சண்டே ரகளைஸ்....



நேற்றுமாலை தேனாம்பேட்டை சிக்னலில் மஞ்சள் தொப்பியுடன்  “தோழன்” அமைப்பின் நண்பர்கள் ஹெட் லைட்டுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். சாலையின் இரண்டு பக்கமும் ஹெல்மெட், சீட்பெல்ட் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு யுவதிகள் இரண்டுபேர்.

அங்கிருந்து எல்லீசு சாலைக்குச் சென்று திரும்பும் போது அண்ணா சிலை அருகே உள்ள சிக்னலில் இன்னும் நிறைய பெண்கள் ரெட் சிக்னல் இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எனக்குப் பக்கத்தில் ஹெல்மெட் அணியாமலிருந்த இரண்டு இளைஞர்களை குறிவைத்து “ஏன் சார் ஹெல்மெட் போடலை?” என்று சீரியஸாகவே முகத்தை வைத்து  வாட்டி எடுக்க, இளைஞர்களுக்கு வெட்கம் தாங்கவில்லை.

விழிப்புணர்வுக்காக விடுமுறை நாட்களில் இப்படி களமிறங்கும் கல்லூரி இளையோர்களைக் காண்மதே மகிழ்ச்சியாக இருந்தது.

அங்கிருந்து பெரம்பூர் சென்று கிரியுடன் கொஞ்சம் ஊர் சுற்றிவிட்டு, ஸ்பெக்ட்ரம் மாலுக்குள் நுழைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். கூட்டமாக மக்கள் இருந்த இடத்தில் எட்டிப் பார்த்தால்! வளர்ப்பு மீன்களைக் தண்ணீர் தொட்டியில் விட்டு, அதில்  கால்களை நனைக்க மீன் வந்து கால்களைக் கடிக்கிறது. ரொம்ப எல்லாம் இல்லை ஐம்பது ரூபாய் தானாம்.

“அடேய் எங்க ஊர்ல நீ சும்மாவே ஆத்துல இறங்கினாப் போதும்” என்று கிரியை நக்கலடித்துவிட்டு நகர்ந்தோம். மேல்மாடியில் வேலை நடக்கிறது போல. அங்கே ஒரு இமிடேஷன் கவுண்டரில் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். காதில் கடுக்கண் அணிந்தால்  “நினைவு சக்தி”  அதிகரிக்கும் என்ற உண்மையை ஒரு பேச்சுக்குச் சொல்லவும். எங்க குத்து செக் பண்ணிடுவோம் என்று, ஒரு மெல்லிய கடுக்கண் (இவங்க பாசையில் ஸ்டட்டாம் ) கண்ணிமைக்கும் நேரத்தில் துளைத்து விட்டார்கள்.  நல்லவேளை அலகு குத்துவதால் என்னென நன்மைகள்ன்னு நான் வாய் திறக்கவில்லை.

அப்படியே பிக் பஜாருக்குள் நுழைந்து, பில்லிங் கவுண்டர் வரைக்கும் போய் “பாஸ் பாஸ் ஒரே ஒரு பிக்கிள் பாட்டில்” என்று  பில் போட்டு,  வெளியே வந்தடைந்தோம்.  க்ரீன் டீ சாப்பிடலாம் என்று ஒரு ஆர்வமாக சாலையோரத்தில் இருந்த ஒரு பழச்சாறு கடைக்குச் சென்று எனக்கு க்ரீன் டீயும் ஆர்டர் செய்தான் கிரி. சுடச்சுட “சாதா டீ” போட்டுக் கொடுத்து கலாய்த்துவிட்டார்கள்.

காசு கொடுக்கும் போது நீங்க எழுத்தாளரான்னு கடையில் இருந்த பெண்மணி கேட்க, “ஆஹா இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே” மூமெண்ட். ஆமான்னு சொல்லவும் முடியாமல் இல்லைன்னும் சொல்ல முடியாமல் எப்படின்னு கேட்டேன். டீசர்ட்டில் வற்றாநதி விளம்பரம் இருந்ததை கைகாட்டினார். அநேகமாக அவர் பேஸ்புக்கில் இருக்கக்கூடும். சிஸ்டர் நான் தான் நான் தான் நேத்து உங்கக் கடையில் ரெண்டு லெமன் ஜூஸ் குடித்தது.

குளக்கரைச் சாலை முனையில் கிரி ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான். டீக்கடைக்கு, சலூன் கடைக்கு இன்னும் சொல்லப்போனால் பெட்டிக்கடைக்கு ரெகுலர் கஸ்டமர் இருக்கலாம். கண்ணாடிக் கடைக்கு யாராவது ரெகுலர் கஸ்டமர் இருப்பார்களா. இருக்கானே! யாரு? நம்ம கிரிதான்.

பெரம்பூர் மேம்பாலத்துக்குக் கீழே ப்ளாட்பார்மில் கடை போட்டு கண் கண்ணாடி விற்றுக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்றைக்கு சொந்தமாகக் கடை வைத்து, தொழில் வளர்த்தவருக்கு நம்மவர் நீண்டகால கஸ்டமராம்.  நான் கண்ணாடி வாங்கி, வாங்கி அவர் சொந்தமா கடை வச்சுட்டார் நான் இன்னும் கண்ணாடி மட்டும் தான் வாங்கிக்கிட்டு இருக்கேன் என்று ஜாலி கம்மெண்ட் விழுந்தது.

அந்தக் கடையில் எடுத்த புகைப்படம் தான் காயத்ரி தன் சுவற்றில் பதிந்தது. அதை ஏன் திரும்ப மறுபடியும் இங்கேயும் காட்டிக்கொண்டு.
இப்படியாக நன்றாக ஊர் சுற்றி கடந்த  ஞாயிற்றுக்கிழமை இனிதே நிறைவுற்றது.

ஆகவே இதன் மூலம் உலகிற்குச் சொல்லவருவது யாதெனில்...
ஞாயிற்றுக்கிழமை எல்லாம் புரட்சிப் போராட்டத்துக்கானது அல்ல. (குறியீடு)

-கார்த்திக். புகழேந்தி
10-08-2015

Comments

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil