வற்றாநதி தந்த அன்புசெய் மனங்கள்

Image may contain: 1 person, standing, hat, beard and outdoor              கார்த்திக் புகழேந்தி ... கார்த்திக் புகழேந்தின்னு ரெண்டு பேரா ன்னு கேட்டராதீங்க... ஒருத்தர் தான்.... அவரின் கதைகளையும், கவிதை களையும் வாசித்துவிட்டு அப்படியே சில மணிநேரங்கள் அந்த நொப்பத்திலேயே இருந்து கிடந்திருக்கிறேன். எதார்த்தம் துளிர்க்கும் வரிகளில் ஏன் சிலமுறை அழுது அரற்றியிருக்கிறேன். 

அவரின் சீர்மேவும் வரிகளில் ஆழ்ந்து பயணித்துக் கொண்டிருப்பேன்..திடீரென வரும் நகைச்சுவைக்கு இடம் பொருள் எதுவுமின்றி இடிச் சிரிப்பை உதிர்த்துவிட்டு என்னவென்று கேட்பவருக்கு இதனால்தான் இப்படிச் சிரித்தேன் என்று சொல்லத்தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துப்பின் வெட்கமாய் குனிந்திருக்கிறேன். நட்பு, தாய்மை, தோழமை, அதோடு தித்திக்க தித்திக்கக் காதல் என்று தமிழ் பேசும் நெல்லைக்காரர்.

வரிகளைப்பார்த்து வயதை அனுமானித்து ஏமாந்த ஏராளம் பேரில் அடியேனும் ஒருவன். நிறையப் பேசியதில்லை. ஆனால் நிறையத் தெரிந்துகொண்டேன். "வற்றாநதி" என்ற தனது முதல் நூலின் மூலம் "பொருநை" (தாமிரபரணி) நதியோரத்து மக்களின் வாழ்வியல்களை, அன்பு பெருக்கெடுக்கும் தருணங்களை, நமக்கெல்லாம் இதுபோன்ற நட்பெதுவும் வாய்க்காதா என்று ஏங்க வைக்கும் நட்பின் உயர்ச்சிகளை, போகிற போக்கில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுகின்ற வழக்கங்களை, கதைகளில் வலம் வரும் ஒவ்வொரு பாத்திரமும் என்னோடு பேசுவது போன்ற உணர்வுகளை என்று நான் அகத்திலே உணர்ந்தவை ஏராளம்..ஏராளம்.

"வற்றாநதி" தன் வரிகள் மூலம் தாமிரபரணி குறுக்குத்துறையில் என்னை நீராட்டி, நெல்லைச்சீமை மக்களோடு என்னை பேச வைத்து, சில முறை என்னையும் அவர்களோடு ஏங்கவைத்து, அழ வைத்து, நிறைய நெகிழ வைத்து, இன்னும் நிறைய வைத்துகளை சொல்லலாம்...

நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டுதான் படித்து முடித்தேன். ஆசையாய்ப் படிக்க எடுக்கும் போதே மகன் விளையாடக் கூப்பிடுவான் அல்லது வீட்டில் வேறு வேலை சொல்வார்கள். எப்போதும் இந்தப் புத்தகத்தையே வைத்திருந்த காரணத்தால் என் மகன் இது என்ன புத்தகம் என்றும் படத்தில் இருப்பவர் யாரென ஓர்நாள் வினவினான்? மூன்று வயதுடைய என் மகனுக்கு விளக்கமாய்ச் சொல்ல முனைந்து "கார்த்திக் புகழேந்தி" என்ற மாமா ஒருவர் எழுதிய கதைப்புத்தகம் என்றேன்.

எடுத்த எடுப்பிலேயே "கார்த்திக் சம்மந்தி" மாமாவா? என்றான்... திரும்பத்திரும்ப திருத்திச் சொல்லியும் பயனில்லை. இப்போது எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் "கார்த்திக் சம்மந்தி" மாமாவின் புத்தகமா என்று கேட்டுச் சிரிக்கிறான்.

நீங்கள் பொள்ளாச்சி வந்த நாளில் நானும் இருந்திருக்க பேராசை கொண்டிருந்தேன்... கடமையும், பணிச்சுமையும் என்னை அனுமதிக்கவில்லை. வருத்தமாய் இருக்கிறது. "வற்றாநதி" என்ற உங்களின் தலைப்பிலேயே இனி என்றும் வற்றாது உங்களின் தமிழ் நதி என்று உணர்ந்துகொண்டேன். அருமை.. அருமை...மனம் நிறைந்த பாராட்டுகள்...ங்க சம்மந்தி !! இன்னும் நிறைய உங்களிடம் எதிர்நோக்குகிறோம்...  


-நப்பின்னைநந்தன்
Devanurpudur DrAnbu Selvan )

Comments

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil