கடிதம் 01 - ஜீவாவுக்கு...

அன்புள்ள ஜீவா,

ஊருக்குப் போய்விட்டு வந்ததுபற்றி எழுதச் சொல்லிக் கேட்டிருந்தீர்கள். உண்மையைச் சொன்னால் நவம்பர் தொடங்கி இப்போதுவரை நாட்கள் முழுக்க நிறைய வேலைப் பளுவுடனே நகர்கிறது. கிடைத்த இடைவெளிகளில் தான் ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசிக்கிறேன். இடையே ஒரு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குப் போனதும், நம் ஜீவா படைப்பக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்காகத்தான். வள்ளியூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை ஒரு குடும்ப விழாவாக மாற்றியிருந்தார் நண்பரும் நூலாசிரியருமான எழுத்தாளர் மு.வெங்கடேஷ். 

அவரை எனக்கு சொல்வனத்தில் எழுதியிருந்த சிறுகதை வழியாகத்தான் தெரியும். கூடவே, அவர் மாதவன் இளங்கோவின் நண்பர். (மாதவன் இளங்கோவும் நானும் ஒரே நேரத்தில் அகநாழிகையில் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தவர்கள்) வெங்கடேஷ் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்தபோது, அவரின் எளிமையான கதைசொல்லித் தனமும், திருநெல்வேலி வட்டார வழக்கும்  எனக்குப் பிடித்துப் போயிருந்தது. நம் படைப்பகத்திலே தொகுப்பு கொண்டுவருவோம் என்றதும் முழுமனதாகச் சம்மதித்திருந்தார். 

வள்ளியூருக்கும் எனக்கும் பெரிய தொடர்புகள் இல்லாவிட்டாலும் அந்த ஊரோடு எனக்கு ‘கொண்டான் கொடுத்தான்’ உறவு உண்டு. அக்காவை அங்கேதான் சமூகரெங்கபுரத்தில் கட்டிக் கொடுத்திருந்தோம். வீடுகட்டிக் குடியிருக்கப் போனதுதான்  உங்கள் ஊரான திட்டுவிளை. (தெரிசனங்கோப்பு) 

என் விபரமறிய எங்கள் வீட்டில் நிகழ்ந்த மூன்றாவது சாதி மறுப்புத் திருமணம் அக்காவுடையது. அது வள்ளியூர் முருகன் சன்னதியில் தான் நடந்தது. பிறகு, நாகர்கோவில் வடசேரியில் சிலமாதங்கள் உயிர்காக்கும் மருந்துகளை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வேலையில் இருந்த காலத்தில் அடிக்கடி வள்ளியூர் வந்துபோய்க்கொண்டிருந்தேன். 

முன்பாக நா.வா., வழியாகத் தெரிந்துகொண்டிருந்த ‘ஐவர் ராசாக் கதை’யில் வரும் வள்ளியூர் குலசேகரன் அவன் தம்பிகள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமிருந்ததால்  எனக்கு அந்த ஊரின் சந்தை, சாலைகள், சுற்றுப்பாதைகள், குறிப்பாக குலதெய்வங்கள் குறித்த சிறு குறு தகவல்கள் வசமாகியிருந்தது. 

நண்பர் வெங்கடேஷின் ‘கொரங்கி’ நூல் வெளியீட்டு விழா மேடையில் அவர் கதைகள் குறித்து அறிமுகம் செய்துபேசியபோது, இடையே ‘ஐவர் ராசாக்கள் கதை’யைப் பற்றியும், வள்ளியூர் குறித்தும் சில வார்த்தைகள் குறிப்பிட்டுப் பேசினேன். நிகழ்ச்சியின் முடிவில் மேடையை விட்டு இறங்கியபோது, ஒரு நரைத்த மீசையுடன் கூடிய பெரியவர் வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ரொம்பவும் நெகிழ்ச்சியான குரலில் “நீங்க சொன்னீங்களே ஐவர் ராசான்னு, அது எங்க சாமி. கோயில் எங்க கோயில்” என்றார். எனக்கு ஒரு பொன் புதையல் கிடைத்தமாதிரி இருந்தது. 

‘ஐவர் ராசாக்கள்’ கதைப்பாடல் சம்பந்தமாகவும் வீணாதி வீணன் சண்டை, வெட்டும்பெருமாள் வெங்கலராசன் சண்டை போன்ற நாட்டார் கதைப்பாடல்களினூடாக நான் கொஞ்சம் பழசுகளைத் தோண்டி எடுத்து வாசித்தும் எழுதியும் கொண்டிருப்பதால் அந்த வினாடியே ஆர்வமிகுதியால், ‘உங்கள் கோயிலை இப்போ பார்க்கமுடியுமா? எனக்கு அதிலே ஒரு விபரம் தெரியணும். குலசேகர ராசாவுக்குன்னு கொடி எதுவும் இருந்துச்சான்னு நான் தேடிட்டு இருக்கேன்’ என்று  கேட்டுவிட்டேன். 

என் கேள்விக்கான நேரடி அர்த்தத்தை விளக்குவது கொஞ்சம் சங்கடம் பிடித்தவேலை என்பதால் நான் நேரடியாகவே விசயத்துக்கு வந்திருந்தேன்.  அப்போது நேரம் கருக்கலைத் தாண்டி இருண்டுவிட்டதை நான் உணர்ந்திருக்கவுமில்லை. கையில் வாட்சைப் பார்த்துக்கொண்டே, என் கண்களில் இருந்த பிரகாசத்தைக் கவனித்த மீசைக்காரரான ஆர்.முத்தையா அண்ணாச்சி, ‘சரி தம்பி வாங்க நம்ம வண்டியிலே போய்ட்டு வந்திடலாம்” என்று கூட அழைத்துப்போனார். வழியிலே கோயில் சாவியை வைத்திருந்த கோமரத்தாடி வீட்டுக்குப்போய், அவரையும் கூட்டிக்கொண்டு, ஐவர் ராசா கோயில் முன்பாக வந்திறங்கினோம்.  

நான் வாசித்த வகையில் ஐவர் ராசா கதைக்கும், வெட்டும்பெருமாளுக்கும் வெங்கலராசன் சண்டைக்கும், பஞ்ச பாண்டியன் கதைக்கும் நிறையவே தொடர்புகள் இருந்தன. பாளையக்காரர்களாகப் பின்னாட்களில் அறியப்பட்ட கன்னடியர்கள், தெற்கே வந்து போர்தொடுத்து தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்த நிலங்களையும், அதிகாரத்தையும், வாணிகத்தையும் கைப்பற்றியபோது, அந்தந்த பகுதிகளில் ஆட்சியதிகாரத்திலிருந்த குறுநில பாண்டிய மன்னர்கள் எப்படி அவர்களை எதிர்கொண்டார்கள். இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த சமரசங்கள், போர்கள், சண்டைகள், அழிவுகள், ஆக்கங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் சாராம்சங்களாகத்தான் இந்த கதைப்பாடல்களின் தன்மைகளை நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆய்வாளர் நா.வா.,வின் கருத்தும் இதே தன்மையுடைய விசாலம் நிறைந்த பார்வையாகவே விரிகிறது. 

சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் மதுரையில் ஆட்சியை இழந்த பாண்டியர்கள் தெற்கில் ஐந்து குறுநில ஆட்சிப் பரப்பை நிறுவியிருக்கிறார்கள். தங்களுக்குள் ஒருவரை மன்னனாகக்கொண்டு, ஆட்சிபுரிந்த நிலங்களில் திருநெல்வேலி, தென்காசி, வள்ளியூர், வீரவன்நல்லூர், கரிவலம்வந்த நல்லூர் போன்ற இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னே பாண்டிய வம்ச  வம்சவிளியையும், முன்னவர்களின் பட்டங்களையும் சூட்டிக் கொண்டவர்கள். அப்படியொருத்தர் ஐவர் ராசாக்களில் மூத்தவரான மாறவர்மன் குலசேகர பாண்டியன். 

ஓர் கழைக்கூத்தாடிப் பெண்ணை கல்யாணம் செய்துகொண்ட மூத்தராசா குலசேகரன் கன்னடராசாவின் முதலாவது படையெடுப்பை முறியடிக்கிறான். அவனது போர்த்திறம் அறிந்து, அவனை ஓவிய உருவில் கண்ட கன்னடிய ராசாவின் மகள் குலசேகரனையே மணம்முடிக்க விரும்புகிறாள். மகளுக்காக கன்னட ராசா அனுப்பிய தூதினை குலசேகரன் முறிப்பதும், கோபம்கொண்ட கன்னடியான் படையெடுத்து வந்து, வள்ளியூரை மீண்டும் முற்றுகையிட்டு, மறைந்து வாழும் அண்ணன் தம்பியர் ஐவரில் நான்கு தம்பியரைக் கொன்று மூத்தவனை தன் மகளுக்கு மணமுடிக்க முயல்கிறான். 

தம்பியர் மாய, தான் வாழ்வதா என்று கத்தியால் கழுத்தில் குத்திக்கொண்டு அவன் உயிர்நீர்க்கிறான். கதை அங்கோடு முடியவில்லை. நாம் விரும்பின மன்னவன் மாய்ந்தானே என்று கன்னடியான் மகள் குலசேகரன் உடலுக்கு மாலையிட்டு, மங்கள உடையணிந்து, குதிரையேறி வந்து தானும் குலசேகரன் உடலோடு சேர்ந்து தீப்பாய்ந்து இறந்துபோகிறாள். சண்டைக் கதை சாகாவரம் பெற்றது அவளால் தான். அவள் தீப்பாய்ந்த இடம் இன்றும் வடுகச்சி மதில் என்ற பேரிலே அழைக்கப் பட்டுவருகிறது. மனத்துக்குள்ளாக ஐவர் ராசாக்களின் இந்தக் கதையை ஓட்டிக் கொண்டே கோயிலை நெருங்கியிருந்தேன். 

அங்கே, அருள்மிகு ஐவராஜாக்கள் நீராவிக்கரை ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் என்ற பெயிண்ட் எழுத்துகள் தான் என்னை ‘வா கிட்டே’ என்று அழைத்தது. கோயிலின் வாசலைக் காட்டி “இந்த இடம் முழுக்க பெரிய வாவி இருந்திருக்கிறது. காலம்போனதும் அதெல்லாம் மண்டி வீடுகள் வந்துவிட்டது.” என்று விபரங்கள் சொல்லிக் கொண்டே கதவைத் திறந்துவிட்டார் முத்தையா அண்ணாச்சி.


“நான் பலவேசத்துக்கு ஆடுகிறவன், இவாள் கோமரத்தாடி சுடலைக்கு ஆடுவாரு.. எங்க பரம்பரை வழி கோயில் இது, சங்கிலி பூதத்தாரை தவிர்த்து மத்ததெல்லாம் இப்போ எடுத்துக் கட்டினது. நாப்பது நாப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இங்க ஒரு கல்மண்டபம் இருந்துச்சு. ஆடெல்லாம் மேஞ்சிக்கிட்டு இருக்கும்” என்றவரிடம் சுற்றியுள்ள முக்கியமான இடங்கள் அதன் பெயர்கள் குறித்து விசாரித்தேன். 


தாய்தெய்வத்தின் பக்கம் காவல் தெய்வமாக நிற்கும் ஐவர்களின் பூடங்களைக் காட்டி, இவர்கள் தான்  ஐவர் ராசாக்களான சுடலை, பலவேசக்காரன், தூசிமாடன், இருளமாடன், புலமாடன் தம்பியர்கள். பக்கத்திலே நிற்பவர் தளவாய் என்று ஆறு வரலாற்று மனிதர்களை ஆண்டவர்களாக நின்றுகொண்டிருந்தார்கள். தெய்வம், கடவுள், சாமி, இறைவன், ஆண்டவன் என்ற ஒவ்வொரு சொற்களில் எவ்வளவு அர்த்தங்களைப் புதைத்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள். (தெய்வம் வேறு; ஆண்டவன் வேறு என்ற பகுப்பாய்வை ஆராய்ச்சி இதழில் வந்த கட்டுரையில் வாசித்த ஞாபகம்)

இன்றைக்கு மாடனும் சுடலையுமாக வணங்கப்படும் இந்த ஆண்டவர்கள் ஐவருக்கும் வரலாற்றில் முறையே  முத்தம்பெருமாள், முகிலம்பெருமாள், முடிசூடும்பெருமாள், பாண்டியப் பெருமாள் என்றே வழங்கியிருக்கின்றன. 

கிழக்கு திசையில் கைகாட்டி, அங்கே இருப்பது அம்மாசி குளம், அதுக்கு தள்ளி யானைக்கிடங்கு, நாம இருப்பது நீராவிக்கரை. ராஜாங்க காலத்தில் பெண்கள் குளிக்கும் இடமாக அம்மாசி குளமும், யானைகள் குளிப்பாட்டும் இடமாக யானைக்கிடங்கும் இருந்திருக்கும் என்றார். 

பெரிய கோமரத்தாடியிடம் நான் வடுகச்சி மதில், கதைப்பாடலில் வரும் இடைச்சி குறிப்பிடும் கள்ளமடை, வடுக ராசா முற்றுகை, குலசேகரன் நிலப்பரப்பு, ஆட்சிகாலம், வாணிக வழித்தடம், அவன் கொடி குறித்தெல்லாம் எடுத்துச் சொல்லிப் பேசி, ஐவர் ராசாக்களின் கொடி மீன் கொடிதானா  இல்லை சங்கு மாதிரி எந்த அடையாளத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்டேன். 

அவருக்கு அதுபற்றித் தெரிந்திருக்கவில்லை. கோயில் குறித்து ஒரு புத்தகம் இருக்கிறது தருகிறேன் என்றார். ‘ஸ்ரீ சுடலை ஆண்டவர்’ என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட புத்தகத்தில் நான் தேடுவது கிடைக்காது. நான் தேடுவது வரலாற்று காரியம் என்றேன். சிரித்தார். அவருக்குப் புரிந்திருந்தது. சித்தி விநாயகர் உள்ளே புகாதவரைக்கும் சந்தோசப் பட்டுக் கொள்ளுங்கள் தம்பி என்றார். 

நாட்டார் தெய்வங்களில் கலைவிழா, பலியாட்டுகளைவிட எனக்கு இதுபோன்ற கோமரத்தாடிகளிடம் பேசுவது பிடித்த காரியம் எப்போதுமே. அவர்கள் வரலாறுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் இடையே உள்ள கண்ணியை கொஞ்சமேனும் அறிந்தவர்களாக இருந்தாலும் அதை எல்லோர் மத்தியிலும் அவிழ்த்து விடுவதில்லை. காதுகொடுத்து அவர்கிட்டே கதைகேட்கிறவர்களிடமே கூட நீண்ட தயக்கங்களுக்குப் பிறகுதான் சில விசயங்களை அடுக்குவார்கள். 

இன்னும் ஓரிருநாள் வள்ளியூரில் தங்கியிருந்தால் நிறைய விவரங்கள் சேகரிப்பதோடு பக்கத்து நிலபுலன்களையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு மேலும் சில செய்திகளை அறிந்திருக்கலாம் என்றே தோன்றியது. பிறகு நான் அவர்களுடைய தொடர்பு எண்களை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சி நடந்த மண்டபத்தைத் தாண்டி என்னுடைய அறைக்குத் திரும்பினேன். 


நண்பர் வெங்கடேஷ் எனக்குப் பேருந்து நிலையம் எதிரிலேயே அறை எடுத்துத் தந்திருந்தார். இரவு பத்துமணிக்குமேல் பொழுதைப் போக்க வள்ளியூர் சந்தைக்குள் நுழைந்திருந்தேன். கடைகளைச் சாத்தும் மும்முரத்தில் இருந்தார்கள் மக்கள். ஓலைப்பெட்டி, அரிவாள், கத்திமனைகள் விற்கும் ஆச்சி ஒருத்தியிடம் பேச்சுக் கொடுத்தபடியிருந்தேன். அம்பை, தென்காசிக்கு பகுதிகளில் அடித்த அரிவாள்களைப் பற்றி விபரம் கேட்டுக்கொண்டிருந்தேன். முன்பெல்லாம் திருநெல்வேலி தென்கலம் புதூரில்  அரிவாள்களுக்கு கடும் கிராக்கி இருந்ததை மனத்தில் நினைத்துக் கொண்டேன். 

இரவு முழுக்க நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்து விட்டு, மறுநாள் விடிகாலையில் ராஜபாளையத்திற்கு வண்டியேறினேன். அங்கே மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை கண்காளிப்பாரளாக ஓய்வுபெற்ற திரு.ராமர் ஜெ காளிமுத்து அவர்கள் மகன் திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாலையிலே ஊர்திரும்பினேன். 

பாளையங்கோட்டை தெற்குபஜார் ஆயிரத்தம்மன் கோயில் அருகே என்னுடைய தாயார் பூங்கோதை அவர்கள் தொடங்கி, நடத்திவரும் பாரதி ஹோம் கேர் அலுவலகத்தில் அன்றைய தினம் இரவில் தங்கியிருந்தேன். ஆய்வாளர் தொ,ப. (தொ.பரமசிவம்), வே.மாணிக்கம் இருவரது வீடுகளும் அமைந்துள்ள அந்த ஜனசந்தடி மிக்க பகுதியில் தான் நான் எனது சிறுவயதின் நாட்களைச் செலவளித்திருந்தேன். மூளிக்குளம் தயாபரன் தெருவிலும், புதுப்பேட்டை வடக்குத் தெருவிலும் என்னோடு கூடமாட பழகி வளர்ந்த சேக்காளிகள் பலரும் நினைவில் வந்துபோனார்கள்.

தசரா காலங்களில் பாளையங்கோட்டைக்கே ஒரு தனி ஜொலிஜொலிப்பு வந்துவிடும். பதினோரு நாளும் பாளையங்கோட்டைக்கே திருவிழாதான். பெண் பிள்ளைகள் கொலுவைத்திருக்கும் கோயில்களைச் சுற்றிச்சுற்றி வளைய வரும்போது, அவர்கள் பின்னால் திரிகிற பதின்ம நாட்களில் பழைய கோனார் தமிழ் உரை, மாஸ்டர் இங்க்லீஷ் கைடுகள், நோட்டு, பேனா, பென்சில் என்று எழுதுபொருட்களும், உரைநூல்களும் வாங்குவதற்கென்றே பாளை தெற்குபஜாரில் ஒன்றுகூடுவோம்.

இன்றும் அவ்விதமான பழைய புத்தகக் கடைகள் மனம்போக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தக் கடைகளில் நாட்டாரியல் தொடர்புடைய ஏழெட்டு புத்தகங்கள் வாங்கினேன். கூடவே நாவல்களும் கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளுமாக இருபதுக்கும் மேலான நல்ல புத்தகங்களை மொத்தமாகக் கட்டுவிலைக்குத் தந்திருந்தார். ஊருக்குப் போகும்போது, தூக்கிச் சுமப்பது பெருஞ்சுமையாக இருக்கும் என்று புரிந்தாலும் மனசு அலைபாயத்தான் செய்கிறது.

மூன்றாம் நாள் மாலையில் வ.உ.சி மைதானத்தில் படித்துறை இலக்கியச் சந்திப்பில், தி.ஜானகிராமன் கதைகள் குறித்து நாறும்பூநாதன் ஒருங்கிணைத்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். ‘படித்துறை’யின் திட்டமிடல் ஆரம்பத்தில், மாதம் ஒரு கிழமையின் மாலையில் குறுக்குத்துறை மண்டபத்தடியில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு அப்படியே படித்துறையில் உட்கார்ந்துகொண்டு புத்தகம் பேசுவதாக இருக்கவேண்டும் என்றுதான் துவங்கப்பட்டது.

நடைமுறையில் அதில் ஒரு சங்கடம் என்னவென்றால் கூட்டத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் என்னைப் போன்றவர் யாரும் வந்துசேர்ந்தால், முதலில் குளிப்பதா, கதைபேசுவதைக் கேட்பதா என்றால் நானெல்லாம் ஓடிப்போய் ஆற்றில் தொப்பென்று விழுந்துவிடுகிறவன். பிறகு தி.ஜா.,வாவது திகம்பரசாமிகளாவது.

நாறும்பூநாதன் சாமர்த்தியசாலி, படித்துறைக்கு படிதானே முக்கியம் என்று மைதானத்தின் கேலரிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டார். கூட்டத்தில் எல்லாம் முதிர்ந்த இளைஞர்களாக இருந்தார்கள். அநேகமாக இன்னும் கொஞ்சநாட்களில், ‘எனக்கு மூட்டுவலி இருக்கிறது. மேலே எல்லாம் ஏறிவர முடியாது இப்படி நிழலாகக் கீழேயே உட்காந்துவிடலாமா?” என்று தங்கள் ஜாகையை சிறுவர் பூங்காவுக்கு மாற்றிவிடக் கூடும்.

படித்துறை சந்திப்பு -திருநெல்வேலி 
கடங்கநேரியானும் ஆன்மனும் அந்தக் கூட்டத்தில் எழுத்தாளர் தீன் -னைச் சந்திக்க வந்திருந்தார்கள். ‘அவ்வளவு மீனவர்கள் செத்துமிதக்கும்போது, உங்களுக்கெல்லாம் புதுமைப்பித்தன் கேட்கிறதா?’ என்பது கடங்கநேரியானின் திருக்கிக் கொண்டிருந்தார். இல்லையில்லை இது தி.ஜா. கூட்டம். புதுமைப்பித்தன் போன மாதம் என்று யாரோ தீவிரமாக அவரோடு வாதிட்டுக் கொண்டிருந்தார்கள் ஃபேஸ்புக்கில்.

என்னுடைய சென்னை பேருந்து இரவு ஒன்பதே முக்காலுக்கு என்றவர்கள் பத்தரை வரைக்கும் காக்க வைத்ததால் ரயிலடி சரஸ்வதி லாட்ஜ் முன்னால் கடங்கநேரியான், ஆன்மன், கணபதி அண்ணன் மற்றும் நானுமாக ஆளுக்கு இரண்டு இட்டிலியைப் பிய்த்துப் போட்டுக்கொண்டு திரும்ப பெரியார் பேருந்து நிலையம் (ஜங்ஷன்) வந்தோம்.  அங்கே கொஞ்சநேரம் ஊர்வம்பளந்துவிட்டு, பஸ்ஸைப் பிடித்து சென்னைவந்து இறங்கியதும் மறுபடியும் வேலைகள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டன. கிட்டத்தட்ட மேல்மூச்சு கீழ்மூச்சுத்தான் வாங்கலை. 

நேரம்கிடைக்கும்போது, அடுத்த கடிதம் எழுதுகிறேன். நீங்கள் பதிலேதும் அனுப்பாவிட்டாலும்...


தோழமையுடன்,
-கார்த்திக் புகழேந்தி,


ஜாகை : சென்னை.
வலசை : வள்ளியூர், ராஜபாளையம், திருநெல்வேலி
பயணம் : 6-7-8, டிச.2017 (மூன்றுநாட்கள்) 
எழுதியது : 13-12-2017 





Comments

  1. விரிவான விபரம்...
    அறியாத தகவலை படித்து அறிந்து கொண்டேன் நண்பரே.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil