ரயிலும்... சமூகமும்.



கோவையிலிருந்து சென்னை செல்லும் ரயில்...
D11-ல் 60-வது இருக்கையை முன்பதிவு செய்திருந்ததால் அவசரமில்லாமல் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன்.

டிக்கெட் செக்கரிடம் பி.என் ஆர். மெஸேஜ் காண்பித்துச் சோதனை முடிந்தது..

கையிலிருந்த 'வறீதையா கான்ஸ்தந்தின் - அந்நியப்படும் கடல்" வாசிக்கத் தொடங்கினேன். மீண்டும்...

(எட்டாயிரம் கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்ட ஒரு தீபகற்ப நாட்டில் வாழும் மக்களில் பாதிப்பேர் கடலைப் பார்த்தே இராதவர்கள்.

ஆனால்,
இக்கடற்கரையில் வளங்கள் சார்ந்து வாழும் பூர்வக்குடி மக்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத அதிகாரிகள் மேல்தட்டில் அமர்ந்து கொண்டு கடல் குறித்த கொள்கைகளை வகுக்கின்றார்கள்.
 - அ.கடல் )

ஆச்சர்யம் மிக்கதாய் நான் இருந்த வரிசையில் நானும் எதிரே ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தோம்.

கருமமே கண்ணாக அடுத்த புத்தகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

 இடையில் ஈரோடு, சேலம் எல்லாம் கடந்துவிட்டிருந்தது.

அவ்வப்போது அனிச்சையான திரும்பலில் கவனித்தேன். அவர் அணிந்திருந்த இதய வடிவ சிமிக்கியும், நெழிற் வளைந்த மோதிரமும் பார்வையை ஈர்த்தது.
:P

இதனால் என்னை நீங்கள் திருட்டுப் பயல் என நினைச்சுக்கப்டாது. அழகா இருந்தா ரசிப்போம். அவ்வ்வ்வ் ;)

நிறைய ஸ்டேசன்கள் கடந்து,
தண்ணீர் பாட்டில் தீர்ந்து,
அவர் தோசையும்,
நான் சப்பாத்தியும் கொரித்து,
நான் காபியும்
அவர் டீயுமாக குடித்து...

ரயில் போய்க் கொண்டே இருந்தது இருவரும் எதுவும் பேசவில்லை..

புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு கொஞ்சம் மாலை வெயிலை ஜன்னலோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது..

எனக்கு வீட்டிலிருந்து போன் வந்தது.. (நம்புக வீட்டிலிருந்துதான் :P ) ...

வழக்கம் போலே "அவளிடம் "எதிர் இருக்கை பெண்ணைப் பற்றி கொஞ்சம் சொல்லி வைத்து... செல்லச் சண்டைகளாக சிணுங்க வைத்துக் கொண்டிருந்தேன்.

எதிர்காற்று முகத்திலறைய இரயில் தண்டவாளத்தை விழுங்கி முன்னோறிக் கொண்டிருந்தது.

சரியாக நான்கு மணி நேரம் பின்
 ஜனனி வெங்கட்ராமன். வைத்திருந்த போன் சினுங்கியது.

 அது தான் எதிர் இருக்கைப் பெண்ணின் பெயர். நன்றி சீட்டிங்  சார்ட் .

காற்றுக்கும் கேட்காத சப்தத்தில் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே கீரிச்...சிணுங்கல்.
புரிந்தது. அவரும் ரிசர்வேஷன்.

மீண்டும் புத்தகத்தைக் கையிலெடுத்தேன். பெரிய புத்தகப் புழுவாக இருப்பான் போல என்று நினைத்தாரோ என்னவோ....
"யார் அது "மக்சிம் கார்கி" என்றார். "

"புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர். உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியாமல் தான் யாரென்றே கேட்டேன்"

கையிலிருந்த புத்தகத்தைக் கவனித்திருக்கிறார்போல...

"இவ்ளோ பெரிய புக் முடிச்சிடுவீங்களா...?"

"பிடிச்சிருக்கே... படிச்சுடுவேன்."

"இப்படிக் கொடுங்க"

"ம்ம்"

இடையில் சில பக்கங்களை வாசித்துவிட்டு...

 "பெயரே வாய்க்குள் நுழையலே... நீலவ்னா பெலகேயா-வா என்ன பெயர் இதெல்லாம்... "

"இது ரஷ்யப் புரட்சி காலத்தில் எழுதப்பட்ட புத்தகம். தமிழில் மொழி மாற்றம் .. உலக அளவில் 120க்கும் மேலான மொழிகளில் மொழிமாற்றம் செய்திருக்காங்க.."

"ஓஹ்...இதெல்லாம் எப்டி படிக்கிறீங்களோ"

"ஹஹ..சென்னையா"

"ம்ம் ... you too aah?"

"ஆமாம்"

"சென்னையில் எங்கே?"

"நுங்கம் பாக்கம்" நீங்க என்று கேட்கத்தயக்கம். கேட்கவில்லை அவளே சொன்னாள்.

"வேளச்சேரி. "

"ட்ரெய்ன் ஒன் ஹவர் லேட். எப்படிப் போவீங்க .. கால்டாக்சியா"

"அப்பா வந்திடுவார்"

"ஓஹ்... தனியா எங்கே கோவை?"

"எக்ஸாம் எழுத வந்தேன். சென்னைல ப்ளாட்ல இருக்கோம்."

"ஓஹ்.. "

கொஞ்சம் மௌனங்கள் பின்.. காற்றை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டேன்.

சென்னை நெருங்க நெருங்க... ரிஷர்வேசன் இல்லாத மக்கள் அதிகரித்து வர...

இடுப்பின் உள்ளாடை வெளியில் தெரிய அணிந்த கூட்டம் ஒன்று.. கதவுகளுக்கருகே நின்று சீட்டியடித்துக் கொண்டிருக்க... இருக்கை மாற்றக் கேட்டாள்.

எழுந்து மாறிக் கொண்டேன். பக்கத்து வரிசை நிரப்பப்பட... இங்கே இரண்டு பேர் மட்டும்.

அடுத்து எதுவும் பேசவில்லை. எனக்கும் துணிவில்லை... நிறைய பேசுபவன் தான். ஆனாலும் தயக்கமாக இருந்தது.

தூக்கம் கண்களைத் தழுவ காலை நீட்டி எதைஎதையோ எழுதத்துவங்கினேன்.

தேவதைத் தனத்தோடு அவளை கவிதை எழுதவெல்லாம் தோன்றவில்லை..

நான் நிச்சயம் எழுதியிருக்கக் கூடியவன் தான். ஆனாலும் எழுதத் தோன்றவில்லை..
ஏன்..?
தெரியாது.

இரயில் சிநேகம் என்ற வார்த்தை கூட முளைவிட்டிருக்காது இருவருக்குள்.

அத்தனை அடக்கமான உரையாடல். அது அவளுக்கொரு பாதுகாப்பு வளையம். இனி அவளின் நன்மதிப்புக்காகவேணும் நான் மிகுந்த கவனத்துடன் , பலம் கொண்ட கண்ணியத்துடன் பயணிக்க வேண்டும்.

தோழமையின் பெயரால் அவளுக்கு பாதுகாப்பளிக்கும் கடமை!
கேள்விகளில்லாமல் எனக்குள் தொற்றிக் கொள்ளும்.

ஆக, அவள் என்னை பயன்படுத்திக் கொள்கிறாளா? என்னை என்றால் இச்சமூகத்தை?

 கோளாறு பிடித்த சமூகம். எந்த வினாடியிலும் தன் அஸ்திரத்தை மாற்றி விடும்.

அதைத் தெரிந்து கொண்டவள். எந்த சமூகத்திடமிருந்து தன்னை காக்க வேண்டியிருக்கின்றதோ... அதே சமூகத்தையே தனக்கு கேடயமாக அறிவிக்கின்றாள்.

சிந்தனைகளில் ஒரு கம்பீரம் வருகிறது...
நான் என்பது இந்த இடத்தில் ஒழுங்குமிக்க ஒரு சமூகமாக காட்டப் படவேண்டும்.
தயார் பட்டுக் கொள்கிறேன்.
பயணம் முடியும் வரையிலும் வேறு சம்பாசணைகள் தேவைப் படாது.. அவள் தன்னை தேவைப்படும் அளவு அறிவித்துவிட்டாள் (வேளச்சேரி.
 அப்பா வருவார்) .

கனம் பொருந்திய ரயில்.. எனை புதிதாய் என்னென்னவோ சிந்திக்கவைத்துவிட்டது.

புத்தகங்களுக்குப் பதில் நான் என்னையே புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

சென்னை இருள் சூழ்ந்த ஒளியுடன்.. இரைச்சலாய் நெருங்குகிறது..

-கார்த்திக்.புகழேந்தி

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil