சென்னை -376





            ஜெண்டூஸ் என்பார்கள் அந்த மக்களை. அவர்கள் தெலுங்கு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களே மதராஸ் நிலத்தில் பூர்வீகமாய் வசித்து வந்தவர்கள். வேப்பேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற சின்னச் சின்ன கிராமங்கள் கொண்டடங்கிய நிலப்பரப்பு அது.  

      பரந்து விரிந்த கடற்கரை, இரண்டு ஆறுகள் கடலைச்சேரும் ஆற்றுக்கழிமுகம். (கூவம் , அடையாறு) பார்த்ததுமே இந்த இடத்தில் வியாபாரத்தைத் தொடங்கலாம் என்று ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் இருந்த ஆர்மகாம் கவுன்சில் உறுப்பினர் “பிரான்சிஸ் டே” முடிவு செய்தார். அடையார் கரை டச்சுக்காரர்களுக்கு, கூவக்கரை பிரிட்டிஷ் காரர்களுக்கு.

            எந்த ஒரு நாடும் பிறநாடுகளை வென்று ஆட்சிக்கு ட்படுத்திய பிறகு தங்கள் வணிகக் கடை விரிக்கும் வழக்கத்திலிருந்து மாறாக இந்தியாவை வணிகத்திற்காக உள்நுழைந்து பிறகு ஆட்சிக்கு உட்படுத்தினார்கள் மேலைநாட்டுக்காரர்கள். அப்படி வணிகம் செழித்த முக்கிய நகரம் சென்னை. சுருக்கமாய்ச் சொன்னால் உலகப்போரில் குண்டுவீசித் தாக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் சென்னை தான். அந்த அளவுக்கு வியாபாரம் இங்கே கொழுத்தது.

            முதலில் இங்கிருந்த பொருட்களை தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி வணிகம் செய்தார்கள். அடிப்படையாக பருத்தி. பிறகு அங்கிருந்து இங்கே இறக்குமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள்.  

            ஆந்திர மசூலிப்பட்டிணத்தில் விளைந்த ஒரு பருத்தி ரகத்தில் செய்த ஆடைகளுக்கு இங்கிலாந்தில் ஏக கிராக்கி. அந்த பருத்தித்துணிக்கு “மஸ்லின்” (மசூலிப்பட்டிணம்?) என்று பெயர். ஒரு முழு சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்துவிடலாம். அத்தனை மெலிதானது. முதலில் மஸ்லின் ஏற்றுமதி செய்தார்கள். பிறகு தங்கள் துணி வகைகளுக்குப் போட்டி என்றது மஸ்லின் நெசவாளர்களின் விரல்களையும், நகங்களையும் ஆதாரமே இல்லாமல் வெட்டி எடுத்தார்கள். 
 
(காளிமார்க் பாட்டில்களை கோக்ககோலா கம்பெனிக்காரர்கள் வாங்கிப் போய் உடைத்த அதே வித்தை தான். மஸ்லின் கதையையே ஒரு தனி கட்டுரையாக எழுதலாம்)

            வெள்ளையர்கள் தங்களுக்காகவும், தங்கள் வணிகப் பொருட்களைப் பாதுகாப்புக்கவும் சென்னையில் கட்டிய ஜார்ஜ் கோட்டையில் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆட்சி பரிபாலனம் நடக்கிறது. ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி முதலில் குடியிருப்புகள் உருவானது. குடிமக்களின் தேவைக்கான முகவர்கள், கூலிகள், வேலை, ஏவல், எடுபிடி ஆட்களும் சூழத் தொடங்கினார்கள். இப்படியாகச் சென்னை
நகரமாக உருவாகத் தொடங்கியது. தங்களை வேறுபடுத்திக்காட்ட நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கறுப்பர் நகரம், வெள்ளையர் நகரம்.

            வெள்ளையர் நகரத்தில் பிரிட்டிஷ்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள் வசித்ததால் அது கிறிஸ்த்தவர்கள் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. இன்றைக்கும் ராயப்பேட்டையில் உள்ள சாலைைக்கு வொயிட்ஸ் ரோடு (Whites Road ) என்றும், மவுண்ட் ரோடு கேஸினோ தியேட்டருக்கு முன்பு உள்ள சாலைக்கு ப்ளாக்கர்ஸ் ரோடு (Blackers Road) என்றும் பெயர் உள்ளது. கறுப்பர் நகரத்தில் வசித்தமக்கள் தங்கள் இனக்குழுக்களோடு வசித்த இடங்களை பேட்டைகளாக அழைத்தார்கள். (இராயப்பேட்டை, கொசப்பேட்டை) . கடல்பகுதிகளோடு தொடர்புடைய மக்கள் வசித்த பகுதிகளுக்கு வாக்கம் (புரசைவாக்கம், பாலவாக்கம்) என்று பெயர் அமைந்தது.

சில ஊர்களுக்கும் மட்டும் பழைய பெயரே நிலைத்தது. (மாம்பலம் - மா அம்பலம், திருவல்லிக்கேணி, மையிலாப்பூர்) இன்னும் சில இடங்கள் பிரசித்தி பெற்றவர்களின் பெயராலும், அங்கு நடைபெற்ற தொழில்களின் அடிப்படையிலும் பெயர் வழங்கப்பட்டது.   உதாரணமாக கோடம்பாக்கம் (கோடா பாக் (Parking?) - நிஜாம் மன்னர் குதிரைகள் நிறுத்தும் இடம்), வெள்ளையர்களின் உடைகளை வெளுத்துக் கொடுக்கும் வேலையாட்களை குடியமர்த்திய இடம் வண்ணாரப் பேட்டையானது. நெசவுக்காக தோற்றுவிக்கப்பட்ட இடம் சிந்தாதிரிப்பேட்டையானது. (சின்னத் தறிப்பேட்டை ).

         சென்னை நகரம், காஞ்சி, தஞ்சை, மதுரை, நெல்லை போன்ற பிற மாவட்டங்கள் போன்று தனித்த புராதன நகரம் இல்லை. அது பழைமையான கிராமங்களுக்கு மேலே போடப்பட்ட ஒரு காங்க்ரீட் சாலை தான் சென்னை.

            சென்னைஇன்றைக்கு நாம் பார்க்கும் ஐ.ஐ.டி வளாகம் போன்ற இயற்கை சூழ்ந்த கடற்கரை வனம். வசிப்பிடங்களுக்காக வளங்கள் அழிக்கப்பட்ட நகரம். அதன் பழமைக்கு ஒரே சான்று, “கூவம் குளிக்கும் நதியாக இருந்தது” என்ற வாக்கியம் தான்.

      16ம் நூற்றாண்டில் கட்டிய கோயில் மயிலாப்பூர் கோவிலுக்குப் பின்னே பல கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த கோயிலே தூய.தோமாவுக்காக (St.Thomas ) கட்டப்பட்டது என்றும், சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் தான் முதலில் அக்கோயில் கட்டப் பட்டு பின் அகற்றப்பட்டதென்றும், டச்சுக்காரர்கள் மாற்றிக் கட்டினார்கள் என்றும் பல கதைகள். 1893ல் இடித்துத்தள்ளப்பட்டு இப்போதுள்ள சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

  ஐரோப்பாவில் பிரிட்டிஷ், பிரெஞ்சுக்காரர்கள் இடையே நடந்த சண்டைகளால் அதன் தாக்கம் சென்னையிலும் அவ்வப்போது வந்து விழுந்தது. 1746ல் பிரெஞ்சுக்காரர்க்ளால் கறுப்பர் நகரமே அழிக்கப்பட்டது. அது சென்னையின் துயர்மிகுந்த நாள்.
            பிரெஞ்சு படைகள் பின்வாங்கிய பிறகு, கறுப்பர் நகர மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. சுவர் எழுப்புவதற்கான செலவை கறுப்பர் நகர மக்களிடமே வரியாக வசூலிக்க முடிவெடுத்தது. அந்த சுவற்றின் அடையாளம் தான் இன்றைய “வால் டாக்ஸ் ரோடு” (wall Tax Road).

            தங்கள் பாதுகாப்பான குடியிருப்புக்காக வெள்ளையர்கள் ஔரங்கசீப் மகனின் ஆட்சிகாலத்தில் நான்கு கிராமங்களை விலைக்கு வாங்கினார்கள். அந்த இடம் இன்ன்றைய நுங்கம்பாக்கம் மற்றும் அதையொட்டிய நான்கு இடங்கள். அதற்குப் பெறப்பட்டவிலை 1500பகோடாக்கள். அதாவது, சுமார் 5250ரூபாய்.
     சென்னையின் பல இடங்களில் ஆங்கிலேய ஆட்சியின் மிச்சங்கள் இன்றும் தென்படுகின்றன. மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் பழைய பெயர் ஐஸ் ஹவுஸ். இன்றைக்கும் பலர் அந்தப் பெயர் சொல்லியே அழைக்கின்றார்கள்.

    “ஐஸ் ஹவுஸ்” என்ற பெயருக்குக் காரணம். 1840களில் அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம் சென்னைக்கு பனிக்கட்டி இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளையர்கள் பனிக்கட்டிகளை காசுகொடுத்து வாங்கிச் சேமித்து பயன்படுத்தினார்கள். இங்குள்ள தட்பவெட்ப நிலையில் மக்கள் பார்த்தே இராத ஒரு பொருள் பனிக்கட்டி. அவர்களுக்கும் ஒரு பவுண்டு நான்கு அணாவுக்கு விற்கப்பட்டது. இறக்குமதி செய்தவர் அதைச் சேமித்துவைக்க கட்டிய வட்டவடிவமான கட்டிடமே இன்றைய விவேகானந்தர் இல்லம்.

        ஆங்கிலேயர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் காலகட்டத்தின் தொடக்கத்தில், இந்த இடங்கள் எல்லாம் ஹைதராபாத் நிஜாமின் ஆளுகையின் கீழ் இருந்தன. அவர்களிடம் நிலங்களை விலைக்கு வாங்கி, பின் அவர்களையே விலைக்கு வாங்கி தங்கள் ஆளுமைகளை நிறுவிக்கொண்டார்கள் மேலை நாட்டினர். காரணம் இங்கே அத்தனை செல்வ வளம்.

            வரலாற்றை சரியாக கவனித்தால், 1800ம்ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் முக்கியமான ஆண்டு. மாவீரன் திப்பு சுல்தான், தெற்கே வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் போரிலும், தூக்கிலிட்டும் கொல்லப்பட்ட ஆண்டு இது.  அதுவரையிலும் போர்கள், போராட்டங்கள் என்று வணிகத்தின் நடுவே தங்களை நிலைநிறுத்த உள்நாட்டில் பல எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் மிருக பலத்துடன் ஆட்சியைத் தொடங்கியது அப்போதுதான். கவனித்துப் பார்த்தால் 1800க்குப் பிறகு நேர் எதிராக நின்று வெள்ளையர்களை உள்நாட்டில் எதிர்த்தவர்கள் யாரும் இல்லை . அங்கிருந்து நேரே வ.உ.சி அறிவித்த 1908ம் ஆண்டு கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தான். (விவசாயப் போராட்டங்கள் அல்லாமல் ) 

           1834ஜூன் 10ம் நாள் “மெக்காலே” இந்த மண்ணில் நுழைந்த அன்றைக்கே இந்திய மக்கள் தங்கள் அடிப்படையான பாரம்பரியங்களை இழக்கத் தொடங்கினார்கள். (அதனால் தான் பள்ளிகளில் 210 ஆண்டுகள் அடிமையாக இருந்தோம் என்று குறிப்பிட்டார்கள் போல 1834-1947)

பிரிட்டிஷ் அரசுக்கு மெக்காலே தன் கடிதத்தில் இப்படி எழுதினான்.

           இந்தியாவின் நீள அகலங்கள் முழுவதும் நான் பிரயாணித்து விட்டேன். முழு இந்தியாவிலும் நான் ஒரு பிச்சைக்காரனையும் பார்க்கவில்லை. முழு இந்தியாவிலும் நான் ஒரு திருடனையும் பார்க்கவில்லை. அப்படி ஒரு வளமான நாடாக இந்நாடு இருக்கிறது. மதிப்பு மிக்க பண்பாட்டையும், உயர்ந்த தன்மைகளையும் இந்நாட்டிற்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காவிட்டால், இந்நாட்டை வெல்ல முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. எனவே, நான் இநாட்டின் பழமையான கல்விமுறையையும், அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் முற்றிலும் வேறாக மாற்றி அமைக்க வழிமொழிகிறேன். அதன் மூலம் இந்தியர்களை ஆங்கிலமும் மேலைநாட்டுகாரர்களின் வழி முறைகளுமே நம்மைவிட உயர்ந்ததவை என்று அவர்களை எண்ண வைக்க முடியும். இவ்வாறு அவர்களை நினைக்க வைத்துவிடுவதால் அவர்கள் தங்கள் சுயமதிப்பையும் ,சொந்த நாட்டுக் கலாச்சாரத்தையும் இழந்து அதன் மூலம் அந்நாட்டு மக்களும் அந்நாடும் நாம் விரும்பியபடி நமது ஆளுமைக்குட்பட்ட நாடாகும். -1834.

            மெக்காலே எழுதிய கல்வி முறையைத்தான் இன்றைக்குவரை இந்தியா தன் முதுகில் சுமந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் சுதந்திரம் பெற்ற பிறகும் நம் பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு வெள்ளையன் பெயருக்குப்பின்னும் பிரபு, பிரபு என்று சேர்த்து கூளைக்கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறது. மெக்காலே உருவாக்கிய குற்றவியல் தண்டனைச் சட்டத்தைத்தான் இன்றும் நாம் வழங்கி வருகிறோம். ஒரு நாட்டின் கல்வியையும், தண்டனையையும் எழுதிய ஒரே நபர் மெக்காலே. இப்படி இந்திய வரலாற்றில் மிகமுக்கிய தாக்கத்தை விதைத்த மெக்காலே வந்து இறங்கிய இடம் சென்னை!

             தொழில் வாய்ப்புகள், நவீன வசதிகள் என சென்னையை வியப்பதற்கு இன்றைக்கு என்னென்னவோ காரணங்கள் இருக்கலாம். இங்கே இடம்பெயர்ந்து தங்களின் வாழ்க்கையில் முன்னேறினேன் என்று கூறுபவர்களின் வாக்கு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அவையத்தனையும் சென்னையின் பூர்வகுடிமக்கள் நமக்கு விட்டுக் கொடுத்தவை.

   சென்னை என்ற நகரத்தை நோக்கித்தான் பிறமாநிலங்களின் அத்தனை ரயில்களும், பேரூந்துகளும் நகர்கின்றன என்ற ஒற்றை உண்மையை யார்தான் மறுத்துவிட முடியும். எந்த ஊரில் பிறந்திருந்தாலும் இங்கே வந்து கால்வைத்தது முதல் நாங்கள் “சென்னைக்காரர்கள்” தான். இந்த இரைச்சலில் தானே எங்கள் வண்டியும் ஓடுகிறது.

பிற நகரங்களுக்கு இருக்கும் தொன்மையான அடையாளம் சென்னைக்கு இல்லை என்று வரலாறு எழுதினாலும், சென்னை நேசிக்கும் ஒவ்வொருவராலும் அந்த வரலாறு திருத்தி எழுதப்படுகிறது.
 
  376 ஆண்டில் சென்னைக்கும் அதன் மக்களுக்கும் ஒரு வணக்கம்.


-கார்த்திக்.புகழேந்தி (writterpugal@gmail.com)
22-08-2015.

Comments

  1. சென்னையை பற்றிய ஓர் சிறப்பான தகவல் களஞ்சியமாக திகழ்ந்தது பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி :) தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும்..

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை புகழ்! பண்டைய தமிழகம் கடற்கரையொட்டி ஒரிசா வரைப் பரவிக் கிடந்தது ....சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு கூட....அதற்கு முன்னும் தமிழகம் இல்ல இந்தியா முழுவதுமே தமிழ் இருந்திருக்கிறது பின்னர்தான் ஆரியரின் வருகை, மொகலாயர் என்று சுருக்கி சுருக்கி நாம் கீழே தள்ளப்ப்ட்டு..இதோ இப்போதும் அடிபட்டாலும் புத்தி வராம, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எல்லோரையும் வரவேற்று வேலை நல்கி அவர்கள் எல்லோரும் வளர உதவி, உண்ட வீட்டுக்கு இரண்டகம் போல் அவர்கள் தமிழகத்தைக் குறை சொல்லுவதையும் நாம் கேட்டுக் கொண்டு அதை விட சென்னை நீங்கள் சொல்லி இருப்பது போல் அனைத்து வசதிகளையும் கொண்டது..இந்தியாவிலேயே இருக்கும் பெருநகர் எல்லாவற்றையும் விட சென்னைதான் பாதுகாப்பானது, தமிழகம் தான் பாதுகாப்பானது என்றும் சொல்லப்பட்டாலும் ஏனோ சென்னையைக் குறை சொல்லுகின்றார்கள். மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் ரயில் நிலையங்கள் எல்லா வற்றிலும் நம் சென்ட்ரல் ரயில் நிலையம் போல் ஒன்றுமே வராது தெரியுமா...அத்தனை எளிது, வசதிமிக்கது....ஏறி இறங்கி எந்த தொந்தரவும் இல்லாத வெகு எளிதாக ரயிலை அடைய முடியும் ......தலைநகர் கூட ரயில்நிலையம் கூட இந்த அளவுக்கு வசதி கிடையாது.....எத்தனை வசதிகள் தெரியுமா சென்னை...ஆனால் எல்லோரும் தமிழகத்தின் எல்லா வசதிகளையும் உபயோகித்துக் கொண்டு, இங்கு வந்து குடியேறி திட்டவும் செய்கின்றார்கள்...நன்றி கெட்டவர்கள்...ம்ம் என்ன சொல்ல...

    மெக்காலே முறையை மாற்றினாலே நாம் முன்னேறிவிடுவோம்..நம் கல்வி முறை மாறியே ஆக வேண்டும்...

    எப்படி ஆட்சிமுறை என்பது வந்தது என்பதற்காகன் தகவலள் நம் பண்டைய தமிழகம் பற்றிய நூல்களில் இருக்கின்றது....

    அருமையான பல தகவல் கொடுக்கும் கட்டுரை...புகழ்...

    கீதா

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு! பல தகவல்கள் ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும் உங்கள் எழுத்தில் படிக்கும் போது தனிச்சுவை கூடுவதை மறுக்க முடியாது.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil