ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப் படுகிறான் (2015)



ஜெய்குட்டிக்கும் அவன் அப்பாவுக்குமான இரண்டு கடிதங்கள்.

அன்பு ஜெய்குட்டிக்கு,

     அப்பாக்களின் கரங்களால் கவிதையாக எழுதப்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய் வாழ்த்துகள் கண்ணா. உனக்குத் தெரியாது அப்பாவுக்குள் அந்த கவிதைகளை உன் சிறு சிறு அசைவுகள் தான் வரைந்துகொண்டிருக்கின்றன என்பது.  இந்த வினாடிகளில் நீ எப்போதும் இறகுகளோடு அசைகின்றவனாக எனக்குள் உருவகம் கொள்கிறாய்.
உன் கையில் கிடைத்த தோட்டத்துக் கல், தம்ளர் மழை, காகிதக்கப்பல் காற்றிலசையும் இறகு எல்லாவற்றிற்கும் உயிர் இருக்கின்றதென்பதும் அவர்களுக்கும் (கவனி”: அவைகளுக்கும் அல்ல அவர்களுக்கும் உயர்திணை) உனக்கும் நிகழும் உரையாடல்களின் கவிதைகளை இன்றிரவு வாசித்தேன். தனித்திருக்கும் என் அறைக்குள் நீ காற்றைக்கிழிக்கும் ஓசையுடன் ஓடியாடி அலைகிறாய். ஜெய்குட்டி
ஜெனிவீட்டு ஜன்னல் திறந்திருக்கிறதாய் மகிழ்ந்துகொண்டாயாமே ஜெனி உனக்கு எத்தனை பிடிக்கும் என்பதை ஜெனிக்கு யாரேனும் மழையை அனுப்பிச் சொல்லட்டும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் முதலையை விமானமாக மாற்றும் மேஜிக்கை எனக்கும் சொல்லித்தருகிறாயா. நான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் முயற்சித்துப் பார்க்கிறேன்.
உன் வீட்டில் மீன்குட்டிகள் வளர்க்கிறாயா. அழகுதான் போ!! கிளிக்கூண்டை திறந்துவிட்டவன் மீன்குட்டிகளுக்கென்று அப்பாவிடம் கடல்கேட்டிருக்கலாம் அல்லவா. கேட்கவேண்டுமென நினைத்தேன் அதென்ன உறங்கும் போது கைகளை இறுக்க மூடிக்கொள்கிறாயாம். உன் கனவுகளின் சாவியைக் கொஞ்சம் அப்பாவுக்குக் கொடுத்தால் தான் என்ன. அதுசரி நீ கொடுத்திருந்தால் குட்டிக்குட்டித் தீவுகளாய் இந்த கவிதைகளை எழுதாமல் அப்பாவும் உன்னோடு கனாக்களில் பட்டாம்பூச்சி பிடிக்க அலைந்திருப்பாரோ.
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் ஜெய்குட்டி எனக்கெல்லாம் இப்படி அப்பா இல்லை. இருந்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் காலம் கூட ஜெய்குட்டியாகவே வாழ்ந்துகிடப்பேன். அன்பு முத்தங்கள் கண்ணா.



அன்பு வைகறை அண்ணனுக்கு,
     உங்கள் மூன்றாவது தொகுப்பைத் தான் முதலில் வாசிக்க வாய்த்திருந்தது எனக்கு. குழந்தைகளுக்கான உலகை அழகியலோடு குழந்தைத்தனங்கள் சிதையாமல் வார்த்தைகள்கட்டி இழுத்துவந்து காகித பக்கத்தில் பறக்க / நீந்த  / நனைய / அசைய / விளையாட ( மேற்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ) விட்டிருக்கின்றீர்கள். ரசித்துவாசித்தேன்.
குழந்தைகளை கவிதைகளோடு அணுகும் உங்களை ரசிக்கமுடிந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியராய் இருக்கவேண்டியவர்தான் நீங்கள். மெழுகுவர்த்தியை ஊதி இரவை இரவாகவே மாற்றிவிடும் குழந்தையைக் கொண்டாடிய அந்த ஒரு கவிதைக்கே புத்தகத்திற்கான விலை அடக்கமாகிவிட்டது. மிச்சமெல்லாம் ஜெய்குட்டியின் அறிமுகம் போல இலவச இணைப்புதான். குழந்தைகளின் உலகில் பறத்தலுக்கான இறகுகளை புத்தகமெங்கும் கையாண்டிருக்கின்றீர்கள்.
ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகள் போல இறகுகள் சுமந்த / மழையில் நனைந்த / கப்பல்விடுகின்ற / வானம் ரசிக்கின்ற கவிதைகள் திரும்பத் த்ரிஉம்ப வருகின்றது கொஞ்சமும் அலுப்பில்லையே எப்படி. ஆச்சர்யமாக இருந்தது. நல்ல தொகுப்பு இது என கடந்துவிட முடிகிறதில்லை. ஏதாவது சொல்லவேண்டும் அதை இந்த இரவே சொல்லவேண்டுமென்று எழுதத் துவங்கினேன். ஜெய்குட்டிகளுக்கான அன்பைச் சொல்லி.
 “ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப் படுகிறான்” –தொகுப்பிற்கு நீங்கள் “ஜெய்குட்டி” என்றே பெயர் வைத்திருக்கலாம். வீடுமுழுதும் மிதந்தலையும் ஜெய்குட்டியின் பாத்திரங்களிலிருந்து சிதறும் இசைத்திவலை போல இந்த கனம் அழகாகிவிட்டது. பென்சிலையும் காகிதத்தையும் கொடுத்த ஜெய்குட்டியை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதாக ஒரு கவிதையும் தென்படாததைக் கண்டேன்  முதல் எட்டுவரைக்கும் ஜெய்குட்டி ஜெய்குட்டியாகவே இருக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறான் என்ற எண்ணத்தில் உங்கள் மீதான அன்பு பிரகாசமாகியிருக்கிறது.
மனநிறைவளித்தமைக்காக அடுத்த வாரங்களில் சென்னையில் பொழியும் ஒரு மழைக்கு ஜெய்குட்டியும் நீங்களும் கூட காரணமாய் இருக்கலாம். 

இங்கு யாரேனும் ஒரு தந்தை தன் மகனுக்கு காகிதக் கப்பல் மடித்தால் உங்களுக்குச் சொல்லி அனுப்புகின்றேன்.

-கார்த்திக் புகழேந்தி. 
11-01-2015

Comments

  1. ஹைய்யோ, எனக்கு அப்படியே என்னையே பாக்குற மாதிரி இருக்கே... எப்படியாவது படிச்சிடணும்... அப்புறம் அப்பா கிட்ட காட்டி நீங்க இப்படி என்னை பத்தி எழுதியிருக்கீங்களான்னு சண்டைக்கு போகணும்... போர்.... ஆமா போர்....

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil