வாத்தியாரைச் சந்தித்த கதை

1948-ல், தூத்துக்குடி மாவட்டம் பண்ணையூரில் (நயினார்புரம்) வாத்தியாராக ஆர்.எஸ்.ஜேக்கப் பணிக்குச் சென்றபோது அவருக்கு வயது. 19.

அங்கு பள்ளிக்கூடம் என்ற பெயரில் இருந்தது ஒரு ஓலைக்குடிசை.  "ஏலா புதுசா பள்ளக்குடி வாத்தியார் ஒருத்தரு வந்திருக்காருலா" என்று குறுக்கு மறுக்காக ஓடின 10க்கும் குறைவான சாதி வேற்றுமையோடு வாழ்ந்து பழக்கப்பட்ட பிள்ளைகளைச் சமத்துவத்தோடு அமரவைத்து, இருவாசல் முறையை ஒழித்து, சுற்றுப் புறத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைத் தன் பண்ணிக்கூடத்தில் சேர்த்து, அவர்கள் படிப்புக்குத் தடையாக இருந்த ஊர் பண்ணையாரை எதிர்த்து, அவரது கொலை முயற்சிகளில் தப்பி, ஊரையே அடிமைத்தனத்தால் தன் கட்டுக்குள் வைத்திருந்த பண்ணையாரின் சுரண்டலை அம்பலப்படுத்திய வாத்தியாரின் பள்ளிக்கூட அனுபவம் சினிமாத்தனங்களை எல்லாம் மிஞ்சுவது.

பொதுவுடைமைச் சித்தாந்தந்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அன்றைக்குத் தீவிரமாக இயங்கிவந்த தோழர்கள் பாலன் (பாலதண்டாயுதம்), மாயாண்டி பாரதி, நல்லக்கண்ணு, ஆகிய வேறு பலரோடு அறிமுகங்கள் இல்லாமலே நெருங்கிய நட்பு பேணியிருக்கிறார்.

தென்மாவட்ட ரயில் கவிழ்ப்பு சம்பவத்தால் 200 கம்யூனிஸ்டு தோழர்கள் கைது செய்யப்பட்டு, 97 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட  "நெல்லை சதிவழக்கில்" கம்யூனிஸ்டு தலைவர்களோடு இருந்த தொடர்பு, கூட்டம் நடத்த பள்ளிக்கூடத்தில் இடம் தந்தது, தோழர்களுக்கு தம் வீட்டில் தஞ்சம் கொடுத்தது ஆகிய காரணங்களால் வாத்தியாருக்கு எதிராகவும் குற்றம் நிருபிக்கப்பட்டுவிட்டது. அவர் 18வது குற்றவாளியானார்.

எல்லாவற்றுக்கும் காரணம் வாத்தியாருக்கு இருந்த டைரி எழுதும் பழக்கம். சோதனையிட்டபோது அவரிடம் இருந்த டைரியில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அவர் தங்க இடம் அளித்த தகவலும், உணவு சமைத்துப் போட்டதும், கூட்டம் நடத்த பள்ளிக்கூடத்தில் இடமளித்ததும் அந்த டைரியில்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு எதிரான முக்கிய சாட்சியமும் அதுதான்.

 நான்கரை ஆண்டுகள் பாளையங்கோட்டை, மதுரை சிறைகளில்  கொடூரமான சித்திரவதைக்கு உள்ளானவரிடம், எங்கே பாலன் மற்றும் உன் தோழர்கள் எல்லாம் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று கேட்டுக் கேட்டு  அடித்திருக்கிறார்கள். தெரியாது, தெரிந்தாலும் சொல்ல மாட்டேன் என்று மறுத்தவரின் கால்களை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கி, நடக்க முடியாமல் ஆக்கி, பிள்ளைப் பூச்சிகளை அடிவயிற்றில் கடிக்கவிட்டு, இரத்த காயமாக்கி நடை பிணமாக மிச்சம் விட்டிருக்கிறார்கள். .

நெல்லை சதி வழக்கை ஏற்று நடத்திய வழக்கறிஞர் என்.டி.வானமாமலை அவர்கள், ஜேக்கப்புக்கு தூக்கு உறுதி என்று நம்புகிறவேளையில், தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் குடும்பத்தோடு கொடைக்கானல் சுற்றுலாவுக்குச் சென்ற நீதிபதி, "அது என்ன சாட்சிய டைரி" என்று கையில் எடுத்துப்போய் முழுவதும் வாசிக்கிறார்.

தோழர்கள் தங்க இடம் தந்தது மட்டுமா அதில் இருந்தது? தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் அவர் உருவாக்கிய ஒவ்வொரு மாணவரின் கதை. அறியாமையில் அடிமைகளாய் பண்ணை வேலைசெய்துப்உழன்ற அவர்கள் குடும்பத்தின் நிலவரம், ஜேக்கப் வாத்தியாரால் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றம், அவர் செய்த உதவிகள் எல்லாமும் இருந்தது. எல்லாவற்றையும் எழுதிவிட்டு இந்த காரியங்களைச் செய்ய எனக்கு உதவிய கர்த்தருக்கு நன்றி என்று முடித்திருக்கிறார். கர்த்தர் கம்யூனிஸ்டாக மாறிய தருணம். டைரியை முழுதும் வாசித்துமுடித்த நீதிபதி, ஜேக்கப் வாத்தியாரின் நற்செயல்களை அடிப்படையாக வைத்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

 இன்று ஜேக்கப் வாத்தியாருக்கு 95 வயது. 1955-காலகட்டத்தில் சிறைக்குச் சென்ற தன் கதையை "வாத்தியார்" என்றே எண்பதுகளில் நாவலாக்கி இருக்கிறார். பிறகு, சிறையிலிருந்து மீண்ட கதையை வாத்தியார் -மறுபிறவி (மரணவாயிலில்) என்ற தலைப்பிலும்  நாவலாக்கி இருக்கிறார். அதுபோக நூறுக்கு மேற்பட்ட புத்தகங்களும்.

வாத்தியார் நாவலைப் படித்துவிட்டு எனக்கு மனசும் புத்தியும் திக்குகெட்டுப் போனது. என்ன இந்த மனுசன்யா இவர் என்று வாத்தியார்குறித்து யோசனை  கூடிக்கொண்டே இருந்தது. தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கி.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தான் நாவலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் நாறும்பூநாதன் அவர்களிடம் சொல்லி, ஊருக்கு வரும்போது, பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள ஜேக்கப் வாத்தியார் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லக் கேட்டிருந்தேன்.

நேற்று பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் அவரைச் சந்தித்தபோது, வாங்க போலாம் என்று ஜேக்கப் வாத்தியார் வீட்டுக்குக் கூடே கூட்டிப் போனார். வரவேற்பறையில் குவிந்துகிடந்த புத்தகங்களுக்கு மத்தியில் வாத்தியார் உட்கார்ந்திருந்தார். பக்கத்திலே 2016 டைரி ஒன்று. தலைக்கு மேலே ஓவியர் வள்ளி அண்ணன் 2011-ல் போட்ட வாத்தியாரின் கோட்டோவியம். திருநவேலியில் வள்ளியண்ணன் கோடுகள் நுழையாத இடமில்லை போல.

 "திருநவேலியில் அடுத்த தலைமுறையில் முக்கியமான எழுத்தாளர் தம்பி கார்த்திக் புகழேந்தி இவர் பேரு" என்று நாறும்பூநாதன் சார் அறிமுகம் பண்ணிவைத்தார். கொஞ்சம் கூச்சம் தான். என்னை, படித்த பள்ளியை, என் வேலைகளை, தொழிலை, வாசிப்பதை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

பேச்சு வளர்ந்தது.

பாளையங்கோட்டை காளிமார்க்குக்கும், ஆக்னஸ் ஆஸ்பத்திரிக்கும் இடையே சாலையில் புதைக்கப்பட்டிருக்கும் ரெய்னீஸ் ஐயரின் கல்லறையைப் பார்த்திருக்கிறீர்களா என்றார் ஜேக்கப் வாத்தியார்.

சின்னவயதில் அந்த கல்லறையைச் சுற்றித்தான் பள்ளிக்கூடம் போனவன். அப்போது அது ரெய்னீஸ் ஐயர் கல்லறை என்றெல்லாம் தெரியாது. நான் அடைக்கலாபுரம் டி.றி.டி.ஏவில் ரெய்னீஸ் தொடக்கப்பள்ளியில் படித்தவன். "தேவாலயம் இருக்கும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கூடம் கட்டுங்கள்" என்று பாளையில் பல்வேறு (200 இருக்கலாம்) தொடக்கப் பள்ளிகளை உண்டாக்கினவர் ரெய்னீஸ் ஐயர். அவர் துவங்கின பள்ளிக்கூடம் தான் நமக்கு பாலபாடம் புகட்டியது.

அதுமட்டுமில்லை மேரி சார்ஜண்ட் அம்மையார், சாப்டர் கல்லறைகள் மீது ஏறி விளையாண்டு வளர்ந்த என் கிறிஸ்தவப் பின்புலத்துடன் கூடிய கல்விச் சூழலை விவரித்துக் கொண்டே போக, இடையிடையே நாறும்பூநாதன் சார் இன்னும் புதிய விசயங்களைச் சொல்ல, ஆர்.எஸ்.ஜேக்கப் வாத்தியார் அவற்றை ஆமோதித்து தன் நினைவுகளையும் மீட்டுக்கொண்டிருந்தார்.

மொத்த பேச்சின் ஆதார சுருதியாக
வாத்தியார் நாவலை நான் ஜீவா படைப்பகத்தில் புத்தகமாகப் பதிப்பித்துக் கொண்டுவரட்டுமா என்று கேட்டிருக்கிறேன். இரண்டொரு நாளில் யோசித்துச் சொல்கிறேன் என்றிருக்கிறார். ரொம்ப அன்பாக என் கைகளைப் பற்றிக்கொண்டு என் பெயரை மீண்டும் கேட்டுக்கொண்டார். புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்படும்போது கைகளை மீண்டும் பற்றிக் கொண்டார். வாத்தியார்களின் பிரியம் தாண்டிய தொடுதலை அதில் கண்டுகொண்டேன்.

பிறகு, வீடுதிரும்பும் வழியில் நாறும்பூநாதன் சாரும் நானும் பேசிய பேச்சு பெரும்பேச்சு. அது தொ.மு.சி.ரகுநாதனின் ஆன்மாவை குளிரச் செய்யும் அளவுக்கு நீண்டுகொண்டே போனது. "ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடியே உங்க கண்ல தென்பட்டிருக்கணும் சார் நானு. எவ்வளவு சேதிகள் வச்சிருக்கீங்க சொல்றதுக்கு" என்றேன்.

"அதுக்கென்ன பேசுவோம்" என்று மாறாத சிரிப்போடு அவர் கிளம்பிப்போனார்.




-கார்த்திக் புகழேந்தி
31-ஆகஸ்ட் 2018

Comments


  1. இப்படியும் சில நல்லவர்கள் இருப்பதால்தானோ நாட்டில் மழைபெய்கிறது. சுவையாக எழுதி இருக்கிறீர்கள. ‘வாத்தியார்’ புத்தகம் மறு பதிப்பு உள்ளதா?

    ReplyDelete
  2. vaathiyaar puthagam publish paNNinengkaLa sir?

    ReplyDelete
  3. திராவிட இயக்க ஈடுபாடு கொண்ட மாணவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த ஒரு கிராமப்புற ஆசிரியரின் மகனாக தந்தையை நினைவுபடுத்தியது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil