விநாயகர் ஊர்வலமும் அதன் பின்னேயுள்ள கால்நூற்றாண்டு அரசியலும்.



ங்கள் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. அறுவடைக்குப்பிறகு களத்துமேட்டில் நெல்லடிக்கும்போது காற்றின் வீச்சம் குறைவாக இருந்தால் வேலை நடக்காது. அப்போது அங்கே கிடக்கும் மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பொம்மைபிடித்து, நெல் அளக்கும் ஆழாக்கு படியைக் கொண்டு கவிழ்த்து உள்ளே இருக்கும் பிள்ளையாருக்கு மூச்சுமுட்டட்டும் என்று வைத்துவிடுவார்கள். சற்று நேரத்தில் காற்றும் வந்துவிடும்.  
இப்படி எளியமக்களால் நெருக்கமாகவும், பல தண்டனைக்கும் உள்ளான விக்னேஸ்வரனின் கதை ஏகக்கணக்கில் புனையப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பிள்ளையார் சதூர்த்தி பிரம்மாண்ட விநாயகர் சிலைகளோடு கொண்டாடப்படும் கலாச்சாரத்தின் பின்னால் இருக்கும் மத துவேஷம் மிக நுணுக்கமானது. அதைப்பற்றிப் பேசும் முன் விக்னேஷ்வரன் எப்படியெல்லாம் மத, சமூக, அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார் என்று பார்க்கவேண்டியது முக்கியம். 

பிள்ளையார் கதை

சிவனின் மனைவி பார்வதியின் உடல் அழுக்கில் பிறந்து, பார்வதிக்கு காவல் இருந்தபோது, சிவனை மாளிகையின் உள்நுழையத் தடுத்ததால் ஆத்திரமடைந்து அவர் விநாயகரின் தலையை வெட்டி எறிந்ததாகவும், பின் பார்வதி தன் மகனுக்குப் புத்துயிர் தராவிட்டால் பிரபஞ்சத்தை அளித்துவிடுவதாகப் புறப்படவும் வடதிசை தலைவைத்துப் படுத்துக்கிடக்கும் ஒரு யானையின் தலையைக் கொணர்ந்து கணபதிக்கு உயிர்தந்ததாகவும் புராணக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

அடிமைத்தனத்தின் அடையாளம்

தொன்மையான சில உண்மைகளை உற்றுநோக்கினால் ஒவ்வொரு இனக்குழுவினருக்கும் குலக்குறி அடையாளம் இருந்துள்ளது தெரியவரும். ஒவ்வொரு குலங்களும் ஒரு மித் (Myth) அடையாளமாக தங்கள் மூதாதைகளிடமிருந்து அது பின்பற்றப்படும். எளிமையாகச் சொன்னால் அரசியல்கட்சிக்கு இன்றைக்கிருக்கும் சின்னங்கள் போல.  
இந்த இனக்குழுக்குள் போர்கள் நடைபெறும்போது தங்களின் குல அடையாளத்தைத் தூக்கிப்பிடித்தும், எதிரி குலத்தின் அடையாளத்தை அழித்தும், அடிமைப்படுத்தியும் ஆவணப்படுத்தும் வழக்கம் வரலாற்றைப் புரட்டினால் நமக்கு ஆங்காங்கே தென்படுகிறது. அப்படிக்காணும் போது மதங்கர் என்னும் வட இந்தியப்பழங்குடியினரின் குலச்சின்னம் யானை. மாதங்கி என்ற சொல்லும் யானையையே குறிப்பிடுகின்றது. 
தென்னிந்தியாவில் மூசிகம் என்ற பெயரில் வாழ்ந்த இனக்குழுவினருக்கும் எலி குலச்சின்னமாக இருந்துள்ளது. மூசிகர் என்றால் காட்டுவாசிகள் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. (இன்றைக்கும் கொங்கு வேளாளர்களில் குண்டெலிக்கூட்டம் என்ற பிரிவு உள்ளது கவனிக்கத்தக்கது) யானையினைத் தங்கள் குலக்குறிச் சின்னமாக அடையாளம் கொண்ட கூட்டம் எலிச்சின்னத்தைக் கொண்டவர்களை போரிட்டு வெற்றிகண்டு அந்த இனக்குழு பரவலாக விரிவடைந்தபோது யானைச்சின்னம் கடவுளாக மாற்றம் அடைந்தது.  
யானைத்தலையும் மனித உடலும் கொண்ட கணேசருக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட வடிவங்கள் கணக்கில் அடங்காதது. ஆனாலும் பிராமணிய இந்துசமயங்கள் பிள்ளையாரைத் தங்கள் கடவுளாக ஏறுக்கொள்ளவில்லை. அவர் எளியமக்களின் கடவுளாகவே அடையாளங்கொள்ளப்பட்டார். உதாரணத்திற்கு பரசுராமன் தன் மழுவை பிள்ளையார் மீது ஏவிய புராணக்கதை.       

எளியமக்களின் கடவுள்

கொல்லிமலை ஆதிவாசி மக்கள் மழைவேண்டி குப்பையில் குழுதோண்டி சாணத்தில் பிள்ளையாரைப் புதைத்துவிட்டு, மழைவந்தபிறகே வெளியே எடுத்து வழிபாடு செய்வார்கள். தென் மாவட்டங்களில் கிணற்றுக்குள் தூக்கிப்போடுவது, மிளாகாய் அரைத்துப் பூசுவது, சாணிக்கரைசலை ஊற்றுவது என மழைவரவேண்டி பிள்ளையார் படுத்தப்படும் பாடு பெரும்பாடு.சைவ, வைணவ தெய்வங்களைப்போல் அல்லாமல் நாட்டார் தெய்வங்களைப்போல் எளியமக்களின் கடவுளான விநாயகர் மேலே சொன்னபடி பல்வேறான தண்டைகளுக்கும் ஆளாக்கப்படுபவர்.  
பிறகு எப்படி இன்றைக்கு இந்து முன்னணி, இந்துமகாசபை, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார்கள் விநாயகர் சதூர்த்தியை இத்தனை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுகிறார்கள். விஷயம் இங்கிருந்து தொடங்குகிறது.  

          திலகரின் திட்டம்

1893ம் ஆண்டு மும்பையில் முதன்முதலாக பிள்ளையார் ஒரு அரசியல் கடவுளாக அங்கீகரிக்கப்பட்டார். “கோபாலன் உபதேச மண்டலி” என்ற பெயரில் பசுவதையை எதிர்த்து வெள்ளையர்களுக்கு எதிராகவும், அதேசமயம் இசுலாமியர்களுக்கு எதிராகவும் மதக்கலவரம் தொடங்கியது. அதே ஆண்டில் முதன்முதலாக “கணபதி உற்சவ நிகழ்வை” பாலகங்காதர திலகர் மாற்றி அமைக்கிறார்.  
விநாயகர் சதூர்த்தி என்ற அவதாரநாள் மராட்டிய மாநிலத்தில் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்படும். அதுவரை பக்தியின் அடிப்படையில் நடைபெற்றுவந்த பழக்கத்தை தன் அரசியல், மற்று மத துவேச காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் பழக்கத்தை 1893ல் திலகர் உருவாக்கினார்.இதில் பக்தியுடன் இந்துக்களையும் இசுலாமியர்களையும் பிளவுபடுத்தும் கருத்துகள் பரப்பப்பட்டன. 
வெள்ளையர்களுக்கெதிரான அரசியல் போராட்டத்தில் பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்குள் நிலவிய இடைவெளியைப் போக்க விநாயகர்வழிபாடு ஒரு முக்கிய கருவியாக அறிவிக்கப்பட்டது.
1896ல் செம்டம்பர் 8ல் கேசரி இதழில், “பொதுமக்களுக்குப் பொழுதுபோக்காகவும், கல்வி புகட்டுவதற்காகவும் பிள்ளையார் ஊர்வலம் படன்படும் என்று திலகர் எழுதினார். இதே திலகர் தான் “எண்ணெய் எடுக்கும் செட்டியார்களும், புகையிலைக்கடைக்காரர்களும், சலவையாளர்களும் ஏனைய இவர்போன்றோருகளும் சட்டமன்றத்துக்குச் செல்லவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். சட்டத்துக்குக் கீழ்படிந்து நடப்பதுதான் அவர்கள் கடமையே தவிர சட்டத்தை இயற்றும் அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் விழையக்கூடாது ”என்று குறிப்பிடுகிறார்.          

மதமாற்றத்தின் எதிரொலி


1981ம் ஆண்டு பிப்பிரவரி 19ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 180 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்கள் இசுலாமிய சமயத்தைத் தழுவின. பிறகு மே-23ல் தொடர்ச்சியாக 27 குடும்பங்கள் இசுலாமியத்தைத் தழுவின. மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் சிறுசிறுகுழுக்களாக மக்கள் இசுலாமியத்தைத் தழுவவும் மதமாற்றம், தாய்மதம் திரும்புதல் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது. வட இந்தியாவிலிருந்து துறவியர்கள் மீனாட்சிபுரம் வந்து குவிந்தனர். இதனையொட்டி “இந்து முன்னணி” என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. 
01-03-1982 முதல் அடுத்த பதினான்குநாட்கள் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கடற்கரை கிராமத்தில் மதக்கலவரம் பற்றி எரிந்தது. இந்தகலவரத்தில் பிள்ளையாரை முன்னிருத்திக்கொண்டனர். திங்கள் சந்தை என்ற ஊரில் போக்குவரத்துப் பாதையில் திடீரென்று ஒரு பிள்ளையார் சிலையை நிறுவப்பட அது காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவ தலைவர்களில் தூண்டுதலால்தான் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது என்று விசமமாக வதந்தி பரப்பப்பட்டே அந்த மதக்கலவரத்திற்கு பிள்ளையார்சுழி போடப்பட்டது.  
அதன்பிறகு 1983-84 ரத யாத்திரைகள், 1984-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இந்தியா முழுவதும் இருந்து செங்கல் எடுத்துச் செல்லும் செங்கல் ஊர்வலம், 1989 பாபர் மசூதி இடிப்பு என்று இந்தியா முழுமைக்குமான மதக்கலவரங்களுக்கான இயக்கங்களுக்கு திலகரின் “கணபதி பாபா பிராஜக்ட்” பக்காவாக உதவியது. 

ஊர்வல அரசியல்

தமிழ்நாட்டில் இன்றைக்கு பட்டிதொட்டியெல்லாம் பாப்புலராகி இருக்கும் பிள்ளையார் பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலத்தின் வரலாறு 1990ல் உருவாக்கப்பட்டதே. மிக உன்னிப்பாக கவனித்தால் தமிழ்நாட்டில் கத்தோலிக்கர்களும், இசுலாமியர்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் கடற்கரைப்பகுதிகளுக்கே இந்த ஊர்வலங்கள் திருப்பி விடப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் மண்டைக்காடு, நெல்லைமாவட்டத்தின் இடிந்தகரை, தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பாறு, காயல்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழகரை, நாகை மாவட்டத்தில் முத்துப்பேட்டை, இவையனைத்தும் இசுலாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும்பகுதி என்பது தென்படும். 
இந்துக்களின் புனிததலமாகக் கருதப்படும் இராமேஸ்வரம் பக்கத்தில் இருக்க கீழக்கரைக்கு எடுத்துச் செல்லப்படும் விநாயகர் ஊர்வலம் இங்கே கவனக்கத் தகுந்தது. சென்னை திருவல்லிக்கேணி இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் நிறைந்தபகுதி என்பதை கொஞ்சம் யூகித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும். இந்த மத துவேசத்தை வைத்து காலாகாலத்துக்கும் அரசியல் செய்ய விநாயகர் பலியிடப்பட்டு சரியாக கால்நூற்றாண்டு தான் ஆகிறது.  

 எதிரிக்கு எதிரி நண்பன்

ஒரு பிரம்மாண்ட சிலையும் செலவுக்குப் பணமும் கொடுத்து எளியமக்களின் கடவுளை கொலைகார ஆயுதங்களுடன் சித்தரிக்கும் மதஅமைப்புகள் மட்டுமல்ல, தங்களுக்கு வியாபாரப் போட்டியாக இருக்கும் இசுலாமியர்களுக்கு எதிராகவும் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது என்பதால் ஜெயின் சமயத்தவர்களும் இந்த ஊர்வலத்திற்கு தாராளமாக நிதி அள்ளிக்கொடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எதிரிக்கு எதிரி நண்பன்.
1991ம் ஆண்டு கிருஷ்ணாம்பேட்டை அருகில் உள்ள ராஜாஜிநகர், முனுசாமி நகர், அனுமந்தபுரம் ஆகியபகுதிகள் மட்டும் 600விநாயகர் சிலைகள் மாட்டுவண்டிகளிலும், ரிக்‌ஷாக்களிலும் எடுத்துச் செல்லப்பட்டது. மதமாற்றம், நாத்திக அமைப்புகளை தடை செய்யவும், இந்துக்கள் இந்துக்களின் கடைகளிலே பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது விநாயகர் ஊர்வலத்தின் மீது அமில பல்புகளையும், செருப்புகளையும் வீசியதாக ஆர்.எஸ்.எஸ் கிளப்பிவிட, மசூதிகளின் மீது கற்கள் எறியப்பட்டது. இசுலாமியர்களின் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  

வளர்த்தெடுத்தவர்கள்  

தங்கள் சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் இந்த பிள்ளையார் ஊர்வலங்களை வளர்த்தெடுத்தவர்கள் யார்யார் என்றுபார்த்தால் அரசியல்கட்சிகள், ஜாதிக்கட்சித்தலைவர்கள், சினிமாபுள்ளிகள் ஆகியோர்களின் பங்கு மதப்பிரச்சாரவாதிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் காணப்படுகிறது. திராவிட முன்னேற்ற கழகம், சரத்குமார் தலைமை மன்றம், விஜயகாந்த் தலைமை மன்றம், தமிழ் மாநில காங்கிரசு, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் எனப் பாரபட்சமில்லாமல் எல்லா அரசியல் கட்சி பிரதிநிதிகளும் நிதிவழங்கி ஊக்குவித்திருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத்து தொழிற்சங்கங்களின் இடதுசாரிகளுக்கு எதிரான நடவடிக்கையாக சிரியன் கிறிஸ்தவ முதலாளிகளே நிதிகளை வழங்கியுள்ளார்கள். மார்க்ஸிய கொள்கைகளுக்கு முரணான ஆர்.எஸ்.எஸ் உடன் கத்தோலிக முதலாளிகள் கூட்டுவைத்துக் கொள்வது எத்தனை ஒற்றுமை பாருங்கள்.

 வஞ்சிக்கப்பட்ட கிராமத்து தேவதை  

ஆற்றுப்படுகைகள், குளங்கள், ஏரிகள் ஆகிய நீர்நிலைகளில் களிமண்ணால் செய்யப்பட்டு காய்ந்த சிலைகளைக் கரைக்கும்போது அந்தக்களிமண் ஈரத்தை தக்கவைத்துக்கொள்ளும் இதனால் மழைநீர் வேகமாக நிலத்தடிநீராக உறிஞ்சப்படாமல் தேக்கிவைக்கப்படும் என்ற விஞ்ஞானத்தின் அடிப்படையில் முன்னோர்களால் ஊட்டபட்ட இறைவழிபாட்டுப் (மறை) பழக்கம். மெல்ல மெல்ல அரசியல் காரணங்களால் மக்களிடமிருந்து விளக்கப்பட்டு, இன்றைக்கு சுற்றுச்சூழலை சீர்கேடாக்கும் ஒரு சமூக அவலமாக மாறிவிட்டது. வேதிப்பொருட்கள் கலந்த பொம்மைகளால் நீர்நிலைகளை பாழாவதுடன் பக்தி, நம்பிக்கை என்ற அடிப்படைகளே பிய்த்து எறியப்படுகின்றன. 
 
பக்தியின் பெயரில் முன்னெடுக்கப்படும் மதச்சாயத்தை வைத்து வலுவாகக் காலூன்றத் துடித்தது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். அதன்பொருட்டு பீரங்கிகளோடும், துப்பாக்கிகளோடும், பல்வேறான ஆயுதங்களோடும் விநாயகர் உருவாகிக் கொண்டே போகிறார். வீரவிக்னேஸ்வரன் என்ற பெயரில் கலகங்களை உருவாக்கும் செயல் திட்டத்தை சப்தமில்லாமல் இன்றைய தலைமுறையினரிடம் ஊட்டுகிறார்கள்.
ஆம் அவர்கள் நம்மிடமிருந்த ஒரு எளிய கிராமத்து தேவதையை, நாட்டார் தெய்வத்தை நம்மிடமிருந்து உருவி எடுத்து, அதற்கு புரிநூல் அணிவித்து, கைகளில் ஆயுதங்கள் வழங்கி, தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார்கள். உச்சரித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம் என்ற மொழியை இன்றைக்கு நம்மிடமே திணிக்கத் துடிப்பதுபோல திணித்து வஞ்சிக்கப்பட்டவர் தான் விக்னேஸ்வரன்.

-கார்த்திக்.புகழேந்தி  

16-09-2015

 கட்டுரை உதவி நூல்கள் | “பிள்ளையார் அரசியல்” - பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியன். | பாரதி புத்தகாலயம். | விலை - 20.







Comments

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil