குளத்தில் வைத்து எரித்தோம்.



சாலைகள் மீது ஒரு விருப்பு உண்டு. வெயிலடிக்கும் போது தார்வாசனையும், மழையடிக்கும் போது ஈரவாசனையும் கிளம்பும் சாலைகளில் வண்டிகட்டிக்கொண்டு கிளம்புவது ஒரு வயசுச்சேட்டை.

சைக்கிள் ஓட்டப் பழகிய திருநெல்வேலி ரெட்டியார்பட்டி சாலையில் மூட்டைப் பெயர்த்து ரத்தம் வழிந்ததும் குட்டி சொன்னான்.  “ரத்தம் வந்துருச்சில்ல இனி சைக்கிள் ஓட்டப் பழகிக்கிடுவ” என்று. ரத்தம் வந்ததற்கும் சைக்கிள் கத்துக்கொள்ளவும் இடையே இருக்கும் பூர்வாங்க உறவை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை என்னால்.

விளையாடப் போனால் வீடு திரும்பும் போது வெளுத்துக் கட்டும் வழக்கம்  பல்லவர், சோழர் பாண்டியர் காலம் முதல் இப்போது வரைக்கும் பல வீடுகளில் வழக்கத்தில் இருக்கிறது. அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் பொழுதுக்கும் வண்டிச்சாலைகளின் ஓரங்களில் அமர்ந்துகொண்டு போகும் வரும் வண்டிகளை வேடிக்கை பார்ப்பதுண்டு.

ஒவ்வொரு ஊருக்கும் இடையே உள்ள சாலைகளின் தொலைவை குறுக்கே கடக்க மண்பாதைகள் இருக்கும். சில சமயம் குளத்துக்குள் இறங்கி ஒத்தையடிப்பாதைகள் பயணிக்கும். முயல்வேட்டைக்கு அந்த குளத்துக்குள் தான் இரவில் பதுங்குவோம்.

அங்குள்ள பாதைக்கு குளத்துச் சாலை என்ற பெயர் மட்டும் தான் இருந்தது. சாலை என்று அங்கொன்று இருந்ததற்கான அறிகுறிகள் கடந்த ஐந்தாண்டுகள் முன்பு வரை இருக்கவில்லை. குளமும் எப்போதோ தூர்ந்த பெரிய செம்மண் பள்ளமாக மாறிவிட்டது.

நினைவு தெரிந்து பெல்லடித்ததும் காலில் மாட்டியிருக்கும் கருப்பு சூவைக் கழட்டி டிபன் கூடையில் வைத்துவிட்டு, வெறுங்காலுடன் தரையில் விளையாடப் போகும் என்னுடைய கிண்டர்கார்டன் பருவத்தில் அந்தக்குளம் வெள்ள மழை கண்டு நிரம்பி இருந்ததாகச் சொல்வார்கள்.

குளம் வற்றி ஊரே மீன் பிடித்தபிறகு நாங்கள் முயல் பிடித்துக் கொண்டிருந்தோம். அந்தக் கதையை பிறகு எழுதலாம். கவுன்சிலர், வார்டு மெம்பர் என்று ஆளுக்கு ஆள் மெல்ல மெல்ல குளத்தின் கரைகளை நான்கு பக்கங்களும் சுருக்கி, கிடைத்த இடத்தில் ப்ளாட் போட்டு வீடு கட்டிக் கொண்டார்கள்.

பேருக்கு மழை பெய்தால் கொஞ்சம் தண்ணீர் தேங்கிக் கொண்டு குளம் தன் அடையாளத்தை உணர்த்தப் பார்க்கும். அந்தத் தண்ணீரையும் புறத்தூய்மைக்கு சனங்கள் பயன்படுத்திக் கொள்வதுண்டு. பிறகொரு நாள் எங்கள் குடியிருப்புகளுக்கு வரும் தண்ணீர் குழாய் எங்கோ உடைப்பெடுத்த போது, மக்களெல்லாம் தண்ணீருக்குத் தவியாய் தவித்தனர். பம்புத் தண்ணீரை குளிக்க மட்டுமே பயன்படுத்தி வந்தவர்கள் ஊருக்குள்ளே இருந்த குளத்தில் குளித்து வளர்ந்த கதையை சிலாகித்துச் சொன்னார்கள்.

கல்வெட்டாங்குழி இருக்கும் பக்கத்து ஊர்க்காரர்கள் கூட வேய்ந்தான் குளத்தின் வெட்டுப் பங்காளியான ரெட்டியார் குளத்தில் வந்து குளித்துச் செல்வார்களாம். ஊருணி, கண்மாய், குளம், குட்டை, மடு, வாவி, ஏரி, ஏல்வை, ஏத்தம், மோட்டை, நீர்த்தம்பம் என்று ஏகப்பட்ட பெயர்களில் தண்ணீருக்கான சுழிச் சொற்கள் எங்கள் கிழவிகளிடம் வளைய வந்து கேட்டிருக்கிறேன். இப்போது கிழவிகள் ஒவ்வொன்றாகச் செத்துப் போனது.

கடைசியாக ராக்கம்மாளாச்சி செத்தபோது பாணாங்குளத்தில் கொண்டுபோய் எரித்தோம். துட்டிக்கு வந்து வெயிலில் சுட்டவர்களின்  நாக்குக்கு ஒரு வாய் தண்ணியில்லாத அந்த இடத்தில்கூட குளம் இருந்தது என்பதை கிழவியைத் தவிர இனி யார் வந்து என்ன சொல்லி நம்ப.

-கார்த்திக். புகழேந்தி
12-08-2015. 

Comments

  1. குளங்களை புதைத்துவிட்டு புதைகுழியில் சிக்கித் தவிக்கின்றனர்!

    ReplyDelete
  2. //சுட்டவர்களின் நாக்குக்கு ஒரு வாய் தண்ணியில்லாத அந்த இடத்தில்கூட குளம் இருந்தது என்பதை கிழவியைத் தவிர இனி யார் வந்து என்ன சொல்லி நம்ப.//

    இழந்தவைகள்..... :(

    இன்னமும் இழந்து கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  3. நாம் புறக்கணித்து இழந்தவைகள் பல இருக்கு தம்பி....இன்னமும் இழந்து கொண்டுதான் இருக்கின்றோம்....பல...பல குளங்கள் தானே இன்று பேருந்து நிலையங்கள்..நாகர்கோவிலில் கூட குளத்து பஸ்டாண்டு...அப்படி வந்ததுதான்...,,,ம்ம்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil