சுரேந்திரனின் கதை



     சுரேந்திரனின் கதை எங்கே தொடங்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அவன் அந்தக் கதையை எங்கே முடித்திருப்பான் என்பது பற்றியும் எனக்குத் தனியாக எந்த புரிதலுமிருக்க வில்லை.  ஆனால் அவன் எப்படியாவது தன் கதையை எழுதிவிடச் சொல்லி என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். எனக்கு அவன் அப்படிக் கேட்பது வேடிக்கையாக இருந்தது. கதைகளை எழுதச் சொல்கிற நிறைய பேரை நான் அப்படியாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தேன் என்ன இப்போதுவரை அப்படித்தான்.

காது வலிக்க வைக்க தன் கதைகளைச் சொல்வார்கள். அதை எழுத்தில் பார்க்க அவர்களுக்குப் பிடிக்கும் போல. இத்தனைக்கும் நான் கதை எழுதுகிறவனில்லை. ஆனாலும் என்னிடம் ஏன் சொல்கிறார்கள் என்று நானும் யோசிக்கவே இல்லை. சொல்கிறவர்களுக்கு அத்தனை ரசனையாக இருக்கும் கதை, கேட்கிற எனக்கு சலிப்பாகவே இருந்திருக்கிறது.

நான் ஒருபோதும் யாருடைய கதையையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. சுரேந்திரனுக்கு இந்த உண்மை தெரியாததால் அவன் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் அதி தீவிரமாய் என்னிடம் சொல்லிக் கொண்டேயிருப்பான்.

பிள்ளையார்கோவில் வேப்பமரத்தடிதான் அவன் கதைசொல்லுமிடம். காவிப் பட்டையும் வெள்ளைச் சுண்ணாம்பும் உதிர்ந்து போன சுவரில் சாயம் போன லுங்கியை அயர்ன் செய்ததுபோல மடிப்புகலையாமல் கால்களைத் தொங்கவிட்டபடி அவன் உட்கார்ந்திருப்பான். எங்கள் ஏரியாச் சிறுவர்கள் அங்கேதான் கிரிக்கெட் ஆடுவார்கள். சிக்ஸ் அடிக்கக்கூடாது. மூணுபந்தை தொடர்ந்து பேட்டில் வாங்காமல் விட்டால் அவுட்.
ஒன் பிச் கேட்ச் என்று ஆயிரத்து எண்ணூறு நிபந்தனைகளுடன் நடக்கும் மேட்ச் அது.

முளையாமட்டை மாதிரி இருந்துகொண்டு இந்த வினித் பயல் வீசும் பந்தை தொட்டாலும் கெட்டேன். தொடாவிட்டாலும் மூன்றாவது பந்தில் அவுட் என்று கத்துவான். நான் கிரிக்கெட் ஆடிக்கொண்டே சுரேந்திரனை பரிகாசம் பண்ணிக் கொண்டிருப்பேன். அவன் பாட்டுக்கு எதையாவது என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பான். அவனை எனக்கு நான்கைந்து வருடமாய்த் தெரியும். 

திருப்பணிகரிசல் குளம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊரின் பெயரைச் சொல்வான். மிலிட்ரிக்காரர் மகன் என்றால் ஊரில் எல்லாருக்கும் தெரியும் என்பார். பார்த்தால் அப்படித் தெரியலையே என்று கேலிசெய்து வைப்பேன்.  அவனுக்கு உடன்பிறந்தது ஒரு தம்பியும் தங்கையும். இங்கே அவனுடைய மாமன் வீட்டில் தங்கியிருந்து  ஸ்பேர் பார்ட்ஸ் கடை ஒன்றில் வேலைக்குப் போய் வந்துகொண்டிருக்கிறான்.

அவனுக்கு மெக்கானிக் வேலைகள் அனைத்தும் அத்துபடி. மனிமூர்த்தீஸ்வரம் பைபாஸில் ஒருதடவை நடந்து வந்துகொண்டிருந்தபோது அங்கே ப்ரேக் டவுனாகி நின்ற அம்பாஸிடர் காரை அங்கே இங்கே என்று என்னன்னவோ திறந்து, திருகி, மூடி ஸ்டார்ட் செய்துகொடுத்தபோதுதான் எனக்கு அந்த உண்மைகள் தெரிந்தது. 

காலர்பட்டன் வைத்த சட்டைகள் தான் அணியுவான். இடதுகை கட்டைப்பெருவிரலில் நிளமாய் நகம் வளர்த்திருப்பான்.  எம்.ஆர்.ராதா படங்களின் பழைய வி.சி.ஆர் கேசட்டுகள் ரெண்டு அவன் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.  அவனுடைய ஊதா நிறச் சட்டையொன்றில் எஸ்.பி என்று ஒரு எம்ப்ராய்ட்ரரி இருந்ததை கவனித்திருக்கிறேன். பேசும்போது தன் கீழுதட்டை கடித்துத் துப்பிவிடுகிறவன் போல உதட்டை என்னம்மோ செய்வான். ஏண்டா என்றால் எதுவுமே செய்யாதமாதிரி புன்னகைப்பான்.

எப்போதாவது இரண்டு நாள் காணாமல் போய்விட்டுவந்து  ஊருக்குப் போனேன் என்று சொல்லுவான். அப்படி அவன் காணாமல் போன நாட்களில் நான் அவனைத் தேடியிருக்காவிட்டால்கூட அவனாகவே காரணமாகச் சொல்லுவான்.

இப்படித்தான் ஒரு கார்த்திகை தீபத்தன்று சுரேந்திரன்  தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக எதிர்வீட்டு சுதா அக்கா எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிச் சொல்லிவிட்டுப் போனாள். உறக்கத்திலிருந்த எனக்கு எதுவுமே புரியவில்லை.  குமார் மாமாவின் பைக்கை எடுத்துக் கொண்டு ஹைகிரவுண்டுக்குப் போனபோது மெயின் வாசலை அடைத்திருந்தார்கள். ஏ.ஆர்.லைன் ரோட்டைச் சுற்றிவந்து எமெர்ஜென்சி கேட் வழியே உள்ளே நுழைந்தை போது ஒரு பையனும், பொண்ணும் ஒரு வயதான பாட்டியும் அழுது கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மெதுவாக உடம்பு சிலிர்த்துக் கொண்டது. கூடப் பழகியவன் ஒருவன் நெருப்பில் வெந்து செத்துப் போனான் என்பதை அப்போதுதான் ஓரளவாக புத்தி கிரகித்திருந்தது.  பெண்பிள்ளைகளை உள்ளே விடமாட்டேன் என்றதால் சுரேந்திரனின் பாட்டியும் தங்கையும் என்னை யாரோ எவரோ என்று தெரியாமல், “எங்கண்ணனைப் பார்க்கனும் உள்ள கூட்டுப் போங்கண்ணே” என்று கதறித் தீர்த்தார்கள்.

பாக்கெட்டில் முன்னூறு ரூபாய்க்கு மேல் எதையும் எடுத்துவரவில்லை. வார்டில் நின்றுகொண்டிருந்த ஆஸ்பத்திரி ஆளிடம் விஷயத்தைச் சொல்லி கேட்டதும் இருநூறு ரூபாயை வாங்கிக்கொண்டு கதவைத் திறந்துவிட்டான். மணி இரவு 12.59.

சாளைமீனை கல்லில் சுட்டு வறுத்தது போல் வெந்துகிடந்தது சடலம். ச்சே இது யாரோ ஒருவனுக்கு வேண்டுமானால் சடலமாக இருக்கும். இந்த சின்னப்பிள்ளைக்கும் இந்த கிளவுக்கும் அது தங்கள் உயிருக்குயிரான உறவல்லவா? இப்படி அழுகிறார்களே, இந்தப் பயல் பேசாமல் எழுந்துவந்து தொலைந்தால் தான் என்னவாம். அவன் தம்பி வாயோடு வாய் திறக்காமல் ஏங்கி ஏங்கி தவிக்கிறான். மூச்சு முட்டி அழுகிறான். நான் கடைசியாக எப்போது மூச்சு முட்டி அழுதேன்.

நினைவில்லை. கடைசியாக நான் பார்த்த மரணம் செல்லையா தாத்தா சாவு. அன்றைக்கு ஊரெல்லாம் வால்போஸ்டர் ஒட்ட, உறவுக்காரங்களை அழைக்க என்று அலைந்து திரிந்துவிட்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தபோது நீர்மாலை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆமா சுரேந்திரனுக்கு யார் நீர்மாலை எடுப்பா?  புத்தி பேதலித்தது போல என்னென்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

 “யார்கிட்டயும் மனசுவிட்டு பேசமாட்டான் தம்பி. ஆமை வீட்டைக்கெடுக்கும் ஊமை ஊரைக்கெடுக்கும்ன்னு சொல்லுவாங்க. இந்தப்புள்ள ஒரு இனுக்கு யாருக்கும் தீங்கு செஞ்சதில்ல. எதா இருந்தாலும் மனசுக்குள்ளே  போட்டு போட்டு அரக்கி அரக்கி எம்புள்ள இப்படி கட்டையா வெந்துகிடக்கு பாரு தம்பி”   காலையில் நாலு மணிக்கு பாட்டி அணத்திய வார்த்தைகள் உசுருக்குள் புகுந்து என்னைக் குடையத் தொடங்கியது..

என் கதையை நீதான் எழுதவேண்டும் என்று சுற்றிச் சுற்றி வந்தான்.  ஒருதரமும் காதுகொடுத்துக் கேட்காமல் போய்விட்டேன். யாரிடமும் மனசைத் திறக்காதவன் ஏன் இளவு என்னிடம் சொல்வதற்கு அத்தனை துடித்தான்.

சுரேந்திரனுக்குப் பின்னால் என்ன கதை இருந்திருக்கக் கூடும் என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தவனிடம்...

“எதாச்சும் சொன்னானாய்யா...  நல்லா இருந்தானே, நேத்தைக்கு ஊருக்கு வந்தப்பவும், யாச்சி அல்வா வாங்கியாந்தேன் தம்பித் தங்கச்சிக்கு கொடுன்னு நீட்டுனானே...

ம்புள்ள மனசுமாறி நல்லதா வந்துடுச்சேன்னு அந்த ஆத்தா முப்புடாதிய வேண்டிக்கிட்டேனே. இப்ப அவன் அப்பன் வந்து எம்புள்ளைய எங்கன்னு கேட்டா நான் என்னான்னு பதில் சொல்லுவேன்ன்ன்ன்ன்...”
என்று கிளவியின் அழுகுரல் ஊரையே இரண்டு துண்டாக்கிப் போட்டது. 

 சாவுக்கோழியின்று  மொக் மொக்கென்று தவிப்பதுபோல தொண்டைக்குழியில் எதுவோ அழுத்துகிறது. ஆம் அது அழுகையே தான். காரணம் தெரியாமல் வழியும் அழுகை.

-கார்த்திக் புகழேந்தி.

00:00 21-07-2015.

Comments

  1. ப்ரமாதம்....கார்த்திக் மனதைத் தொட்டுவிட்டது...சுரேந்திரனின் சாவு...அவன் கதை என்னவாக இருந்திருக்கும்? என்று எண்ண வைத்துவிட்டது...

    ReplyDelete
  2. மிக இருமை. ஒவ்வொருவர் வாழ்விலும் இது மாதிரி தவற விட்ட சந்தர்ப்பங்கள் மனதை அறுத்துப் போடும்.

    ReplyDelete
  3. சுரேந்திரன் இறந்து அவரது கதையை எழுத வைத்துவிட்டாரோ? அருமை!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil