‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான். 

அன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன். 

முழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான். வெறுமனே புனைவு தான். ஆனால், அதுகுறித்துக் கொஞ்சம் தேடிப் படித்திருக்கிறேன் என்று அசால்ட்டாகச் சொன்னபோது, உ.பி.க்கு தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து கள்ள மார்கெட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் தங்கக் கட்டிகள் பற்றி அவன் சில ரகசியங்களை என் காதில் போட்டான். அவை எந்த ராஜாக்களின் புதையலும் அல்ல, அனைத்தும் பல மாநிலங்களில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி ஒன்றுசேர்த்த கட்டிகள் தான் அவை என்றான். 

பிறகு அவனே, பவாரியா பழங்குடிகள் பற்றியும், அவர்களது தற்போதைய கொள்ளைத் தொழில் குறித்தும், உ.பி. ஹரியான, ஒரிசா, என வடக்கு மற்றும் கிழக்கிந்திய மாநிலங்களில் பரவி வாழும் பவாரியாக்களின் நாடோடி வாழ்க்கை குறித்தும் நிறைய விஷயங்கள் அடுக்கினான். 

தமிழகப் பகுதிகளில் கொள்ளையடித்த நகை, பணம், செல்போன்களை எடுத்துக் கொண்டு தங்கள் ஊருக்குத் தப்பிச் சென்று, அந்தச் செல்போன் எண்களில் இருந்து யாரையேனும் தொடர்புகொண்டு தங்கக் கட்டிகள் விற்கிறேன் என்று வரவழைப்பார்கள். பஜாரில் ஒருசிலர் அப்படி அவர்களிடம் நகை வாங்கி மாற்றியும் இருக்கிறார்கள் என்றான். நான் எழுதின கதையைவிட இது செம மேட்டராக இருக்கிறதே என்று பவாரியாக்கள் குறித்துத் தேடத் துவங்கினேன். 

நிற்க, 

2001ல் கும்மிடிபூண்டி (அதிமுக) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2002ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலவாரியத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் கே.சுதர்சனம். 2005ம் ஆண்டில் நிகழ்ந்த அவரது மரணத்தின்போதுதான் கும்மிடிபூண்டி தொகுதிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தது. 

ஆனால், அமைச்சரின் மரணம் சாதாரணமாக நிகழவில்லை. வடமாநிலக் கொள்ளைக் கும்பல்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு, 50 சவரன் நகையும் அவர் வீட்டிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியை பிரயோகித்தும் அமைச்சரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை. அறையில் பூட்டி வைக்கப்பட்ட மகன் ஒருவரைத் தவிர, மொத்த குடும்பமும் கொள்ளைக் கும்பலால் தாக்கப்பட்டது. 

கொன்றது அமைச்சரை என்றெல்லாம் தெரிந்துகொள்ளாத அந்தக் கும்பல் மறுநாளே பர்கூரிலும் இன்னொரு வீட்டை இப்படிப் பதம்பார்த்திருந்தது. 1995லிருந்து 2005வரைக்கும் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டிருந்த நாற்கரச் சாலை வசதியின் விளைவாக இதுபோலப் பல கொள்ளை-கொலைச் சம்பவங்களில் அந்தக் கும்பல்கள் ஈடுபட்டு வந்தாலும், அமைச்சரின் கொலைச் சம்பவம் அன்றைய தமிழக ஆட்சியாளர்களின் தன்மானப் பிரச்சனை ஆனது. 

இடைத்தேர்தல் களேபரங்கள், ஆட்சி மாற்றங்கள், இதெல்லாம் சேர்ந்து அந்தச் சம்பவத்தை மெல்ல மறக்கடித்துவிட்டன என்று நினைக்கும் போது ஒரு வருடம் கழித்து 2006ம் ஆண்டில், முன்பாக ஐ.ஜி ஜாங்கிட் ஐ.பி.எஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழு கர்நாடகா, ஆந்திரா வட இந்திய மாநிலங்கள் என அலைந்து திரிந்து, அந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைது செய்தது. அதன்பிறகே, தமிழகக் காவல்துறை மேற்கொண்டிருந்த ‘ஆப்ரேசன் பவாரியா’ நடவடிக்கைகள் குறித்த செய்திகள் பரவலாக அனைத்துப் பத்திரிகைகளின் பேசுபொருளானது. 

இன்றைக்கு இருப்பதுபோல அன்றைக்கு இணையதளப் பயன்பாடு அதிகம் இருக்கவில்லை என்பதால் தமிழகக் காவல்துறையின் அந்தத் தீரச் செயல்கள் பரவலாக அடையாளமற்றுப் போனது. தமிழகக் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பிறகே வடமாநில கொள்ளையர்களின் குற்றங்கள் தமிழகத்தில் குறைந்துபோனதாகச் சான்றறிக்கைகள் தகவல் சொல்கின்றன. ஆனால், சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறத்தான் செய்கின்றன. இல்லை, மறுபடியும் ஓர் அமைச்சரைத் தொட்டிருந்தால் விஷயம் வேறுமாதிரியிருக்கும் என்பார்கள் மாவட்டத்தின் மூத்த செய்தியாளர்கள். 

சாதாரண வடமாநில இனக்குழுவினராகத் தெரியும் பவாரியாக்களின் வேர்கள் மொகலாயர், ராஜபுத்திரர்கள் காலகட்டம் தொடங்கிப் போர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. கொரில்லா போர்முறைத் தாக்குதலில் ஈடுபட்டு, ஒருகட்டத்தில் அவர்களது வேட்டைக்குடி பழக்கவழக்கங்களால் ஒதுக்கப்பட்டவர்கள் ஆனார்கள். ஆங்கிலேயர் காலக் குற்றப் பரம்பரைச் சட்டங்கள் கடுமையாக இருந்த காலத்திலும் அடக்குமுறைக்கு உள்ளாகி, காடுகளில் மறைந்து கொள்ளை-கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள். 

பவாரியாக்கள் மட்டுமில்லை இதுமாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாக அடையாளங் காட்டப்பட்ட பார்தீஸ்கள், ஷேக் பங்களாக்கள், சன்சீஸ், கஞ்சார்ஸ், சபிராக்கள் என்று ஆறு பழங்குடி இனக் கொள்ளைக் கூட்டத்தவர்கள் குறித்தும் ஒரு தொடர் கண்ணியின் நீட்சி இருக்கிறது. 

வட மாநிலங்களில் இருந்து லாரியின் பின்பக்கம் அறை அமைத்து ஒளிந்துவருவது, இறக்கி முடிக்கவேண்டிய சரக்குகளை அன்லோட் செய்யும்போதே புறநகரில் செல்வந்தர்களின் தனி வீடுகளைக் குளிர் போர்வை விற்கவருவதுபோல நோட்டம் பார்ப்பது. அதிகாலைக்கு முந்தைய பொழுதில் சாலையில் விபத்து நேர்ந்ததாகச் சொல்லி கதவைத் தட்டி முன்வாசல் வழியாக நுழைந்து, எதிர்ப்படுபவர்களை எல்லாம் வேட்டை விலங்குகள் போலச் சரமாரியாகத் தாக்கி நகை, பணம், பொருட்களைக் கொள்ளையடிப்பது இவர்கள் வேலை. பவாரியாக்களின் கொள்ளைப் பழக்கம் குறித்துத் தமிழில் சாரு சிறு குறிப்பு ஒன்றை ராஸலீலாவில் எழுதியிருப்பார். 

தமிழகக் காவல் துறையால் மேற்கொள்ளப் பட்ட ‘ஆப்ரேஷன் பவாரியா’ குறித்த முழு விபரங்களையும் ஒரு சிறுகதையை எழுதி முடித்தபிறகுதான் இணையத்தில் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்திருந்தேன். மலைத்துப் போனேன். தொட்ட இடங்களில் இருந்தெல்லாம் பவாரியாக்கள் செயின் ஸ்நாட்சிங்கில் ஆரம்பித்துத் தொடர்ந்து திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட செய்திகளும் புகைப்படங்களும் மலைமலையாகக் குவிந்தன. 

‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் செதுக்கி வைத்ததுபோல இந்தச் சம்பவங்களின் புனைவு உருவாக்கமாக, ஒரு செருப்பு, பான்பராக் கவர், ஆயுதக் கைப்பிடிகள், கைரேகைகளை வைத்துக் கொண்டு, பெரும்பான்மை இந்தியா முழுவதும் அலைந்து திரிந்ததையும், காவல்துறை தனிப்படைகள் மேற்கொண்ட முயற்சிகளையும் வட மாநில, ஆரவல்லி மலைத்தொடரின் நிலப்பரப்பின் இயல்புகளோடு, சற்று தேவைக்கு அதிக நீளத்தோடு ஒரு கமர்சியல் ஆவணமாகக் காட்சிப் படுத்துகிறது. உட்கார வைத்துக் கதை சொல்வதுபோலக் குற்றச் சமூகங்களாக மாறிப்போனவர்களின் வரலாற்றையும் கதைப் போக்கில் சொல்லிவிடுகிறார்கள். மலையளவு உழைப்பு. 

கார்த்தியின் உடல்மொழி அளவெடுத்துத் தைத்த மாதிரி போலீஸ் தன்மையோடே இருக்கிறது. (தயவு செய்து வெங்கட்பிரபு கூட்டத்தாருடனான நட்பு, கொடுக்கல் வாங்கல்களைக் குறைத்துவிட்டு இதுமாதிரியான உழைப்பை வாங்கும், அதேநேரம் தமிழ், தெலுங்கில் பணம் சம்பாதித்துத் தரும் சினிமாவைத் தேர்வு செய்வதைத் தொடருங்களேன் கார்த்தி.) முக்கியமாகப் பவாரியாக்களின் கதாப்பாத்திரங்கள் தேர்வு மிரட்டுகிறது. தனிப்படை குழுவினர், போஸ் வெங்கட், எல்லோரும் நறுக்கென்று நிற்கிறார்கள்.


‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் இந்த ஸ்க்ரிப்டிலும் அடி வெளுத்திருக்கிறார். எழுத்தாளர் ஜீ.முருகன் சொல்வது போல, (அட்லி போல) பாவனைகள் செய்யாமல் கடும் உழைப்பைக் கொடுத்திருப்பதற்கான பலன் படத்தில் தெரிகிறது. 

காட்சிகளின் நீளம், கால அளவு இதுபற்றியெல்லாம் உங்களுக்குச் சில பிடிவாதங்கள் இருந்திருக்கக்கூடும் என்று என்னோடு படம் பார்த்த நண்பன் சொன்னான். ‘ஓர் இயக்குநரின் சினிமா’வில் அந்தச் சுதந்திரத்தைக் கையாளத் தெரிந்தவராக நீங்கள் (H.வினோத் ) இருப்பது குறித்து எனக்குச் சந்தோசமே. வாழ்த்துகள்.
Image result for தீரன் அதிகாரம் ஒன்று

என்போன்றவர்களுக்குப் படம் அட்டகாசமாக இருந்தது. குழந்தைகள் ஒருகட்டத்தில் தூங்கிவிடுகிறார்கள். மற்றபடி மொத்த திரையரங்கிற்கும் இதுவரை தெரியாத ஒரு கதையைச் சொல்வதனால் தலையை அங்கும் இங்கும் திருப்பக்கூட ஆசுவாசம் இல்லை. சேஸிங் காட்சிகள், சண்டை, துப்பாக்கிச் சூடு, கைது செய்யப் போன இடத்தில் ஊரே திரண்டு தனிப்படையினரை அடித்து விரட்டுவது என்று பரபரப்பான காட்சிகளுக்கு நடுவே, அங்கங்கு தேவை கருதி நீங்கள் சில நகைச்சுவைகளைப் பொருத்தியிருக்கிறீர்கள். 

இருந்தாலும் அதன் மொத்த தேவையை இடைவேளை முடிந்தபிறகு, ஓடும் ஒரு சின்ன விளம்பரத்தில் ‘எடப்பாடி’ அரசு மொத்தமாகக் கவனித்துக் கொள்கிறது. தமிழகத் தியேட்டர்களில் படம்பார்ப்பவர்க்கே அந்தக் குதூகல அனுபவம் கிடைக்கும். 


-கார்த்திக் புகழேந்தி. 
18-11-2017 

Comments

  1. தீரன்...
    சில தமிழ்ச்சினிமா இலக்கணம் இருந்தாலும் மிகச் சிறப்பாய்...
    இடைவேளைக்குப் பின்னான விறுவிறுப்பு படத்தோடு பயணிக்க வைத்தது...
    தங்கள் விமர்சனப்பார்வை அருமை...
    காலையில் ஒரு கருத்து இட்டேன்... அதில் ஏதோ கோளாறு வரவில்லை என்று நினைக்கிறேன்.
    அதான் மீண்டும் வந்தேன்.
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil