கள்ளும் நறவும் தேறலும்..



          ன்னன் என்கிற மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி, ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும், கூத்தர்களும் அடங்கிய கூட்டம் ஒன்று மேற்குமலைகள் வழியாகப் பிரயாணம் போகிறது. அவர்களை வழியில் சந்திக்கிற பரணர் என்கிற புலவர் நன்னன் இறந்த கதையைச் சொல்லி, “நீங்கள் பறம்புமலை அரசன் பாரிகிட்டே செல்லுங்கள். தன் படைகளால் மூவேந்தரையும் வெல்லக்கூடியவன் உங்கள் கலைக்கு முன்னே சரணடைவான். பெரும்வள்ளல் அவன். கூடவே, கபிலர் என்கிற அறிஞனையும் வைத்திருக்கிறார்” என்று வழிகாட்டுகிறார். ஆக, பாணரும் கூத்தரும் அடங்கிய கூட்டம் பாரியிடம் செல்கிறது. இது பெரும்பாணாற்றுப் படையில் மேல்ச்சுருக்கக் கதை.

கலை மக்களால் எடுத்து இயம்பப்பட்ட இந்தக் கதைப்பாடலுக்கு உள்ளே நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப நுணுக்கமாக நம்மை அந்தக் காலத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரியைப் பார்க்கப் போகும் பாணர்கூட்டம் வழியிலே சில வேளாளர்களைச் சந்திக்கிறது. ஏழுநாள் நடக்கும் தங்களுடைய கோயில் நிகழ்ச்சியில் நீங்கள் வந்து கலை நிகழ்த்தவேணும் என்று வேண்டுகிறார்கள் வேளாளர்கள். செல்வச் செழிப்புமிக்க அவர்கள் ஊருக்குள் நுழைந்தபோது பாணன் இப்படிச் சொல்கிறான் "இங்கே பெண்கள் யானைத் தந்தங்களை உலக்கையாக வைத்து நெல் குத்துகிறார்களைய்யா" என்று. ஒரு சொல்லில் அவர்கள் வாழ்வும் வளமும் பிடிபட்டுவிடுகிறது.  பேச வந்தது இந்த விஷயமல்ல.. அது வேறு சரக்கு.

வேளாளர் இல்லத்துக்கு வந்த பாணர்களுக்கு களைப்பாக இருப்பீர்கள் இந்தாருங்கள் என்று 'நறும்பிழி' என்ற கள்ளை கோப்பையில் ஊற்றிக் கொடுக்கிறார்கள் வேளாளர்கள். கோப்பையில் ஊற்றும்போதே நறும்பிழியின் வாசனையில் மயக்குறும் பாணன் அந்தக் கள் தயாரிக்கப்படும் வித்தையை வேளாளக் குடியானவன் ஒருத்தனிடம் கேட்கிறார். ரொம்ப ரகசியமாய் அவர்களுக்குள் பரிமாறப்படுகிறது கள் தயாரிக்கும் விதம்.

"நெல் அரிசியை நன்கு சமைத்து, உருண்டையாகப் பிடித்து, பெரிய வாயுள்ள பாத்திரத்தில் காயவைத்து காட்டு இலைகளையும், தாத்திரிப் பூவையும் சேர்த்துப் பிசைந்து, ராவும் பகலும் நீர்விட்டுப் பிசைந்து, கொஞ்சம் பனை வெல்லமும் சேர்த்து, மண்பானையில் ஊற்றி மூடிவைத்துவிடுவோம். இந்த ஊறலை பலகாலம் கழித்து, வேக வைத்த பனைநார் பெட்டியில் வடிகட்டி எடுத்தால் நறும்பிழி (கள்) தயாராகிவிடும்” என்கிறான் குடியானவன். வெல்லமும் அரிசியும் கலந்து சேர்த்துத் தயாரிக்கப்படும் 'நறும்பிழி'யை காஞ்சி, தொண்டை மண்டலத்து, கடற்கரையூர்காரர்கள் தான் தினுசு தினுசாய் தயாரித்து ருசி பார்த்திருக்கிறார்கள்.

நேரடியாக பனையில் கள் இறக்கும் வித்தையை நான்  கடற்கரையூரான ஆமந்துறையில் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள் தோட்டத்தில் களைவேலை செய்கிற அண்ணன் ஒருத்தரிடம் கேட்டுத் தெரிந்திருந்தேன். 'நுங்கும் பழமும் பூக்கிற பனையை  'பெண் பனை' என்றும், நீள நீளமாய் பாளை மட்டும் முளைக்கிற பனையை ஆண் பனை என்றும் பார்த்தவுடனே பிரித்தறிய முதலில் சொல்லிக் கொடுத்தார். பிறகு, இந்த ஆண் பனையில் தான் 'கள்ளு' தயாரிப்பதெல்லாம் என்று அதன் செயல்முறைகளையும் விவரித்தார்.

“ரெட்டையாய் கவட்டைமாதிரி நீட்டி நிற்கிற பனம் பாளையை லேசாக தண்டில் கிழித்து, நெருக்கிவைத்து ஒரு கட்டு கட்டி, பாளையின் நுனியை சாம்பாருக்கு கேரட்டை வட்டமாய் அரிந்து போடுகிறமாதிரி பத்து பதினைந்து வட்டம் அரிந்தபிறகு, அதை அப்படியே விட்டால் பாளையில் நீர் துளிர்த்துக்கொண்டு வெளிப்படும். அதை அப்படியே கலயத்தில் வழிகிறமாதிரி நுழைத்துவிட்டால், பானையின் அளவைப் பொருத்து கள் சுரப்பை அரைநாளைக்கு வடியவிடுவார்கள். இந்த மண் கலயத்தின் உள்பக்கமாக நல்ல சுண்ணாம்பை ஈயம் பூசுகிறமாதிரி தடவி விட்டால் கள்ளுக்குப் பதில் கிடைப்பது பதனீராகிவிடும். இந்த நேரடியான பனங்கள்ளைத்தான் 'பெண்ணைப் பிழி' என்கிறது சங்கப்பாடல்கள்.

சங்க இலக்கியத்திலும் வேறு பலவிதமான கள் தயாரிக்கும் விதங்களை இன்னும் நிறைய வாசிக்க முடிகிறது. அவற்றுக்குள் தேறல், நறவு, நறும்பிழி, கள்ளு என்று ஏகப்பட்ட வகையறாக்களும் உண்டு. காட்டுத்தேனை எடுத்து நல்ல பழுத்த, ஈரமில்லாத மூங்கில் தண்டுக்குள் ஊற்றி வைத்து, நிறைய நாள் காத்திருந்தால், கட்டியாக மாறிவிடும் தேன் பிசினை தண்ணீரோடு கரைத்துக் குடிப்பது தேக்கள் தேறல். இன்றைக்கு வழங்குகிற டொப்பி அரிசி மாதிரி தோப்பி என்கிற ரக அரிசியில் பனங்கருப்பட்டி சேர்க்காமல் தோப்பி கள் தயாரித்திருக்கிறார்கள்.

இதேப்போல 'நறவு' என்ற பூ சேர்த்து (இலவங்கம்) தாயாரிக்கப்பட்ட  கள் வகையறாவை  மதுரையில் வாழ்ந்த பெண்கள் குடித்ததாக சங்கப் பாடல் ஒன்றும் உண்டு. வைகை ஆற்றில் குளித்துக் கரையேறினதும் அடித்துச் சுருட்டும் குளிரைப் போக்கிக்கொள்ளவும், உடல்சூடு கூடவும் பெண்கள் நறவு அருந்தியிருக்கிறார்கள். குடிக்கும் முன்பு வெள்ளையாக இருந்த அவர்கள் கண்கள் நறவு குடித்தபிறகு நறவம் பூப்போலச் சிவந்ததாக (வெள்ளை நிறமுடைய லவங்கம் கருஞ்சிவப்பாக மாறிவிடும்) எழுதுகிறான்  புலவன் மாங்குடி மருதனார்.

இன்னுங் கொஞ்சம் காசுபணம் வட்டிவாசி உள்ள தமிழ்க்கூட்டங்கள் குங்குமப்பூ, இஞ்சி என்று வாசனாதி திரவியங்களைச் சேர்த்து, தங்கக் கோப்பையில் ஊற்றி ஊற்றி கள்ளை ரசித்துக் குடித்திருக்கிறார்கள். இதற்கு 'பூக்கமழ் தேறல்' என்று செல்லப் பேரும் உண்டாம். சரி அந்தக் காலத்தில் தொடுகறியாக (சைட் டிஷ்) என்னென்ன உட்கொண்டார்கள் என்று ஓர் அற்ப ஆசையோடு தேடினால், நல்ல மீன் குழம்பும், கருநாவல் பழமும், துடரிப்பழமும், மாம்பழமும், மறவர் எறிந்து கொண்ற எயிற்பன்றியின் கறியும் தான் பெரும்பாலானவர்களின் தேர்வாக இருந்திருக்கிறது. ஊறுகாய்க்கு முன்பே ஃப்ரூட் சாலடை டேஸ்ட் செய்திருக்கிறான் சங்கத் தமிழன்.

காலமாற்றத்தில் விதவிதமான போதைகள் குடிபுந்திருக்கிறது இந்நிலத்தில். மெல்ல மெல்ல தென்னையில் இருந்தும் கரும்பஞ் சாற்றில் இருந்தும் மரப்பட்டைகளில் இருந்தும் வேறுபிற ரசாயனமேற்றிய தானியங்களிலிருந்தும் சாராயம் வடிக்கப் பட்டிருக்கிறது. யவனர்கள் கொண்டு வந்த மதுக் கோப்பைகள் பழியாய் மயக்கியிருக்கிறது நம் மக்களை. ஆக குடித்தல் என்பது உடல் களைப்புக்கு என்கிற ஏற்பைத் தாண்டி சமூக சமநிலையைக் குலைத்து, கெட்ட ஆட்டம் போட ஆரம்பித்ததும் கள்ளுண்ணாமை நீதி நூல்களின் முக்கிய அதிகாரமாகியிருக்கிறது.

பாணனும் கூத்தனும் அருந்தியதில் மிச்சமிருக்கும் ரகமான 'பெண்ணைப் பிழியும்', மரங்களிலும், தானியங்களிலும், தேறல் வைத்துச் சமைக்கப்பட்ட கள்வகைகளுக்கும் இன்றைக்கு தடைசெய்யப்பட்டு புழக்கத்தில் இல்லாமலே ஆகிவிட்டது.  ஆனால் மதுப் பழக்கத்தை வைத்து காசு பார்த்துப் பழகின அரசுகள் தங்கள் சாராய விற்பனை நிலைப்பாட்டில் மட்டும் மிகத் தெளிவாக உள்ளன.

-கார்த்திக் புகழேந்தி
16-04-2017

Comments

  1. தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவதைத் தடை செய்ததே, விவசாயத்தை அழித்த முதல் காரியம் என்று என் தாத்தா கூறுவார். (50 வருடம் முன்பு!) தென்னம் கள், விவசாயம் பண்ணும் கூலியாட்களுக்கு உடல் வலிமையைத் தருவதோடு, ஒருமுறை கள் இறக்குவதற்கு விடப்பட்ட தென்னை, சில ஆண்டுகளுக்குப் பிறகு முன்னைவிடப் பலமடங்கு காய்க்கும் என்பதையும் அவர் அனுபவத்தில் இருந்து கூறினார். பதினைந்து இருபது ஏக்கர் அவரிடம் இருந்தது. நூறு தென்னைகள் இருந்த ஞாபகம். ...ஹும்...இப்போது எல்லாம் டாஸ்மாக் தானே சர்வரோக நிவாரணியாகக் காட்சி தருகிறது தமிழக அரசுகளுக்கு!

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil