கே.எஸ்.ஆர் - K.S.Radhakrishnan.

எனக்கு நன்றியுடன் சொல்லவேண்டிய வார்த்தைகள் நிறைய இருக்கின்றது. எதுவும் எழுதக் கூடாது என்று தடுத்துவிட்டார்.  ஆனாலும் நினைத்தமட்டும் எழுதத் தான் வேண்டும்.

கே.எஸ்.ஆர்  - K.S.Radhakrishnan.
_______________________________



ஏதாவது ஒரு புதிய காரியத்தைச் செய்து முடிக்க நினைத்தால், உடனே அவர் முன்னால் போய் நிற்பேன். சாதக பாதகங்களைப் பற்றியெல்லாம் கூட ஒரு வார்த்தை பேசாமல்,  “தாராளமாச் செய்யுங்க நான் என்ன உதவி செய்யனும்” என்பார். ஒரு கடுஞ்சொல் கூட கிடைக்காது.

எந்த காரியமானாலும் தனியே அழைத்து என்னுடைய கருத்து இது; பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்று தெளிவுபடுத்துவார். தனிமனித சுதந்திரத்தையும், சுயமரியாதையையும்  மதிக்கின்ற மனிதர்.

ஒரு அரசியல் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவரின் வீட்டில் அதற்கான எந்த படோபடமும் இருக்காது. இதுவரையிலும் நானும் பார்த்ததில்லை. அண்ணன் வாழ்க, தலைமை வாழ்க போன்ற கோசங்கள் எதையும் கொஞ்சமும் சட்டை செய்ய மாட்டார். முதலில் எல்லாம் நிறைய ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.

எளிமையான குணம், யாரிடம் நெருங்கிப் பேசாத, அதே நேரம் மனதிற்கு நெருக்கமாகிவிட்டால் அவர்களை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிற மனம். இதெல்லாம் தான் அவர்மீதான மதிப்பை உயர்த்திச் சென்றது.

சின்ன மரக்கன்றை நட்டு வைத்திருந்தால் கூட கூப்பிட்டு வைத்து பாராட்டுகின்றவர். கதைகள், கட்டுரைகள் என்று யார் எழுதின சிறு துணுக்குகள் அவர் கண்ணில் பட்டால் கூட சரமாரியாக பாராட்டுவார். இவ்வளவு ஏன் ஒரு புகைப்படத்தை காண்பித்தால் கூட மனத்திலிருந்து அவருடைய பாராட்டு வந்து விழும்.

பல தகவல்களைக் கேள்விப்படும் போது ஆச்சர்யமாக உணர்ந்திருக்கிறேன். கழகங்களுக்குள் இருந்துகொண்டு தனக்கென  ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, தவறுகளுக்கெதிராக குரல் கொடுக்கும் அந்த போராட்ட குணமாகட்டும். விடுதலைப் புலிகள் தொடங்கி ஈழதேசத்து புலம் பெயர்ந்த மக்கள் வரை இவரோடு கொண்டிருந்த நெருக்கமும், 80களில் சந்தித்த நெருக்கடிகளும் கேள்விப் படுகின்றபோது, இதுவே வேறு யாராகவுமிருந்தால் இந்தக் காரணங்களை வைத்துக்கொண்டே தனி அரசியல் கட்சி தொடங்கி விளம்பரம் தேடிக்கொள்வார்களே என்று தோன்றும்.

ஜூனியர் விகடன் என்று நினைக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் சந்தித்துக் கொண்டதுண்டா என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அளித்த பதிலில், “ திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திருமணம் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்தது. அந்தத் திருமணத்தில் பிரபாகரன் கலந்துகொண்டார். மேடையில் இருந்து இறங்கி வந்தபோது இருவரும் பரஸ்பரம் வணக்கம் வைத்துக் கொண்டதாகத் தகவல்” என்று கூறியிருந்தார்கள்.

 “ஏன் சார் திருமண வீட்டில் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையா நீங்கள்” என்று கேட்டேன். அப்போது, “தம்பி பிரபாகரன் தமிழகத்தில் சில இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தார். அவரை பத்திரிகை வெளிச்சத்தில் காண்பிப்பது சரியானதென்று யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.

ஒரே ஒருபடம் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்டு தமிழர்களின் தலைவர் ஆனவர்களை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். இப்படி அரசியல் நிகழ்வுகள் தாண்டி, பொதுக்காரியங்கள் என்று பார்த்தால், விவசாயிகள் போராட்டம் தொடங்கி நதி நீர் இணைப்பு, கண்ணகி கோயில், தூக்குதண்டனை ரத்து, என்று அவர் கைவைத்திருக்கும் சமூக நல காரியங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அடுத்த தலைமுறைக்கும் இப்படியான கடமைகள் நிறைய இருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாக, அவருடைய செயல்பாடுகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி தமிழகத்தின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுக்கான தொழில்நுட்ப செயலி ஒன்றை உருவாக்கும் திட்டம் ஒன்றும் மனதிலிருக்கின்றது. விரைவில் அவரே அறிவிப்பார் என்றும் நம்புகிறேன்.

கடந்தவாரம் கூட சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கும் எதிரான மனு ஒன்று தயாரித்து டெல்லி சென்று, பூனைக்கு மணிகட்டிவிட்டு வந்திருக்கிறார். வழக்குமன்றங்களை நாடியதும் அரசு இயந்திரங்கள் பரபரக்கத் துவங்கும் என்று சொல்லும் போது அரை நூற்றாண்டு களைப்பு என்று எதுவுமே இல்லை அவர் வார்த்தையில். தொடர்ந்து ஏதேனும் ஒரு பொதுக்காரியத்தில் இயங்கிக் கொண்டே இருப்பார்.

எல்லாவற்றையும் தாண்டி, கிராமங்களின் மீதான அவருடைய நேசம் அப்படியே ஆளைச் சாய்த்துவிடும். கோவில்பட்டி பருத்தி வியாபாரிகள் முதல், கழுகுமலை எள் செக்கு ஆட்டுகிறவர்கள் வரை பழைய நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டால் நேரமும் பொழுதும் கரைந்து போவதே தெரியாது.

இம்மாதிரியான அனுபவங்களை அவர் புத்தகமாக்கித் தரவேண்டும் என்ற விருப்பத்தை கேட்காமலே வைத்திருக்கிறேன்.  60-90வரைக்குமான அந்த வாழ்க்கையை உங்கள் சொல்லில் திரையிலோட்டிப் பார்க்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

கரிசல் மண்ணின் மைந்தனாக, அந்த மண்ணையும், மக்களையும், நேசிக்கிறவராகவே கே.எஸ்.ஆர் வாழ்கிறார். கரிசல் மண் கொடையாகத் தந்த படைப்பாளிகளை அவர் கொண்டாடுகின்ற பண்பை வைத்தே அவர் நேசத்தை எடைபோட்டுவிட முடியும்.

நீங்கள் இந்தியா முழுக்க அலைந்து திரிந்து, தேடிக் கிடைக்காத புத்தகங்கள் அவர் வீட்டில் கிடைக்கும். அவர் ஒரு நூலகம். ஞானப்பழத்தை வாங்க பூமியை மூன்று சுற்றெல்லாம் சுற்றத் தேவையில்லை. இவர் வீட்டை நிறைத்திருக்கும் புத்தக அலமாரிகளைச் சுற்றிவந்தால் போதும். அந்த வீட்டுக்குள் தான் மிகச் சுதந்திரமாய் உலாவுகிறேன்.

என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும், ஒவ்வொரு முயற்சியிலும் ஊக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கும் மரியாதைக்குரிய மனிதர்.

தெற்குச் சீமையின் தாமிரபரணி தீராவாசத்து மனிதர்களிடம் தென்படும் அத்தனை ஈரம் மிகுந்த குணாதிசயங்களும் கொண்ட கே.எஸ்.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்றென்பது காலையில் தான் தெரிந்துகொண்டேன்.

மனம் நிறைந்த வாழ்த்துகள் சார். நீங்கள் வெளிக்காட்ட விரும்ப மாட்டீங்கள். ஆனால் உங்கள் அறிவின் நிழலில் கற்றுக் கொண்டிருக்கும் நான் என்னுடைய நன்றிமிகுந்த அன்பை வெளிப்படுத்தியே ஆகவேண்டுமே! இதற்காக என்னைத் திட்டுவீர்கள் என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திரு. Radhakrishnan KS​ அவர்களுக்கு...

- கார்த்திக். புகழேந்தி | 07-08-2015 | சென்னை | 

Comments

  1. Unmai Karthik.. avarin Facebook pathivugalai padikkum pozhuthu niraya therindhukondu irukindren.. Avar needoozhi vazhga...

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil