வற்றாநதி விமர்சனக்கூட்டம்.

ஒரு சின்ன விதை ஒவ்வொரு சொட்டு ஈரத்தையும் பற்றிக் கொண்டு, முட்டிமோதி மண்ணைக் கிளர்ந்து, மேல்நோக்கி எழுந்து நின்றபின்,
தான் முளைவிட்ட இடத்தில் வேர் கிளப்பி நிற்கத் துவங்குவது போல் இந்தநூல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வலுவாக்கிக் கொண்டிருப்பதாய் உணர்கிறேன்.

கனவுப்பிரியன் என் புத்தகத்தின் அணிந்துரையில் ஒரு வார்த்தை எழுதி இருப்பார் “காட்டுச்செடிகளுக்கு யாரும் நீரூற்றிப்போவதில்லை ” என்று.. இன்றைக்கு நிஜத்தில் எத்தனையோ பேர் வந்து நீரூற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தனைபேரின் வார்த்தைகளுக்கும், பேரன்புக்கும் நன்றிக்குரியவனாகி நிற்கின்றேன்.

நாள் 07-03-2015 அன்றைக்கு மாலை பனுவல் புத்தகநிலைய அரங்கில் என் முதல் புத்தகத்தின் நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய அனுபவங்களுக்கு முன் சிறு முன்கதை..

மு.க
*
ஆறேழு வயது மட்டுமே நிரம்பிய புத்தக வாசிப்பாளன் நான்.  பெரும்பாலானவர்களைப் போலே  ”சுஜாதா  என் ஆதர்சம்” என்ற பொன்மொழியோடே எழுத்துலகத்தில் எட்டிப்பார்க்கத் தொடங்கினேன்.
எழுத்துலகத்தைத் தாண்டிய சிந்தனைகளின் உந்துதலால் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் எல்லாம் கதைமாந்தர்களாய் மாறத்தொடங்கினார்கள். கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருந்தவன் அதை கதைகளாக மாற்றி எழுதிப்பார்த்தேன். அதன் விபரீத முயற்சிதான் இந்த முதல் புத்தகம்.

வற்றாநதி புத்தக வெளியீடு கடந்த டிசம்பர் மாதம் 22ம்நாள் சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க முகநூலில் இருந்து அன்புகொண்டாடும் பழகிய நண்பர்கள், தோழர்கள், அண்ணன்கள், அக்காள்கள், உறவுகள், என்மீது அக்கறைகொண்டோர்கள்... இன்னும் சொல்லபோனால் அதுவரை யாரென்றே தெரியாதவர்கள் கூட கலந்துகொண்டு தங்கள் அன்பினால் என் முயற்சிக்கு அகல்விளக்கு ஏற்றி வைத்தார்கள். (நிஜத்தில் அன்றைய நிகழ்ச்சியில் அகல்விளக்கே ஏற்றப்பட்டது).

 வெளியீடு முடிந்த கையோடு புத்தகத்திருவிழாவும் சேர்ந்தே வர, முகம்தெரியாத பல நண்பர்களையும் எழுத்தாளர்களையும் அங்கே சந்திக்க முடிந்தது. முதல் தடவையாக 2013ம் ஆண்டில் சென்னை புத்தகத்திருவிழாவில் நுழையும் போது, ஜோடி குரூஸ் அவர்கள் கையால் கொற்கையை வாங்கி இருந்தேன். அடுத்த வருடம் அவர் கையில் என் புத்தகத்தைக் கொடுக்க வைத்த  காலத்தின் திரைக்கதையை நான் கொண்டாடத்தானே வேண்டும். இதை அவரிடமே சொல்லிக்கொண்ட்டேன்.

*
நூல் வெளியீட்டுக்குப் பிறகிலிருந்து, நிறைய நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த கதைகளைச் சொல்லி பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். நல்லா இருக்கு என்ற வார்த்தைகள் அதிகம் போனால் அழகாய் இருப்பதில்லை அல்லவா! ஆகவே, யாராவது சூடாக ரெண்டு வார்த்தை  திட்ட மாட்டார்களா என்று உள்மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. கனவுப் பிரியனிடம் இந்த விசயத்தை வேடிக்கையாகச் சொல்ல, ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்வதுபற்றிய எண்ணம் எங்கள் மனதில் தோன்றியது.

கனவுப்பிரியனையும் சென்னைக்கு வரவைத்து, அதேநாளில் நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. நண்பர் தடாகம் முகுந்தனிடம் கேட்டதும், பனுவலில் (7-3-2015) சனிக்கிழமை நிகழ்ச்சி முடிவானது.

*
பனுவல் நிகழ்வரங்கில்....

5மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி, 6.30க்குத் தொடங்கி 8:30க்கு நிறைவடைந்தது. வழக்கறிஞர் மற்றும் கதை சொல்லி இதழின்,
 இணை-ஆசிரியர் கே.எஸ்.இராதா கிருஷ்ணன் அவர்களும், புதியதலைமுறை ஊடகவியலாளர் வேங்கட பிரகாஷ் அவர்களும் தலைமையேற்று நடத்த, கரிசல்காட்டின் நாட்டுப்புற இலக்கிய படைப்பாளி கழனியூரன், மற்றும் நண்பரும், நலம்பிரும்பியுமான எழுத்தாளர் கனவுப்பிரியன் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.

தோழர்.இராதா இராமச்சந்திரன்....
பரிசில்.செந்தில்நாதன் அண்ணன் வரவேற்புரை நிகழ்த்த,
 தோழர்.இராதா இராமச்சந்திரன் வற்றாநதியினை நூல் அறிமுகஞ் செய்து பேசினார்.
முதல்முதலாக ஒரு புத்தகம் பற்றி பேசுவதால் குற்றங்குறை இருந்தால் மன்னித்துவிடுங்களென்று டிஸ்க்ளெய்மர் கொடுத்துவிட்டு தான் எழுதி கொண்டு வந்திருந்த வார்த்தைகளில் கச்சிதமாக தன் பேச்சை முடித்துக்கொண்டார். மேலும் அரங்கத்தில் அவர் சொன்ன ஆண்கள் பற்றிய தன் கருத்தைக் கேட்டு நண்பர் ஒருவர் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.  அறிமுக ஆட்டக்காரர் முதல் மேட்சிலே தன் பேச்சினால் கவனம் ஈர்க்க வைத்துவிட்டார் ஹாஹா!. கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும் நூல் அறிமுகம் செய்து வைத்தமைக்கும் நன்றி தோழர்.

ஷான் கருப்பசாமி....
அடுத்ததாக ஷான் கருப்பசாமி அண்ணன்  வற்றாநதி குறித்த விமர்சனங்களைப் பேச அழைக்கப்பட்டபோது, ஏக சந்தோசம். நல்லா நாலு திட்டு கிடைக்குமென்று நினைத்துக் கொண்டு உள்மனம் கிறுக்குபிடித்துக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சொந்த மண்ணைவிட்டு நகர்ந்து கொண்ட வாழ்க்கை எல்லா கதைகளிலும் வெளிப்படுவதைச் சுட்டிக்காட்டியதோடு,  அதன் தேவை இருப்பதைப் பற்றியும், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்ற கருத்தையும் முன் வைத்தார். கதைகள் பற்றிய தன் பார்வையை லாவகமாக எடுத்துச் சொன்னபோது பாராட்டவும் தவறவில்லை.  முதல் மேட்சிலே சச்சினை நான் சச்சின் என ஏற்றுக்கொண்டோம் கார்த்திக்கும் அப்படியே என்று முடித்தது அட்டகாசமான பினிஷிங் அண்ணே!  நன்றி!

கனவுப்பிரியன் ....
கனவுப்பிரியன்  தூத்துக்குடியிலிருந்து தூங்காமல் வந்திருக்கிறார் என்று அவர்பற்றிய இராஜபாட்டை சொல்லி  அவரைப் பேச அழைத்ததும்,
 எழுதிக்கொண்டுவந்த காகிதத்தைப் பார்த்து முதல் முப்பது வினாடிகள் பேசிக்கொண்டிருந்தார் அடுத்த நிமிடங்களில் அனாயசமாக முகநூலில் எழுதிக்கொண்டிருப்பது பற்றி, அட்டைப்படத்தின் குளிர்ச்சி பற்றி,  தாமிரபரணிக்கும் தனக்குமான தொடர்பு பற்றி, இயல்பாக அள்ளிவீசிக்கொண்டிந்தார்.

 எதார்த்தங்களோடு ஒரு கதைசொல்லியாக கனவுப்பிரியனை ஆடியோ வெர்சனில் கேட்கமுடிந்தது. லைக் நிறைய கிடைத்தது. கம்மெண்ட்கள் எழுதத்தான் முடியவில்லை. ஹஹ

 கனவுப் பிரியனுக்கு நன்றி என்று சொல்லி முடித்துக் கொள்ளமுடியாது. இந்த திரைக்கதையில் அவரது கதாப்பாத்திரத்திம் மிகமுக்கியமானது.
இலக்கிய உலகின் ட்ராகுலா அவரையும் கடித்துவிட்டது. ஆக, கனவுப்பிரியன் ட்ராகுலா ஆகவேண்டிய தருணம் நேற்றைக்கு முடிவு செய்யப்பட்டுவிட்டது.  ஆம். அடுத்து அவர் புத்தகத்திற்கான தொகுக்கும் பணிகளை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. உப்புக்காத்து இன்னும் கொஞ்சகாலங்களில் தெற்கிலிருந்து வீசும்.

நாச்சிமகள். சுகந்தி...
 புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டது / முகநூலில் நட்பு வட்டத்தில் இருப்பது, இந்த இரண்டு இண்ட்ரோக்களை மட்டும் வைத்துக் கொண்டு, என் புத்தகத்திற்கு விமர்சனம் பேசவேண்டும் என அணுகினேன். மறுப்பு ஏதுமில்லாமல், பணிச்சுமைகளுக்கிடையில் வர இயலாத நிலை என்றபோதிலும் கலந்துகொண்டார்.

என்ன நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோமோ அத்தனையும் அவர் பேச்சில் கிடைத்தது.
“பெண்ணிய பார்வையில் வற்றாநதி” என தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டே தன் கருத்தில் தான் அணுகிய கதைகளைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்தார்.

சிவந்திப்பட்டி கொலைவழக்கு கதையினை முகநூலில் பதிந்தபோது நான் எதிர்கொண்ட பல கேள்விகளில் ஒரு அமெச்சூர்தனம் இருந்தது அதனால் அந்த கதையினைப்பற்றிய ஒரு தெளிவான விளக்கம் எனக்குச் சொல்லமுடியாமலே போய்விட்டது, ஆனால் அந்தக்கதைக்கான திறப்பை சுகந்தி அவர்களுடைய விமர்சனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பெண்கள் பற்றிய  உளவியலையும் சரி, வாழ்வியலையும் சரி இக்கதைகள் ஒருசார்பு மனப்போக்கிலே பயணிக்கிறது என்ற அவருடைய விமர்சனம் ஏற்றுக்கொள்ள வைத்தது.

காதல் கதைகளில் இதுவரைக்கும் யாரும் கேட்காத ஒரு கேள்வியை முன்வைத்தார். எல்லாரும் கிறிஸ்டியை விரும்புறீங்க.. அந்தப்பொண்ணு யாரை விரும்புதுன்னு ஒருகோணம் இருப்பதை கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாமா என்ற கேள்வி சிரிக்கச் செய்தாலும் அந்த சிந்தனை எனக்கு எழாமலே போனதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆக ஆந்திரா மெஸ்ஸில் மதியச்சோறுண்ட திருப்தியாக அவரது விமர்சனம் இருந்தது நன்றி மேடம்.

*
திரு. வேங்கடபிரகாஷ்...

விழாத்தலைமை ஏற்றிருந்த திரு. வேங்கடபிரகாஷ் அவர்கள், அடுத்ததாக புத்தகம் பற்றியும், நாள்தோறும் ஒளிப்பதிவாளர்கள் முன் சமூக நிகழ்வுகளையும், அரசியல் செயல்பாடுகளையும் பேசிக்கொண்டிருக்கும் எனக்கு ஓர் இளைப்பாறுதல் இந்தக்கூட்டம் என்று தொடங்கி, கிறிஸ்டி, ஜெனி, சுகந்திகளைப் படிக்கும் போது தன் பதின்மத்தின் தோழிகள் நினைவுக்கு வந்ததாகச் சொல்லி, இந்த செய்தி  தன் வீட்டுக்குச் சென்றுவிடும் அபாயமும் இருக்கிறது என்று நிகழ்வரங்கை புன்னகைகளால் இலகுவாக்கினார்.

புதியதலைமுறை ”நேர்பட பேசு “ நிகழ்ச்சிக்கு எங்கள் ஊர் டீக்கடையில் பெரிய விசிறிகள் உண்டு. நிகழ்ச்சியின் விசிறிகள் என்பதைவிட அதைத் தொகுத்துவழங்கும் வேங்கடபிரகாஷ் அவர்களுக்கு என்பதே பொருத்தம்..  ஆளுக்கொரு கட்சிக்காரகள் டி.வி திரைக்கு இந்தப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அங்கே இவர் கேட்கும் கேள்விக்கு சபாஷ் போட்டுக்கொண்டிருப்பார்கள் தங்கள் கட்சி பிரதிநிதிகளை கேள்வியால் மடக்கும் போதுகூட. திரு.வேங்கட பிரகாஷ் அவர்களுக்கு ரசிகர் மன்றம் எழுப்பும் வேலை திருநெல்வேலியில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. எந்த கட்சி சார்பில் என்பது பற்றிய விவாதம் தான் இன்னும் முடிவுக்கு வரவில்லை ஹாஹா..

 நூல்பற்றிய அவருடைய வார்த்தைகள்  வாழ்த்துகளாலும், அன்பாலும் நிரம்பியிருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, உங்கள் வாழ்த்துகளுக்கும்  மனமார்ந்த நன்றிகள் சார்.

*
நாட்டுப்புற படைப்பாளி கழனியூரன்....
சொந்த ஊர்வழக்கில் எழுதுவதுகுறித்து ஒரு பெருமிதம் இருந்தது.  ஒருமுறை நெல்லை வழக்கில் பதிந்த கதையினை வாசித்துவிட்டு மேலாண்மை.பொன்னுச்சாமி அவர்கள் எழுத்து போல் உள்ளது என்றார்கள் இளமதி பத்மா அவர்கள். அதுவரைக்கும் எனக்கு அவரைத் தெரியாது என்பதே உண்மை. நேற்றைக்கு கழனியூரன் பேசும் போது வண்ணநிலவனின் கதைகள் போல உள்ளதென்று...

உதயன் முதன்முதலில் கோபல்ல கிராமத்தை கையில் கொடுத்தபோது தான் கி.ராஜநாராயணனைக் கொண்டாடத் துவங்கியிருந்தேன். நாட்டுப்புற எழுத்துபக்கம் ஆர்வம் திரும்ப கழனியூரன் அவர்களின் படைப்புகள் கண்ணில்பட இன்னும் ஆர்வம் கூடிப்போனது. இந்நிகழ்ச்சியில் அவரே முன்னிலை வகித்ததும், புத்தகத்தை முழுக்க வாசித்துவிட்டுப் பேசினதும் மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

முதல் வார்த்தையிலிருந்தே நெல்லைமண் மணம் அரங்கத்தில் பரவத்துவங்கியது.  “யாராச்சும் உன்னைய தூக்கிட்டுப்போய் அடிப்பாங்க” என்று என்னை நோக்கி கைகாட்டிவிட்டு அடுத்த வார்த்தையிலே  “கழுவுற மீனுல நழுவுற மீனா இருக்கான்” என்றபோது (அச்ச) அஞ்சப்புகழ்ச்சியாக உரைத்தது.

”சாதி பற்றி புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்திலும் அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான்.  அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்த கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. விமர்சனங்கள ஏத்துக்க, சொல்லவந்த விசயத்தோட நிறுத்திக்க அதுக்கு மேல்விளக்கம் கொடுத்துட்டு இருக்காத, ஒரு நல்ல எடிட்டர் கையில் இந்த புத்தகம் சிக்கி இருந்திருக்கனும். இந்தச் செடி வளரத்துவங்கி இருக்கு வேரில் வென்னீர் ஊற்றக்கூடாது , நாவல்கள் எழுதக்கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு மண்சார்ந்து இந்த  தலைமுறையில் எழுதத் துவங்கி இருக்கும் இந்த இளவலை வாழ்த்துறேன்.”  என்று முடித்தார். கழனியூரன் அவர்களுடைய இந்த வார்த்தைகளுக்குப் பின் நானென்ன பேசுவது மூச்சடைத்துப்போனது.

அப்பாவின் ப்ரியங்களை உணர்த்த அந்த நிமிடங்கள் செலவிடப்பட்டிருந்தது. அதுவரைக்கும் இலக்கிய நிகழ்வாக தொடர்ந்து கொண்டிருந்த அரங்கம் அதன்பிறகு நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஒவ்வொருவரையும்.

*
பனுவலும் விதைகளும்...
பனுவலுக்கும் எனக்குமான தொடக்கம்,  நுங்கம்பாக்கம் 4Framesல்
வேலைக்குச் சேர்ந்த புதிதில் முகநூலில் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிபற்றிய அறிவிப்பைப்  பார்த்து அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதிலிருந்து ஆரம்பித்தது.

கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இன்று அறிமுகப்படைப்பாளி என்று சிபிச்செல்வன் தன் வலைதளத்தில் அறிமுகம் செய்கிறார் என்றால், இந்த தூரங்கள் பனுவலிலிருந்து தொடங்கியது.  வாசிக்கிற ஒருவனை அடையாளங்கண்டு அவருக்கு இன்னின்னது உபயோகமாய் அமையுமென கைகாட்டிவிடுவதில் செந்தில்நாதன் அண்ணனுடைய தீர்க்கதரிசனம் எனக்குப் பேருதவியாக அமைந்திருக்கிறது பலநேரம்.

இந்நிகழ்ச்சியில் முரளி வரவேற்புரை நிகழ்த்துவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வர இயலாமல் போக “ அண்ணே தம்பிக்காக” என்ற வார்த்தக்கு மதிப்பளித்து செந்தில்நாதன் அண்ணன் நிகழ்ச்சியின்
ஸ்டார்டிங் ட்ரபிளை எளிதாக்கித் தந்தார்.

இறுதியாக தலைமையேற்று  நடத்திய வழக்கறிஞர். கே.எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களை அழைத்துப் பேசவைக்கும் முன் செந்தில்நாதன் அண்ணன் ஒருநிமிடம் என்று குறுக்கிட்டு பனுவலின் செயல்பாடுகளையும், நிகழ்ச்சிகளையும் எடுத்துச் சொல்லி
 “கதை சொல்லி “ இதழ் மீண்டும் வரவேண்டும் என்றும், அதன் நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்றும் கே.எஸ்.ஆர் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

எதிர்பாராமல் ஓவியர் மருது அவர்களின், விலைமதிப்பீடற்ற நீராடுதுறை ஓவியத்தை பனுவல் சார்பாக எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார்கள் , வகுப்பறையில் முதல் ரேங்க் வாங்கிவிட்டு அந்த கார்டை நோட்டுப் புத்தகத்துக்கிடையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்வோமெ அந்த சந்தோஷத்தை அன்பவித்துக் கொண்டிருந்தேன்.

*
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்...
செந்தில்நாதன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பிறகு பேசின கே.எஸ்.ஆர் அவர்கள் நெல்லை மண் பற்றியும், அங்கிருந்து வந்து படைப்புலகில் ஒளிபெற்றெழும்பிய படைப்பாளிகள் பலரை ஒவ்வொருவராக நினைவுகூர்ந்தார்.

அகநாழிகையில் புத்தகம் வெளியிட்டு சிலநாட்களில் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு என் மனநிலை பிடிபட்டுப் போனது. மண்சார்ந்த எழுத்து இவனுடையது, இவனுக்குத் தேவை தரவுகள் அதுகிடைக்க நீ நேரே செல்லவேண்டியது பாலவாக்கத்துக்கு என்று கைகாட்டிவைத்தார். அங்கேதான் கே.எஸ்.ஆர் அவர்களுடைய வீடு இருக்கின்றது.

 புராணக்கதையில்,  ஞானப்பழம் யாருக்குக்கொடுப்பது என்று போட்டிவைத்ததும் முருகன் மயிலை எடுத்துக்கொண்டு மூன்று முறை பூமியைச் சுற்றக் கிளம்பிவிடுவார். விநாயகர் அம்மையப்பனே உலகம் என்று சொல்லிக்கொண்டு தாய்தந்தையரைச் சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொள்வார்.

முருகன் செய்த தவறிலிருந்து பாடம் பெற்றுக்கொண்ட நான் செய்த  காரியம் தரவுகளைத்தேடி ஊர் ஊராக அலையும் முன்பு அம்மையப்பரைச் சுற்றி வருவதென்று முடிவெடுத்தது. அதன்படி கே.எஸ். ஆர் அவர்களுடைய குறிப்புகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் கடந்த மாதங்களாக... அவர் இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்ததோடு வாழ்த்தியும் தலைமையுரை நிகழ்த்தியது இந்த எளியவனுக்கான பெருமை. நன்றிகள் சார்!

*
விதைத்த விதைகள் சும்மா இருக்காது...
முதல்முதலில் புத்தகம் எழுதனும்ன்னு நினைக்கும் போது நான் வைத்த பெயர் “நூறு புத்தகங்கள் விற்றால் போதும்” என்று...
ஒரு சோதனை முயற்சியாகத் தான் புத்தகம் எழுதுவதைப் பற்றிய என் புரிதல் இருந்தது.  ஆனால் இந்த விமர்சனங்கள் பாராட்டுக்கள் இன்னும் உத்வேகத்தைக் கொடுத்திருப்பதால் பொன்னாத்தாள் பேரனுடைய தலையெழுத்து அடுத்தொரு நாவலையும் எழுதலாம் என்றே அமைகிறது. இதில் என்னுடைய தவறென்று எதுவுமில்லை.

விழாமேடையிலே,  வழக்கறிஞர். திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன்., அவர்கள் புத்தகத்தை வெளியிட ஊடகவியலாளர். திரு வேங்கட பிரகாஷ் (புதியதலைமுறை) பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


நிகழ்வு துவங்கும் முன்...
கனவுப்பிரியன், ஷான் கருப்பசாமி, வேங்கட பிரகாஷ், கழனியூரன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
(முதல் வரிசை இடமிருந்து வலம்)

வரவேற்புரை - பரிசில் செந்தில்நாதன்.


திருமதி.பத்மாவதி ஆனையப்பன்,  KSR அவர்களுக்கு  சால்வை அணிவித்தல்.

ஷான் கருப்பசாமி அவர்கள் நாட்டுப்புற படைப்பாளி கழனியூரனுக்கு  சால்வை அணிவித்தல்.

பேராசிரியர். பத்மாவதி அவர்கள் நாச்சிமகள் சுகந்தி அவர்களுக்கு சால்வை அணிவித்தல்
தோழர்.இராதா இராமச்சந்திரனுக்கு சால்வை வழங்குதல்

பார்வையாளர்கள்
கார்த்திக்புகழேந்தி, கழனியூரன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வேங்கட பிரகாஷ், கனவுப் பிரியன், ஷான் கருப்பசாமி, இராதா இராமச்சந்திரன். (இடமிருந்து வலம்)


நூல் அறிமுகம் -இராதா இராமச்சந்திரன்.
நூல் விமர்சனம் -நாச்சிமகள் சுகந்தி. 
நாச்சிமகள் சுகந்தி.
கழனியூரன் பேசத்துவங்கும்போது...

அட்டைப்படம் குறித்து கழனியூரன் பேசும்போது...
கே.எஸ்.ஆர், வேங்கட பிரசாத், கனவுப் பிரியன் 
இளவலை வாழ்த்துகிறேன். 
அம்மாவுக்கு...








நூலினை வெளியிட்டபோது...
கார்த்திக் புகழேந்தி, கழனியூரன்,  கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,  வேங்கட பிரகாஷ்,
கனவுப் பிரியன், ஷான் கருப்பசாமி, இராதா இராமச்சந்திரன்.  

நினைவுப் பரிசு 
நன்றி!!!






தினமணி நாளிதழில் புகைப்படச் செய்தி


அழைப்பிதழ். 







-கார்த்திக்.புகழேந்தி.
 08-03-2015.






Comments

  1. வற்றாநதி விமர்சனக்கூட்டம்.= கார்த்திக் புகழேந்தி. - அருமையான பதிவு. எங்கள் இனிய நண்பர் திரு கனவுப் பிரியன் கலந்து கொண்ட சந்திப்பு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். அனைவருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil