”கடல்நீர் நடுவே”

இந்த ஜல்லிக்கட்டு பரபரப்புக்கெல்லாம் மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலிக்கும் நாகர்கோயிலுக்கும் போய்வந்திருந்தேன். குமரியில் திரிவேணி இலக்கியச் சங்கமம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பொன்னீலன், மலர்வதி, முத்தாலங்குறிச்சி காமராசு, மற்றும் பலரோடு கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது. நாகர்கோயிலில் கலந்துக்கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு என்பதால் ரொம்பவும் உற்சாகமாகவும் அதேநேரம் பழைய நண்பர்களைச் சந்திக்கும் சூழலாகவும் அமைந்தது. நூல் வெளியீட்டுக்குப் பிறகு, நன்றியுரை பேசிவிட்டு மலர்வதியின் காட்டுக்குட்டி, ஜீவா எழுதிய தற்கொலைக் கடிதம், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சுடலை சாஸ்தா, கடிகை அருள்ராஜ் எழுதின ‘கடல்நீர் நடுவே’ ஆகிய புத்தகங்களையும் வாசிப்பதற்கு என்று வாங்கியிருந்தேன். கடல்புரத்தில் உலவும் நாவல்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் என் வாசிப்பில் வெகு சிறந்ததாக ஒரு பத்துப் புத்தகங்கள் பேரைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றும். ஜோ சாரின் படைப்புகளைக் கொண்டாடுவதுகூட அவை முழுதும் கடல்காற்று வீசுகிற நிலத்தில் எழுதப...