வெயிலில் நனையாத கிராமங்கள்
      சின்னவயசுல அக்காவுக்கு ஏகப்பட்ட தோழிகள். அந்த வாயாடிக் கூட்டத்துக்கு கேங்க் லீடர்ல ஒருத்தியா அக்கா இருந்திருக்கனும். வீடும் வைக்கோல் போர் எழும்பி நிற்கும்பின்கட்டும், தொழுவமும்   எப்பவும் ஜே ஜேன்னு நிரம்பி வழியும், பத்தாததுக்கு தொன்னூறு வயசுக் கிளவியா ஆச்சியும் வீட்டில் இருக்க, ஊரில் உள்ள கிழங்கட்டைகள் எல்லாம் அந்த முள்ளு மரத்து நிழல்ல கூடி உட்கார்ந்து  கதைகதையா பேசுவாங்க.   அந்தப் பிள்ளைகளுக்கு வால் ஒன்னுதான் குறை.. பூசணிப்பூ பறிக்க , குன்னிமுத்து பிறக்கி எடுக்க, புளியம்பழம் உலுக்க, நெல்லிக்கா, கொடுக்காபுளி, மாங்கா, நவ்வாப்பழம், கோவப்பழம், எளந்தைப்பழம், மருதாணிச்செடி, காக்கா முள்ளு, கள்ளிப்பூவு,  எருக்கம்பூவு, வாகைப் பூவு, அரச இலைன்னு ஒன்னு விடாம, ஊருல முளைக்குற எல்லாப் எல்லாமே அவங்களுக்கு தேவையான பொருள்தான்.   எல்லாத்தையும் பறிச்சுக்கொடுக்கவும், காவல் இருக்கும் தோட்டத்தில் களவாடவும் அவங்களுக்கு   ஒரு சம்பளமில்லாத அடிமையா நானும் ஒருகாலத்தில் இருந்தேன். எங்க போனாலும் பட்டத்து இளவரசிங்களுக்கு காவல் நாமதான். அதுவும் சோனிப்பையல்வளுக்கு அக்காவா சுகந்தி மாதிரி பிள்ள...