குற்றாலமும் கனவுப் பிரியனும்

கனவுப் பிரியன்

இந்த மனுஷர் சும்மா இருந்திருக்கலாம்ல… யாரோ கிளப்பி விட்டாங்கன்னு.. இவரும் குற்றாலத்தைப் பற்றி எழுத.. நம்ம முகத்திலும் சாரல் அடிக்க ஆரம்பிச்சுட்டு..

குற்றாலத்திற்கு எத்தனை முறை போயிருக்கேன்னு என்னைக் கேட்டா ஒரு முப்பது நாற்பது..இல்ல ஒரு ஐம்பது முறை… ஆவ்வ்வ் கணக்கில்லீங்க…
திருநெல்வேலில இருந்தது ஐம்பத்தி ஆறு கிலோமீட்டர் சராசரியில் உள்ள பேரூராட்சிதான் தென்காசி,

 சொந்தபந்தங்கள் நிறைந்த ஊர்.
அங்கிருந்து நான்கு இல்ல ஐந்து கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பயணித்தால் குற்றாலம்.

லீவு விட்டா கிளம்பு குற்றாலத்துக்குன்னு தூக்குச்சட்டியில் லெமன் சாதத்தோடு மேக்ஸி கேப் வேன் பிடித்துப் போகும் அக்கம் பக்கத்து உறவுகள் சூழ்ந்த புண்ணிய பூமியில் இரண்டு தலைமுறைக்கும் மேல் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது.

பக்கத்துவீட்டுப் பெண்களை அத்தை  சித்தி, மாமா, சித்தப்பான்னு உறவு முறை சொல்லி அழைக்கும் பாக்கியம் பெற்ற குழந்தைகளாகவே வளர்ந்தோம்.

***
பேரருவி (Main Falls), பழைய குற்றால அருவி, ஐந்தறுவி, செண்பகாதேவி அருவி, புளியருவி, பழத்தோட்ட அருவி..இப்படி ஒன்பது அருவிகள் பாயும்  குற்றாலத்திற்கு மீசை அரும்பும் வயதில் நண்பர்களோடு நனைந்த பொழுதுகள் அலாதியானது,

பைக்குக்கு..ரெண்டு பேர். திலி. பழைய பேட்டையைத் தாண்டினதும் ரேஸ்தான்… பாவூர்ச் சத்திரத்தில் சேகர், பழநிச்செல்வம், வெற்றி, ராசு என நண்பர்கள் படை சேரும்..

அப்படியே தென்காசி ரயில் நிலையம் வாயில் சாலையில் நடந்து போனீங்கன்னா ஒரு  நீலநிற மச்சிவீட்டில் பசுவும் தொழுவமும் இருக்கும் பாருங்க அது வேறு யாருதும் இல்லை..  எங்க சித்திவீடுதான். எம்மேல செம பாசம். அவங்க பையனுக்கும் கார்த்தின்னு பெயர் வைக்கும் அளவுக்கு..

சின்ன வயதிலே ஹாஸ்டல்ல வளர்ந்ததினாலே சொந்தக்காரங்க பத்தின விபரமெல்லாம் தெரியாது.

முதல்முறை குற்றாலம் போனப்போ அவங்க வீட்டில் சாப்பிட்டுட்டு.. அத்தை முறைதான்னு நினைச்சு அவங்க பொண்ணை சைட் அடிச்சு தொலைச்சுட்டோம். நானும் சதீசும்.

வீட்டுக்கு வந்ததும் தான் தெரிஞ்சது அது அத்தை இல்லை சித்தின்னு.. (தென்காசியில் முதல் காதல் தோல்வி அது தான் :p )
இப்போ அந்த பொண்ணு வீட்டுக்காரர் மிலிட்ரியில் இருக்கார்.

***

பாவூர்ச்சத்திரம் தாண்டி தென்காசி பாலம் இறங்கினதும். அந்த வயல் முனையில டீக்கடை ஒன்னு இருக்கும் பாருங்க அது தென்காசி ஃபேவரிட். அங்கே ஒரு டீயைப் போட்டுட்டு சித்தி வீட்டில் போய் தலையைக் காட்டிட்டு கேமிரா தவிர்த்த மற்ற உடைமைகளை அங்கேயே வைச்சுட்டு..
 குற்றாலத்துக்கு மாலை மங்கும் நேரத்தில் கிளம்பிபோனா சாரல் அப்படியே முகத்தில் இறங்கும் பாருங்க… ஆஹ் என்ன வாழ்க்கடா அது!

உள்ளூர் பிள்ளைகளை சைட் அடிப்பது. உடல்நலத்திற்கு கேடு. ஆக வெளியூர் புத்ரி ஹெ! கேரளநாட்டிளம் பெண்களென கண்ணுக்கு குளிச்சியாய், மெடிமிக்ஸ் சோப்பு வாசனையில் நுகர்ந்துவிட்டு,  உச்சந்தலை நனைய எண்ணை ஊற்றி ஊர் சுற்றனும்..

நெல்லிக்காய், நாவல், மீன் இறைச்சி, லீச்சி பழம், மிளகாய் பஜ்ஜி, கிழங்கு சிப்ஸ்ன்னு நொறுவல்களா தின்று தீர்த்துவிட்டு… சீசன் துண்டு கட்டி சீறிவரும் அருவியில் குமுற குமுற அடிவாங்கி  குளித்தால் வாழ்க்கை மோட்சம் அடையும். தேகம் பொலிவு பெறும்..

சில நேரம் பேரருவியில் எல்லைதாண்டி தண்னீர் விழும் போது நம்மை குளிக்கவிடமாட்டார்கள். கொடும்பாவி தொந்திக்காவலர்கள். அந்த நேரம் தண்ணீர் எப்போ குறையும்ன்னு வரிசையில் காத்திருப்பது தான் சொர்க்க நரகம்... யா! புதுப்படத்துக்கு டிக்கெட் வாங்கி தியேட்டர்க்குப் போனதும் முதல் சீன்ல கரண்ட் இல்லை வீட்டுக்குப் போ-ன்னா எப்படி இருக்கும் அப்படி ஒரு தண்டனை அது. அருவியோட வேகத்தில் நீர்த்துகள் சிதறி சாரலா வந்து நனைத்துவிட்டுப் போகும்...

மலைமேல் ஏறி செண்பகாதேவியில் குளிப்பது இன்னொரு வரம்.
குடும்பத்தோடு வருபவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைப்பது அரிது.
மற்றபடி பழைய குற்றாலம் , ஐந்தருவின்னு ஒரு நாள் முழுக்க குளித்து முடித்து நேரே செங்கோட்டை பார்டர் பொரோட்டாவை வெளுத்துக்கட்ட ரஹ்மத் ஹோட்டலுக்கு பைக் பறக்கும்போது மணி 12 தாண்டி இருக்கும்…

முழு பொரித்த கோழி, பதினான்கு பரோட்டா, ஆனியன் ஜாஸ்தி ஆம்லேட்,  சிக்கன் க்ரேவின்னு வெளுத்துக்கட்டிட்டு பில்லுக்குப் பணம் கொடுக்கவென்றே எங்களுக்கு வாய்த்த அடிமை எங்கண்ணன் சுரேஷ்   :p
 இப்போ கல்யாணம் ஆகி குழந்தைன்னு செட்டில் ஆகிட்டான். தப்பிச்சுட்டான்!

அன்றைக்கு நண்பர்கள் கிளம்பிப் போக நேரே சித்தி வீட்டு மொட்டை மாடி போய் படுத்தால்,  அருவித் தண்ணீர் விழுந்த வேகத்தில் புறமுதுகில் வாங்கின அடியில் மறுநாள்  சுள்ளுன்னு வெயிலடிக்கும் வரைக்கும் தூக்கம் வரும். பதினோரு மணி வாக்கில்  எழுந்தால் வீட்டில் கறந்த பாலில் இளஞ்சூடாய் காபியோடு தூக்குச் சட்டி முறுக்கும் வரும். நேரங்கெட்ட நேரத்தில் கிடைக்கும் காபிக்குச் சுவை அதிகம்.

மதியச் சாப்பாட்டுக்கு வகைவகையாய் பண்டங்கள் சுட்டு வைத்திருப்பாள் தாயம்மா சித்தி. நொறுக்கித் தள்ளிவிட்டால்,  தென்காசி ஊர்சுற்றும் படலம். பெட்ரோலை நிரப்பிக்கொண்டு தென்காசி வீதிகளில் வளையவருவோம், இலஞ்சி , காசி விஸ்வநாதபுரம் சுற்றி, தாய்பாலா தியேட்டரில் படம்பார்த்து, தென்காசி கோயிலை சைட் அடித்து...  [ வெள்ளிக்கிழமையாய் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி அக்க…அக்க..]  பிரகாரத்தில் எந்த பெண் பின்னாலாவது பக்தியோடு சுற்றிவருவோம்...  தூத்துக்குடிகாரங்கட்ட கேட்டீங்கன்னா திருநெல்வேலிக்காரப் பொண்ணுங்க அழகுன்னு சொல்லுவாங்க.. அதே திருநெல்வேலிக்காரங்ககிட்ட கேட்டா தென்காசி பொண்ணுங்க அழகுன்னு சொல்லுவோம்...

கண்ணுக்குக் குளிர்ச்சியா நகர்வலம் முடிச்சு சிக்னல் பரோட்டாக்கடையில் அடுத்த சுற்று தின்றுவிட்டு  வீட்டுக்குத் திரும்பும் போது கேமிரா முழுக்க புகைப்படங்களும் மனசு முழுக்க ஈரமும் துளிர்த்திருக்கும்..

இன்னும் நிறைய சொல்லலாம்.. சொன்னா  " வீட்டம்மா " திட்டுவாங்க..

அந்த தென்காசி தேவதைகளான ஸ்வேதா, அபி, பிருந்தா , பிரியதர்ஷிணி எல்லாம் சந்தோசமாய் இருக்கட்டும்.ஒவ்வொரு முறையும்  வரிசையாக  காதல் தோல்வியைச் சந்தித்த தென்காசி முறைப் பெண்கள் இவர்கள். திருவண்ணாமலையில் கட்டிக்கொடுத்த அபி பையன் பிறந்திருக்கிறானாம். திருவில்லிப்புத்தூரில் மணம்முடித்துப் போன பிரியதர்ஷிக்கு பெண் குழந்தை.

 நான் பச்சக்குதிரை விளையாடும் வயதில் இதுங்க எல்லாம் பச்சமண்ணை வாயில் அள்ளித் தின்றுகொண்டிருந்தது. பேசாம பொண்ணாப் பொறந்திருக்கலாமோ...காலாகாலத்தில் பையனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்ன்னு...  நம்ம வீட்டில் யாருக்கும் பொறுப்பில்லை.  ஹூம்.. அதுசரி பொண்ணா பிறந்திருந்தா குற்றாலத்தை இப்படி அனுபவித்திருக்க முடியாதோ என்னவோ...

ஓ…குற்றாலமே… உன் ஈரங்களை பத்திரமாய் வைத்திரு.. வெகு சீக்கிரமாய் வந்து நனைந்து கொள்கிறேன்.

நீங்கள் வயித்தெரிச்சல் படட்டுமென்று சில குற்றாலப்புகைப்படங்கள்...








                                                                         

                                                      .  



















-கார்த்திக். புகழேந்தி.

Comments

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : வரலாற்றுப் பதிவுகள் - சில துளி

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் அண்ணா சரியா கடமையாத்துறீங்க... தேங்க்ஸ் அண்ணா

      Delete
    2. வலைதளம்ன்னா திண்டுக்கல் தனபாலன் அண்ணன்னு... சான்றோர் வாக்கு :) நன்றி! அம்மாவுக்கு மருமகள்.

      Delete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil