவு வருடாவருடம் அடித்த வார்னிஷில் பளபளக்கும்.

காரை வைத்து கட்டின சுண்ணாம்புக்கட்டிடம். தடித்தடியான மரபீம்கள் போட்டு மாடியெழுப்பி இருப்பார்கள். நூற்றைம்பது வருட பழமையான வீட்டை ஊரிலேயே முதன் முதலாக மொசைக் கல்போட்டு பளபளப்பேற்றினார்கள். மொசைக் சிமெண்டு பாலாய் வழிந்து ஓடினது ஒருவாரம் தெருவெங்கும்

நல்ல அகலமான பலகணி. அங்கிருந்து மரபாலத்தில் நடந்து நிலாமுற்றத்திற்குச் செல்லலாம். நிலா முற்றத்திற்கு  அரமியமென்று பெயர் சொல்வாள் கிழவி. அரமியம்தான் ரம்மியம் என்றாகிற்று. வீட்டைப்பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றால் சாவி சுமக்கவே இரண்டு வேலையாள் தேவைப்படலாம்.

வீடு இத்தனை பெரிதென்றால் தொழுவம் கேட்கவே வேண்டாம். வரிசைக்கு ஐந்தாக ஆறு தடுப்பு. இரண்டு தடுப்பு ஆட்டுக்கொட்டகை. பசுக்கள் ஒவ்வொன்றும் சுத்தமாக மஞ்சள் பூசி சாம்பிராணி போடப்பட்டிருக்கும். டவுசர்போட்ட கிட்டு அண்ணன் தான் அத்தனை வேலையும் பார்ப்பார்

வயல் அறுவடைக்குப் பின் கட்டிவைக்கும் வைக்கோல் போர் மட்டும் இருபது யானைகளை வரிசையாக நிப்பாட்டினது போல ஊரடைக்க நிறுத்தப்பட்டிருக்கும் தெருவில். ஒவ்வொரு படப்பிற்கும் இடைவெளியில் காதல் ஜோடிகள் சரசமாடி காதல் வளர்ப்பதும்/ திருவிழா நாளில் வேண்டாதவன் படப்பைக் கொழுத்திவிடவுமாக அந்த இடம் பரபரப்பு மிகுந்தது.

அறுவடைக்கு சிலநாட்களிலே நெல் வேக வைக்கும் இரும்பு குளையம்களுக்கு நெருப்பு வைக்க பனையோலைகள் வந்து குமியும். ஈரச்சாக்கை முட்ட முட்ட போட்டு நெல் அவியும். வெந்த நெல் காயப்போட்டதும் மில்லுக்கு அனுப்பப்படும்.உரலில் குத்துவதும் உண்டு.
பால் வாங்கி வந்ததும் எனக்கு வழங்கப்படும் அடுத்த வேலை காபிதூளுக்கும் சீனிக்குமாக டென்சிங் கடைக்குப் போவது தான்.

டென்சிங் கடை தயாபரன் தெருவின் ஆரம்பமுனையில் இருந்தது.  டென்சிங் தங்கமக்கா குடும்பத்து உறவுதான் ஊருக்குள் அரசல் புரசலாகச் சொல்வார்கள்டென்சிங்கின் தாத்தா அவர்கள் வீட்டில் வேலைபார்த்து அவர்கள் பொண்ணையே கட்டி வந்துவிட்டாரென்று. பின்னாளில் வேதத்திற்கு டென்சிங் முன்னோர்கள் மாறி விட்டார்களென்றும் அவர்களுக்குள் இன்னும் பகை மிச்சமிருக்கின்றதென்றும் பேச்சு கேட்டிருக்கின்றேன்.

டென்சிங் அண்ணாச்சிக்கு பெல்சியா என்றொரு மகள் மாத்யூஸ் என்றொரு மகன் உண்டு. என் அக்காளும் பெல்சியாளும் தோழிகள். ஆறுமாதம் சண்டையும் ஆறுமாதம் தாறுமாறான நட்பும் வழக்கத்திலிருந்தது அவர்களிடம். பெல்சி பூனைக்குட்டிகளுக்கென்றே வாழ்பவள். மருதாணி வைத்தால் அவளுக்கு மட்டும் அப்படி நிறம் ஒட்டிக்கொள்ளும், ரெண்டு ரூவாய்க்கு சீனியும். இருபது பைசாவுக்கு ஹார்லிக்ஸ் முட்டாயும் வாங்கப்போகும் போது அவள் பூனையை கல்லால் அடித்திருக்கிறேன்.
  
ராஜகோபால்.
தங்கமக்காவின் மூத்த பேரன். கான்வெண்டில் படித்தாலும் ஒரே வயது என்பதால் கூட்டாளியாக்கிக் கொள்ள தகுதியுள்ளவனென என்னைச் சேர்த்துக் கொண்டான். அவர்கள் வீட்டுப்பசு கன்று ஈனும் போதெல்லாம் சீம்பாலில் செய்த பால்பண்டம் கொடுப்பான். இதைச் சொல்லியே ஆகவேண்டும் அவன் தம்பி ரஞ்சித் ஒரு தான்தின்னி.

ராஜகோபாலோடு கன்றுக்குட்டிக்கு கறுவைக்காய் கொடுப்போம். முட்புதரில் கூடாரம் அடிப்போம். எல்லா பசுக்களையும் குளிப்பாட்ட பாளையங் கால்வாய்க்குச் செல்லும் போதெல்லாம் ராஜகோபாலின் குரல் என் வீட்டைத் தொடாமல் இருந்ததில்லை. பசுக்கள் மீதான பிரியம் அவனிடமிருந்து தொற்றிக் கொண்டுவிட்டது.

காம்பவுண்டு நிறைய பசுக்கள் இருக்கும் கிட்டத்தட்ட இருபது பசுக்களுக்கு பெயர் வைத்தே அழைத்திருக்கிறேன், ராஜலெட்சுமி/முத்து லெட்சுமி/ அன்ன லெட்சுமி என முன் பெயர் மாறுமே தவிர லெட்சுமிகள் மாறாது.
அது ஆவணி மாதம் புதிதாய் ஒரு கன்றுக்குட்டி பிறந்தது. புளியம்பழத்தின் நிறத்தில் உருட்டுக்கண்களுடன். நானும் ராஜகோபாலும் தான் முதல்முதலாக தலையைத் தொட்டுப்பார்த்தோம்

முதல் நாள் இரவே   நாளைக்கி முழுநெலா வேற! எங்க ஜெயலெட்சுமி ஈனிடும்ன்னு ஆச்சி சொன்னிச்சு நாங்க இன்னைக்கு நிலாச்சோறு சாப்பிட்டுட்டு தூங்க மாட்டமே.. ” ராஜகோபால் எனக்குள் ஆசையை தூவி விட்டான்.

கெஞ்சிக்கூத்தாடி அம்மாவிடம் அனுமதிகேட்டு கல்கட்டு முற்றத்தில் ஒன்று கூடினோம். “யாருல அவன் கோத மவனா! என்னலே இங்கன கெடக்க தூங்க போவலையா! உங்க அம்ம தேடலையோ ஒன்னிய!:”தங்கமக்காவின் பெரிய ஆத்தாள் ராஜாத்தியாம்மாள் எங்களுக்கு குறிச்சி ஆச்சி.

இல்ல ஆச்சி கன்னுக்குட்டி ஈனுதில்லா அதான் பாக்கனும்ன்னு அம்மாட்ட சொல்லிட்டுதான் வந்தேன்..”

அதுசேரி எம்பேரங்கூட சேர்ந்து நீயும் கிறுக்கு புடிச்சுதாந் திரியிறபோல! அந்த யானத்தில அவளுக்கு ரெண்டு களியுருண்டை உருட்டி வையி அற்புதம். எலேய் அங்கன அந்த குச்சில கட்டிலு ஒன்னு கெடக்கு போய் எடுத்து படுங்க நா சத்தங்குடுத்து எழுப்புதென்
ராஜகோபாலும் நானும் விடிய விடிய குறிச்சியாச்சியின் நட்சத்திரக்கதைகள் கேட்டோம்.  

குறிச்சியிலிருந்து வாக்கப்பட்டு வந்தமையால் குறிச்சி ஆச்சி. இன்றைக்கு பெரும்பாலான நினைவிலிருக்கும் கதைகள் அந்த பாம்படக் கிழவி சொன்னதாகத் தான் இருக்கும். விழா நாட்களில் ஊர்ச்சிறுசுகள் எல்லாம் அவள் முற்றத்தில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட கதை கேட்கும்.

கதை சொல்லும் போதே திடுப்பென்று பாட்டெடுத்துப் பாடுவாள். பேராச்சி கதைகள் சொல்லும் போது ஈரம் சுரந்து அழுதுவிடும் அந்த பெரியகிழவியின் அன்புதான் என்னவென்பது. ஆனால் கோழிமடத்தில் ஒரு நாட்டுக்கோழி முட்டை காணாமல் போனால் போதும் அறுத்துத் தொங்கவிட்டு விடுவாள்.

அதிகாலை மூன்று மணிக்கு சலப்சலப்பென்று தண்ணீர் சத்தம் கேட்டு எழுந்து ராஜகோபாலனை எழுப்பவும் அவனும் நானுமாக தொழுவில் நின்ற ஜெயலெட்சுமியை நெருங்கி தடவிக்கொடுத்தோம். கொஞ்ச நேரத்திலே சரவணன் பிறந்தான். எழுந்து நிற்கமுடியாதவனை தூக்கித்தள்ளிக்கொண்டு கழநித்தொட்டியின் மூன்றாம் குழியிலிருந்த நீரால் அவனைக் குளிப்பாட்டினோம். மடியில் முட்டி பால்குடிக்கச் செய்தோம். பூமாலை போட்டு அலங்காரம் செய்தோம். மஞ்சள் கயிற்றில் கட்டி திருவிழாபோல தெருவுக்குள் அழைத்துச் சென்று விளையாடினோம். அடுத்த பல நாட்களுக்கு சரவணனோடு தான் பொழுதுகள் கழிந்தது.
சரியாக நான்கு மாதத்தில் சரவணன் வளர்ந்துவிட்டான்.

காளைக்கன்று என்பதால் முன்னாடியே சரவணனை விற்க முடிவு செய்திருந்தார்கள். ராஜகோபால் பிடித்த அடத்தினால் தள்ளிப்போட்டு வந்தார்கள். ராஜாவும் நானும் இடையிடையே அக்னி நட்சத்திரம் போல சண்டையிட்டுக் கொண்டோம். எடுத்ததும் சரவணனைத் தொடக்கூடாது என்பது தான் அவனுடைய முதல் அஸ்திரமாக இருக்கும்.

அவனுக்குத் தெரியாமல் சரவணனோடு நேசம் வளர்ந்தது. பசுக்களுக்கு தொற்றுப் பரவின பொழுதில் சரவணனை மாட்டாஸ்பத்திரிக்கு அழைத்துப் போனபோது என்னையும் அழைத்தான். சரவணன் துரும்பாய் இளைத்திருந்தான். இருபது நாள் மருந்து வாழைப்பழங்களால் தேறினான். காளைக்கன்னுக்குட்டியை கொடுத்திடலாம்ன்னு மீண்டும் வாதம் தொடங்கியபோது யாரும் ராஜாவின் அழுகையை சட்டை செய்யவில்லை. சரவணன் தொட்டி ஆட்டோவில் ஏற்றப்பட்டு விற்கப்பட்டுவிட்டான்.
ராஜாவும் ரஞ்சித்தும் இப்போதெல்லாம் தெருவில் விளையாட வருவதில்லை

அக்காளின் படிப்புக்காகவும் அப்பாவின் வேலைக்காகவும்  நாங்கள்  அத்தியூத்து / தாராபுரம்/ தூத்துக்குடி/ வேலூர் / திரும்பவும் திருநெல்வேலி என தொடர்ந்தது  இடம்பெயர....

பதினைந்து வருடங்கள் கழித்து மார்கெட் தெருவில் வைத்து ராஜகோபாலனைப் பார்த்தேன்செல்வச் செழிப்பில் சீமான் வீட்டுப் பிள்ளையாக அடையாளப்பட்டிருந்தவனா இந்த ராஜகோபாலன். ஆள் அடையாளமே தெரியவில்லை. கசங்கிய சட்டையும் கையிடுக்கில் பச்சைத்துண்டுமாக இருந்தவனுக்கு அந்த நாடித்தழும்பு மட்டும் இல்லையென்றால் ராஜகோபாலன் என்றே நம்பி இருக்கமாட்டேன்.

ஆச்சி எப்படி இருக்குலேகேட்கத் தோன்றியது கேட்கவில்லை, எப்படியும் இறந்திருக்கும். ஆமா நீ என்ன இப்படி இருக்க? என்னாச்சி என்றதுமே பொலபொலவென உடைந்துவிட்டான்.

மினர்வா பேக்கரிக்கு கூட்டிப்போய் உட்காரவைத்து ரெண்டு டீயும் வடையும் எடுத்துக் கொடுத்தபோது மெலிதாக குரல்வந்தது அவனிடமிருந்து
எல்லாம் போச்சிடே மக்கா! நாங்க வாழ்ந்த வீடு நிலம் வயக்காடு, பசு ,தோட்டம் எல்லாம் போச்சி. நீங்கள்ளாம் காலிபண்ணி போன கொஞ்ச வருசத்திலே அப்பாவுக்கு குடி சாஸ்தியாகிடுச்சி. பாரஸ்ட் வேலை போயிடுச்சி.  கள்ளுக்குடியில் யாவாரி ஒருத்தனுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காரு, எல்லா சொத்தும் அவருக்கு பாத்தியப்பட்டதுன்னு எழுதி வாங்கிக்கிட்டான். கேசு போட்டுட்டான். சண்டை போட்டோம். ஒன்னும் வேலைக்காகலை உடம்பு முடியாமபோய் அப்பா ரத்தவாந்தியெடுத்து படுக்கையில் விழுந்து ஆறே மாசத்தில் போய்ட்டாரு. ஏகப்பட்ட கடன் இருக்குன்னு ஆளாளுக்கு வாசல் வந்து நின்னாங்க. ஆடு மாடு வீடு எல்லாத்தையும் வித்தோம். படிப்படியா ஒன்னும் இல்லாம போய் இந்தா இன்னைக்கு நான் மளிகைக்கடையில் லோடு தூக்குதேன். ரஞ்சித்து குடோன்ல கணக்கெழுதிட்டு கெடக்கான்."

பேயறந்தது போல இருந்தது எனக்கு! வெறும் பதினைந்து வருடங்கள் போதுமா ஒரு தலைமுறையின் வாழ்க்கையினையே மாற்றிப்போட முடிவதற்கு. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை

முன்னோர் செய்த பாவம் பிள்ளைகளைப் பிடிக்கும்ன்னு சொல்வாங்கள்ள அதான் இது போல என ராஜகோபாலன் முணங்கினான். என்னால் அவன் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. இன்றைக்கு மார்கெட்டு தெருவுக்கு வராமலே இருந்திருக்கலாம். ராஜாவும் ரஞ்சித்தும் சரவணனும் எங்கேயோ இருக்கின்றார்கள் என்ற எண்ணம் மட்டும் நிரந்தரமாகிவிட்டிருக்கும்.

-கார்த்திக் புகழேந்தி


Comments

  1. Arumai karthick !! Ennum nerya ezthunga congrats !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கடேஷன் சார்

      Delete
  2. யாராவது எளியவனின் சாபம் காலம் கடந்தாவது பலிக்கத்தான் செய்யும் நல்ல சிறுகதை புகழேந்தி !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  3. Replies
    1. நன்றி ஹமீதண்ணா

      Delete
  4. லஷ்மியும் விட்டம் தாங்கிய வீடும் என் வாழ்வில் அனுபவித்தவை ஆனால் கட்டப்பட்டதும் வளர்த்ததும் சுதந்திர இந்தியாவில். வீட்டிற்கு உள் இருக்கும் தானியக்குழி மிஸ்ஸிங்

    ReplyDelete
  5. கதையின் கரு பழயது, பல பழைய செல்வந்தர்களின் வாழ்க்கை வரலாறு ஆராயப்பட்டால், இப்படி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து கருணையற்ற முறையில்தான் முன்னேறி இருப்பார்கள்.
    ஆனால் இந்தக்கதை கருவைத்தாண்டிய பல அற்புதங்களால் கவர்கிறது. கதை சொன்ன விதம், அந்த கிராமிய சூழல், வட்டாமொழி பயன்பாடு, மண்மணம், பாத்திரங்களின் பெயர்கள் என அற்புதம். ரசித்தேன். பாராட்டுகள் கார்த்திக். முகநூலில் பல வருடங்கள் நட்பாக இருந்திருப்பினும் முதல்முறையாக உங்களின் ப்ளாக் பக்கம் வந்துள்ளேன்.. வாசிப்பேன்.. இனி.

    ReplyDelete
    Replies
    1. கந்தர்வனின் சாசனம் கதை எப்படி ஒரு புளியமரத்தைச் சுற்றி எழுதப்பட்டதோ இது அப்படி ஒரு கன்றுக்குட்டியையும் , பால்ய நண்பனையும் சுற்றி எழுதப்பட்டது. ஆம் கதையின் கரு பழையதுதான். வாழ்ந்துகெட்ட குடும்பங்கள் சில நாமறிந்து கெட்டபோது வருத்தமாகத் தான் இருக்கின்றது :)

      உங்கள் கருத்துக்கு நன்றியும் ப்ரியங்களும் ஸ்ரீ அக்கா!

      Delete
  6. GREAT KP! PLEASE WRITE MORE ABOUT PEOPLE,PLACES,EXPERIENCES,OBSERVATIONS,FACTS, FEELINGS ETC.! WE WANT TO KNOW MORE ABOUT TAMILNAADU VILLAGES,PEOPLE,HISTORY ETC!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் எழுதுகிறேன் சார், உங்களோட கருத்துக்களுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் எப்போதும் கடமைப்பட்டவனாகிறேன்.

      Delete
  7. வாழ்க்கை என்பதே எதிர்பாராது அடிக்கும் சுனாமி போல தான்!!! அதன் மீது தான் நாம் சவாரி செய்து கொண்டு இருக்கிறோம்... காலம் தரும் தீர்ப்புகளை இருக்கொள்ளதான் நம்மிடம் சக்தி இல்லை!!! மிக அருமை கார்த்திக்!! :)

    ReplyDelete
  8. வாழ்ந்த புலன்கள் எப்பவும் மனச விட்டு மறையாது கார்த்திக். வாழ்க்கை அந்த கன்னுக்குட்டி மேல வச்ச நேசம் போல தான்... இது தான் உலகமேன்னு மாயையை உருவாக்கும், சட்டுன்னு நம்மை விட்டு பறிச்சுட்டும் போயிடும்... ஐயோ கன்னுக்குட்டி போயிடுமேன்னு ஒவ்வொரு நிமிசமும் பயந்துட்டே இருந்தா அதோட குதூகலத்துல பங்கெடுப்பது எப்படி?

    சில நேரங்கள் புதிர்கள் நம்மை கடத்தி செல்லும்... இங்க வாழ்ந்த பரம்பரையோ அழிந்த பரம்பரையோ எனக்கு தெரியல... ஒரு கன்னுக்குட்டி துள்ளல் தான் எனக்கு தெரிஞ்சுது...

    ReplyDelete
    Replies
    1. பிரபல பதிவரும், சீரிய எழுத்தாளருமான காயத்ரிகுட்டியின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல. இந்த கன்னுக்குட்டி துள்ளலைத் தான் நீங்கள் ரசிப்பீர்களெனப் புரிந்து வைத்திருக்கின்றேன் :) நன்றிகள் பிரபல பதிவரே.

      Delete
  9. Difficult to digest it as "story"... So Nice.. Keep Impressing us with more n more writings..

    Sivakumar Arumugam (FB)

    ReplyDelete
  10. எழுத்து சரளம். கதையின் ஓட்டம், அதில் இழையோடிய நட்பு, வருத்தம் எல்லாம் அருமை. வாழ்த்துகள்.

    ~ அகிலா.. Ahila Puhal (FB)

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil