திருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...

சிலமாதங்கள் முன்பு வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க சுகவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து, அதனைத் திங்கள்கிழமை அலுவலகத்தில் உட்கார்ந்து சிலாகிக்கும் வேலையை கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தேன். உங்களில் யாரோ வைத்த கண்ணால் அது கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வாரங்களாக நிகழாமல்ப்போய், ‘கிட வீட்டிலே’ என்று அடைத்து வைத்து வேலை வாங்கிவிட்டது.

பனுவலில் ஆறாவது தொல்லியல் சுற்றுலா அறிவித்தபோதே, இந்த தடவை விடக்கூடாது என்று எல்லா நடவடிக்கைகளையும் கச்சிதமாகச் செய்துவைத்துவிட்டு முதல் நாள் இரவில் உறங்கப் போனேன். ஒவ்வொரு முறையும் நண்பர் கேசவராஜ் இந்தப் பயணங்களில் உடன் இருப்பார். இந்த தடவை மனிதர் பிராஜக்ட் ரிவ்யூ என்று பின்வாங்கிக்கொள்ள துணைக்கு மற்ற நண்பர்களைஅழைத்தேன்.  ஆகா ஏழு பேர் என்று நெஞ்சு நிமிர்த்தும் முன்னே மூன்று பேர் லீவ் லெட்டரை நீட்டிவிட்டார்கள்.

நான்குபேராகக் கிளம்புகையில் அகரமுதல்வனையும் ‘வாருங்கோ’ என்றழைத்தேன். மனிதர் ஐந்தரை மணிக்கே பனுவலில் நின்றுகொண்டு போனடித்தார். சாவகாசமாகக் கிளம்பி, அங்குராசுவோடு இணைந்து பனுவலுக்குப் போய் காத்திருந்து, ‘படிவிருதாளர்’ மணிவண்ணன் அவரின் புகைப்படங்களுக்கு முகங்காட்டி, ஏழுமணிக்கு பேருந்திலேறி, கிண்டி தாண்டவும் குமரேசன் அண்ணன் மற்றும் சேர்மராஜ் என்று மற்ற குழுவினரோடு ஒன்றிணைந்திருந்தோம். (மூன்று பத்திகள் சுய விளம்பரத்துக்கே தீர்ந்துபோனதால் இனி நேராக திருவலங்காட்டிலே வண்டியை நிறுத்திவிடுவது உத்தமம். )

திருவலங்காடு பற்றி முன்பொரு பனுவல் சுற்றுலாவிலே அறிந்தேன். ராஜேந்திரனின் அரச முத்திரையோடான செப்பேடுகள் கிடைத்த ஊர் என்று பேராசிரியர் சொல்லியிருந்தார். பிறகு கொஞ்சம் தேடிப் பார்த்ததில் அது சைவத்தில் முக்கியமாக அறியப்படும் ஐந்து சபைகளில் இரத்தின சபை என்று தெரிந்தது. நெல்லை சைவத்திற்கு முக்கியமான ஊர் (தின்பதில் அல்ல). அங்கே சித்திர சபையாக குற்றாலமும், தாமிர சபையாக நெல்லையப்பர் கோயிலும் இருக்க, மதுரை வெள்ளி சபையும், சிதம்பர பொற்சபையும் என நான்கு சபைகளையும் கண்டிருக்கிறேன். திருவலங்காட்டின் ரத்தின சபையே மிஞ்சி யிருந்தது.

காரைக்கால் அம்மையார் கதையை நெல்லைக் கண்ணன் ஐயா சொல்லக் கேட்க வேண்டும். ஒருதடவை சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சிறந்தவரா! இல்லை சிவனுக்கே தாயான காரைக்கால் அம்மை சிறந்தவரா என்று ஒரு பட்டிமன்றத்தில் தலைப்பு வைத்திருக்கிறார்கள். போச்சா! பாரதி பாஸ்கருக்கு சிறப்பு அர்ச்சனை ஐயா வழங்கியதை சென்னை புத்தகக் கண்காட்சி அறியும்.

சைவ வைணவ எதிரெதிர் முழக்கங்களை திருநெல்வேலியில் பயங்கரமாகக் கேட்கலாம். ஆயர்குடி என்பதால் நம் சொந்தபந்துக்கள் எல்லாம் முகுந்தா முகுந்தா என்பார்கள், ஆச்சி என்ன நினைத்தாளோ நம்மை திராவிடக் கடவுள் முருகனின் முன்னால் கொண்டுபோய் நிறுத்திவிட்டாள். ஆக நடுவே உட்கார்ந்து இந்த சைவ வைணவ பேச்சுவார்த்தைகளைக் கேட்பதில் நமக்கு கச்சிதமாகப் பொழுது போகும். அப்படிக் கேட்ட கதைகளில் ஒன்றுதான் காரைக்கால் அம்மையார் கதை. பெரிய புராணம் சொல்லும் அவர் கதை நிகழ்ந்த திருவலங்காட்டு கோயில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு பேராசிரியரின் பேச்சைக் கேட்டோம்.

முதலாவதாக இங்கே கிடைத்த செப்பேடு பற்றி விவரித்தார். பிறகு மெல்ல கதைகள் வளர்ந்து இராஜேந்திரனுக்குப் பிறகு வரிசையாக வந்த சோழர்களின் கதைகளுக்குள் நுழைந்தது. ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்ற ரகசியம் இந்த பயணத்தில் ‘ரிவீல்’ செய்யப்பட்டது. கூடவே அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘சிட்டிசன்’ க்ளைமாக்ஸ் ரீதியிலான தண்டனை பற்றிய கல்வெட்டுத் தகவலையும் விவரித்தார். பொன்னியின் செல்வன் ஆர்வலர்கள் மேற்படி விபரங்களுக்கு பேராசிரியர் பத்மாவதி ஆனையப்பன் அவர்களின் புத்தகத்தை வாசிக்க.

இரண்டாவது அமர்வில் பழையனூர் நீலியின் கதையும், சொன்ன வாக்கைக் காப்பாற்ற இயலாமல்  ‘ஆகுதி’ பாய்ந்த வேளார்ளர்கள் கதையும், பிறகு காரைக்கால் அம்மையார் கதையும் விவரித்தார். கோயில் முழுக்க நடந்தோம். நல்ல காற்றும், இரைச்சல் இல்லாத அமைதியும் மனசைப் போட்டு வாங்கியது. அகரமுதல்வனிடம் கேட்டேன் பயணம் எப்படி என்று. ‘நாலாவது வகுப்பில் எனக்கு காரைக்கால் அம்மையார் பாடத்திட்டத்தில் உண்டு. நான் தலையால் நடக்க நினைத்த இடத்துக்கு நீங்கள் பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள் புகழ்” என்றார்.

எப்போதும் இந்த பேருந்தில் நமக்கு லாஸ்ட் பெஞ்சே வசதி! போனமுறை நான் கலந்துகொண்ட பயணத்தில் அருண் சம்பந்தன் பாடிய எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்களுக்காகவே நான் அவருக்கு நண்பனானேன். இந்த முறை தலைவன் இல்லாதது பெருங்குறை. தீபக் கூட வரவில்லை. அட அ.கா.ஈஸ்வரன், தயாமலர் ஆகியோர் கூட வராதது ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் எல்லா பயணத்திலும் அன்றொரு நாள் மட்டும் அறிமுகமாகி பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் போகிற பனுவல் வாசகர்கள் இருந்தார்கள். அவர்கள் வழமைபோல பல ஏ.ஆர் ரஹ்மான் பாடல்களை விடிவி கணேஷ் போல இனிமையாகப் பாடினார்கள். என்கூடே வந்தவர்களுக்கு ரசனை பத்தவில்லை. ஆனால் நான் மிக ரசித்தேன் தோழமைகளே!

பாடிக்கொண்டே போகவேண்டிய இடத்தைக் கோட்டை விட்டுவிட்டோம். பழையனூர் சந்துக்குள் பஸ் நுழைந்ததும் சந்தேகத்தில் இறங்கி அங்கு நின்றுகொண்டிருந்த பைக்காரரை அணுகி பக்கத்தில் இருக்கும் சாட்சிபூதத்தார் சிவன் கோயிலை விசாரித்தோம்.  ‘அவர் வாங்க போலாம்’ என்று அழைத்துப் போவதிலே குறியாய் இருந்தார். ஐயா முப்பது நாப்பது பேர் இந்த பைக்கில் ஏற முடியாது வழியைச் சொல்லுங்கள் என்றேன். அவருக்கு என்மேலே அப்படி என்ன பாசமோ நீங்களாச்சும் வாங்க என்று கூட்டிப் போய்விட்டார். போய் பார்த்தால் தேடிவந்த கோயில் அல்ல அது. குழுவினர் அதற்குள் வண்டியிலிருந்து இறங்கி நடந்து பாதிதூரம் வந்துவிட்டார்கள்.  ‘சரி பாடிக் கொன்றதற்கு பலிவாங்கிவிட்டோம்’ என்றார் முகுந்தன். சத்தியமாய் முகுந்தன் தான் அப்படிச் சொன்னார். நம்புங்கள்.

அது என்ன சாட்சி பூதத்தார் என்பதை விளக்கினார் பேராசிரியர். பழையனூர் நீலி என்ற பெண் தன்னை  மணந்து ஏமாற்றிக் கொன்ற கணவனை அடுத்த சென்மத்தில் காவு வாங்க நினைக்கிறாள். அவன் பிறப்பை அறிந்த சோதிடர்கள் அவன் காவலுக்கு பூசிக்கப்பட்ட கத்தி ஒன்றைத் தருகிறார்கள். வணிகனான அவன் அன்றைக்கு வணிகம் செழித்திருத்த திருவலங்காட்டில் வியாபாரம் பண்ண வருகிறான். (என்னைக்கூட கத்திரிகாய், வெண்டைகாய் தலா அரைக்கிலோ வாங்கிய பிறகே விட்டார்கள்.)

இவன் தன் கணவன் என்று பேயாக வந்த பெண் அவ்வூரின் தலைமையினராகிய வேளாளர்கள் அறுபது பேரிடமும் மன்றாட, அவள் கணவனோடு சேர்த்து வைக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் என்ன கத்தி என்று அதையும் நீலி வாங்கிக்கொள்ளச் செய்கிறாள். இவள் என்னைக் கொன்றுவிடுவாளே என்று வணிகம் தயங்க, அப்படி நிகழவெல்லாம் விட மாட்டோம் இது சத்தியத்துக்குக் கட்டுப் பட்ட ஊர் என்று விடைபெறுகிறார்கள். காலையில் வந்து பார்த்தால் வணிகண் சடலம் மட்டும் கிடக்கிறது. நியாயம் செத்துப் பேச்சு என் ராசா என்று யாரோ அழுதிருக்க வேண்டும். அறுபத்து ஒன்பதுபேரும் சாட்சிபூதத்தார் கோயில் முன்பு தீக்குள் பாய்ந்து உயிரை விடுகிறார்கள். மிச்சமொருவர் வயல்புறத்தில் உழுதுகொண்டிருக்க விஷயமறிந்து அவரும் கழுத்தறுத்துக் கொண்டு மாய்கிறார்.

நாங்கள் அவர்கள் தீப்பாய்ந்த மண்டபத்திற்குப் போனோம். திருவலங்காடு சிவனின் தேரடியிலிருந்து ஐநூறு சொச்சம் மீட்டரில் சாட்சி பூதத்தார் கோயில். எதிரே குளம். குளத்தில் மருங்கில் பழைய கல் மண்டபம். யாரோ முதலியார் ஒருத்தர் கட்டுமானம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். அதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று சொன்னால் நீங்கள் சரியாக சோழ சாம்ராஜ்ஜியம் உதிப்பதற்கும் முன்னால் என்று புரிந்துகொள்ளவேண்டும். உள்பக்கமாக அறுபத்தொன்மர் தீப்பாய்ந்த வரலாற்றை புடைப்பு சிற்பமாக வரைந்திருக்கிறார்கள். எகிப்தியன் பாறை சிற்பங்கள் போல இருந்தது. முள்ளிவாய்கால் முற்றத்தின் மினியேச்சர் என்று காட்சிப் படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு பத்ரகாளி கோயில் தெப்பத்தின் ஆல நிழலில் மதிய உணவு பரிமாறினார்கள். பயணத்துக்குச் சேட்டை செய்யாத உணவு. கோயிலின் பின்னால் கிடந்த கல் ஒன்றைப் பார்த்ததும் ‘பிரம்மஹத்தி’ கதை ஒன்றைச் சொல்லி நேரங்கடத்திக்கொண்டிருந்தேன் நண்பர்களோடு. அந்த பெரிய தெப்பத்தின் குளிர்ச்சியில் இளைப்பாறினோம். சொல்ல மறந்தேனே! சாட்சி பூதத்தார் கோயிலில் அற்புதமான கிணறு ஒன்று இருந்தது. பல வருடங்களுக்குப் பின் கிணற்றில் நீர் இறைத்தேன். அகரமுதல்வல் லாவகமாய் வாளி நிறைக்க இறைத்தார். பிறகு என்ன வேண்டுதலோ பாத கமலங்களை நீரால் குளிர்விக்க பலருக்கு உதவினார். கிணற்றுத் தண்ணீர் யாழ்பாணத்து இளநீராய் சுவைத்தது.

மதியம் மூன்றாவது அமர்வில் இதுவரையிலான பயணத்தைப் பற்றி, சிவனை அடைய மன்னர்கள் செய்யும் காரியங்கள், பள்ளிப்படை கோயில்கள் போன்றவை பற்றியெல்லாம் பேராசிரியர் விவரித்தார். உண்ட மயக்கத்தையும் மீறி உரையில் பலர் ஆழ்ந்திருந்தோம். கொஞ்சம்பேர் நிழலில் முதுகைச் சாய்த்தார்கள். மூன்று மணிக்கெல்லாம் திட்டமிட்டபடி திருவலங்காட்டிலிருந்து தக்கோலம் புறப்பட்டோம்.  மீதியை நாளைக்குச் சொல்லவா! இல்லை  தைரியமாக வாசிக்கப் போகிறீர்களா! சரி விதி யாரை விட்டது!

தக்கோலம் போய் இறங்கினபோதே கோயில் நடை சாத்தியிருந்தது. விளக்கு பூஜைக்கு அடித்திருந்த பேனரைப் பார்த்து அதிலிருந்து ஊர்தலைவருக்கு போன் அடித்தேன். சிபிஐ ரெய்டு என்று சொல்லலாமென்றுதான் நினைத்தேன். வம்பு எதற்கென்று ஆர்கியாலஜி துறையிலிருந்து முப்பது பேர் வந்திருக்கிறோம் என்றது அரைமணியில் வந்துட்றேன் சார் என்றார். அதுவரைக்கும் என்ன பண்ண… கோபுரத்தில் இருந்த சிற்பங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். நின்று கொண்டிருந்த ட்ராக்டரில் ஸ்டியரிங் ஒடிப்பது போல் படமெடுத்தேன். முகநூலில் போடும் போது உங்களை ஏமாற்றி விடுகிறேன் என்று குற்றம் சாட்டக்கூடாது.

பக்கத்தில் ஆறு ஓடுகிறதாகச் சொன்னார்கள். ஜலநாதர் ஆலயத்தில் ஆறு ஓடவில்லை என்றால் தானே ஆச்சர்யம். ஆற்றுக்குச் செல்லும்போதே குழுவினர்கள் சிலரும் இணைந்துவிட்டார்கள். முட்டளவு தண்ணீரில் இறங்கி பெண்கள் சிலர் படம் எடுத்தார்கள். ஆண் நண்பர்கள் இறங்க நிறைய யோசித்தார்கள். இப்போதுதான் தெரிகிறது சென்னைக்குள் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க இந்த ஆண்களே காரணம். தண்ணீர் என்றால் பத்தடி தள்ளி நிற்கிறார்கள்.

ஆற்றின் அக்கரைக்கு முகுந்தன் பெண்கள் சிலர் வர நான் அக்கரையில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவரிடம் கதைகேட்கப் போனேன். ஆற்றின் பெயரை அவர் வட்டாரத்தில் ‘பூஹாளம்’ என்கிறார்கள். அது கொற்றலை என்றழைக்கப்பட்ட கொசஸ்தலை. சென்னை வெள்ளத்தில் அறிந்திருப்பீர்களே. அதேதான். பூண்டி ஏரிக்குச் சென்று செம்பரம் பாக்கத்தில் கலக்கிறதைச் சொன்னார். ஏன் இந்த தக்கோலத்துக்குத் திருஊறல் என்று பேர் இருந்தது என்று கேட்டேன். ஊறல் என்றால் வேறென்ன ஊற்றுத்தான் அதோ இருக்கே அந்தக் கோயில் தான் ஊற்றுக்கு உறைவிடம் என்று இன்னொரு சிறிய மண்டபத்தைக் காட்டினார். அது கோயில் போல இல்லை. அதைவிட முக்கியமாக உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றார்.

 ‘குதிக்கப் போறீங்களா ஜீ!’ என்றார் குழு நண்பர். அவர் அப்படிக் கேட்டுக் கொண்டுருக்கும்போதே ஆள் பார்க்காமல் உள்ளே குதித்துவிட்டேன். பழைய மண்டபம் அதன் முன்பாகத்தில் சிறு தெப்பம். ராணி மாதிரியானவர்கள் குளிக்கும் இடம் போல தேர்ந்த வடிவமைப்பு. அட இது என்ன மீன் சின்னமா! போடு! பாண்டிய மன்னன் தொடர்பு இருக்கும்போல. கெல்வெட்டு இருக்கிறதா? ஒன்றுமில்லை.. கொஞ்ச நேரம் தனியாக வேறு ஏதாவது காணச் சிக்குகிறதா என்று தேடினேன். அவ்வளவு சளைத்தும் அந்த மண்டபத்துக்கு வாயில் என்று எதுவும் இல்லாததை அப்போதே அறிந்தேன். கல் சன்னல்கள் வைத்திருக்கிறார்கள். சரி என்னவோ என்று குழுவினர் இருந்த இடத்திற்கு விரைந்தேன்.

சுற்றுப் பிரகாரங்கள் நுழைந்து, சிலைகள் பற்றி விவரித்து, தக்கோலத்தில் நிகழ்ந்த தாட்சாயிணியின் கதையை விவரித்து, தமிழ்க்கடவுள் முருகனின் மண்டபத்தில் நான்காவது அமர்வில் ஒன்றிணைந்தோம். கோயிலின் அமைப்பு எப்படி இருக்கும். தக்கோலத்தில் நடந்த போர், இங்குள்ள சிற்பங்களில் காணக் கிடைக்கும் தொன்மை, தடயங்கள் ஆகியவற்றைக் குறித்து பேராசிரியர் விவரித்தார். பின் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தையும், பண்டைய அடையாளங்களைக் காப்பதின் அவசியத்தையும்  கூட விவரித்தார்.

தக்கோலம் கோயிலின் உபயதாரரின் மகனான விஜயராகன் என்பவர் பேராசிரியரின் உரை முடிந்தபிறகு அவர் குறிப்பிட்ட இடங்கள் இங்கு பக்கத்தில் எங்கெங்கு இருக்கிறது என்று சில  ‘ஹிண்ட்’களைக் கொடுத்தார். அடேயப்பா! புடி ஆளை என்று அவரைக் கேள்விகளால் குடைய இன்னும் பல தகவல்களை உதிர்த்தார். மேய்ச்சல் நிலமான முல்லையும், உழவு வயலான மருதமும் ஒன்றிணைந்து காணப்படும் ஒரே இடம் தக்கோலம் தான் என்றார். கல்லாற்றுக்கு பெயர் அமைந்த காரணம், தக்கோலத்தின் பெயர்காரணம் (தக்கன் ஓலமிட்ட தலம் தக்கோலம்) என்றெல்லாம் தகவல்களை இரைத்தார். அதெல்லாம் விட ஊறல் மண்டபத்தில் மீன் சின்னத்தைப் பார்த்ததும் ‘பாண்டியன்’ தடயமோ என்று அல்ப ஆசைகொண்ட எனக்கு அது, ‘நீரோட்டத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று விளக்கினார். ஆகஸ்டில் 2-ல்தக்கோலம் பற்றி தன்னுடைய புத்தகம் வெளியாகிறது என்றார்.  தொடர்பெண்ணை வாங்கிக் கொண்டேன்.

இறுதியாக கடை ஓனர் முகுந்தன் பேராசிரியருக்கு நினைவுப் பரிசு கொடுத்து சிறப்பித்தார். கம்பெனி ஆர்டிஸ்டான என்னை வழக்கம்போல பேசச் சொன்னபோது ஒரு காரியம் செய்தேன். இப்போது இன்னார் பேசுவார், அடுத்து நீங்கள், நீங்கள் என்று வந்திருந்த அத்தனை பேரையும் பேசும்படி செய்தேன். முதல் தடவையாக இத்தனை பேருக்கு மத்தியில் பேசுகிறவர்கள் என்று அடையாளம் கொள்ளும்படி சிலரின் குரல் அதிர்ந்ததை உணர்ந்தேன். மகிழ்ச்சியாய் இருந்தது. சென்னைக்காரர்கள் நிறையபேர் தமிழ் பேசினார்கள். அதுவும் மனந்திறந்து பேசினார்கள். முப்பது சொச்சம் பேர் பேசி முடித்தபிறகு லெச்சர் எடுப்பது இருட்டுக்கடை முன்னாடி நின்று பஞ்சுமுட்டாய் விற்பது என்பது உங்களுக்கே தெரியும். நன்றி வணக்கம் என்று ரெண்டெ சொல்லில் முடித்துக்கொண்டேன். கூட்டமே கலாய்த்தது. அன்புக்கு நன்றி.

பிறகு ஊர்த்திரும்பும் வழியில் ஒரு அட்டகாசமான புகைப்படம் எடுத்தேன். பாட்டுக்காரர்களோடு ஜோதியில் ஐக்கியமாகிக்கொள்ள குரல் போகும் வரைக்கும் பாடித் தீர்த்தோம். மகிழ்ச்சி மிகுதியில் ஒவ்வொருவரும் விடைபெறும் போதெல்லாம் ‘லாலே லாலலே லாலா! ஆ…….’ என்று வடிவேலு பாணியில் வழியனுப்பி வைத்தோம். ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமையை உபயோகமாகவும் அதே வேலையில் மகிழ்ச்சிகரமாயும் மாற்றித் தந்த நண்பர்களுக்கு நன்றி என்று பனுவல் ஆர்கியாலஜி டூர் வாட்ஸப் குழுவில் எழுதி அனுப்பினேன். மெஸேஜ் போகவே இல்லை. காரணம் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டலில் கவரேஜ் இல்லை. அடபோப்பா!

-கார்த்திக். புகழேந்தி 
25-07-2016

பி.கு : எழுத்துப்பிழைகள் பிறகு ஆற அமர சரிபார்க்கப்படும். 











அந்த அற்புத படம் - நாங்களே சொல்லிப்போம்.


Comments

  1. Enjoyed your narration. Best Wishes for many more such journeys...
    - Shanthi Nainar

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil