வாசிப்பில்... 12-10-2017

சமீபத்தில் என்னென்ன புத்தகங்கள் வாசித்தீர்கள் கார்த்திக்?

-மா.கோதண்டம், சென்னை.

“மூன்று புத்தகங்கள். அதில் ஒன்று ஜீ.முருகன் அவர்களின் கண்ணாடி சிறுகதைத் தொகுப்பு. இரண்டாவது மு.ஆனந்தன் எழுதிய யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பு. மூன்றாவது சா.தேவதாஸ் மொழிப்பெயர்ப்பில் புனைவும் பிரக்ஞையும் என்ற தொகுப்பில் உள்ள பிறமொழிக் கதைகள் சில...

எனக்குக் குறிப்பாக இது இப்படியான கவிதை என்றெல்லாம் பிரித்து வகுத்து வாசித்துப் பழக்கமில்லை. அந்த ஏரியாவில் அதிகம் புழக்கமுமில்லை என்றாலும், யுகங்களின் புளிப்பு நாவுகள் தொகுப்பில் ஒரு நான்கு கவிதைகள் அப்படியே அதன் படிமங்களால் மனத்தில் உறைந்துபோன காட்சிகளாக நின்றுவிட்டது. பொணந்தூக்கி சாமி, நாங்கள் யாராலும் பாராட்டப் படாத குழந்தைகள், அம்மா பலூன் குட்டி பலூன், அம்மாக்களின் செவிப்பூக்கள் ஆகிய தலைப்பிலான கவிதைகள் அவை.
*
ஜீ.முருகனின் முந்தைய தொகுப்புகள் படித்ததில்லை. சில கதைகள் மட்டும் வாசித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். அவரது காண்டாமிருகம் சிறுகதையை அந்தத் தலைப்புக்காக வாசித்தேன்.
‘கண்ணாடி’ தொகுப்புக் கையில் கிடைத்த சில நாட்களுக்குப் பிறகு அதன் முதல் கதையான ‘பாம்பு’ கதை படித்துவிட்டு அப்படி ஓர் அதிர்வு. என்னமாய் கதை சொல்லுகிறார் மனிதர் என்கிற ஓர் அங்கலாய்ப்பு. உடனே போனடித்துப் பேசினேன்.

பிறகு நீலா, ஆப்பிள், கண்ணாடி, எழுத்தாளனின் வசிப்பிடம், நேர்காணல், வார்த்தை, கரடிகளின் பாடல், அற்புதங்கள், சர்க்கஸ், கைவிடப்பட்ட ஒரு கதை என்று எனக்குப் பிடித்துப் போன ஒவ்வொரு கதையும் தூக்கத்தில் எழுப்பி, தலைப்பைச் சொன்னாலும் அந்தக் கதையைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிற அளவுக்கு ஓர்மையுண்டானது. அவை பற்றிப் பிறகு எழுத விரும்புகிறேன். புதிதாக சிறுகதை எழுத வருகிறவர்கள் தயங்காமல் ஜீ.முருகனின் ஒரு சில கதைகளையாவது வாசித்துவிட்டுத் தங்கள் பயணத்தைத் தொடரலாம். இன்னும் தெம்பாக இருக்கும்.
*
சா. தேவதாஸ் அவர்களுடைய, ‘புனைவும் பிரக்ஞையும்’ மொழிபெயர்ப்புத் தொகுப்பில், அல்ஜீரியச் சிறுகதையான ‘தாக்குதல்’, பிரேசில் சிறுகதையான “போர்கேஸின் செயலர்’, மலையாளச் சிறுகதையான,‘அன்னம்மா டீச்சர்’, சீனச் சிறுகதையான,‘மீன் பிடித்தல்’ ஆகிய சில கதைகளை மட்டும் முதல்கட்டமாக வாசித்து முடித்தேன்.

சமீபமாக மலையாளச் சிறுகதைகளை வாசிப்பதில் என்னையும் மீறிய ஓர் அலாதியான லயிப்பு வந்து ஒட்டிக் கொண்டுவிடுகிறது. காலச்சுவட்டில் கொஞ்ச நாட்கள் முன்பு வெளிவந்த ‘ராணி’ (மலையாளம்) மாதிரி ஒரு சிறுகதை எழுதிவிடவேண்டும் என்று மனசு போட்டு அரிக்கிறது. செப்டம்பர் மத்தியில் புதுச்சேரிக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போதே அப்படியோர் கதையைத் தொடங்கியும்விட்டேன். பேர்வாதியில் நிற்கிறது.

“இயேசுவே உன்னைவிட எனக்கு இப்போது வயது அதிகம் ஆகவே நீ எனக்கு இனி தம்பி” என்றுசொல்லும் அன்னம்மா டீச்சர் போன்ற ஒருகதாப்பாத்திரம் இறந்துகிடக்கும் காட்சியிலிருந்து கதையைத் தொடங்கும் பால் ஸ்காரியாவின் சிறுகதைகள் பிடித்திருக்கின்றன.
மீன்பிடித்தலும், போர்கெஸின் செயலர் இரண்டும் வேறு ரகங்கள். வெளியுலகை வாசிக்கும்போது, அதன் பிரதிபலன்களாக நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது என்றே தோன்றுகிறது. தவிர புனைகதையின் வழியாகக் கிடைக்கும் சாத்தியங்கள் பற்றி ஒரு பரந்த வாசக மனமும் வாய்க்கிறது.

இதிலெல்லாம் இல்லாமல், நான்காவதாக நேற்றிரவு கட்டுரைத் தொகுப்பு ஒன்று வாசித்துக்கொண்டிருந்தேன். (இன்னும் நூலாக வெளிவரவில்லை) உலகின் பல்வேறுபட்ட நிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களின் உலகப் பயணங்களையும், சொந்த வாழ்வையும், எழுத்துலகப் பங்களிப்புகளையும் முன்வைத்துத் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு அது. ‘உலகை வாசிப்போம்’ என்று அதற்குப் பெயர் வைத்திருக்கிறார் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.”

-கார்த்திக் புகழேந்தி,
சென்னை. 12-10-2017




‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’
(கவிதைகள்) -மு.ஆனந்தன்
அகநி வெளியீடு, வந்தவாசி.
பக்.80, விலை : 70.00
Ph : 9444360421.

‘கண்ணாடி’ (சிறுகதைகள்)
-ஜீ.முருகன்.
யாவரும் பப்ளிஷர்ஸ்,
பக்.136, விலை : 120.00
சென்னை. Ph : 9042461472.

‘புனைவும் பிரக்ஞையும்’
(பிறமொழிக் கதைகள் மற்றும் பதிவுகள்)
தமிழில் -சா.தேவதாஸ்.
பன்முகம்
பக்.352, விலை : 300.00

Comments

  1. வாசிப்பின் பகிர்வு அருமை நண்பரே....

    ReplyDelete
  2. வணக்கம் கார்த்திக் புகழேந்தி, நான், மு.ஆனந்தன், யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத்தொகுப்பின் ஆசிரியர். இன்றுதான் உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்தேன். எனது கவிதைத் தொகுப்பு குறித்து உங்களின் கருத்துப் பதிவு மகிழ்ச்சியளிக்கிறது. அன்பும் ப்ரியங்களும்.. மு.ஆனந்தன் - 94430 49987

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil