சந்திர நந்தி முதல் சர்வசிவ பண்டிதர் வரை - செஞ்சி வரலாற்றுச் சுற்றுப் பயணம் 09-05-2015

 “நாங்கள் முதலில் பாறைகள் குவிந்து கிடந்த குன்றுகளின் மீது ஏறினோம். அங்கே குகைகளுமிருந்தன. பின்னே பெரும் பாறையினைக் குடைந்து கட்டியிருந்த குடைவரைக்குள் நுழைந்திருந்தோம். எங்கள் வயது அப்போது ஆயிரத்து நானூறு ஆண்டுகள் இளைத்திருந்தது.” 



னுவல் புத்தக நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது வரலாற்றுச் சுற்றுலாவில் நேற்றைக்கு (09-05-2015) நானும் நண்பர் கேசவனும் கலந்துகொண்டோம்.  

காலை சுமார் 6.30 மணிக்கே திருவான்மியூரில் அமைந்துள்ள புத்தக அரங்கில் சுற்றுலாவில் பங்கெடுப்பவர்கள் குழுமத் தொடங்கியிருந்தோம். ஏழு மணி முப்பது நிமிடங்களுக்கு கிண்டி, தாம்பரம் வழியாக இடையில் இணையும் குழுவினர்களையும் அழைத்துக் கொண்டு பயணம் துவங்கியது.   வண்டலூர், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி சுமார் 28கி.மீட்டர் தூரம் பயணித்து செஞ்சியை அடைந்தோம்.  

பனுவலின் இரண்டாவது தொல்லியல் சுற்றுலாவில் காஞ்சி, திருப்பருத்தி குன்றம் ஆகிய ஊர்களில் எங்களை வழிநடத்திய பேராசிரியர். ஆ.பத்மாவதி அவர்களே இம்முறையும் எங்களை வழிநடத்தினார்.

பேராசிரியர்.பத்மாவதி ஆனையப்பன்


கடந்த முறை ஏற்பாடு செய்திருந்த அதே அளவிலுள்ள பேருந்து என்பதால் இம்முறையும் ஐந்துமாத குழந்தை முதல் எழுபது வயது பெரியவர் வரை சுமார் 46 பேர் வரை இடம்பெற்றிருந்தோம். ஆண்பெண் சதவிகிதம் (56% + 44%). 

செஞ்சி அடையும் வரைக்கும் பேருந்து பின்னிருக்கைக் காரர்களின் உற்சாகம் மிகுந்த பாடல்களால் நிரம்பி வழிந்தது. அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்... டி.எம்.எஸ்சில் தொடங்கி,  இளையராஜா,  நாகூர் ஹனிபா என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. தோழர்கள் முழுநேரப் பாடகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நேயர் விருப்பம், விட்ட வார்த்தையில் தொடங்கும் சுற்று என்று இரண்டு மணி நேரம் மேல் கச்சேரி களைகட்டியது.  சிலர் வரிகளைத் துல்லியமாக நினைவு வைத்துப் பாடி அசத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் கூகுளில் லிரிக்ஸ் துணையுடன் கோரசுக்கு மட்டும் உச்சஸ்தாதியில் குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்... ல லலா... லா... லாஹ் லலா லா லாஹ்.. 

மலையுச்சியில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டைக்குப் பக்கவாட்டில் அமைந்துள்ளது திருநாதர் குன்றம். இந்த இடத்திற்கு  “சதுர்விம்சதி ஜினாலயம்” என்றும் பெயராம்.  தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளில் மிகச் முக்கியமானதாகக் கருதப்படும் சமணர்களின் கல்வெட்டு ஒன்று இங்குள்ள பாறையொன்றின் மீது அனாமத்தாக பொறிக்கப் பட்டுள்ளது.

கல்வெட்டு வரலாற்றில் முதன் முதலில் “ஐ” என்ற எழுத்து இங்குதான் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஐ  ( 9ம் நூற்றாண்டு ) 

அந்தக் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள  ஐம்பத்து ஏழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த சந்திர நந்தி என்ற துறவி  பற்றிய குறிப்பும், மற்றொரு கல்வெட்டில் இளைய பட்டாரர் என்ற சமணத்துறவி முப்பது நாட்கள் வடக்கிருந்து உயிர்நீத்த குறிப்பும் செதுக்கப்பட்டுள்ளது.

திருநாதர் குன்றம்











குன்றின் மேலே கொஞ்சம் தூரத்தில் முக்குடையுடன் சமணர் ஒருவரின் நின்றசீர் உருவமும்,  குன்றின் உச்சியில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களில் உருவங்கள் செதுக்கின பெரிய பாறை அமைந்துள்ளது. 24 தீர்த்தங்கர் பற்றி கழுகுமலைக் வெட்டுவான் கோவிலுக்கு அடுத்து இங்கே தான் காணப்படுகிறது ஆனால் இங்கு அவர்களின் இலாஞ்சினையோ பெயரோ குறிப்பிடப் படவில்லை. இவர்களில்  நான்காவதான ஒருவருக்கு  “அம்பவழமேனி சம்பவ நாதன்” என்று பெயராம், அவரை அழைக்கும் போதெல்லாம் தமிழ் கொஞ்சி விளையாடியிருக்குமே.


மலையிலிருந்த ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் பேச்சுக்கொடுத்து அங்கிருந்த தாழ்வான குகைக்குள் நுழைந்து சென்றேன். குருவிகள் சப்தமும் குளிர்ச்சியும் அடித்த வெயிலுக்கு அப்படி ஒரு இதம். திருநாதர் குன்றிலிருந்து கீழிறங்கி பேராசிரியர் சமணர்களின் வாழ்க்கைமுறையையும், தமிழ் இலக்கண நூல்களில் சமணர்களின் பெரும்பங்களிப்பையும், பொன்னும் பொருளும் தேவைப்படாத சமணர்க்கு மன்னர்கள் ஆடுகள் (ஆட்டுப்பாலில் நெய்யுருக்கி நெய்யில் விளக்கெரிக்க ) வழங்கிய குறிப்புகளையும் விவரித்தார்.

திருநாதர் குன்றிலிருந்து பேருந்து புறப்பட, 17கி.மீட்டர் தொலைவில்  தமிழ் நாட்டின் முதல் குடைவரை கோயில் (மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட மண்டபம் அல்லது கோவில்) என்று அறிமுகத் தோடு வந்து இறங்கிய இடம் “மண்டகப்பட்டு”.

ஒற்றையடிப்பாதையிலே வட்டக் கிணறு ஒன்று அமைந்திருக்க ஊர்மக்கள் குடங்களில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள்.  வேடிக்கைபார்க்கும் அந்த மக்களிடையே நுழைந்து, விச்சித்திர சித்தன், நித்திய வினிதன் என சுமார் நானூறுக்கும் மேல் சிறப்புப் பெயர்கள் கொண்ட முதலாம் மகேந்திர வர்மரின் முதல் குடைவரைக் கோவிலை நெருங்கினோம்.


எட்டு தூண்களும், இருபக்கம் துவாரபாலகர்களும் பல்லவச் சாயலுடன் நிற்கும் அந்த குடைவரை தமிழ்நாட்டின் முதல் குடைவரைக் கோயில் அல்ல என்பதை பேராசிரியர் கொஞ்சம் உற்சாகமாகவே எடுத்துச் சொன்னார்.

தமிழ்நாட்டின் முதல் குடைவரைக்கோயில் பல்லவனுக்கும் முன்பாக பாண்டிய மன்னன் எழுப்பியிருக்கிறான் என்பதே அந்த உற்சாகத்துக்குக் காரணம். பேராசிரியர் மட்டுமல்ல நானும் பாண்டிய நாட்டுக் காரர்கள் என்பதால் மண்மீதான செருக்கு கொஞ்சம் வெளிப்பட்டுத்தான் விட்டது ஹஹ!

மகேந்திரவர்மரை பட்டயங்கள் எல்லாம் மகேந்திரர் என்று அழைத்தபோதும் தன்னுடைய கல்வெட்டுகள் எதிலும் அந்தப் பெயரை அவர்பயன்படுத்தாதது ஆச்சர்யமே. நித்யவினிதனுக்கு  “என்றும் அடக்கமுள்ளவன்” என்று பொருள் இருப்பது ரொம்பவே பொறுத்தம் தான் போல.

மகேந்திர வர்மரால் (கி.பி590-630) தரையிலிருந்து சுமார் பன்னிரண்டு அடிகள் உயரத்தில் குடைந்தெடுக்கப்பட்டுள்ள இந்த குடைவரை கோயிலின் முதல் துணில், “ விசித்திர சித்தனாகிய நான் பிரம்மா விஷ்ணு சிவனுக்கு மரம், உலோகம், சுதை எதுவுமில்லாமல் இந்தக் கோயிலை எழுப்பியுள்ளேன்” என்று நானூறு ஆண்டுகள் முன் எழுதி வைத்துள்ள கல்வெட்டும் சான்றாக நிற்கின்றது.

மண்டகப்பட்டு -குடைவரை கோயில்

நாங்கள் அந்த கல் மண்டபத்தில் உள்நுழையும் போது ஆயிரத்து நானூறு ஆண்டுகள் முன்னே பல்லவன் இந்தப் பாறையைக் கண்ட காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக கரம்பி எடுத்து கருவறை மண்டபம் வரைக்கும் கட்டிமுடித்த அந்த நூற்றாண்டும் கண்முன் வந்து போனது.   ஆம் நாங்கள் முதலில் பாறைகள் குவிந்துகிடந்த குன்றுகள் மீது ஏறினோம். பின்னே பெரும் பாறையைக் குடைந்து கட்டியிருந்த குடைவரைக்குள் நுழைந்திருக்கிறோம் எங்கள் வயது அப்போது ஆயிரத்து நானூறு ஆண்டுகள் இளைத்திருந்தது.

பல்லவன் மண்டபத்திலே மதிய உணவினை முடித்துவிட்டு அங்கிருந்து நேரே எண்ணாயிரம் நோக்கிப் புறப்பட்டோம். எண்ணாயிரத்துக்கு அன்றைய பழைய பெயர்  “ராஜ ராஜ சதுர்வேதி மங்களம்”. இங்குள்ள கோயில் ராஜ ராஜ விண்ணகரமாய் இருந்து இன்றைக்கு அழகிய நரசிங்க பெருமாள் கோயிலாய் நியூமாரலஜிப் படி பெயர்மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. (!)

கோவிலின் உட்புறம் நுழையும் முன்பே அதன் வரலாற்றை எடுத்துரைக்க ஆரம்பித்துவிட்டார் பேராசிரியர்.ஆ.பத்மாவதி அவர்கள்.

 900 வருடம் பழைமையான வேதங்கள் கற்றுக் கொடுத்த கல்லூரி ஒன்று இயங்கியதையும், என்னென்ன பாடங்கள்,  மாணாக்கர்கள், மாணாக்கியர்கள், ஆசிரியர்கள், கேட்போர் எத்தனையெத்தனை பேர், அவர்கள் உணவுக்கு வழங்கிய வயல் எத்தனை (45) வேலி நிலம், பொற்கழஞ்சுகள் எவ்வளவு,  வசூல் செய்யும் பங்கு (1/16 பங்கு) எவ்வளவு, வணிகர்கள் தரவேண்டிய அரிசியின் தரம் முதற்கொண்டு கல்வெட்டு ஆய்வில் கிடைத்த துல்லியக் கணக்குகளை எடுத்துச் சொன்ன போது அத்தனை பேரும் பிரம்மித்துப் போனோம். சோழ நிர்வாகம் என்றால் சும்மாவா.. ஆனால் இதை அத்தனையையும் சோழப்பிரதிநிதி ஒருவர் முன்னிலையில் கிராம சபையினரே நிர்வகித்திருக்கிறார்கள்.  இதுவே நம் ஊர் எம்.எல்.ஏ ம்ஹூம் கவுன்சிலரே போதும் ஸ்வாஹா தான்....

விண்ணகரத்தின் பிரகார உட்புறம் நுழைந்ததும் இராமானுஜர் அமர்ந்திருக்க, ஒரு காலை தரையிலும், மற்றதை தன் மனைவியாரின் மடியிலும் வைத்து பன்றி அவதாரத்தில் இருந்த வழிபாட்டுச்சிலையை  செல்போன் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டோம்.  அந்நேரம் கோவிலுக்குள் பவர்கட்டாக இருந்தது கடவுள் சித்தமென்றால் நாமென்ன செய்யமுடியும்.

கோவில் முழுக்க புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தரையிலிருந்து இரண்டரை அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை கிரில் போட்டு மூடியிருந்தார்கள். சுற்றுப் பிரகாரத்தில் இறங்கி, பயணத்தில் கலந்துகொண்டவர்கள் சூழ்ந்து நிற்க, கல்வெட்டுகளில் எப்படி படி எடுக்கப் படுகிறது என்ற செயல்விளக்கத்தை பேராசிரியரும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  திரு. ________________ (தற்சமயம் நினைவில்லை ) அவர்களும் செய்து காண்பித்தார்கள்.

அதன்படி, கல்வெட்டில் பாசி, தூசு, அழுக்குகள் இருந்தால் அது நீக்கப்பட்டு, தண்ணீர் கொண்டு நனைக்கப்படுகின்றது. அடத்தி மிகுந்த வெள்ளைத்தாள் ஒன்றை ஈரமான பரப்பின் மீது ஒட்டி, காற்றுக் குமிழ்கள் ஏதுமில்லாமல் நீக்கப்படுகிறது. பின் beating Brush என்றழைக்கப்படும் நார்மட்டையால் தாள்
ஒட்டப்பட்ட பகுதியில் அடிக்க கல்வெட்டின் குழிவான பகுதிகளில் எழுத்து அப்படியே பளிச்சிடுகிறது. தொல்லியல் துறைக்காரர்கள் தங்களுக்கென துத்தநாகம் இன்னும் சில தனிமங்கள்,கனிமங்கள் கலந்து செய்த பிரத்யோக மையினை டேபர் என்றழைக்கப்படும் மிருதுவான பஞ்சுப்பொதியில் தோய்த்து தாள் மீது தடவ கொஞ்சம் கரடு முரடாகவே கல்வெட்டில் எழுத்து இருக்கும் இடங்களைத் தவிர மற்ற இடங்கள் கருப்பேறுகின்றது. இந்த தாள் காய்ந்ததும் பின்புறமாக மடித்து அலுவலகத்துக்குக் கொண்டுபோய் எழுத்துகளை அடையாளம் காண்கின்றனர்.

எண்ணாயிரம் - கல்வெட்டு படியெடுக்கும் முறை செயல் விளக்கம்

இன்றைக்கிருக்கும் தொழில்நுட்பங்கள் பலவற்றைக் கணக்கில்கொண்டு பார்க்கும் போது பழமையான முறையாகவே தோன்றுகின்றது. ஆனால் அவர்கள் இதனிலும் மெருகேற்றின தொழில்நுட்பத்தை தொல்லியல் துறைக்கு அறிமுகம் செய்ய யார் முனைப்பு காட்டுகிறார்கள்?

எண்ணாயிரத்தில் சோழனின் கலைவடிவங்களின் முன்னே அங்கங்கே நின்று புகைப்படங்கள் சில எடுத்துக் கொண்டோம். அதற்குள் எல்லோரும் கிளம்பிவிட தனி வாகனத்தில் வந்திருந்த  “மாணக்கியர்கள் மட்டும்”  (சொல்லாடல் உபயம் சோழர்கள்)  குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சொல்ல மறந்ததென்னவென்றால் எண்ணாயிரத்தில்  கவி காளமேகப் புலவர் பிறந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.  அட அவர்தாங்க நம்ம ”தாதிதூ தோதீது தைத்தைதூ தோதாது” புலவர்.

எண்ணாயிரத்தில் மூன்றாவது தளத்தை முடித்துவிட்டு கடைசியாக வந்து சேர்ந்தது  “எசாலம்” வந்து இறங்கியதுமே நம்ம ஊர் மாரியம்மன் கோவில் போல வண்ணம் பூசப்பட்ட சிவனும் பார்வதியும் இது பழைமையான கோவில் தானா என்ற அச்சத்தை விதைத்தனர். உள்ளே நுழைந்து பார்த்தால் மாற்றங்கள் அப்பட்டமாய் தெரிந்த காங்க்ரீட் கூரைகளும் பூச்சுகளும் எசாலத்தின் பழைய அடையாளத்தை அது துறந்து பல காலங்கள ஆனதை உணர்த்தியது. அதன் முக்கிய காரணம் 1987ல் இங்கு கிடைத்த 15 செப்பேடுகளும், சிலைகளுமாகக் கூட இருக்கலாம்.

கங்கை கொண்ட சோழபுரத்தை இராஜேந்திர சோழன் கட்டினான் என்று காலம் காலமாக கூறி வந்தாலும் வலுவான சான்று இந்த எசாலம் செப்பேடுகளில் தான் கிடைக்கப்பெற்றுள்ளன. பகீரதன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது போல், கங்கை நீரை சோழநாட்டிற்கு கொண்டுவந்து, பேரேரியை உருவாக்கியதுடன்  கங்கை கொண்ட சோழபுரியையும் உருவாக்கி சிவபெருமானுக்கு பெரிய கோயிலையும் இராஜேந்திரன் கட்டினான் என்கிறது எசாலம் செப்பேடு.

எசாலம் திருக்கோயிலை ராஜேந்திர சோழர்களின் குருவான சர்வசிவ பண்டிதர் என்பவர் எடுப்பித்தார் எனவும், இக்கோயிலுக்கு விக்கிரம சோழ நல்லூர் என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பணிக்காக கோவிலைச் சீர் செய்யும் போது, இந்தச் செப்பேடும் சிலைகளும் கிடைத்ததாம். அப்படித் தோண்டும்போது சிலைகளின் முகம் சேதமடைந்துவிடக்கூடாதென முகத்தை தரையை நோக்கிக் கவிழ்த்தி வைத்திருந்திருக்கிறார்கள் சோழன்வழி வந்தவர்கள். இந்த கோவிலின் கருவறை விமானம் முதல் தூண்கள், நுழைவு வாயிலில் அமைந்துள்ள துவார பாலகர்,  நந்திக்கு எதிரேயுள்ள கல்சன்னல் வரை
அத்தனையிலும் அப்படி ஒருகலைநயம்.

கல் சன்னலில் ஒவ்வொரு தையிலும் முதல் நாள் வெயில் வந்து பரவி உள்ளிருக்கும் சிவலிங்கத்தின் மேல் படருமாம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் நந்திக்கு காங்க்ரீட் கூரை அமைத்து தங்கள் கலைதாகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது கோவில் அறங்காவலர் குழு. அதுமட்டுமில்லை கலைநயம் மிக்க கல்சன்னலில் மீந்துபோன தீக்குச்சிகளும் எண்ணெய் பிசுகுகளுமாக நாசம் செய்து வைத்திருக்கிறார்கள்.  “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பனையூர் நாட்டு தனியூருக்கு வந்த சோதனை”.


  


















எசாலம் கோவிலைப் பற்றி திரு.ஸ்ரீதர் அவர்களும்,  பேராசிரியரும் பல விபரங்களை எடுத்துரைத்தார்கள். எசாலம் கோவில் சுவர் முழுக்கக் கல்வெட்டுத்தான்.   “ஸ்ரீராஜேந்திரத் தேவர்” என்று குறிப்பிடப்பட்ட இடத்தை நண்பரின் காமிராவின் துணைகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
கூடவே பயணத்தில் உடன் வந்திருந்த வெகுசிலரையும்..



                                     
                                                                   






                                                                   


                                         








திருநாதர் குன்றம், மண்டகப் பட்டு, எண்ணாயிரம் , எசாலம் ஆகிய நான்கு இடங்களையும் ஒரே நாளில், அதுவும் கோடை காலத்தின் மையத்தில் எந்த தடங்களுமில்லாமல் எங்கள் குழு சுற்றிப் பார்த்து முடித்தது. எசாலம் ஊரின் போஸ்ட் ஆபீஸ் முன்னே குழுவினர் அமர்ந்திருக்க நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டது. புத்தக நிலையத்தில் இருந்து நினைவுப் பரிசாக வேறு என்ன கொடுப்பார்கள் “புத்தகங்களே தான் நினைவுப் பரிசு”.  பேரா.பத்மாவதி அவர்களுக்கு “மிளிர்கல்” நாவல் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது.



பயண நேரம் தாமதமாக அமைந்தாலும் பத்திரமாகவும், திருப்தியாகவும் வீடுவந்து சேர்ந்தோம். என்ன ஒன்று தேர்வுகள் முடிந்த விடுமுறையிலும் மாணவர்களாக ஊர்சுற்றிய பொறுப்புணர்ச்சியைத் தான் வீட்டில் உள்ளவர்கள் நம்பமறுக்கிறார்கள். ஹாஹா ஆம் இது ஒரு கல்விச் சுற்றுலாவாகவே எங்களுக்கு அமைந்தது.

பொதுவாக கோவில்களின் மீதான நம்முடைய கருத்தியல் பக்தி அடைப்படையில் பழக்கப் படுத்தப்பட்டது. ஆனால், கோவில்கள் நம்முடைய வரலாற்று ஆவணங்கள். இந்த கல்வெட்டுகளை வாசிக்கும் போது எழுதியவனின் காலத்தை நாம் திரும்பிப் பார்க்கிறோம்.
இந்த குடைவரைக்குள் நாம் நுழைகையில் நம் முப்பாட்டன்களின் முப்பாட்டன் நடந்த தடங்களின் மீது நிற்கிறோம்,

இந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய மூதாதையின் சாயல் எப்படி இருக்கும் என்பதின் காட்சி உருவங்கள்.  இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் சமூகமாக நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற திருப்திதான் இந்த பயணங்களில் கிடைக்கிறது. கற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட பத்திரமாக அடுத்த தலைமுறைக்கு மிச்சம் வைத்துப் போக வேண்டிய பொறுப்பையாவது உணர்ந்து கொள்வோம் என்ற நம்பிக்கை உருவாகிறது.

அடுத்ததாக நான்காவது வரலாற்றுப் பயணம் தஞ்சாவூருக்கு ஆகஸ்ட் மாதம் இரண்டுநாட்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்...
பயணங்கள் தொடரட்டும்..

நான் போய் அந்த பாண்டியன் குடைவரை பற்றிய பிரதாபங்களைத் தேடிப் படித்துவிட்டு வருகிறேன். அட சொந்த ஊர் பெருமையை நாங்க பேசாம யார் பேசுவா!




-கார்த்திக். புகழேந்தி.
05-11-15.




Comments

  1. சிறப்பான தொல்லியல் தரவுகளுடனான பயணக் கட்டுரை

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil