சுப்பிரமணிய பாரதி - நினைவலைகள்

பாரதி கொஞ்சம் நினைவுகள்.
*** *** ***
வேதாந்தி,
நித்திய தீரர்,
உத்தம
தேசாபிமானி,
ஷெல்லிதாஸ்,
ராமதாஸன்,
காளிதாசன்,
சக்தி தாசன்,
சாவித்திரி...
மேற்கண்ட புனைப்பெயர்களுக்குச் சொந்தக்காரன்.

***

"யாருங்கானம் இந்த பொடியன். பதினோரு வயசு விரல் எழுதினதா இது. சரஸ்வதி தாண்டவம். பாரும் இவன் எங்கேயோ போகப்போறான்."

"இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இம்மாணவன் சுப்பிரமணியனுக்கு
சரஸ்வதியின் பெயரால் *பாரதி*என பட்டம் சூட்டுகிறேன்."

***

"செல்லம்மா என் பிச்சுவாவை எங்கே!
பொட்டையும் காணோம்."

"இதோ இருக்கிறதே."

"கண்ணன் படத்துக்கு கீழிறிந்து ஏன் மாற்றி வைக்கிறாய். காலையில் வணங்கத் தேடுவேன் தெரியாதா. சரி வருகிறேன் தாமதமாகிக் கொண்டிருக்கிறது."

"கிழிந்திருக்கிறதே கோட்டு நெஞ்சுப்பக்கம்"

"நூல் கொண்டா. தைத்துக்கொள்ள"

"வெள்ளைதான் இருக்கிறது"

"தைத்துவிட்டு வண்டிமையினைத் தேய்த்துவிட்டால் ஆகிறது"

***
"செல்லம்மா வா கடலலைகள் கவிழ்ந்துவிழும் அழகு ரசிக்க கடைவீதி கடந்து சென்று வருவோம்."

"ம்ம்ம்"

"ஏன் தள்ளி நடக்கிறாய் அருகே வா! இதோ இப்படி. என் கைகள் உன் தோள்களில் விழும் இடைவெளிக்குள் வா"

"அய்யோ சாலைப் பொதுவிலா மானம் போகும்".

"ஹஹா..
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ
தில்லையாம்" .

***
"இது இமயமலையிலிருந்து எடுத்துவந்த ஆலிலை. உங்களுக்காக..."

"நன்றி தாயே! விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியாகிய உங்கள் அன்புக்கு பாத்திரமாய் இது எப்போதும் என்னுடனே இருக்கட்டும். அநேக கோடி நமஸ்காரம்."

***
உங்களை விசாரிக்கனும் அதிகாரி கூப்பிட்டார். ஸ்டேசன் வரை வரணும்.

"வாரண்ட்"

"இதோ!"
"அப்போ போகலாம். சைக்கிளை நானே ஓட்டவா!"

%

"விசாரணை முடிஞ்சது போகலாம்"

"என் கோட்டை கசக்கி இருக்க வேண்டாம்".

"இஸ்திரி போட்டுத் தரச் சொல்லட்டுமா".

"சிரமம் வேண்டாம்".

"நீங்கள்

லண்டனில் படித்தவரா?"

"இல்லை"

"ஆங்கில உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே? அதனால் கேட்டேன்"

"வருகிறேன்."

........இந்தாளு பிராமணாள் இல்லையா நெஞ்சுலே நூலைக் காணும். குறிப்பில் அப்படியே எழுதிடுங்க.

***

"என்ன சுப்பைய்யா இப்படி இடைவெளியே இல்லாமல் எழுதினால் மை கசிந்து பக்கத்து எழுத்து அழிகிறதே! வாசிக்கவும் சங்கடமாய் இருக்காதோ"

"ம்ம் சரி பண்ணிடலாம் ஐயரே"

"என்னைய்யா இது பத்தி பத்தியா பிரிச்சுட்டீர். பிரமாதம் கேட்டீரோ வாசிக்ற சங்கடமும் குறைஞ்சது மை கசியாமலும் ஆகுறது. ஒரே கல்லிலே ரெண்டு புறாக்கள். ஜமாய்ச்சுட்டீர் சுப்பு"

பாரதியால், முதன்முறை பத்தி பத்தியாக எழுதும் முறை இதழியல் துறையில் புகுத்தப்பட்டது .

***

"நாளை என் நிகழ்ச்சிக்கு வரவேணும் மிஸ்டர்.காந்தி"

"நாளைக்கு வேறு பணி இருக்கிறது. நிகழ்ச்சியை அடுத்தநாள் மாற்றிக்கொள்ளலாமா?"

"அது முடியாது. நீங்கள் தொடங்கப்போகும் இயக்கத்திற்கு என் வாழ்த்துகள், வருகிறேன்."

காந்தி .... "இவரை பாதுகாக்கவேண்டிய கடமை இந்தநாட்டுக்கு இருக்கிறது. சாதாரணமான மனிதரில்லை இவர்."

***
அன்புடையீர்.
என் எழுத்துக்களை 40 தொகுதிகளாய்ப் பிரித்து புத்தகமாக்கிட விழைகிறேன். தாங்கள் ஆளுக்கு 100உரூபாய் அனுப்பிவைக்கலாம்.
நன்றி
சுப்பிரமணிய பாரதி.

"மணியாடர் ஏதும் வந்திருக்குதா தாபல்காரரே"

"வந்தா குடுத்திடப் போறேன். ஏன் பிராணனை வாங்குறீர்."

-தேடிச் சோறு நிதம் தின்று...வீழ்வேனென்று நினைத்தாயோ!
(இன்றைக்கு பாரதியின் எழுத்துக்கள் நாட்டுடைமைச் சொத்து!)

***
வண்டலூர் உயரியல் பூங்கா

"சார் சார் அங்க ஒருத்தன் சிங்கம் இருக்கும் கூண்டுக்குள்ளே கையைவிட்டு புடிச்சிட்டு இருக்கான் சார்"

என்னைய்யா சொல்ற! ஆள் பார்க்க எப்படி இருக்கான்.

"கிறுக்கன் மாதிரி இருக்கான் சார். "

%

"ஏன்னா விட்டுடுங்கோ கடிச்சுடப் போகுது! அய்யோ யாராச்சும் தடுக்க வாங்கோளேன்"

"ஹாஹா வனராஜனே நான் தான் கவிராஜன் வந்திருக்கிறேன். உன் பிடரியைப் பற்றிப் பிடிக்கும் வல்லமை இங்கு வேறாருக்கு இருக்கிறது"

***
"என்னப்பா நீ உனக்கு ப்ரியமாய் வெல்லம் கொடுக்கவந்தால் என்னையே முட்டிவிட்டாயே சரி போ! ஆனாலும் இந்த பாரதியை வீழ்த்த ஆளில்லை தெரியுமா உனக்கு"

"என்ன சுப்பு உடல்நலமில்லையாமே! இப்போவே புறப்பட்டு வரட்டா!"

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் இங்கு நலம்".

"முடியாது உடனே வரேன்".

"சொன்னால் கேளுங்கள்."

"சரி அப்போ ஒன்னு பண்ணு. நல்லா இருக்கேன்னு ஒரு படம் புடிச்சு அனுப்பு அப்போதான் நம்புவேன்".
%

-ஏனப்பா போட்டோ புடிக்கனும். எவ்ளோ கேட்பே!

-நீங்க மித்ரன்ல எழுதும் பாரதி தானே.

-பாடக்கூட செய்வேன்.

-உட்காருங்க வெளிச்சமா எடுத்துத் தரேன்.

-இருக்குறதை எடு. கால் ருவா மேல் தரமாட்டேன்.

***

"தாகமாயிருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடேன். நாளைக்கு ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப் பத்தி வரைஞ்சு எடுத்துட்டுப் போகனும். " 

விடிந்த போது பாரதி அஸ்தமனமாகியிருந்தான். வங்கக்கடல் மீது கதிரவன் ஒவ்வொரு நாளும் எட்டி எட்டிப் பார்த்துச் செல்கிறான். இன்றைக்கேனும் பாரதி வருவானா! என்றபடிக்கு...


புனைவு -கார்த்திக்.புகழேந்தி.
11-12-2014.

Comments

  1. புகைப்படம் எடுத்தது பற்றி அறிந்திருக்கின்றோம்....ஆனால் மற்ற உரையாடல்களை எல்லாம் எங்கேருந்துப்பா ??!!!! நல்ல புனைவு தம்பி!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil